|
||||||||
ஐ.டி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு, தயாராவது எப்படி ? |
||||||||
இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானோரின் விருப்பம் என்னவோ, ஐ.டி. வேலையில் சேர்வதுதான். ஏனென்றால் இந்த துறையில், துவக்கத்திலேயே அதிக சம்பளம் பெற முடியும் என்பதால்தான். பி.இ.,எம்.சி.ஏ. படித்தவர்களுக்கு மட்டும் ஐ.டி. வேலை என்ற நிலை மாறி, தற்போது பி.எஸ்.சி., பி.காம், பி.ஏ. படித்தவர்களுக்கு கூட ஐ.டி. வேலை கிடைக்கத் தொடங்கிவிட்டது. ஐ.டி. நிறுவனங்கள் வேலைக்கான ஆட்களைத் எப்படி தேர்வு செய்கின்றன ? தகவல் தொழில்நுட்ப துறை(ஐ.டி) நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யும்போது, சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று நிலையிலும், இன்னும் சில நிறுவனங்கள் பத்து நிலை வரையும் நேர்காணல்(இன்டர்வியூ) நடத்துகின்றன. பொதுவாக ஐ.டி. துறையில் நடத்தப்படும் சில இன்டர்வியூ நிலைகளை பற்றி காண்போம், 1. ஜெனரல் ஆப்டிடியூட்(General Aptitude Test), 2. குரூப் டிஸ்கஷன்(Group Discussion), 3. சைகோமெட்ரிக் அசெஸ்மென்ட் டெஸ்ட்(Psychometric Assessment Test), 4. எழுத்துத் தேர்வு (இதில் டெக்னிக்கல் சுற்றும் இருக்கும்), 5. டெலிபோனிக் சுற்று(Telephonic Interview), 6. பிராக்டிக்கல் அல்லது சிஸ்டம் டெஸ்ட்(System Test). ஜெனரல் ஆப்டிடியூட் டெஸ்ட் என்பது உங்களைப் பற்றிய பொதுவான அபிப்ராயங்கள், திறமைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக வைப்பது. சில நிறுவனங்கள் குரூப் டிஸ்கஷன் சுற்றை முதலில் வைப்பார்கள். சில நிறுவனங்கள் குரூப் டிஸ்கஷன் சுற்றை இறுதியாக வைத்திருக்கும். சைகோமெட்ரிக் அசெஸ்மென்ட் என்பது ஐ.க்யூ. திறமையை அறிந்து கொள்வதற்காக ஒரே கேள்வியை பல விதங்களில், பல முறைகளில் கேட்பார்கள். எழுத்துத் தேர்வில் நீங்கள் படித்திருக்கும் பாடம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் டெக்னிக்கல் சுற்று வரும்போது நேருக்கு நேர் இன்டர்வியூ நடக்கும். அப்போது ஹெச்.ஆர்., டெக்னிக்கல் ஹெட், டீம் லீடர் என யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம். டெலிபோனிக் சுற்று என்பது நீங்கள் கம்பெனிக்கு வந்து இன்டர்வியூவில் கலந்து கொண்டு சென்றபிறகு மனித வள துறை அதிகாரி (ஹெச்.ஆர்.) உங்கள் செல்போன் நம்பருக்கு போன் செய்து, வேலை சம்பந்தமாகப் பேசும்போது, அப்போது நீங்கள் அளிக்கும் பதில், உங்கள் குரலின் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் என அனைத்தும் தெரிந்து கொள்வார். பிராக்டிக்கல் அல்லது சிஸ்டம் டெஸ்ட் சுற்றில் உங்களது, மென்பொருள்(சாப்ட்வேர்) திறமைகளை ஆராய்வார்கள். இந்த சுற்றில் ஒரு சிறிய ப்ரோக்ராம் கொடுத்து உங்களை செய்து காட்ட சொல்வார்கள். சில ஐடி நிறுவனங்கள், நுழைவாயிலில் இருந்தோ, அல்லது வரவேற்பரையில் இருந்தோ, உங்களின் ஒவ்வொரு அசைவுகளை காமரா மூலம் கண்காணிக்கும். இந்த சமையத்தில் எந்த ஒரு எதிர்மறையான விசயத்தையும் நீங்கள் செய்யக்கூடாது. ரெஸ்யூம் தயார் செய்வதில் கவனம் தேவை : முதலில் ரெஸ்யூம்க்கும், கரிக்குலம் விட்டே ஆகிய இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என முதலில் பார்ப்போம். பொதுவாக நம் ஊரில் இரண்டு வார்த்தைகளையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தினாலும் சில வேறுபாடுகள் இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி, ஆராய்ச்சி, பட்ட மேற்படிப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க கரிக்குலம் விட்டே பயன்படுத்துவார்கள். அதனால் கரிக்குலம் விட்டே-யில் கல்வித் தகுதி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற அனுபவங்கள், சாதனைகள், சிறப்பு தகுதிகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், ரெஸ்யூம்-ன் நோக்கம் வேலைக்கு விண்ணப்பம் செய்வது மட்டுமே. ரெஸ்யூம் பொதுவாக இரண்டு பக்கங்களுக்கு மேல் போகக்கூடாது. கரிக்குலம் விட்டே என்ற லத்தீன் வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு 'என் வாழ்க்கைப் பாதை’ என்பதே. அதனால் கரிக்குலம் விட்டே விலாவாரியாக மூன்று, நான்கு பக்கங்கள் வரை போகலாம். தற்போது நீங்கள் கல்லூரியில் படித்து கொண்டிருந்தாள் கூட ரெஸ்யூம் தயார் செய்து வைத்திருப்பது நல்லது. ரெஸ்யூம் எழுதுவதில் முதல் கட்டம் உங்களைப் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து வைப்பது. நீங்கள் பங்கேற்ற போட்டிகளில் பெற்ற பரிசுகள், சான்றிதழ்கள், கலந்து கொண்ட பயிற்சி வகுப்புகள், ஈடுபாடுள்ள சமூகச் சேவை போன்ற மற்ற காரியங்கள் போன்ற தகவல்களை தலைப்புவாரியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய சாதனையாக இருந்தால்கூட அதற்கான சான்றிதழ் இருந்தால் அவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள். கரிக்குலம் விட்டே, ரெஸ்யூம் இரண்டுக்கும் நிலையான அமைப்பு என்று எதுவுமில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும் தருணத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதி, திறன்களுக்கு ஏற்றபடி இந்த லிஸ்டில் இருந்து எடுத்து தேவையானவற்றைச் சேர்த்து ரெஸ்யூம் தயாரிக்க வேண்டும். பொதுவாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதற்கு முன், உங்கள் ரெஸ்யூமை படிக்க ஒரு நிமிடத்திற்குக் குறைந்த நேரமே செலவிடுவார்கள். அதனால் வேலைக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களை முதல் பக்கத்தில் தருவது அவசியம். ரெஸ்யூமின் நோக்கம் விண்ணப்பிக்கும் வேலைக்கு நீங்கள் முழு தகுதியானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே. எனவே சமயோசிதத்துடன் ரெஸ்யூம் எழுதுவது அவசியம். ரெஸ்யூமின் தலைப்பில் உங்கள் பெயர் மற்றும் அதற்கு கீழே உங்கள் சரியான முகவரி, கைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை தர வேண்டும். அதன் கீழே உங்களை பற்றியும் தொழில் தொடர்பான உங்கள் குறிக்கோள்கள் பற்றியும் இரண்டு, மூன்று வரிகளில் எழுதலாம். உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் சிறப்பு திறன்கள், பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றி குறிப்பிடலாம். வேலை