சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக கொடிகட்டி பறக்கிறார் சத்யராஜ். அவரின் உதவியாளராக பணிபுரிகிறார் நம்ம எஸ்.ஜே. சூர்யா.
ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்பிவிடுகிறார் சத்யராஜ். அப்படி அவமானப்பட்ட இயக்குனர் சத்யராஜின் உதவியாளர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இசை அமைக்க வாய்ப்பு கொடுக்கிறார்.
புதிய வாய்ப்பு கிடைத்த உற்சாகத்தில், சத்யராஜை விட்டு தனியாக வந்து இசையமைக்க செல்கிறார் சூர்யா. முதல் படமே வெற்றிப் பெற பல புதிய பட வாய்ப்புகள் எஸ்.ஜே. சூர்யாவை தேடி வருகிறது. இதனால் சத்யராஜை பின்னுக்கு தள்ளி புகழின் உச்சிக்கு செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதை ஏற்று கொள்ள முடியாத சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவை அழிக்க நினைக்கிறார்.
இதற்கிடையே ஒரு தத்ரூபமான இசை ஆல்பம் எடுப்பதற்காக காட்டிற்கு செல்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அங்கு தான் நாயகி சாவித்ரியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல், திருமணம் என முடித்துக் கொண்டு வீடு திரும்புகிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை வீட்டில் இருப்பவர்கள், உதவியாளர்கள், மேனேஜர் ஆகியோர் இவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆக்குகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவும் தான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்து மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறார். இந்த இடைவேளியில் சத்யராஜ் மீண்டும் தன் பழைய இடத்தை பிடிக்க பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தன் நிலைமைக்கு யார் காரணம் என்பதை அறியும் எஸ்.ஜே.சூர்யா, சத்தியராஜை வென்றாரா இல்லை... மனநலம் பாதிக்கப்பட்டாரா என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் எஸ்.ஜே. சூர்யா, கதை, திரைக்கதை, இசை, நடிப்பு, இயக்கம் என பல பரிமாணங்களில் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். அதிலும் மன நலம் பாதிக்கப்பட்டவராக வரும் கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்துள்ளார்.
நாயகியாக வரும் சாவித்திரிக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், நடிப்பில் பரவாயில்லை.
படத்திற்கு பெரிய பலம் என்றால் அது சத்தியராஜ்ஜின் நடிப்பை சொல்லலாம். அந்த அளவுக்கு வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார் சத்தியராஜ்.
படத்தின் இசையும், பின்னணி இசையும் பரவாயில்லை...
மொத்தத்தில் இசை பரவாயில்லை.. காட்சிகளை குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்....
|