இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
இகலில் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை- பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லதென்று அதனை மேற்கொள்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து- நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிகநெருங்கியனவாம். மிகுதல் மேன்மேல் முனைதல். இனிதாதல் வெற்றிதருதல். 'தவல்' பொருட்கேடும் 'கெடல்' உயிர்க்கேடுமாம். 'நணித்து' என்பதனைத் 'தவலும் நணித்து', 'கெடலும் நணித்து' எனத் தனித்தனி இரண்டற்கும் பயனிலை யாக்குக. தவ்வல் தாழ்தல். |
கலைஞர் உரை: |
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும். |
சாலமன் பாப்பையா உரை: |
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம். |
Translation |
The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near. |
Explanation |
Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred. |
Transliteration |
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|