உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. மாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதே என்று கவலையோடு இருந்தாள். காட்டுக்குள் செல்லச்செல்ல இருட்டு அதிகமாயிற்று. காட்டின் நடுவே போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வண்டி நின்றுவிட்டது. பயந்தபடியே திரும்பிப் பார்த்தாள் ஜானகி. மூன்று திருடர்கள் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தனர். ஜானகி கைகூப்பினாள். ஐயா! நான் என் பையனுக்கு வைத்தியம் பார்க்கிறதுக்கு போயிட்டிருக்கேன்… தயவுசெய்து விட்டுடுங்க…
ஏய்… அதெல்லாம் முடியாது. உன் நகை, பணம் எல்லாம் தந்தாத்தான் விடுவோம். இல்லை, ரெண்டு பேரையும் கொன்னுடுவோம் என்றார்கள். வேறுவழியில்லாமல் தன் வளையல்கள், சங்கிலி, பணம் எல்லாம் தந்தாள் ஜானகி. திருடர்கள் ஓடி மறைந்தார்கள். வண்டி மறுபடி புறப்பட்டது. பக்கத்துக் கிராமத்தில் போய் மருத்துவரிடம் ஜிட்டுக்கு வைத்தியம் பார்த்தாள் ஜானகி. பணம், நகை கொள்ளை போனது பற்றி கூறினாள். மருத்துவரும், பரவாயில்லை, இன்னொரு முறை வரும்போது பணம் தந்தால் போதும் என்று கூறி அனுப்பி விட்டார்.
மறுபடியும் வண்டி நடுக்காட்டை கடந்து கொண்டிருக்கும்போது மாடு மிரண்டது. யாரோ வண்டியைப் பிடித்து இழுத்தார்கள். இந்த முறை ஜானகிக்கு தைரியம் வந்துவிட்டது. அவளிடம்தான் பணம் ஏதும் இல்லையே! ஏய், திருடர்களா! மரியாதையாய் வண்டியைப் போகவிடுங்க!என ஜானகி மிரட்ட… ஹா.. ஹா.. ஹா… என்று இடிக்குரலில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால்.. ஒரு பெரிய பூதம் நின்றிருந்தது. சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது ஜானகிக்கு.
நான் ஒன்றும் திருடனில்லை பூதம் என கர்ஜனை செய்தது. சட்டென்று ஒரு யோசனை உதித்தது ஜிட்டுவுக்கு. நான் நம்பமாட்டேன்… நீதான் மூன்று திருடர்களைப் போல மாறுவேடம் போட்டு வந்து அப்போது கொள்ளையடித்தாய் என்று கத்தினான். ச்சே! அது வேறு யாரோ! என பூதமும் கத்தியது. நான் நம்பமாட்டேன் என மறுபடியும் ஜிட்டு சொல்ல… தன் தலையில் இரு கைகளையும் பதித்துக்கொண்டு கத்தியது பூதம், நானில்லை அது! அப்படியானால் உனக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் அவர்களைப் பிடித்துக்கொண்டு வா! அப்புறம் உன்னை நம்புகிறேன். என கத்தினான் ஜிட்டு. உடனே திரும்பி தன் அம்மாவைப் பார்த்து ஜாடை காட்டினான். சட்டென்று மாட்டை உசுப்பி விரட்டினாள் ஜானகி. வேகவேகமாய் வண்டி ஓடியது. ஊர் விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரின் எல்லையருகே மறுபடி தொம் என்று குதித்தது பூதம். அதன் கைகளில் கொள்ளையடித்த பொருட்களுடன் மூன்று திருடர்கள்! தொம்… தொம்… தொம்… என்று மூன்று பேரையும் பூமியில் வீசியடித்தது. சத்தம் கேட்டு ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ஐயோ! அம்மா! என்று விழுந்தார்கள் திருடர்கள்.
ஆகா! நீ திருடனில்லை… ரொம்ப நல்ல பூதம்… தங்கமான பூதம்! என்று கத்தினான் ஜிட்டு. ஊர்மக்களும் நல்ல பூதம், தங்கமான பூதம்! என்று கோஷம் போட்டார்கள். எல்லோரும் தன்னைப் பாராட்டியதால் சந்தோஷப்பட்ட பூதம், யாரையும் துன்பம் செய்யாமல் காட்டுக்குள் போய் மறைந்தது.
|