உத்திர பிரதேசத்தில் மணல் கடத்தலை தடுத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நெக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் கிரிமினல் தந்தையி்ன் பழைய வழக்குகளை மீண்டும் தூசி தட்டி நடவடிக்கை எடுத்த நேர்மை ஐ.பி.எஸ். அதிகாரி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பங்கஜ் சவுத்ரி, இவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சலே முகமது என்பவரின் தந்தை காஸி பஹீர் மீது பழைய கிரிமினல் வழக்குகளை தூசி தட்டி நடவடிக்கை எடுத்தார். இதையறிந்த காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் சலே முகமதுவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 48 மணி நேரத்தில் ஆட்சி மேலிடத்தில் இருந்து அவருக்கு ஒரு உத்தரவு வந்தது. இதில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த பொறுப்பும் அளிக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இது குறித்து பங்கஜ் சவுத்ரி கூறுகையில், எனது கடமையை சரியாக செய்தேன். இது எனக்கு கிடைத்த பரிசா ? என்றார். தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஐ.பி.எஸ்.அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஜெய்சல்மாரில், வர்த்தகர்கள், வணிகர்கள், பொதுமக்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
|