LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

காதலினால் அல்ல!Part1

 

காதல் என்பது உன்னதமான பொருள்.
காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது — அதாவது தானே தனக்குத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது — ஒரு தவறு என்று கருதப்பட்டது. அவள் பெற்றோர்கள் சொற்படி அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடவனை மணப்பது என்பதுதான் அவளுக்குள்ள கடமை எனக் கருதப்பட்டது. ஆரியர்கள் பெண்ணுரிமையை அடக்கி வைத்த காலத்திலிருந்தே இது ஆரம்பித்திருக்கலாம்.
இன்று நாம் அறிவொளி பெற்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்குக் கல்வி பெருகிவிட்டது. பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை விட (அறிவிலும் அனுபவத்தாலும் இல்லாவிட்டாலும்) கல்வியில் உயர்ந்தவர்களாக இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர் சமுதாயத்தில் இது உண்மை.
ஆனாலும் இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.
இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த நாவலை எழுதியதன் இன்னொரு காரணம் 24 ஆண்டுகளாக நான் கண்டு, நடந்து, பழகி, பருகிய மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இயற்கை அழகின் ஒரு பகுதியையாவது ஒரு நாவலில் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆசையும்தான். நாவல் பூர்த்தியடைந்து அதை மீண்டும் படித்த போது இந்த வளாகத்தின் இயற்கை எழில் என் எழுத்துத் திறத்தை விட மிகப் பெரியது என்று தெரிந்து கொண்டு வியந்து குனிந்திருக்கிறேன்.
இயற்கை என்பது மேலும் உன்னதமான பொருள்.
அன்புடன்,
(ரெ.கார்த்திகேசு)
kgesu@pd.jaring.my
Publisher’s note: The novel entitled “Kaathalinaal Alla” by R.Karthigesu is published in India by Mithra Publications (1999) and in Malaysia by Muhil Enterprises (1999) Copyright by Author.
Date of Publication 25 December 1999.; ISBN1 876626 364; Total number of pages 308.
ஆசிரியரைப்பற்றி சில வரிகள்:
ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர். பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் (mass communication) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர். மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர். அவரது மின்னஞ்சல் : .
——————————————————————————–
காதலினால் அல்ல!
1
அந்த வெளிர் நீலக் கடல் பரப்பை அகிலா ஆசையுடன் பார்த்தாள். காலை எட்டு மணி இளவெயிலில் அதன் மேனியில் பளபளப்பு ஏறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் கண்களைத் தாழ்த்தினால் பாலச் சுவரில் விட்டு விட்டுக் கட்டியுள்ள சிமிந்திக் கம்பங்களூடே அது துண்டு துண்டாய் உடைந்து படபடத்தது. அந்த பனிரெண்டு கிலோமீட்டர் பினாங்கு பாலத்தில் விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து பார்க்கும் போது ஒரு சினிமாவில் வருகிற மாதிரி அந்தத் தூண்கள் “விஷ் விஷ்” என்று செங்குத்துக் கோடுகளாய் ஓடி மறைந்தன. ஆனால் பாலத்தின் பக்கச் சுவர்களின் விளிம்பின் மேலாகக் கண்களை ஓடவிட்டால் கடல் எல்லையில்லாமல் நீண்டிருந்தது.
வலது பக்கத்தில் ஜியார்ஜ் டவுனின் கட்டடங்கள் வான் வெளியில் செங்குத்துக் கற்களாய் நினறிருந்தன. கொம்தார் கட்டடம் எல்லாக் கட்டடங்களுக்கும் மேலே உயர்ந்து கொடிக்கம்பமாய் நின்றிருந்தது. பினாங்குத் தீவுக்கும் அக்கரையிலுள்ள பட்டர்வொர்த் துறைமுகத்திற்குமிடையே உள்ள வடநீரிணையில் பல கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பிரயாணிகள் ·பெர்ரிகள் ஏராளமான ஜன்னல்கள் அமைத்த பெட்டிகளாய் மிதந்து கொண்டிருந்தன. இவற்றுக்கு ஒரு கழுத்தும் தலையும் அமைத்தால் பிரம்மாண்டமான அன்னங்கள் போல இருக்கும் என அகிலா வேடிக்கையாகக் கற்பனை பண்ணிக் கொண்டாள்.
இடது பக்கத்தில் காட்சிகள் இன்னும் பசுமையாக இருந்தன. கடலுக்குக் கோணல்மாணலாய்க் கரை போட்ட மாதிரி ஜெர்ஜாக் தீவின் குன்றுகள் தெரிந்தன. ஒரு குறுகிய வெண்மணல் திட்டு அந்த குன்றுகளுக்கு அடிக்கோடிட்டிருந்தது. அந்த விரிந்த கடலில் அந்த நேரத்தில் ஒரே ஒரு சிறிய இயந்திரப் படகு மட்டும் “டுப் டுப்” என்று சத்தமெழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. எதிரில் பாயான் லெப்பாசின் புதிய மின்னியல் தொழிற்சாலைகளும் தூரத்தில் விமான நிலையத்தின் ஓடும் பாட்டையும் தெரிந்தன.
கொஞ்சம் தலை நிமிர்ந்த போது கடலுக்கும் வானுக்குமிடையே உள்ள வெளியில் விமானம் ஒன்று கோழிக் குஞ்சுக்குக் குறி வைத்து இறங்கும் பருந்து போல நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது. விமானத்தின் வால் பகுதியில் பொறித்திருந்த மாஸ் நிறுவனத்தின் கிளந்தான் பட்டம் அகிலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அதன் நீண்ட முன்னிறக்கைகள் வலது பக்கம் கொஞ்சம் இறங்கி நிமிர்ந்து நேராகின. பருந்தின் விரித்த கால் நகங்கள் போல் அந்த விமானத்தின் சக்கரங்கள் வெளியாகி நீண்டிருந்தன. அதன் பூதாகார உடல் தரையைத் தொட விரைந்து கொண்டிருந்தது.
தன் லட்சியங்களும் தரை தொடுகின்ற நேரம் இதுதான் என அகிலா எண்ணிய போது அவள் மனம் கிளுகிளுத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் பினாங்கு அஞ்சல் முத்திரையிட்ட கனமான நீண்ட உரையில் “உங்களுக்கு மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இயலில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் பத்திரங்களுடன் …. தேதி இப்பல்கலைக் கழகத்தின் “தேசா கெமிலாங்” மாணவர் விடுதியில் வந்து பதிந்து கொண்டு..” என்ற கடிதம் வந்த அன்றே அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது.
