ஐ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு, படத்தின் பிரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதற்காக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று கேரள மாநிலம் கொச்சினில் நடைபெற்ற விழாவில் படத்தின் நாயகன் விக்ரம், நாயகி எமி ஜாக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொச்சியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அங்கு படத்தின் பிரமோஷனுக்காக பாடி பில்டர்களின் நிகழ்ச்சி ஒன்றும், நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பலத்த ஆரவாரத்திற்கிடையே ரசிகர்கள் முன்னிலையில் விக்ரமும், எமி ஜாக்சனும் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விக்ரம், எமி ஜாக்சன் கலந்து கொண்டனர். அப்போது விக்ரம் பேசியதாவது,
ஐ படத்துக்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ஏற்றினேன். 15 கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்வேன்.
இப்படி ஒரு கேரக்டர் கிடைக்கும் போது என்ன வேணா பண்ணலாம். இந்தப் படத்துக்காக நான் ஒதுக்கின மூணு வருஷத்துல 9 படங்கள்ல நடிச்சிருக்கலாம், ஆனால் ஐ படத்தோட கதையைக் கேட்டு நான் மயங்கிப் போயிட்டேன். இந்தப் படத்துல நடிச்சதுக்காக நான் பெருமைப்படறேன்.
உலகம் முழுக்க இந்தப் படம் எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுக்கும். வழக்கமான தமிழ்ப் படங்களை விட ஐ படம் ஒரு ஹாலிவுட் படத்தைப் போல இருக்கும்னு நான் கண்டிப்பா சொல்வேன். இந்தப் படத்துல மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு.
என்னோட ஆரம்ப காலத்துல மலையாள சினிமாதான் எனக்கு வெற்றிப் பாதையை அமைச்சிக் கொடுத்தது.
மலையாள நடிகர் அபு சலீம்தான் என்னோட உடம்பை ஏத்தறதுக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவரு. எதிர்காலத்துலயும் எனக்கு வர்ற எல்லா படங்கள்லயும் நடிக்க மாட்டேன். நல்ல தரமான படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன், என விக்ரம் பேசினார்.
|