ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் என பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.
ஓட்டுக்கு பணம் தருவோர் குறித்து தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044– 282 536 59 மற்றும் இ.மெயில் itcontrolroomchennai@gmail.com என்ற முகவரியிலும் தகவல் தரலாம் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. .
|