எவ்வளவு துன்பங்களுக்குப் பின்! எத்தனை தூங்கா இரவின் படிப்புகள்! ஒவ்வோர் ஆண்டும் அவள் முந்தைய வகுப்பு மாணவிகள் பரிட்சைப் படிகள் ஏற ஏற, பல்கலைக் கழகங்களில் இடம் பெற்று விடை பெற்றுப் போகப் போக “நம்மால் முடியுமா? முடியுமா?” என்று எத்தனை பதைபதைப்புகள்!
எஸ்டிபிஎம் முடிவு வருவதற்கு முந்திய இரவில் என்ன பாடு பட்டது மனம்! அன்றிரவு தூங்காமல் ஜன்னலை வெறித்துப் பார்த்திருந்து, பெயிலாகப் போகிறோம் என்று பயந்து, தோழிகள் சிரிப்பதாகக் கனவு கண்டு, பத்து முறை எழுந்து விளக்குப் போட்டுத் தண்ணீர் குடித்து, “தூங்கம்மா!” எனத் தாயைக் கெஞ்ச வைத்து, மறுநாள் ஒரு “ஏ” இரண்டு “பி”, இரண்டு “சி” என்று அறிந்து வாய் பிளந்து சிரித்து குதித்து தோழிகளைக் கட்டிக்கொண்டு, அந்த படபடப்பில் காரில் காத்திருந்த அப்பாவை மறந்து விட்டு, அப்புறம் ஓடிவந்து அவரிடம் காட்டி அவர் தன் கன்னத்தில் முத்தமிட்டு…
படபடப்புகள் முடியவில்லை. எந்தப் பல்கலைக் கழகம், என்ன பாடம், எப்படி வரிசைப்படுத்துவது என்று பலரிடம் ஆலோசனை கேட்டு அலைந்து, “நீ அறிவியல் மாணவி. பௌதிகத்தில் “ஏ”, கணக்கில் “பி”, ரசாயனத்தில் “பி”, வாங்கியிருக்கிறாய். ·பார்மசி முதலில் போடு, கம்ப்யூட்டர் இரண்டாவது போடு” என்ற ஒரு பட்டதாரி ஆசிரியர் ஆலோசனையை ஏற்று, மனுச் செய்து நாட்களை எண்ணிக் காத்திருந்து…
“அதோ அந்தப்பொண்ணுக்கு இடம் கெடச்சி லெட்டர் வந்திருச்சின்னு சொல்றாங்களே! உனக்கு ஏன் இன்னும் வரல…?” என்று அப்பா பீதியை எழுப்பி, “கெடைக்கலன்னா லட்டர் அனுப்ப மாட்டாங்களாம்! ரெண்டு வாரம்வரைக்கும் வரலன்னா இல்லன்னுதான் அர்த்தம்” என்ற ஒரு தகவல் கேட்டு அன்றிரவு அழுது…
மறுநாள் காலையில் “இடம் கெடைக்காதவங்க மஇகா கல்விக் குழுத் தலைவரப் போய்ப் பாக்கச் சொல்றாங்கள, கோலாலம்பூர் போய் பாத்திட்டு வந்திருவமா…” என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த அஞ்சல்காரர் வீசிப்போன தடிப்பான உரையில் செய்தி கிடைத்து,..
கடித்தைப் பார்த்ததும் வாய்திறந்து சிரித்த அப்பா அப்புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களில் ஊறிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். “என்ன அப்பா?” என்று கேட்டவளை அணைத்துக் கொண்டார்.
“இல்லம்மா! இது ரொம்ப சந்தோஷமா… எனக்குப் பேசவே முடியில. எங்கப்பா, உன் தாத்தா, தோட்டத்தில தொழிலாளியா இருந்தவரு. அவருக்கு மகனாப் பொறந்து தமிழ்ப் பள்ளிக்கூடத்தில படிச்சி ஒரு தமிழ் வாத்தியாராவும் தலைமை ஆசிரியராவும் நான் வந்தேன். அதுதான் என்னால ஏற முடிஞ்ச உயரம். நீ பாரு, பட்டதாரியாகப் போற, அதுவும் கம்ப்யூட்டர் துறையில! நம்ம குடும்பத்தில பல்கலைக் கழகத்தில அடியெடுத்து வைக்கிற முதல் ஆள் நீதான். என் பரம்பரைய உயர்த்தப் போற, அந்த சந்தோஷம் தாங்க முடியில…!” அவளும் ஆனந்தத்தில் அழுதாள், அம்மா வந்து உச்சி மோந்து உட்கார வைக்கும் வரை.
அதன் பிறகு எல்லாம் அத்தனை வேகத்தில் நடந்தன. முதலில் சாமான்கள் வாங்கும் படலம்: பள்ளிக்கூடச் சீருடைகளை மூட்டை கட்டிவிட்டு வகுப்புக்களுக்கு சுதந்திரமாகப் போட்டுச் செல்ல சில ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள், பிளவுஸ், புதிய உள்ளாடைகள், பஞ்சாபி ஆடைகள், அம்மா வற்புறுத்திக் கொடுத்த இரண்டு புடவைகள், எல்லாவற்றையும் திணிக்க புதிதாக ஒரு பேக்.
பினாங்கு விடுதியில் தங்குவதற்கான தட்டுமுட்டுச் சாமான்கள், “வேண்டாம். வேண்டாம்” என்று மறுத்தும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள், அதன் பின் மருத்துவ சோதனை, கட்ட வேண்டிய கட்டணங்களுக்கு பேங்க் டிரா·ப்ட், செலவுக்குப் பணம், தோழிகளிடம் விடைபெறுதல், ஆசிரியர்களிடம் ஆசி வாங்குதல், உடன் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்த தம்பிக்கு அவன் பள்ளிக்கூடத்திலிருந்து அனுமதி பெறுதல், இன்று காலை ஆறு மணியிலிருந்து பிரயாண ஏற்பாடுகள்… எல்லாம் ஒரு குடைராட்டினத்தில் சுற்றும்போது கண்ட காட்சிகளாக “விர் விர்”ரென்று ஓடிவிட்டன.
இதோ இது அந்த ஏற்பாடுகளின் கடைசிக்கட்டம். அப்பா காரோட்டிப் போகிறார். தம்பி முன்னிருக்கையில். தான் பின்னாலிருந்து கடலையும் பினாங்குப் பாலத்தையும் வேடிக்கை பார்த்தவாறு…. இது வெறும் பாலமல்ல; தன் முந்திய வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் இணைக்கின்ற உறவுப் பாலம். இனி நான்காண்டுகளுக்குத் தன் இல்லமாக இருக்கப்போகும் பல்கலைக்கழகத்திற்கான பாதை.
“அதோ தெரியுது பாரம்மா, அதுதான் சான்ஸலரி, துணைவேந்தர் அலுவலகம் அப்புறம் பதிவாளர் அலுவலகம் எல்லாம் அங்கதான்!” என்று அப்பா சுட்டிக்காட்டினார். காரின் முன் கண்ணாடிகள் ஊடே மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு குன்றில் கம்பீரமாக நின்றிருந்தது அந்தக் கட்டடம்.
*** *** ***
அகிலாவுக்கு அந்தப் பல்கலைக் கழக வளாகம் புதிய உலகமாய் இருந்தது. ஒலிகள், அசைவுகள், வாசனைகள் அனைத்தும் புதியவையாக இருந்தன. இந்த 150 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த நிலப் பரப்பு, ஒழுங்கான நேரான சாலைகள், சாலைகளை நிழலில் அரவணைக்கும் பிரமாண்டமான வரிசை மரங்கள். கைகளில் கோப்புகளை ஏந்தியவாறு துருதுருவென்று அலைகிற மாணவர் கூட்டம்.
வந்து சேர்ந்த அந்த முதல் நாள் மாணவியாய்ப் பதிவு செய்து கொள்ளும்போது அப்பா முழுக்கவும் உடனிருந்து உதவினார். பதிவுக்கு பேட்ஜ் அணிந்திருந்த சில மூத்த மாணவிகள் உடனிருந்து வழிகாட்டினார்கள். தம்பி பெட்டிகளையும் சாமான்களையும் முக்கி முக்கித் தூக்கினான். “தேசா” என்று அழைக்கப்படும் மாணவர் விடுதிகளில் “கெமிலாங்”கில் (“பிரகாசம்”) இரண்டாம் மாடியில் அகிலாவுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிய அறை. அவளுடைய அறைத் தோழி இன்னும் வரவில்லை. சிறிய படுக்கையும் எழுது மேசையும் இருந்தன. சின்னஞ்சிறு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் மரங்கள் தெரிந்தன.
அவளை அறையில் விட்டு விட்டு “இன்னும் எதாச்சும் வேணுமா? காசு போதுமா? அடிக்கடி போன் பண்ணு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு அப்பா தம்பியுடன் திரும்பிப் போய்விட்டார். அவர்கள் போனவுடன் இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்திராத புதிய அனுபவம் பயமாக வந்து கவிந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற ஆயிரம் புதிய மாணவர்களுக்கும் இந்த அனுபவம் புதிதுதான் என்ற எண்ணம் ஆறுதலாக இருந்தது. மேலும் அந்தத் தனிமையை எண்ணவே முடியாதபடி அவள் செய்ய வேண்டிய பல காரியங்கள் காத்துக் கிடந்தன.
பகல் முழுக்க அவள் பல இடங்களுக்கு அலைந்தாள். பல்கலைக் கழகத்தை அவளுக்குப் பழக்கப் படுத்த பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விரிவுரை அறைகளைத் தேடிப்போக வரைபடமும் வழிகாட்டிப் புத்தகமும் கொடுத்தார்கள். விடுதிப் பதிவு, வகுப்புப் பதிவு, நூல்நிலையப் பதிவு, மாணவர் சங்கப் பதிவு, துணைப்பாடப் பதிவு, மொழிப் பதிவு என்று ஏராளமான பதிவுகளுக்கு விளக்க நாள் குறித்து அட்டவணை தந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் விடுதி முன் கூட்டமாகக் கூடி வரிசை பிடித்துக்கொண்டு மூத்த மாணவிகள் வழிகாட்ட நடநட என்று நடக்கவேண்டியதாயிற்று.
ஆனால் நடப்பது என்பது இங்கு இன்பமான அனுபவமாக இருந்தது. கால் பரவி நடப்பதற்கு ஆனந்தமான சோலையாக இருந்தது. எங்கும் நிழல் தரும் பிரம்மாண்டமான மரங்கள். மழை மரங்கள், வேப்ப மரங்கள், காட்டுத் தீக்கொழுந்து மரங்கள் இன்னும் அவளுக்குப் பெயர் தெரியாத வெப்ப மண்டல பலவகை மரங்கள். நேரான ஒழுங்கான சாலைகள். புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.
அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன. தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.
பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன. அந்தக் குன்றிலிருந்து பார்த்தால் நீண்ட கிளைகள் நீட்டித் தவழ்ந்திருந்த மழைமரங்களூடே கடலும் பாலமும் சட்டமடித்து மாட்டப்பட்ட அழகிய ஓவியங்களாய்த் தெரிந்தன. சூரிய ஒளி பட்டுப் பட்டு கடல் தகதகத்தது.
மனதில் மகிழ்ச்சி இருந்தது. எஸ்டிபிஎம் பரிட்சையை வெற்றி கொண்ட பெருமை இருந்தது. பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிவிடவில்லை என்ற நிம்மதி இருந்தது. பல்கலைக் கழகத்தில் இடம் பிடித்துவிட்ட களிப்பு இருந்தது. ஒரு கவின் சோலையாக உள்ள இந்தக் கல்விச் சாலையில் இருக்கிறோம் என்ற பெருமிதம் வந்தது. “புதிய வானம், புதிய பூமி” பாட்டு அவள் உதட்டுக்கு வந்தது. தன்னையே வரவேற்க இவையெல்லாம் அமைந்தது போல.
