விடுமுறை நாட்கள் என்றால் நாம் சோம்பேறி தனமாக உச்சி வெயில் வரும்வரை உறங்குவது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையில் விடுமுறை நாட்கள் என்பது குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கும், பாரம்பரியமாக வரும் நல்ல பழக்கங்களை மீண்டும் புதுப்பிக்கவும் விடுமுறை நாட்களை உபயோகப்படுத்தலாம் என்பதை உணருங்கள்
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின் போது பாட்டி, தாத்தா அத்தை மாமாக்கள் ஆகியோருடன் இருப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதைக் குழந்தை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.உங்கள் குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். .
சில விடுமுறைகளில் சொந்த ஊருக்குச் செல்வது, கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்குச் செல்வது, மிகவும் நெருங்கிய நண்பரின் கிராமத்திற்குச் செல்வது, அருகில் இருக்கும் பாரம்பரியம் மிகுந்த கோவிலுக்குச் செல்வது, நீர்தேக்கம் மற்றும் அணைகள் ஆகியவற்றுக்கு செல்வது போன்றவை குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும்.
ஒரே மாதிரியான வேலையை ஆண்டு முழுவதும் செய்து அலுத்துப் போன கணவனுக்கும் மனைவிக்கும் கூட இத்தகைய வித்தியாசமான விடுமுறை நாட்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஊருக்கு அருகில் இருக்கும் தோப்பு மற்றும் பண்ணை வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் விடுமுறையைக் கழிப்பது குழந்தைகள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயற்கையான சூழ்நிலை, அடர்ந்த மரங்கள், கண்களைக் கவரும் செடிகொடிகள், மலர்கள், பறவைகள் ஏற்படுத்தும் பல்வேறு சத்தம் போன்றவை கவலையை மறக்கச் செய்வதோடு, மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
|