|
|||||
இந்திய தூதர் கைது விவகாரம் : இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை !! |
|||||
அமெரிக்காவில் இந்திய துணை தூதர், தேவயானி கோப்ரகாடே கைது செய்யப்பட்ட முறைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்க தூதரகங்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
தேவயானி கோப்ரகாடே கைது :
அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றி வருபவர் தேவயானி கோப்ரகாடே. இவரின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக, இவர் வேலைக்கு அமர்த்திய பெண்ணுக்கு, 'விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என, தேவயானி மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வாரம், தன் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக, தேவயானி காரில் சென்ற போது, நடுரோட்டில், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். '
பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளை, கிரிமினல்கள் போல் கைது செய்யக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், வியன்னா நகரில் நடந்த சர்வதேச மாநாட்டு தீர்மானம் தெரிவிக்கிறது.எனினும், நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட தேவயானி, சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, அவராய் சோதனை செய்த போலீசார், அவரை, பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைத்து, விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு, 1.5 கோடி ரூபாய் செலுத்தி, ஜாமினில், தேவயானி விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம், நம் நாட்டில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. 'அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை, நாம், மிகவும் கண்ணியமாக நடத்துகையில், நம், பெண் தூதரை மோசமாக நடத்துவதா...' என, அரசியல் தலைவர்கள் கொதித்தனர்.
அமெரிக்க எம்.பி.,க்கள் குழு இந்தியா வருகை :
நேற்று முன்தினம், நமது நாட்டின் பாராளமன்ற நடைமுறையை பார்வையிட, டில்லி வந்த, அமெரிக்க, எம்.பி.,க்கள், ஐந்து பேர் குழுவை சந்திக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் மறுத்துவிட்டார். அது போல், லோக்சபா சபாநாயகர், மீரா குமாரும், அமெரிக்க எம்.பி.,க்களை சந்திக்க மறுத்து விட்டார். இந்திய பெண் தூதரை, 'கிரிமினல்' போல் நடத்திய, அமெரிக்க நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து, இந்த புறக்கணிப்பை, அவர்கள் மேற்கொண்டனர். நேற்றும், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி ஆகியோரை, அமெரிக்க, எம்.பி.,க்கள் குழு நேற்று சந்திக்க இருந்தது. 'உங்களை சந்திக்க, தயாராக இல்லை' என, அமெரிக்க, எம்.பி.,க்களுக்கு, இவர்களிடம் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
தேவயானி கைதுக்கு அமெரிக்கா விளக்கம் :
இந்திய தூதரகத்தின் துணை தூதர், தேவயானி, அமெரிக்க போலீஸ் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு, அந்த விதிமுறைகளின் படி நடத்தப்பட்டார். அவர், விசா மோசடியில் ஈடுபட்டதால், தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகளை இழந்துவிட்டார்' என, அமெரிக்கா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க தூதரகங்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை :
தேவயானி கைதுக்கு அமெரிக்காவின் விளக்கத்தை அடுத்து, நம் நாட்டின் பல நகரங்களில் பணியாற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கியது. அவை பின்வருமாறு,
அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, மத்திய அரசு வழங்கியுள்ள, அடையாள அட்டைகளை திருப்பித் தர வேண்டும்.
நம் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள் குறித்த பட்டியலை, அமெரிக்கா தர வேண்டும்.
அமெரிக்க அதிகாரிகளின் வீடுகளில், வீட்டுவேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ள நம் நாட்டினர் பெயர் மற்றும் விவரங்களை தர வேண்டும்; அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் வேண்டும்.
நம் நாட்டில் செயல்படும் அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும், நம் நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் விவரம், அவர்களின் சம்பள விவரம், வங்கிக்கணக்கு விவரங்கள் உடனடியாக வேண்டும்.
நம் நாட்டில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், மதுபானம் உட்பட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்திய விமான நிலையங்களில், பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல், அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்று, வருவது உடனடியாக தடை செய்யப்படுகிறது.
டில்லியில் செயல்படும், அமெரிக்க தூதரகங்களுக்கு அருகில் போக்குவரத்தை தடை செய்து, வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்படும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, வீரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்படும். இது போல், பல அதிரடி உத்தரவுகள், நேற்று பிறப்பிக்கப்பட்டன.மத்திய அரசின் இந்த உத்தரவால், இரு நாடுகளுக்கும் இடையேயான, தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 17 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|