ஆனால் ஒன்று மட்டும் பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்தே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. இந்த ஒரு வாரம் முதலாண்டு மாணவர்கள் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் அடுத்த வாரத்தில் மூத்த மாணவர்களும் மாணவியர்களும் தங்கள் புதிய ஆண்டுப் பதிவுக்கு வந்து சேருவார்கள்; அப்போதுதான் அவர்களின் ரேகிங் ஆரம்பமாகும். முன்பு கேட்டிருந்த “நடனமாடு, கொச்சைக் கதை சொல், சட்டையை அவிழு” போன்ற கதைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து மனசு கலவரப்பட்டது. அந்த பயங்கர எதிர்பார்ப்பில் மனதில் இன்னும் அதிகமாக மருட்சி மண்டியது.
*** *** ***
அகிலா தன்னுடைய துணை (மைனர்) பாடமாக கணிதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். தனக்குத் தெரிந்த, பழகிய பாடங்களிலேயே நிற்பது நல்லது என அவளுக்குத் தோன்றியது. அறிமுக உரையில் அவளுடைய கணினி இயல் டீன் பேசும்போதும் அதைத்தான் சொன்னார். “இந்தப் பல்கலைக் கழகத்தில் துணைப் பாடமாக நீங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அறிவியல் மாணவராக இருந்தாலும் மனித இயலில் கூட துணைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இலக்கியம் கூட எடுக்கலாம். ஆகவே எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழக்கமில்லாத புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அவதிப்படவேண்டாம்” என்றார்.
அகிலாவுக்கு இலக்கியத்தைத் துணைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது. அவள் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் கற்றபோதே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறாள். இடைநிலைப் பள்ளிக்கூடத்தில் மலாய் மொழியில் அதன் தற்கால இலக்கியங்கள் பலவற்றை அறிமுகம் செய்து கொண்டாள். அவளுடைய ஆங்கிலமும் சரளமாக இருந்ததனால் தானாகவே ஆங்கிலத்தில் பொழுது போக்கு இலக்கியங்கள் பலவற்றைப் படித்திருக்கிறாள். எல்லா இலக்கியங்களும் அவளைக் கவர்ந்துள்ளன.
இந்தப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை வலுவானது என அவள் அறிந்திருந்தாள். தேசிய இலக்கியவாதி ஷனோன் அஹமாட் இங்குதான் பேராசிரியராக இருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். இங்கு மலாய் இலக்கியம் மட்டுமல்லாது ஆங்கில இலக்கியமும், ஆசிய ஆப்பிரிக்க ஒப்பீட்டு இலக்கியமும் சொல்லித் தரப்படுகிறது என்பதையும் வழிகாட்டிப் புத்தகங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இலக்கியம் எடு எடு என ஆசை தூண்டிக் கொண்டே இருந்தது.
ஆனால் அந்த ஆசையைக் கட்டிப் போட்டுவிட்டாள். இலக்கியம் படிக்க இன்னும் ஆயுசு இருக்கிறது. ஆனால் அதிக பரிச்சயமில்லாத பாடத்தை எடுத்து பட்டத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது. கணக்கு அவளுக்கு எளிதாக வரும். அதை எடுப்பது நல்லது. கணினித் துறைக்கும் அது துணையாக இருக்கும். ஆகவே கணிதத்தையே பதிந்து கொண்டாள்.
புதன் கிழமை இரவு எல்லா சமயங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சமயச் சொற்பொழிவுகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்து சமய மாணவர்கள் விரிவுரை மண்டபம் “வி”யில் கூடவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அந்த மண்டபத்தில்தான் முதன் முதலாக இந்திய மாணவர்களை அவள் ஒருமொத்தமாகப் பார்த்தாள். கெமிலாங் விடுதியில் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்ட மாலதியுடன் அவள் உட்கார்ந்தாள். மாலதி மனிதவியல் மற்றும் கல்வியியலில் இருந்தாள். ஆசிரியை ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்திருந்தாள். ஏறக்குறைய 80 மாணவர்கள் வந்திருந்தார்கள். இந்திய மாணவர்கள் சுமுகமாகத் தமிழில் பேசி அறிமுகம் செய்து கொண்டார்கள். மலேசியாவின் பல பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தார்கள்.
விரிவுரை அரங்கத்தின் உட்காரும் இடம் படிகள் படிகளாக உயரமாகவும் பேச்சாளர் மேடை தாழ்வாகவும் அமைக்கப்பட்டிருந்து. தான் உயரமான இடத்திலிருந்து பேச்சாளர்களைக் குனிந்து பார்ப்பதை இனிப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அறையில் குளிர்சாதனம் இதமாக இருந்தது.
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு இந்தியப் பேராசிரியர்களும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் சமயப் பேச்சாளர் ஒருவரும் பேசினார்கள். கல்வித்துறைப் பேராசிரியர் கமலநாதன் இந்து சமயத்தைப் பற்றியும் குறிப்பாக சைவ சமயத்தின் பழமையைப் பற்றியும் பேசினார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முருகேசு தொடர்ந்து இந்து மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தன்னம்பிக்கையைப் பற்றியே அதிகம் பேசினார். புதிய மாணவர் அறிமுகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் கடுமையான “ரேகிங்” செய்வதையும், இப்படிச் செய்பவர்களை அதிகாரிகளிடம் புகார் செய்ய புதிய மாணவர்கள் தயங்கக் கூடாது என்று அவர் சொன்ன போது ரேகிங் இருப்பது உறுதியாகி மனதில் திகில் பரவியது.
இப்படி நடந்தால் அதிகாரிகளிடம் சொல்ல பயப்படுபவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னால், புகார் கொடுத்தவர் பெயர் வெளிப்படாமல் தாம் அதிகாரிகளுடன் நடவடிக்கை எடுக்க அவர் உறுதி கூறியது அவர்களுக்குத் தெம்பாக இருந்தது. இராமகிருஷ்ணா ஆசிரமப் பேச்சாளர் ரமணீதரன் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். மூவருமே சரளமான எளிய தமிழில் பேசியது அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு பேராசிரியர்களுமே தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் படித்து இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.
திரும்ப விடுதிக்கு அவளும் மாலதியும் பேசிக்கொண்டே வந்தார்கள். மாலதி ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவள். “நீங்க மலேசியாவில் தெற்கு, நான் வடக்கு. இங்க வந்து சேந்திருக்கிறோம். ஆனா நீங்கதான் ரொம்ப தூரம் வந்திருக்கிறீங்க!” என்று அகிலா சொன்னாள்.
