நண்பர்களே வணக்கம், "இளைஞர்கள் அரசியல் களம் காணுதல்" பற்றிய இந்த பதிவை நேரம் கிடைக்கும்போது முழுமையாக படிக்கவும்...
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நேர்மையான இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுகிறோம் என்ற வாசகத்திற்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது... இந்த முயற்சியில் ஓரளவு வெற்றிக்கான நம்பிக்கை விதையையும் விதைத்து உள்ளோம்...
சில கேள்விகள் மற்றும் பதில்கள்.
1. இளைஞர்களின் அரசியல் களம் பற்றி மக்கள் பார்வை எவ்வாறு இருந்தது?
பதில்: பெரும்பாலான மக்கள் இது நல்ல விஷயம் என்று பாராட்டினர். உங்களை போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது தான், பல்வேறு நல்ல மாற்றங்கள் மற்றும் பல புதிய சிந்தனைகள் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறினர்.
2. 234 தொகுதியிலும் களம் காண்பதாக கூறி, ஏன் மிக குறைவான தொகுதியில் களம் கண்டீர்கள்?
பதில்: பலரும் ஆதரவு தந்தாலும், அரசியலில் களம் காண தயக்கம் காட்டினர். பெற்றோர் எதிர்ப்பு, வேலைபார்க்கும் இடத்தில் எதிர்ப்பு, பொருளாதார பிரச்சனை, அரசியல்வாதிகள் அல்லது ரௌடிகள் பிரச்சனை வருமோ என பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பின் வாங்கினர்.
3. 27 தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆதரவு எவ்வாறு இருந்தது?
பதில்: சுமார் 3000 பேருக்கு மேல், தன்னார்வலராக பதிவு செய்தனர். ஆனால் 27 வேட்பாளருக்கும் களத்தில் வந்து பிரச்சாரம் செய்தது மொத்தம் 58 பேர் மட்டுமே. வேட்பாளர் நேர்காணலில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தேர்தலில் நிற்கவில்லை என பின்வாங்கினாலும், பிரச்சாரம் செய்ய களத்தில் வந்து உதவி செய்தது 2 பேர் மட்டுமே. வாட்ஸ்அப் மற்றும் facebook மூலம் ஆதரவு அளிப்பவர்கள் களத்திற்கு வரமாட்டார்கள் என்பது இதன் மூலம் உறுதியானது. அவர்களின் ஆதரவு வாக்குகளாக மட்டுமே மாறும் என்பது தான் நிதர்சனமான உண்மையானது.
4. வாட்ஸ்அப், facebook இல் உள்ளவர்கள் களத்தில் வராததற்கு என்ன காரணம்?
பதில்: படிப்பு, வேலையின்மை, கடன், குடும்ப சுமை, அதீத வேலை பளு, அரசியல் என்றாலே ஒரு பயம் போன்ற பல காரணங்கள். 100 இல் ஒருவர் தான் சமூக சேவை போன்றவைகளுக்கு வருகின்றனர். 1000 இல் ஒருவர் தான் அரசியல் சேவை போன்றவைகளுக்கு வருகின்றனர்.
5. மக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறீர்கள். பிறகு ஏன் சொற்ப வாக்குகளே பெற்று உள்ளீர்கள்?
பதில்: மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், நம்பகத்தன்மை வரவில்லை. இவர்களால் வெற்றி பெற இயலாது. ஆகவே ஜெயிக்கிற கட்சிக்கு தான் எனது ஓட்டு என்ற மனப்பான்மை பெரும்பாலானோரிடம் உள்ளது. ஏழை பாமர மக்களிடம் பணம் வாங்கி வாக்களிக்கும் கலாச்சாரம் உள்ளது.
6. நம்பிக்கையை பெற மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?
பதில்: மக்களை பொறுத்த வரை ஒரு தலைவன். அந்த தலைவன் தேவதூதன் போன்று வர வேண்டும். அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. அந்த தலைவன் மீது நம்பிக்கை வரும் பட்சத்தில், அந்த கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற வைப்பர்.
7. ஒரு தலைமை முறையை மாற்ற என்ன வழி?
பதில்: மக்களிடம் முதலமைச்சரை தேர்வு செய்யவில்லை; தங்கள் பகுதியின் பிரதிநிதியை தான் MLA வாக தேர்வு செய்கிறோம் என்பதை உணர வைக்க வேண்டும். அனைத்து பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து தான் முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஜனநாயகத்தை புரிய வைக்க வேண்டும்.
8. சமூக சேவை/அரசியல் போராட்டங்கள் செய்வதன் மூலம் மக்கள் வாக்களிப்பார்களா?
பதில்: இல்லை. சமூக சேவை செய்வதனால் உள்ளாட்சி தேர்தலில் ஓரளவு வாக்குகள் பெற இயலுமே தவிர, சட்டமன்ற தேர்தலில் அல்ல. டிராபிக் ராமசாமி, கூடங்குளம் உதயகுமார் போன்ற பலர் சமூக சேவை அல்லது மக்கள் நலன் போராட்டங்களை முன்னெடுத்து தேர்தலையும் சந்தித்தனர். ஆனால் வாங்கிய ஓட்டுகள் 1000 முதல் 5000 வரை.
9. பிறகு மக்கள் யாருக்கு தான் அங்கீகாரம் கொடுப்பார்கள்?
