இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.)
மணக்குடவர் உரை:
துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
நடுக்கு அற்ற காட்சியவர் - அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற் பொருட்டுத் தமக்கு இழிவு தரும் வினைகளைச் செய்யமாட்டார். இன்பமுந்துன்பமுங் கலந்ததே இவ்வுலகவாழ் வென்றும், வருவது வந்தே தீருமென்றும், இழிவினைகளைச் செய்வதால் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமுமே உண்டாகு மென்றும், அறவழியாற் போக்க முடியாத துன்பத்தை அமைதியாக நுகர்ந்தேயாக வேண்டு மென்றும், தெள்ளத்தெளிவாக அறிந்தவராதலின் 'நடுக்கற்ற காட்சியவர்' என்றும், 'இளிவந்த செய்யார்' என்றும் கூறினார்.
கலைஞர் உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.