“நான் இந்தப் பல்கலைக் கழகத்தைத்தான் முதல் தேர்வாப் போட்டிருந்தேன். ஏன்னா இங்கதான் நாலு ஆண்டுகளுக்குள்ள பட்டதாரி ஆசிரியரா ஆக முடியுது. மத்த பல்கலைக் கழகங்கள்ள மொதல்ல ஒரு பட்டம் வாங்கிட்டு அப்புறம் இன்னொரு வருஷம் ஆசிரியர் பயிற்சிக்கு தனியா டிப்ளோமா செய்யணும்” என்றாள் மாலதி.
இரவு பத்து மணிக்குப் பல்கலைக் கழகம் அமைதி பூண்டிருந்தது. இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டிருந்து. சாலை விளக்குகள் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன. மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மரத்தடியில் நடந்த போது அங்சானா மரத்தின் மஞ்சள் பூக்கள் காலடியில் நசுங்கின.
“ரொம்ப அழகா இருக்குங்க மாலதி இந்தக் கேம்பஸ்” என்றாள் அகிலா.
“ஆமா அகிலா! நான் வந்ததும் இந்தக் காட்சிகளைப் பாத்து அசந்து போயிட்டேன். ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல்! ரொம்ப அழகா இருக்கு! ஒரு உல்லாசத் தளம் போல இருக்கு” என்று ஒத்துக் கொண்டாள் மாலதி.
“குடும்பத்த விட்டு நாலு வருஷம் பிரிஞ்சிருக்கிறதுக்கு இந்த அழகான இடத்தில இருக்கிறது ஒரு ஆறுதல்தான்!”
“ரொம்ப மகிழ்ந்து போயிடாதம்மா! பாடங்கள் ஆரம்பிச்ச பிறகு இந்த அழகையெல்லாம் நின்னு பாக்கிறதுக்குக் கூட நேரமிருக்காதின்னு சொல்றாங்க. அதோட மாணவர்கள் இயக்கத்தில சேர்ந்து தொடர்ந்து நடவடிக்கைகள்ள ஈடுபடணும். அதுக்கெல்லாம் மார்க் உண்டு. அந்த மார்க் வச்சித்தான் அடுத்த வருஷம் விடுதியில இடம் கெடைக்கிறதும் கெடைக்காததும் இருக்கு!”
அகிலா புறப் பாடத்திட்டத்தில் கலாச்சார நடனக் குழுவில் பதிந்து கொண்டிருந்தாள். மேலும் பேச்சுப்போட்டி சங்கத்திலும் சேரவேண்டுமென்று உறுதி செய்து கொண்டாள். பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலும் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால் பாடங்களும் பாடங்களுக்கான ப்ராஜக்ட் செய்முறைகளும் நிறைய இருக்கும் போது இத்தனையையும் சமாளிக்க முடியுமா என்ற பயம் வேறு வந்தது.
“ஆனா இதுக்கெல்லாம் மொதல்ல அடுத்த வாரத்துப் பிரச்சினைய மொதல்ல சமாளிச்சாகணுமே!” என்று பெருமூச்சு விட்டாள் மாலதி.
“என்ன அடுத்த வாரப் பிரச்ன?”
“அதான் நம்ம சீனியர் கொரங்குங்க வரப் போகுத! இப்ப நம்ம பேராசிரியர் சொன்னார ரேகிங்!”
“சீ! அதெல்லாம் ரொம்ப இருக்காதுங்க மாலதி! அதிகாரிகள் ரொம்ப கண்டிப்பாத்தான இருக்காங்க!”
“அப்படி நெனைக்காதம்மா! அதிகாரிகள் கண்ணில மண்ணத் தூவிட்டு எல்லாம் பண்ணிடுவாங்க. எனக்கு இங்குள்ள ஒரு சீனியர் மாணவியத் தெரியும். அவ அனுபவத்தைக் கேட்டீன்னா ஒடம்பெல்லாம் சிலுத்துப் போயிடும்! அவங்களத் தற்கொல பண்ணிக்க யோசிக்கிற அளவுக்கு கொடுமைப் படுத்தியிருக்காங்க தெரியுமா? அத்தனையும் ஒரு அதிகாரிக்கும் தெரியாது!”
அகிலாவுக்குக் “குப்”பென்று ஒரு பயம் வந்து பற்றியது. அறைக்குள் வந்து நுழைந்த போதும் அந்த பயம் போகவில்லை. உடல் வியர்த்திருந்தது.
*** *** ***
——————————————————————————–
2
எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த நாள் முதலாண்டு மாணவர்களைக் கொஞ்சம் ஏளனமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள். கண்ணடித்தார்கள்.
அகிலாவின் அறைத் தோழியாக தொடர்புத் துறையில் (மாஸ் கம்யூனிகேஷன்) மூன்றாம் ஆண்டு மாணவியான ஜெசிக்கா என்ற சீன மாணவி பெட்டி படுக்கையுடன் வந்து சேர்ந்தாள். ஹாய் என்று சத்தமாய்ப் பேசினாள். எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருந்தாள். அகிலா பயந்தது போல் இல்லாமல் ஒரு தமக்கையைப் போல சரளமாகப் பழகினாள்.
இந்திய மாணவர்கள் கூட்டங் கூட்டமாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். கேன்டீனிலிருந்து “என்ன நம்மளப் பாக்காது மாரிப் போறீங்க?” என்று கேட்டார்கள். அகிலா அவர்களைப் பார்த்து அசடாகச் சிரித்துவிட்டு பயந்து ஒதுங்கி ஒடுங்கி நடந்தாள்.
“CAS 101 – கணினி அமைப்பு” முதல் விரிவுரைக்கு அவள் சென்றபோது 200க்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். ஒரு அழகான இளம் மலாய்ப் பெண் விரிவுரையாளர் அந்த விரிவுரையை வழங்கினார். “என் பெயர் சித்தி ஆய்ஷா ஹம்டான். உங்கள் பெயரையெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பம்தான். ஆனால் இந்தக் கூட்டத்தில் அது முடியாது. டியூட்டோரியலில் பின்னர் உங்களை நான் மெதுவாகத் தெரிந்து கொள்கிறேன்” என்று புன்னகையுடன் கனிவாகப் பேசினார்.
“கம்ப்யூட்டர் கணிதம் மிகவும் சிரமமானதென்று நினைக்க வேண்டாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே எண்கள்தான். ஒன்று பூஜ்யம் மற்றொன்று ஒன்று. இதைத் தெரியாதவர்கள் யாராவது இங்கிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது வகுப்பு “ஓ”வென்று சிரித்தது.
“மிக எளிது அல்லவா? அதுதான் சிரிக்கிறீர்கள். ஆனால் கொஞ்சநாள் பொறுத்து ப்ரோக்ராம் எழுத ஆரம்பிக்கும் போது இதன் முக்கியத்துவம் தெரியும். ஒரு பூஜ்யத்தை விட்டு விட்டால் அழப் போகிறீர்கள்!”
ஓவர்ஹெட் புரொஜக்டரில் கணினியின் தோற்றம் வரலாறு பற்றி விளக்கினார். எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள மலாய்ப் பெண் குனிந்து அகிலாவின் காதில் கிசுகிசுத்தாள்: “இந்த விரிவுரையாளர் யாரென்று தெரியுமா?”
அகிலா புரியாமல் அவளைப் பார்த்துத் தலையாட்டி விழித்தாள். “இவர் துன் ஹம்டானின் மகள். பினாங்கின் கவர்னர். யுஎஸ்எம்மின் முன்னாள் துணைவேந்தரின் மகள்”
அகிலா “ஆ”வென்று வாய் பிளந்தாள். துன் ஹம்டானின் பெயர் அவளுக்குப் பரிச்சயமானதுதான். முன்னாள் கல்வித் துறை இயக்குனர். அவருடைய பெயர் பாடப் புத்தகங்களில் கூட இருக்கிறது. இந்தக் குடும்பத்தில் கல்வி அவர்கள் நரம்பில் ரத்தமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இந்தப் பல்கலைக் கழகத்தில் இன்னும் பல அறிவு ஜீவிகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்து கிளுகிளுப்பூட்டியது. அவர்கள் இருக்குமிடத்தில் தானும் இருப்பது பெருமையாக இருந்தது.
ஷனோன் அஹமாட் என்னும் நாடறிந்த இலக்கியவாதியை எப்படியாவது ஒருநாள் சந்திக்க வேண்டும். அவருடைய “வழியெல்லாம் ஆணிகள்” என்ற நாவலைத் தான் படித்து அனுபவித்திருப்பதைச் சொல்ல வேண்டும். அரசியல் ஆய்வில் புகழ்பெற்றவரும் அறிவார்ந்த அரசியல் விமர்சகருமான டாக்டர் சந்திரா முசாபார் இங்குதான் இருக்கிறாராம். அவரும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என அவர் பெயரை பத்திரிகைகளில் பார்க்கும் போதெல்லாம் அப்பா சொல்லுவார், போலியோ நோயில் கால் விளங்காமல் போனாலும் மூளையின் பலத்தால் உலகப் புகழ் பெற்றவர். எப்படியாவது ஒருமுறை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும்.
ஆனால் விரிவுரை விட்டு வெளியே வரும் போது இவர்களுக்கெல்லாம் முற்றாக வேறுபட்ட ஒருத்தனை அவள் சந்திக்க வேண்டி நேர்ந்தது.
*** *** ***
“ஹலோ” என்று சிரித்துக் கொண்டே வந்தான். “நீங்க என்ன கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?” என்று கேட்டான். ஆமாம் என்று தலையாட்டினாள். அதே விரிவுரையிலிருந்து அவனும் வெளிவந்ததால் அவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வகுப்பில் ஒரு சக இந்திய மாணவனைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான் என எண்ணிக் கொண்டாள்.
“என் பெயர் ராஜன்!” என்று கை நீட்டினான். மென்மையாகப் பிடித்தாள். அவன் அழுத்தினான்.
“உங்க பேரென்ன?” என்று கேட்டான்.
“அகிலா”
“எங்கிருந்து வந்திருக்கிறிங்க?”
“அலோர் ஸ்டார், கெடா”
“நான் கோலாலம்பூர்”
“நீங்களும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?”
“இல்ல. நான் பிசிக்ஸ், மூணாம் வருஷம்”
அவளுக்குத் திக்கென்றது. சீனியர் மாணவன் இந்த வகுப்பிற்கு ஏன் வந்தான்?
“என்ன சீனியர்னவொண்ண பயந்திட்டிங்களா? பயப்படாதிங்க! இங்க சில பயலுங்க உங்கள “ரேக்” பண்ண அலஞ்சிக்கிட்டு இருக்கானுங்க! நீங்க என் கூடவே நடந்து வாங்க! பசங்க வந்தா நான் பாத்துக்கிறேன்”
தலை முடியை மொட்டையாக வெட்டியிருந்தான். ஒரு காதில் கடுக்கன் போட்டிருந்தான். ஆனால் வாயில் அகன்ற சிரிப்பு இருந்தது. ஆதரவாகப் பேசினான். சீனியர் மாணவர்களிடமிருந்து தப்பிக்க இப்படி ஒரு துணை இருந்தால் நல்லதுதான் என அகிலா எண்ணிக் கொண்டாள்.
“வாங்க இப்படியே நடந்து பக்தி விடுதிக் கேன்டீனுக்குப் போகலாம். அங்க ஒரு இந்திய அம்மா வடையெல்லாம் சுட்டு விக்கிறாங்க! நான் காட்டுறேன் வாங்க!”
பேசிக்கொண்டே பக்கம் பக்கமாக நடந்தார்கள்.
“நீங்க மூன்றாம் ஆண்டு மாணவர், ஏன் முதல் ஆண்டு வகுப்புக்கு வந்திங்க?” என்று அகிலா கேட்டாள்.
“போனவருஷம் இந்தப் பாடம் எடுத்தேன். ஆனா பெயிலாயிட்டேன்லா. ஆகவே “பேசிக்” பாடத்தில “யூனிட்” போதில. அதுதான் இந்த வருஷம் “ரிப்பீட்” பண்றேன்”
“அவ்வளவு கஷ்டமான பாடமா?”
“கஷ்டமில்ல. போன வருஷம் கொஞ்சம் வெளையாடிட்டேன்லா! அதான்!”
பேசிக்கொண்டே கண்டீனுக்கு வந்தார்கள். கண்டீனுக்கு வெளியே புல் வெளியில் ஒரு இந்தியப் பையன்கள் கூட்டம் உட்கார்ந்திருந்தது. ராஜாவைக் கண்டு “டே மச்சான்” என்று கூப்பிட்டது. ராஜா உற்சாகமாகக் கையசைத்தான்.
