கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் கொல்கத்தாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த கண்கவர் விழாவில் பாலிவுட் நட்ச்சத்திரங்கள் நடிகர் ஷாரூக்கான், நடிகைகள் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். ராட்சத பலூனில் ஐ.பி.எல். கோப்பையுடன் பெண் அந்தரத்தில் தொங்குவது போன்ற மெய்சிலிர்க்கும் சாகசத்துடன் விழா தொடங்கியது. அதன் பிறகு ஆட்டம், பாட்டம், இசை வேடிக்கை என விழா களைகட்டியது. ஒன்பது அணி கேப்டன்களும் மேடையின் மையப்பகுதிக்கு அணிவகுத்து
வந்து, கிரிக்கெட்டை ஒழுக்கம், முழு உத்வேகத்துடன் ஆடுவோம் என்ற உறுதிமொழியை எடுத்து கையெழுத்திட்டனர். முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், இறுதியில் கொல்கத்தா கேப்டன் கம்பீரும் கையெழுத்திட்டனர்.தொடக்க விழாவில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா, பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதே போல். இன்றைய தொடக்க ஆட்டத்தில் மோத உள்ள டெல்லி, கொல்கத்தா அணி வீரர்களும் விழாவை நேரில் கண்டு களித்தனர்.
|