முற்றத்து வேம்பின் முறுகப் பிணைந்த வேர்கள் மேலெழத் திரண்ட மிடுக்கில் அமர்ந்தபடி எடுத்துவிடுகிறான் எந்தை ஒருபாட்டு.
முழுநிலாக் காய்ந்தபடி நீள விரித்த களப்பாயில் சூடடித்த நெல்லின்னும் தூற்றாமல்.
காற்றெழட்டுமெனக் காத்திருந்த இடைவெளியே பாட்டெழவும் அதைப் பண்ணோடு வாங்கியவர் தம்பங்குக்கு வாய்திறந்து கூட்டுக்களி இசைக்கையிலே காற்றுவரும்.
"குல்லத்தை எடுங்கள்" குரல் கேட்டதும்
கோலியெடுத்த நெல்லை காற்று வளமாய் நின்று தூற்றத் தொடங்கினார் கொட்டும் பொன்னருவியென குதூகலநெல்மணிகள் ஓசையிட நிறைமணிச் சொல்லெடுத்து தூக்கிய தமிழின் பாட்டும் தொடர்ந்திசைய கூட்டிசைந்த வாழ்வின் கொள்கலமாய் நேற்றெலாம் நிரம்பி வழிந்ததிம்முற்றம்.
பொலியோ பொலியெனப் பொலிந்த பூமித்தாயின் பூரிப்பை பொங்கலிட்டு பகிர்ந்துண்ட வாழ்வின் முதிசக்காரரான எம் முந்தையோர் ஆனந்தத்தை குடியமர்த்தி வைத்துப்போன அதே முற்றத்திலேதான் இன்றும் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆயினும், ஒற்றையாய் உறவிலியாய், சுற்றஞ் சூழவிருந்த வாழ்வை தொலைத்துவிட்ட வறியனாய்.
என்னைப் போலவே தான் கைவிடப்பட்ட இக்கிராமமும் முதுமையின்பாலையில் பெருமூச்செறிந்தபடி.
நெற்றிப்புருவத்தின் நெருக்கம்போல் இன்னும் அந்நாளின் நிகழ்வுகள் நினைவுகள் இன்னும் காய்கின்ற நெல்மணிகளெனச் சூடாறாமல்
எனினும் கண்காள் காண்மின்களோ முந்தைப் பொலிவெலாம் இழந்த முற்றம் கூட்டிசைந்த வாழ்வின் கொள்கலமாய் இன்றில்லை.
கொள்ள, கொடுக்க குலுங்க, கலகலக்க வாழ்வின் சுவையை மொள்ள முடியாத ஒட்டுவிட்ட பாத்திரனாய் நானிங்கு எதனுடை முதிசக்காரன்?
வாழ்வுதிர்ந்த வற்றல்மரம் முற்றுஞ் சருகுதிர்க்க இன்றெங்கள் முற்றத்திலே இலையுதிர்காலம்.
இதோ காற்று வருகிறது இலையுதிர்காலக்காற்று சருகுகளின் உலர்ந்தமொழிபேசி.
முன்னைப்போல் பதந்தூக்கிய பாட்டோசை, ஏற்ற இறக்கங்களோடு இசைக்கூப்பாடாய் குழைகின்ற குரல்கள், குத்தல், இடித்தல், கொழித்தல், புடைத்தலென கிராமத்து வாழ்வின் படைப்போசை எவையுமின்றி பசையற்ற பாலையின் புடைபெயர்வாய் அலைகிறது.
பூமியைப் பிணமெரியும் காடாய் தகிக்கவிட்ட கொள்ளிக்கண் சூரியனார் நீரினுள்மூழ்கி நினைப்பொழிய சுடலைப் பொடியெடுத்துத் தூவினாற் போலெங்கும் நரையிருள் மேவ அடிவானின் புதைக்குழிக் கீழ் கரிய படையெடுப்பிற்கு காத்திருக்கும் இருள்.
தூரத்தே புலம்பெயர்ந்து வரும் அகதியின் நெற்றிச்சுருக்காய் நெரியும் நிலாச்சோகை பனையிடுக்கிடை எதையோ எட்டிப் பார்க்கும்
உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம் உமியின் கரிச்சட்டி ஒருபுறம் ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள் கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி.
வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு சுடலைக்கே பாத்திரமாய்ப் போக நானிங்கு எதனுடை முதிசம் காக்க?
யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில் எல்லாவழிகளும் மயானத்திற்கே இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில் உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு.
அரைக்கசைத்திருக்கும் கந்தல் நழுவவும் பதறாது நொய்ந்துபோன கையனாய் கைதவறிய சாவிக்கொத்து கதறியபோதும் கேளாச் செவியனாய் நானிங்கு.
ஆயினும், வரண்டு போன உதடுகளை ஈரப்படுத்த நாவெழாநிலையிலும வாழ்வூற்றின் அடி ஆழத்தில் எங்கோ, நீருறிஞ்சத் துடிக்குமென் உயிரின் வேர்முனைகள்.
நீருறிஞ்ச நீருறிஞ்ச செவியுதறும் இலைதழைகளென எனதுணர் விழிகள் பரபரக்கும்.
யாரங்கே- ஊடுபத்திப் போகுதொரு உயிர் ஒரு கணம் சுடர் தழைய தேவாரம் மொழி பாடுக-
வாழ்வூற்றின் கேணிப்படிக் கட்டிருந்து கேவிக் கேவி கேட்கும் ஒரு பாடுகுரல்.
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண் மதி சூடி...."
இதோ காண்மின் கடுக்கன்சிரிப்போடு எந்தை கால்மாட்டில் பாம்படச்செவியாட என்னம்மை தலைமாட்டில் மாண்டுபோன சுற்றம் புடைசூழ.....
"ஏடுடைய மலரான்உனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த...."
ஏட்டைப் புரட்டி என்கணக்கைப் பார்த்த காலக் கணிதன் முனைமடித்த பக்கத்தை மூடிவைக்க
"பீடுடைய பிரமாபுரம் மேவிய..."
தோணிபுரத் தீர்த்தங்கரையில் சிறுவிரல் சுட்டிய திசையைப்பார்த்தவாறே பனித்த கண்ணிமைகள் மூட சிறுவிக்கல் - அவ்வளவே
"காடுடைய சுடலைப் பொடி பூசியென்..."
|