“வாங்க! இவங்கல்லாம் என் கேங். உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்!” என்று அகிலாவைக் கூப்பிட்டான்.
அகிலாவுக்கு மனதில் திகில் பரவியது. “வேணாம். வேணாம்! நான் வரல. பயமாயிருக்கு!” என்றாள்.
“சீ! பயப்படாதிங்க அகிலா. எல்லாம் நல்ல பசங்க. நம்ப கேங். இவங்களையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கனும். அப்புறம் ரொம்ப உதவியா இருப்பாங்க. கொஞ்சம் வேடிக்கையா பேசுவாங்க அவ்வளவுதான்!” என்றான். அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். கொஞ்சம் இழுத்தவாறு நடந்தான்.
அந்தக் கூட்டத்தில் ஒரு பத்துப் பேர் இருந்தார்கள். அத்தனை பேரும் இந்திய மாணவர்கள். எல்லோரும் ராஜனைப் போலவே தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார்கள். சிலர் ஒரு காதில் மட்டும் வளையம் அணிந்திருந்தார்கள். பிருஷ்டங்களைப் பிதுக்கும் ஜீன்சும் டீ சட்டையும் போட்டிருந்தார்கள். சிகிரெட்டுகள் பிடித்தவாறிருந்தார்கள்.
அவளுக்குப் புரிந்து விட்டது. ரேகிங் செய்யக் காத்திருக்கும் ஓநாய்கள்தான் இவை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஏற்கனவே ஒரு பையன் பயங்கலந்த முகத்தில் கோணலான சிரிப்போடு உட்கார்ந்திருந்தான். இவர்களால் பிடிக்கப்பட்ட அவனும் முதலாண்டாக இருக்க வேண்டுமென அகிலா ஊகித்துக் கொண்டாள்.
“டே, நம்ம ராஜன் ·பிரஷி குட்டி பிடிச்சிட்டு வந்துட்டான் பாத்தியா!” என்றான் ஒருவன். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.
தனக்கு இரை போட்டு இழுத்து வந்து விட்டான். உனக்குத் தழை போடுகிறேன் என்று பறித்துக் காட்டி ஆட்டுக் குட்டியை மெதுவாக இழுத்து வந்து கண்ணியில் மாட்ட வைத்துவிட்டான். உள்ளே நடுங்கினாள்.
கூட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்கள். தயங்கித் தயங்கி உட்கார்ந்தாள். மனதை பய இருள் கப்பென்று பிடித்துக் கொண்டது. யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்று பார்த்தாள். தனது சக தோழிகள் யாராவது… பல்கலைக்கழக அதிகாரிகள்… விரிவுரையாளர்கள்…? கூப்பிடு தூரத்தில் கேன்டீனில் மாணவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சிலர் அவர்கள் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் யாரும் இந்தக் கூட்டத்தின் பக்கம் வரவில்லை.
“என்ன மயிலு அப்படியும் இப்படியும் பாக்குது! இதோ பாரு அண்ணனுக்கெல்லாம் வணக்கம் சொல்லும்மா!” என்றான் ஒருவன்.
கைகூப்பி வணக்கம் சொன்னாள்.
“மயிலு பேரென்னா?”
“அகிலா!” என்றாள். குரல் நடுங்கியது.
“என்ன மயிலு பயப்பிடுது! நாங்கல்லாம் உங்க அண்ணன்மாருங்கதான, என்னா பண்ணிடுவோம் ஒன்ன…?” கூட்டம் கெக்கலித்தது.
“டேய் நீ வேணுன்னா அண்ணனா இரு. நா இதுக்கு அத்தான்!” என்றான் ஒருவன். அருகில் வந்தான். “என் கண்ணே!” என்று அவள் தலை மயிரைத் தடவினான்.
அவனைத் தீண்டலில் அருவருப்புப் பட்டுத் தலையை மேலும் குனிந்து கொண்டாள்.
“டேய் தொடாதடா! இதுக்கு வேற திட்டம் இருக்கு!” என்று ஒருவன் முன் வந்தான்.
“அகிலா மயிலு! இவரப் பாத்தியா! இவரும் ஒன்னப்போல ·பிரஷிதான். இவரு பேரு… சொல்லுடா! அறிமுகப் படுத்திக்க!” அந்த முதலாண்டு மாணவனிடம் கத்தினான்.
முகத்தில் மாறாத கோணங்கிச் சிரிப்பைக் கொண்டிருந்த அந்த மாணவன் “ஹலோ, ஐ ஏம் பரசுராமன், சோஷியல் சயன்ஸ்!” என்று அவளிடம் கை நீட்டினான்.
“அடி செருப்பால! இங்கிலீஷ்ல பேசிறான் பாருடா! இங்க இருக்கிறவங்கல்லாம் செந்தமிழர் இல்ல? தமிழ்ள்ள பேசுடா!” என்று ஒருவன் அவன் தலையைத் தட்டினான்.
“ஹலோ என் பேரு பரசுராமன். நான் சோஷியல் சயன்ஸ்!” மீண்டும் கைகுலுக்க வந்தான்.
“டேய்! தமிழ் முறைப்படி விளுந்து கும்பிட்றா!”
தடாலென்று விழுந்து கும்பிட்டான். சொன்னதையெல்லாம் செய்யத் தயாரான கோமாளியாக இருந்தான்.
“பாத்தியா நல்ல பிள்ள. உருப்பிட்ருவான். மயிலு, அதே மாதிரி அறிமுகம் படுத்திக்கிட்டு உளுந்து கும்பிடும்மா!”
அகிலாவுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. மீண்டும் தன்னைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று பார்த்தாள்.
“தோ பாரு! அப்படியெல்லாம் பாக்காத! எவனும் வரமாட்டான். அதுக்கெல்லாம் காவல் வச்சிருக்கோம். நாங்க சொல்றத மாத்திரம் செஞ்சிரு. சீனியருக்கு மரியாத குடுத்திரு! அப்புறம் பாரு ஒனக்காக உயிரையே கொடுப்போம்!”
அந்த இளித்தவாய்ப் பரசுராமனைப் பார்த்தாள். “வணக்கம், என் பேர் அகிலா! கம்ப்யூட்டர் சயன்ஸ்!” என்றாள்.
கூட்டம் கைதட்டியது. “உளுந்து கும்பிடு!” என்றது.
