இந்தியாவின் 102–வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி–22 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ என்ற நேவிகேஷன் (கடல்சார் ஆராய்ச்சி) செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை காட்டிலும் குறைந்த தூரத்தில் (501 கிலோ மீட்டர்) செயற்கைகோளை நிலைநிறுத்தி உள்ளோம். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ செயற்கை கோள் இந்தியாவின் முதல் கடல்சார் ஆராய்ச்சி செயற்கைகோள் ஆகும். இந்த வரிசையில் மொத்தம் 7 செயற்கைகோள்கள் அடுத்தடுத்து ஏவப்பட இருக்கின்றன. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–பி செயற்கைகோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏவப்படும். மேலும் பி.எஸ்.எல்.வி. சி–25 ராக்கெட் மூலமாக செவ்வாய் கிரகத்திற்கு அக்டோபர் மாதம் 21–ந் தேதிக்குப் பிறகு புதிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. தற்போது தயார்நிலையில் உள்ள அந்த விண்கலம் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து அனுப்பப்படும். அதேபோல், ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது என கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
|