1979 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைக்குச் சென்ற கக்கன் , உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . சிகிச்சை பெற்றும் உடல் நலம் தேறியபாடில்லை . சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் . உடல்நலம் படிப்படியாகப் பாதிக்கப்பட்ட நிலையில 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அன்றைய முதல்வர் எம் . ஜி . ஆரின் ஆணையின் பேரில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் , முதுமை காரணமாகச் சிகிச்சை பலனளிக்கவில்லை . சுயநினைவு திரும்பாத நிலையிலே சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாளன்று கக்கன் இயற்கை எய்தினார் .
மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை . இதில் சிலரின் உடல் அழிந்து போனாலும் அவர்கள் பெற்ற புகழ் அழிவதில்லை . வாழ்ந்த காலங்களில் மனித சமுதாயத்திற்கும் அவர்களது தாய் நாட்டிற்கும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் புகழ் அமைகிறது . ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொன்னாலே அவன் மக்கள் மனத்தில் இடம் பிடித்துள்ளான் என்பதைக் குறிக்கும் . வாழும்போது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பின்னும் அவன் மக்களால் நினைவு கொள்ளப்பட்டால் மட்டுமே அவன் வாழ்ந்ததாகக் கொள்ள முடியும் . இதைத்தான் “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்றார் வள்ளுவர் . அப்படியானால் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றி பெற்றதா ? தோல்வியுற்றதா ? என்பதை அம்மனிதனின் மரணத்திற்குப் பின் நிலைத்து நிற்கும் எச்சத்தைக் கொண்டே அளவிட வேண்டும் . இந்த அளவுகோலைக் கொண்டு அளவிட்டால்தான் கக்கனின் 72 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் .
எச்சம் என்பதை , அவரவர் ஈன்ற பிள்ளைகள் என்று பலர் பொருள் கூறுவதைப் பார்க்கிறோம் . ஆனால் , அது பொருந்தாப் பொருளாகத் தோன்றுகிறது . காரணம் பிள்ளைகள் இல்லாத பெருந்தலைவர்களுக்கு இது பொருந்துவதில்லை . முன்னால் முதல்வர் பெருந்தலைவர் காமராசர் திருமணமே செய்து கொள்ளவில்லை . அப்படியானால் அவரை மேற்சொன்ன அளவுகோலைக் கொண்டு அளவிட முடியாத நிலை வந்த விடும் . பெருந்தலைவர் , ஏழைப்பங்காளன் என்று சொன்னால் காமராசரை மட்டுமே குறிக்கும் . அந்த அளவிற்குப் புகழெச்சம் நிரம்பிய தலைவர் காமராசர் .
எனவே எச்சம் பலவகையானது என்று ஊகிக்க முடிகிறது . எச்சம் என்பது ஒருவர் நினைத்தவை , பேசியவை , செய்தவை என விரிவாகப் பொருள் கொண்டு அவற்றை , சொல்லெச்சம் , செயலெச்சம் , அடையாள எச்சம் என்று மூன்று வகைக்குள் அடக்கலாம் .
ஒரு மனிதனால் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை மீண்டும் மீண்டும் மக்களின் வளர்ச்சிக்குச் சொல்லப்படுமேயானால் அவை சொல்லெச்சம் ஆகும் . இதற்கு விவேகானந்தரின் அறிவுரைகளை உதாரணமாகக் காட்டலாம் . அவரது பொன்மொழிகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நம்மால் காண முடிகிறது .
தமது வாழ்க்கையை அடையாளம் காட்டி , அதுபோலவே பிறரும் வாழ வழிகாட்டியாக அமைத்துக் கொள்வது செயலெச்சம் ஆகும் . காந்தியடிகள் , வள்ளலார் போன்றோர் அவர்களது வாழ்க்கையையே அடையாளமாகக் காட்டினர் . அதையும் மக்கள் ஏற்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம் .
எவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைக் கண்டுபிடித்து அல்லது பிறரால் செய்யமுடியாத ஒன்றைச் செய்து வைத்து , அதை வருங்கால மக்கள் கண்டுபிடித்தவன் - செய்து வைத்தவன் பெயரைச் சொல்லும் அளவிற்குச் செய்து வைப்பது அடையாள எச்சம் எனப்படும் . தம் மனைவியின் மேல் கொண்டிருந்த அன்பின் காரணமாக நினைவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் .
மனிதர்களை எடைபோட்டு அறிய இந்த மூன்று அளவுகோல்கள் போதுமானவை என்று தோன்றுகிறது . அவ்வகையில் அரிதான தலைவர்களில் ஒருவராக , அரசியல் அறத்தின் எச்சமாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கக்கன் .
“பிழைக்கத் தெரியாதவர்கள் என்று
பழிக்கப்படுபவர்களால்தான்
இந்த உலகம்
பிழைத்துக்கொண்டிருக்கிறது”
|