காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் பட்சத்தில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம், செய்தியாளர்களிடையே, பேசியதாவது, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தக் கூட்டம் இலங்கைக்கானது அல்ல. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தொடர்புடையது. அதில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் இந்திய அரசின் உரிமை. தமிழக சட்டசபையில் இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பது அந்த அரசின் உரிமை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. இலங்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சரியான தகவல்களை யாரும் அளிக்கவில்லை என்று தான் நான் நினைக்கவில்லை. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது அந்த அமைப்பில் இருந்தே சம்பந்தப்பட்ட நாடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும் என கரியவாஸம் கூறியுள்ளார். இலங்கை தூதரின் இந்த பேச்சுக்கு,தமிழக மத்திய அமைச்சர், ஜி.கே.வாசன் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|