அடுத்த மாத இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் இரண்டு T-20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் பங்கேற்பதற்காக டிசம்பர் 22ம் தேதி இந்தியா வர இருக்கிறது. முதல் T-20 ஆட்டம் 25ம் தேதி பெங்களூரிலும், இரண்டாவது ஆட்டம் 27ம் தேதி அகமதாபாத்திலும் நடக்கிறது. இதனை தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 2வது ஆட்டம் கொல்கத்தாவில் ஜனவரி 3ம் தேதியும், கடைசி ஆட்டம் ஜனவரி 6ம் தேதி டெல்லியிலும் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி வருகையையொட்டி, போட்டி நடைபெறும் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கிரிக்கெட் போட்டியை காண 5 ஆயிரம் விசாக்கள் வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
|