LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 432 - அரசியல்

Next Kural >

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ' ரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இவறலும்-செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; மாண்பு இறந்த மானமும் - தவறான தன்மானமும்; மாணா உவகையும் -அளவிறந்த மகிழ்ச்சியும்; இறைக்கு ஏதம் -அரசனுக்குக் குற்றங்களாம். இவறலால் மேற்கூறிய ஈகை (382), வகுத்தல் (385) கொடையளி, குடியோம்பல் முதலியன செவ்வையாய் நிகழா.மாண்பிறந்த மானமாவது, ஐங்குரவர்க்கும் அந்தணர், சான்றோ ரருந்தவத்தோர் முதியோர்க்கும் வணக்கஞ் செய்யாமை. மாணாவுவகையாவது மகிழ்ச்சியின் மைந்துற்று இகழ்ச்சியிற் கெடுதல் (539).
கலைஞர் உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
Translation
A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith.
Explanation
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
Transliteration
Ivaralum Maanpirandha Maanamum Maanaa Uvakaiyum Edham Iraikku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >