இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
மேல்-மேலோர்; உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று- இவ்வுலகத்தில் இருதிணை யுயிரோடு கூடிய உடம்புகளும் துன்பம் என்னும் வேலுக்கு இலக்கென்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாது- தமக்குத் துன்பம் வந்த விடத்து மனங்கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளார். இலக்கு - குறி. இலக்கு-இலக்கம். போர்மறவர் வேலெறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும். ".......................வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம்---------------" என்பது புறம் (169). உடம்பு துன்பத்திற்கு இத்தகைய இலக்கம் என்றது அதன் இயல்பு நோக்கி. 'உடம்பு' வகுப்பொருமை. 'மேல்' ஆகுபொருளது; சொல்லால் அஃறிணையாதலால் அத்திணைமுடிபு கொண்டது. 'ஆம்' அசைநிலை. 'கலக்கத்தைக் -------கொள்ளாது' என்றது இயல்பென்றறிந்து கலங்காது என்பதாம். இடும்பையை வேலென்று உருவகியாமையால் இங்குள்ளது ஒரு மருங்குருவகம்.
கலைஞர் உரை:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்
Translation
'Man's frame is sorrow's target', the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.
Explanation
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.