|
|||||
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை ! |
|||||
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் ஷேக் தாவூத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இத்தகைய ஆன்லைன் பட்டாசு விற்பனையில் அதற்கென்று உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அந்த பட்டாசுகள் எங்கிருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது என்பது கண்காணிக்கப்படுவது இல்லை. பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் பட்டாசுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இது விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானதாகும். அத்துடன் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வெடிபொருள் விற்பனைக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. வெடிபொருள் கட்டுப்பட்டுத் துறை பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. ஆனால் இவை எதுவும் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பின்பற்றப்படுவது கிடையாது. அத்துடன் நாங்கள் பட்டாசுகளை விற்கும் விலையை விடக் குறைவாக விற்பனை செய்வதன் மூலமும் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனுவானது விடுமுறைக்கால நீதிபதியான வைத்யநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக அரசின் வெடிபொருள் கட்டுபாட்டுத் துறை அதிகாரி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர்17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். |
|||||
by on 16 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|