|
|||||
தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !! |
|||||
இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட், ஜி சாட்-14 செயற்கைக்கோளுடன் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை சரியாக மாலை 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இதற்கான கவுன்டவுன் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தும் நாடுகளில் ஆறாவது நாடாக இணைந்துள்ளது.
தோல்விகளை கடந்த வெற்றி :
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் முறையாக ஜிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டது. அப்போது க்ரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று கட்டுப்பாட்டை இழந்து வெடித்துச் சிதறியது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி., விண்ணில் ஏவ தயார் நிலையில் இருந்தது. விண்ணில் பாய்வதற்கு 74 நிமிடங்களுக்கு முன் ராக்கெட்டின் 2வது நிலையில் எரிபொருள் கசிவ ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். கசிவு மிகப் பெரிய அளவில் இருந்ததால் குறித்த நேரத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இரண்டு முறை ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பல முக்கிய அம்சங்களுடன் இந்த ராக்கெட்டை தயாரித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் சோதனை இந்தியாவின் விண்வெளி அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல் என கருதப்படுகிறது. அதிநவீன திறன் கொண்ட க்ரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
செயற்கைக்கோளின் பயன்பாடு :
இந்த செயற்கைக் கோளை இந்தியா புவி நிலைப் பாதையில் நிலை நிறுத்துவதன் மூலம் தகவல் தொடர்பில் பல்வேறு வளர்ச்சிகளை எட்ட முடியும். இணையதள வசதி இல்லாத கிராமங்களுக்கு கல்வி தொடர்பான சேவைகளை வழங்கவும், வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவர், கிராமப்பகுதியில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகளுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்படும். சுமார் 12 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளில் பூமியின் ஒரு பகுதியிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை நமது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெறுவதற்காக, டிரான்ஸ்பாண்டர்கள் என்னும் 14 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிற்குத் தேவையான 2,600 வாட்ஸ் எரிபொருளுக்காக சிறப்பு சூரியத் தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அறிந்த பிரதமர் மன்மோகன்சிங், 'இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையில் இது ஒரு மைல் கல்' என்றார். மேலும், சிறப்பாக செயலாற்றிய விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார். |
|||||
by Swathi on 05 Jan 2014 0 Comments | |||||
Tags: ஜி.எஸ்.எல்.வி. டி5 ராக்கெட் இஸ்ரோ ஜிஎஸ்எல்வி ஸ்ரீஹரிகோட்டா இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட் India\\\'s Big Rocket | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|