முன்அனுபவம் இல்லாத பட்சத்தில் உங்கள் கல்வித் தகுதிகளை முதலில் தரலாம். இதில் சமீபத்திய தகுதியை முதலில் தர வேண்டும். பட்டத்தின் தலைப்பு, கல்லூரி, பல்கலைக்கழகத்தின் பெயர், படித்த வருடம், மதிப்பெண் சதவிகிதம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். கல்லூரியில் நீங்கள் முதல் மதிப்பெண்ணோ, ரேங்க்கோ பெற்றிருந்தால் அதை அடிக்கோடிட்டு காட்டலாம். வேலை முன்அனுபவம் இருக்கும் பட்சத்தில் அதை கல்வித் தகுதிக்கு முன் தரலாம். வேலை முன் அனுபவத்தை இரண்டு விதமாக பட்டியலிடலாம்: 1. வெவ்வேறு காலகட்டத்தில் நீங்கள் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் பதவி, மேலும் அங்கு நீங்கள் ஆற்றிய முக்கிய கடமைகள். 2. வேலைத் திறன்கள் சார்ந்து நீங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பெற்ற அனுபவங்கள். ஒரே நேரத்தில் பல பகுதிநேர வேலைகள் செய்திருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. வேலை முன்அனுபவம், கல்வித் தகுதிக்குப் பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை தொடர்பான உங்கள் தனித்திறன்கள், பெற்ற அனுபவங்களை குறிப்பிடலாம். வேலை தொடர்பான அனுபவங்கள் என்பது நீங்கள் சென்ற பயிற்சி வகுப்புகள், கல்லூரி மற்றும் சம்மர் புராஜெக்ட்கள், உங்கள் துறை சார்ந்த குழுக்களில் உங்கள் பங்கேற்பு போன்றவற்றைக் குறிக்கும். இவற்றைத் தகுந்த தலைப்பிட்டு பட்டியலிட வேண்டும். இவற்றைச் சுருக்கமான வாக்கியங்களாகவோ, புல்லட் புள்ளிகளாகவோ தரலாம். நற்சான்று தரும் நபர்களின் (References) தகவல்களை கேட்கப்பட்டிருந்தால் மட்டுமே தர வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை : 1.ரெஸ்யூம் எழுத கண்ணை உறுத்தாத டைம்ஸ் நியூ ரோமன் 12 ஃபான்ட் அளவு போன்ற ஃபான்ட்களை பயன்படுத்துங்கள். சரியான வரி இடைவெளியோடு ஒரே மாதிரியான ஃபார்மெட்டை பயன்படுத்துங்கள். 2.இலக்கண, மொழிப்பிழை இல்லாமல் இருப்பது அவசியம். வார்த்தைச் சுருக்கங்கள் தவிர்ப்பது நல்லது. 3.ரெஸ்யூம் தயாரித்தபின் நன்கு விஷயம் தெரிந்த ஒருவரிடம் காட்டி கருத்தை அறிவது நல்லது. 4.ஹார்ட் காப்பியாக அனுப்புவதென்றால் நல்ல தாளில் பிரின்ட் செய்து முகப்பு கடிதத்தோடு அனுப்புவது நல்லது. 5.அவசியமில்லாத எந்த தகவலையும் தர கூடாது. எந்த காலக்கட்டத்திலும் பொய்யான தகவல்களை தர வேண்டாம். பி.எஸ்.சி, பி.காம். பி.ஏ படித்தவர்களுக்கு : நீங்கள் கணிதத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்களே, சாப்ட்வேர் துறையில் ஆர்வம் மிக்கவர்கள் என ஐ.டி நிறுவனங்கள் கருதுகின்றன. மேலும் படிப்புடன் கூடுதலாக டெஸ்டிங் கான்செப்ட், கூடுதலான புரோகிராமிங் லாங்குவேஜ்கள் படித்துக்கொண்டால் நீங்களும், பிரபல ஐ.டி கம்பெனிகளில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவது உறுதி. |
||||||||
by Swathi on 01 Aug 2013 0 Comments | ||||||||
Tags: ஐ.டி நிறுவனம் ஐ டி வேலைவாய்ப்பு வேலைக்கு தயாராவது எப்படி IT Jobs IT Companies Prepare IT Jobs | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|