பதில்: ஆண்ட கட்சி மற்றும் ஆளும் கட்சி எப்போது மக்களிடம் நம்பிக்கை இழக்கிறதோ அப்போது புதிய அரசியல் மாற்றங்களை முன்னேடுப்பவரை மக்கள் அங்கீகரிப்பார்கள். அதுவரை பொறுமையாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களின் அரசியல் பங்களிப்பை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
10. நீங்கள் திமுக / அதிமுக மக்களிடம் நம்பிக்கை இழக்கவில்லை என்று கூறுகிறீர்களா?
பதில்: அப்படி இல்லை. புதிதாக வருபவரிடம் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தான் கூறுகிறோம். அப்படி ஏற்படாததால் தான், மக்கள் தற்போது உள்ளவற்றையே தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு கட்சிகள் மீது பல்வேறு குறைகள் கூறினாலும், இந்த கட்சியின் ஆட்சி மூலம் பலன் அடைந்த மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.
11. இரு பெரிய கட்சிகளை விட, எந்த கட்சியையும் மக்கள் நம்பவில்லையா?
பதில்: ஆம். மக்கள் இரு பெரிய கட்சிகளை தவிர்த்து பல புதிய கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் வெற்றியை அளித்துள்ளனர். தேமுதிகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் மிக விரைவில் கொடுத்தனர். ஆனால் பெற்ற வெற்றியை வைத்து ஆக்க பூர்வமான பணிகளை செய்து மக்களின் நம்பிக்கையை பெறவில்லை என்பதே நிதர்சனம்.
12. மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று கணித்துள்ளீர்களா?
பதில்: தற்போது உள்ள ஊழல் கட்சியோடு கூட்டணி சேராமல், சுயநலன் பாராமல், தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்து விடாமுயற்சியோடு, ஜாதி, மதம், இனம் என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். அந்த நம்பிக்கை பெரும் வரை விடாமல் நமது பயணம் சென்று கொண்டே இருக்கும்.
13. சுயேட்சையாக போட்டியிட்டது பற்றி தங்களின் அனுபவங்கள்?
பதில்: நமக்கு ஒரு நல்ல அரசியல் அனுபவம் கிடைத்தது. வேட்புமனு தாக்கல் செய்வது, அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகள் போன்றவற்றை உணர முடிந்தது. மற்றபடி சுயேட்சையாக களம் கண்டதில் எந்த ஒரு பலனும் இல்லை. அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் சுயேட்சை என்பதை தங்களுக்கு சாதமாகவே பயன்படுத்துகின்றன. மக்களை குழப்ப எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயரில் பல சுயேட்சைகளை களம் இறக்குகின்றன. ஒரு வேட்பாளருக்கு குறிப்பிட்ட தொகை தான் செலவு செய்ய வேண்டும் வரைமுறை உள்ளதால் சுயேட்சை வேட்பாளரின் அளவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். சுயேட்சைகளுக்கு பூத் ஏஜென்ட் போட்டு கள்ள ஓட்டு போடுவதற்கும் உபயோகபடுத்துகின்றனர்.
14. நீங்கள் கூறுவதை பார்த்தால் அனைத்து சுயேட்சைகளும் போலியா?
பதில்: நாங்கள் ஒரு சர்வே ஒன்று எடுத்தோம். களம் கண்ட சுயேட்சைகளில் 90 சதவீதம் போலியே. இரு சுயேட்சைகள் மட்டுமே 30000, 20000 என ஓட்டுகள் வாங்கினர். இருவரும் அவர்களின் கட்சியில் சீட்டு கிடைக்காதால் சுயேட்சையாக நின்று தனது செல்வாக்கு மற்றும் பணபலம் மூலம் இவ்வளவு ஓட்டுகள் பெற்றனர். நடிகர் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட்ட தொகுதியில் அதிகபட்சமாக 2500 வாக்குகளே பெற முடிந்தது. மற்ற பெரும்பான்மையான சுயேட்சைகள் 500 முதல் 5000 வரை என மட்டுமே பெற்றனர்.
15. சுயேட்சையாக அல்லாமல், 234 தொகுதிகளிலும் ஒரே கட்சியாக நின்று இருந்தால் நல்ல வரவேற்ப்பு இருக்குமோ?
பதில்: சுயேட்சையாக நின்றாலும், கட்சியாக நின்றாலும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே மக்கள் அங்கீகாரம் அளிப்பர். ஆகவே இரண்டும் ஒன்றே. நாம் தமிழர் கட்சி ஒரு சிறந்த உதாரணம்.
16. அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய யாரால் முடியும்?
பதில்: இரண்டு துறையின் மூலம் அனைவரையும் சென்றடையலாம். முதல் வகை: சினிமா, இரண்டாம் வகை: அரசியல். இவற்றை தவிர பொருளாதார நிபுணர், டாக்டர், இஞ்சினியர், விஞ்ஞானி, விமர்சகர், விவசாயி, வழக்கறிஞர் என எவராலும் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய முடியாது. அரசியல் மூலம் சென்றடைவதை விட சினிமாவின் நீழ்ச்சி மிக அதிகம். அதனாலாயே சினிமாவில் உள்ளவர்கள் பலர் அரசியலுக்கு வருகின்றனர்.
17. பத்திரிக்கை துறை எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தது?
பதில்: பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு PRO மூலம் அழைப்பு விடுத்தால், ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் 300 முதல் 1000 வரை எதிர்பார்க்கிறார்கள். அப்படியே வந்தாலும், பெரும்பாலான பத்திரிக்கைகள் பணம் கொடுத்தால் அந்த செய்தியை பிரசுரம் செய்கிறது. நேர்மையான ஊடகங்களின் பங்கு இன்றைய சூழ்நிலையில் அதிகம் தேவைபடுகிறது.
நன்றி, இளைஞர் கூட்டமைப்பு
|