தமிழக ரசிகர்களால் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஏழு மணி அளவில் மரணமடைந்தார்.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் முத்துராமன், சமுத்திரகனி, சேரன், கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் பாலசந்தரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. பாலசந்தரின் உடல் அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை 2 மணியளவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 4.30 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார்.
தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.
கே.பாலச்சந்தர் பற்றிய சில வாழ்க்கை குறிப்பு :
கடந்த 9-7-1930 அன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.
இதில் கதாநாயகனாக நாகேஷ் நடித்திருந்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் இவரது தனி முத்திரையை திரையுலகில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.
தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்த இவர், கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறு தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும் இயக்கியுள்ளார்.
பல்வேறு பிலிம்பேர் விருதுகள், 1987-ல் பத்மஸ்ரீ விருது, 1987-ல் தாதாசாகேப் பால்கே விருது போன்ற சினிமாத்துறை விருதுகளை பெற்றுள்ளார்.
படபிடிப்புகள் ரத்து :
இவரது மறைவு காரணமாக இன்று நடைபெற உள்ள படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது. இதை இயக்குனர்கள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.
என்னையே நான் இழந்துள்ளேன் : நடிகர் ரஜினிகாந்த்
திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கூறுகையில், ''இயக்குநர் கே.பாலச்சந்தரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
கே.பி.யை இழந்ததால் என்னையே நான் இழந்ததாக வருந்துகிறேன். கே.பாலச்சந்தர் என்னை ஒரு நடிகராக பார்த்ததைவிட மகனாகவே பார்த்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
|