இந்தியர்கள் 2022-ம் ஆண்டில் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று திரும்புவதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகிறதாம். விண்வெளி போக விரும்புவோர் தயாராக இருங்கள்.
இஸ்ரோ மூத்த விஞ்ஞானி இங்கர்சால், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். ‘‘இந்தியர்களின் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இஸ்ரோ திட்டங்களைத் தயாரித்து வருகிறது. 2022ம் ஆண்டு, இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடிய நேரத்தில் இந்தியர்கள் விண்வெளி செல்வது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.
இதற்காக நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கக்கூடிய ராக்கெட்டுகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், பலவகையான பரிசோதனைகளை செய்து வருகின்றோம். அதற்கான முதல்கட்ட முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றோம்.
முதலில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம். முழுமையான நம்பிக்கை வந்தபின் 2022ல் மனிதர்கள் விண்கலத்தில் சென்று விண்வெளியில் சுற்றிவரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இதற்கான ஆராய்ச்சிகளையும், பரிசோதனை முயற்சிகளையும் சிறப்பாகச் செய்து வருகிறோம்" என்றார்.
|