|
|||||
அரசியல்வாதிகளுக்காக வேலை செய்த ஐ டி நிறுவனங்கள் மிகப்பெரிய மோசடி அம்பலம் !! |
|||||
நம் நாட்டு அரசியல்வாதிகள் ஊழல் செய்வதில் மட்டும் திறமையானவர்கள் அல்ல, காசு கொடுத்து தனக்கு தானே இணையதளத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதிலும் வல்லவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறது ஒரு அதிர்ச்சிகரமான தகவல். அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை எல்லாருக்கும் ரகசிய வழியில் உதவும் இந்த பெரும் சதி பிசினசை முழுக்க முழுக்க ஐடி கம்பெனிகள் செய்கின்றன என்பது தான் நமக்கு பேரதிர்ச்சி.
தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு விழவேண்டுமா? இதற்கு சில லட்சமாகும்
வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.
இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு தொழிலாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே பல லட்சங்களை வாங்கிகொண்டு சத்தம் இல்லாமல் சில ஐடி கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பெரும் சதி தொழிலை, ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்திய கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணையதளம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார். ‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. அதில் சில கம்பெனிகள் மற்றும் அவர்கள் நடத்திய பேரம் பற்றிய விவரம் பின் வருமாறு,
டெல்லி விரிஞ்சி சாப்ட்வேர் : இந்த கம்பெனி பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மன்மோகன் சிங் கார்ட்டூனை காண்பித்த அவர், காங்கிரஸ் என்றால் மருமகன் வத்ரா. வத்ரா கை இல்லாமல் எதுவும் இல்லை என்று போட்ட பேஸ்புக் கருத்துக்களை காட்டுகிறார். ‘உங்களுக்கு இப்படி போட்டு பட்டய கிளப்பறோம். நேதாஜி கண்டிப்பாக வெற்றி பெறுவார். எவ்வளவு ‘லைக்’ எவ்வளவு ‘எதிர்ப்பு’ கருத்து வரணும்ன்னு மட்டும் சொல்லுங்க’ என்கிறார். இத்துடன் இவர் விடவில்லை. ‘பாகிஸ்தான் தாக்கினா என்ன மோடி வரணும். சீனா ஊடுருவினா என்ன மோடி வந்தா போதும்’ என்றும் சொல்கிறார்.
டெல்லி குர்கான் வெப்சால் மீடியா. இதன் உரிமையாளர் பிரியதர்ஷன் பதக் நடத்திய பேரத்தில், ‘உங்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ‘லைக்’ போடுறோம். பேஸ்புக்குல ஒரு மாதத்துக்கு போட்டா போதுமா? என்கிறார்.
மும்பை ஓம் கன்சல்டன்சி சர்வீஸ். இதன் உரிமையாளர் பிபின் பத்தாரே. ‘ஒண்ணும் கவலைப்படாதீங்க. என்னிடம் இதற்கு தனி சாப்ட்வேர் இருக்கு. எந்த தொகுதியில் எந்த வார்டுல எத்தனை பேர் எந்த ஜாதி என்பது வரை இதுல இருக்கு. யார் உங்களுக்கு எதிரா ஓட்டு போடுவாங்கன்னு தெரிஞ்சா, அவங்களை பூத்துக்கு வராம தடுத்திடலாம் என்றார் பத்தாரே.
பெங்களூர் ட்ரயம் கம்பெனியின் ட்ரிகாம் படேல் சொல்லும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சி தரத்தக்கவை. ‘நான் இரண்டரை வருஷமா இந்த வேலையை செய்றேன். ப்ராஜக்ட் எல்லாம் வெளியேயிருந்து வர மாட்டேங்குது. என்ன நான் மட்டுமா பண்றேன் இந்த தொழிலை. பெங்களூருல உள்ள 3 சதவீத கம்பெனிகள் இந்த பிசினசை தான் செய்கின்றன. நேதாஜிக்கு ஆதரவா கட்டுரைகள் வெளியிடணுமா? கார்ட்டூன் போடணுமா? ரேட் சொல்றேன், அட்வான்ஸ் கொடுத்திட்டு போங்க என்கிறார்.
மும்பையின் பிரிஸ்மார்டெக் நிறுவனம். இதன் உரிமையாளர் விவேக் அரோரா, ‘நாங்க தெளிவாக வேலை செய்றோம். ஐபி அட்ரஸ் கூட தெரியாது. உடனே அழிச்சிடுவோம்’ இப்படி 24 ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் வெளிப்படையாக பேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து கோப்ரா போஸ்ட் நிறுவனத்தின் அனிரூத் பாகல் கூறுகையில்,‘இந்த கம்பெனிகள் செய்யும் தொழில், குற்றச்சட்டம், சைபர் குற்றம் சட்டம் என்று எல்லா குற்ற சட்டங்களுக்கும் எதிரானது. இது பற்றி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
முழுமையான ஆதாரம் வரட்டும் :
கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திய மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியதாவது, சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். |
|||||
by Swathi on 29 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|