இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.)
மணக்குடவர் உரை:
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
தேவநேயப் பாவாணர் உரை:
கை செய்து ஊண் மாலையவர் இரவார்-தம் கையால் உழுதுண்டலை இயல்பாக வுடைய உழவர் பிறரிடம் தாம் ஒன்றையும் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்-தம்மை யிரப்பவர்க்கெல்லாம் அவர் வேண்டியதொன்றை இல்லையென்னாது ஈவர். ’கை செய்து’ என்னும் மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கு, உழவு என்னும் செய்பொருள் அதிகாரத்தால் வந்தது. ’கைசெய் தூண் மாலை யவர்’ என்பது, ஒரு காலும் வற்றாத வருவாயுடையவரென்னும் ஏதுவைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது. "மாலை யியல்பே". என்றார் தொல்காப்பியர் ('சொல். உரி. 15). அது இன்று மானை என்று நெல்லை நாட்டில் உலகவழக்காக வழங்குகின்றது.
கலைஞர் உரை:
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
சாலமன் பாப்பையா உரை:
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.
Translation
They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live.
Explanation
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.