இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
மணக்குடவர் உரை:
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
நெருநலும் கொன்றதுபோலும் நிரப்பு-நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருவது கொல்-இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்! இதுமுந்தின நாள் அரும்பாடுபட்டுத் தன் வயிற்றை நிரப்பிய ஓர் இரப்போனின் இரங்கற் கூற்று. உம்மைகள் முறையே இறந்ததும் எதிரதும் தழுவிய எச்சம். ’கொல்’ ஐயம். ’ஓ’ இரங்கலிடைச்சொல். ’நிரப்பு’ மங்கல வழக்கு.
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.
Translation
And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.
Explanation
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.