இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் கொண்டு செல்லக் கூடிய டைம் மிஷின் ஒன்றை 2065-ல் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. அந்த மிஷினை சோதனைக்கு உட்படுத்தும் போது அது 2015ம் ஆண்டுக்கு சென்று விடுகிறது. ஆனால், அங்கிருந்து திரும்பவில்லை.
இந்த டைம் மிஷின் விஷ்ணு(இளங்கோ), அவரது நண்பர் கருணாகரன்(ஜோதிடர் புலிவெட்டி ஆறுமுகம்) இவர்களுடன் விபத்தில் நண்பராகும் விஞ்ஞானி கார்த்திக் ஆகியோர் கையில் கிடைக்கிறது. விஞ்ஞானி கார்த்திக் இந்த மிஷினைப் பற்றிய முழு விவரங்களையும் விஷ்ணுவிடம் கூற எல்லோரும் வியப்பில் உறைகின்றனர். ஆனால், மிஷினை சரி செய்யும் போது கார்த்திக் ஷாக் அடித்து இறந்து விடுகிறார்.
அதன் பிறகு இந்த மிஷினை கைப்பற்றும் விஷ்ணு மற்றும் கருணா இருவரும், நேரத்தை கணினியில் செட் செய்வது போல் செய்து, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்து காலத்திற்கு சென்று வருகின்றனர். இந்த மிஷினை வைத்து தன் நண்பர் விஷ்ணு உதவியுடன் கருணாகரன் பெரிய ஆளாக உருவாகிறார். கடந்த காலத்தில் தொலைத்த பொருளாக இருந்தாலும், இழந்த உயிர் என அனைத்தையும் மீட்டுத் தருகின்றனர்.
ஒரு முறை விஎஸ். ராகவனுக்கு நேதாஜி அளித்த அன்பளிப்பை தேடி கண்டுபிடிக்க செல்லும்போது தற்செயலாக வில்லன் சாய்ரவியை உயிருடன் மீட்டு விடுகின்றனர்.
வில்லனால் எந்த வகையில் ஆபத்து வந்தது. அதன்பின்னர் இவர்கள் என்ன செய்தார்கள்? மறுபடி மிஷினில் என்ன செய்தார்கள்? விஷ்ணுவுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
விஷ்ணுவின் சிறந்த படங்களுள் இந்த படமும் இடம் பெரும். வழக்கம் தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சொந்த தொழில் செய்யவேண்டும் என்று முயற்சி செய்து வரும் இவருக்கு டைம் மிஷின் கிடைத்தவுடன் அதை வைத்து தனது தொழிலிலும் காதலிலும் வெற்றியடைய இவர் முயற்சிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஷ்ணுவின் நண்பராக வரும் கருணாகரனின் காமெடி, ரசிகர்களை பஞ்சம் வைக்காமல் சிரிக்க வைத்திருக்கிறது. சீரியஸான காட்சிகளில் கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். விஷ்ணுவும் கருணாவும் படத்தின் முழுப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.
விஷ்ணுவிற்கு காதலியாக வரும் மியா ஜார்ஜ் பொறுப்பான காதலியாகவும், அன்பு மகளாக வந்தும் மனதில் பதிகிறார். முந்தைய படத்தைவிட அழகாக வந்து சென்றிருக்கிறார்.
குழந்தை என்று பெயர் வைத்துக் கொண்டு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரவி சங்கர். டைம் மிஷினை வைத்து ஹாலிவுட்டில் பல நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ‘இன்று நேற்று நாளை’ படம்தான் தமிழில் வந்த முதல் டைம் மிஷின் பற்றிய படம். முதல் படத்திலேயே தன் வெற்றியை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. மொத்தத்தில் இன்று நேற்று நாளை கண்டிப்பா பார்க்கலாம்.. பாஸ்...
|