நமது உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. நமது உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை உள் வாங்கி உடலை புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் வைத்துக்கொள்கின்றன. இதைப்பற்றி தற்போது விரிவாக காண்போம்,
நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 - 5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது. நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு - கசப்பு சுவையுடனும், மண் - இனிப்பு சுவையுடனும், காற்று - துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர் - உப்பு சுவையுடனும், ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது. இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும்.
உதாரணமாக ஒருவருக்கு ஒரு வேலைக்கு 4 இட்லி சாப்பிடுபவர்களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும். அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும்.
சமைக்காத பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊற வைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.
வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9 - 11 மணி வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.
அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.
மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது.
மேற்கண்ட முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், அழகோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |