அரசு அதிகாரிகள் தங்களின் பணியை சரியாகவும், நேர்மையாகவும் செய்தால் நாட்டில் ஊழல்களே நடைபெறாது என அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கேம்கா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் மக்களின் பணியாளர்கள் என நினைத்து தங்களின் கடமையை சரியாக செய்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் அல்லது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற ஊழல்கள் இருக்காது; ஒவ்வொரு 100 அதிகாரிகளிலும் 10 பேர் தங்களுக்கு வேண்டிய ஆதாயங்களைப் பெறுவதற்காக ஊழலுக்கு துணை நிற்க தயாராக இருப்பார்கள்; அவர்களை நீக்கி விட்டு சரியான அதிகாரிகளை தேர்வு செய்து பணியமர்த்தினாலே ஊழல்கள் நடைபெறாது, அரசு துறைகளில் நிர்வாக சட்டம் போன்றதொரு சட்டம் கொண்டு வரவது மிகவும் அவசியம்; ஏனெனில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து உங்களது பணியை சிறப்பாகவும் சரியாகவும் செய்தால் நீங்கள் அந்நிறுவனத்தில் இயக்குனர் பதவி வரை உயர முடியும்; அதே சமயம் உங்களது செயல்களில், எண்ணங்களில் தவறு இருந்தால் நிர்வாக சட்டத்தின் கீழான நடவடிக்கையை எதிர்க் கொள்ள வேண்டியதாக இருக்கும்; ஆனால் அரசு துறைகளில் அத்தகையதொரு சட்டம் கிடையாது என அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவின் நில ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக அறிக்கை தாக்கல் மத்திய அரசுக்கு எதிராக பெரும் புயலை கிளப்பியவர் இந்த அசோக் கேம்கா என்பது குறிப்பிடத்தக்கது.
|