சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு, தற்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
வடசென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்தப் படம் கார்த்திக்கு புது உற்சாகத்தை தந்துள்ளது. இதையடுத்து படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது, “நல்ல படங்களில் நடிக்கவேண்டுமேன்றுதான் நான் மெனக்கெடுகிறேன். ஆனால் சில நேரங்களில் அது பொய்த்துவிடுகிறது.
ஆனால் தற்போது ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றி இனி நல்ல படங்களில் நடிப்பது மட்டுமே என் வேலை என்பதை அழுத்தமாக உணர்த்தி இருக்கிறது.
இயக்குனர் ரஞ்சித்தால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. எம்.ஜி.ஆர்-ஐ போன்று எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு தெரிந்தது எல்லாம் நடிப்பு மட்டுமே.
உங்கள் செய்திக்காக என்னை தீனியாக்கிவிடாதீர்கள். அடுத்து கொம்பன் படத்தில் நடிக்கிறேன். அது குடும்ப பாங்கான கதை என கார்த்தி கூறினார்.
|