இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ-வை பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் செயற்கைகோளுடன் இரவு 11.41 மணிக்கு செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களிலேயே பூமியிலிருந்து 501 கிலோ மீட்டர் உயரத்தில் தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. இந்த வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் கொண்டாடிவருகின்றனர்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைகோளின் பயன்கள் :
1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் இந்திய பிராந்திய நேவிகேஷன் செயற்கைக்கோள் திட்டத்தின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகளாகும்.இந்தச் செயற்கைக்கோள் வழங்கும் தகவல்கள் இந்தியாவிற்குள்ளும், இந்திய எல்லையில் இருந்து 1,500 கிலோ மீட்டர் வரையிலும் கப்பல், விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாகனங்களோ, பயணிகளோ தாங்கள் பயணிக்கும் இடத்தைத் துல்லியமாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பேரிடர் காலங்களில் பாதிப்புகளை ஆராயவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தச் செயற்கைக்கோள் திட்டம் பயன்படும். கப்பல், விமானங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.மொபைல் போனில்கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். மேலும் மலையேறுபவர்கள், பயணிகள், ஓட்டுனர்களுக்கு காட்சிப் படமாகவும், ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|