விழுந்து கும்பிடும் கோமாளித் தனத்தைச் செய்ய வேண்டியதில்லை என்று அவளுக்குப் பட்டது. “அதான் வணக்கம் சொல்லிட்டேனே, அது போதும்!” என்றாள்
“நோ, நோ! நாங்க உளுந்து கும்பிடச் சொன்னா உளுந்துதான் கும்பிடணும்!”
பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
“பாத்தியா, மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இதுக்கு வேற வேல பண்ணனும்!”
கூடிக் குசுகுசுத்துக் கொண்டார்கள்.
“சரி, டே பரசுராமா! இப்ப இந்த மயிலு உன் காதலி! காதலிய எப்படிக் கொஞ்சுவ காட்டு பாக்கலாம்!”
காத்திருந்தவன் போல பரசுராமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் தாடைக்கு அருகில் கையைக் கொண்டு வந்து “என் கண்ணே!” என்றான்.
அவனைத் தொடவிடாமல் அவள் தலையைச் சடக்கென்று திருப்பினாள். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.
உற்சாகம் வந்தவனைப் போல பரசுராமன் “என் அன்பே! ஏன் கோபம்?” என்று மேலும் வசனம் பேசினான்.
கூட்டம் மீண்டும் “ஹே” என்று கை தட்டியது. “நீ கை வைக்கிலியேன்னுதான் கோபம்!” என்றான் ஒருவன்.
“அப்ப கை வச்சர்ரா!”
பரசுராமன் தயங்கினான்.
“டேய் ·பிரஷி! நீ கை வைக்கில, நாங்க ஒம்மேல வச்சிருவோம். இன்னக்கி ராத்திரி ஒன்ன “ரேப்” பண்ணாம விட்றதில்ல! பாத்துக்க!” கூட்டம் சிரிப்பும் கும்மாளமுமாய் கத்தியது.
குனிந்தவாறிருந்தாள். இந்தக் கூட்டத்திற்குத் தான் காட்சிப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிவிட்ட அவமானம் தாங்கவில்லை. கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு வந்தது. உள்ளத்தில் அவமானமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. “ஏன் வந்தோம் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு” என்ற வெறுப்பு திடீர் எனப் பரவியது. இந்த வளாகத்தைவிட்டே ஓடிவிட வேண்டும் என்ற நினைப்பு வந்தது. உடனே அலோர் ஸ்டாரில் தன் வீட்டின் பாதுகாப்புக்குள் சென்று புகுந்துவிட வேண்டும் என்று தோன்றியது. அம்மாவைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
பரசுராமனைக் கூட்டம் உற்சாகப் படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவன் அவள் முதுகில் கைவைத்தான். மெதுவாகத்தான். ஆனால் ஆயிரம் புழுக்கள் ஊர்வதைப் போல இருந்தது.
“டேய், முன்ன பின்ன காதல் பண்ணியிருக்கியா! இதோ பாரு இப்படி!” இன்னொருவன் மின்னால் ஓடிவந்து அவள் தோள்களை அழுத்தித் தேய்த்துவிட்டு ஓடினான். தொட்ட இடம் பற்றி எரிந்தது.
கையில் கத்தி இருந்தால் ஒன்று அகிலா அவனைக் குத்தியிருப்பாள். அல்லது தன்னையே குத்திக் கொண்டிருப்பாள். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. தரையையே பார்த்திருந்தாள். இந்த அசிங்கங்களைப் பார்க்க விரும்பவில்லை. தன் முகத்தை அவர்களுக்குக் காட்டி அவர்களைக் கௌரவப் படுத்த அவள் விரும்பவில்லை.
முன்னுதாரணம் பெற்ற உற்சாகத்தில் பரசுராமன் கையை இன்னும் அழுத்தமாக வைத்தான். தேய்த்தான். “என் அன்பே! என் மேல் கோபமா?” என்று வசனம் பேசினான்.
அகிலா முகத்தை மேலும் தரையை நோக்கித் தாழ்த்தினாள். உடல் எரிந்தது. மனம் கொதித்தது. கண்களில் கொதிநீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
“ஒரு முத்தம் குட்றா!” என்று ஒருவன் கத்தினான். அந்தச் சொற்கள் அகிலாவை ஈட்டியாய்க் குத்தின. இரண்டு கைகளையும் தூக்கி முகத்தைப் பொத்திக் கொண்டாள். பரசுராமனின் முகம் ஒரு தீய நச்சு மேகமாக அவள் முகத்தின் அருகில் வருவது நிழலாகத் தெரிந்தது. அவனுடைய மூச்சு அவள் கன்னத்தில் அனலாய்ப் பட்டது.
“டேய் முத்தம்னா என்னன்னு தெரியுமா, இடியட்? கன்னத்தில குடுத்தா தங்கச்சின்னு அர்த்தம். வாய்ல குடுத்தாத்தான் காதலி. தெரியுதா?” என்று ஒருவன் கத்தினான்.
பரசுராமன் முகம் குனிந்து தன் முகத்தை மூடியிருந்த கைகளுக்குக் கீழ் வந்தது தெரிந்தது. முகத்தைத் திருப்ப முயன்றாள். யாரோ தலையைப் பின்னால் அழுத்தமாகப் பிடித்திருந்தார்கள்.
“பளார்” என்ற சத்தம் கேட்டது. “ஐயோ” என்று பரசுராமன் கத்தியது கேட்டது. அவள் தலை நிமிர்ந்த போது பரசுராமன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். ஓர் உறுதியான கை அகிலாவின் இடது கையைப் பற்றி இழுத்துத் தூக்கியது. “எழுந்திரு, போகலாம்!” என்ற குரல் கேட்டது.
அகிலா அதிர்ந்து எழுந்தாள். இடது கையில் புத்தகங்களை ஏந்திக் கொண்டு வலது கையால் அவளை இறுகப் பற்றித் தூக்கினான் அந்த அந்நிய ஆண்பிள்ளை.
கூட்டம் “ஏ” என்று ஏமாற்றம் தெரிவித்துக் கொண்டது.
“ஏய். நீ ஏண்டா இதில தலையிட்ற இதில?” என்று கேட்டான் ஒருவன்.
“ஏண்டா! நம்ம பொண்ணுங்களயே போட்டு இப்படி அனியாயம் பண்றிங்க! போய் யாராவது சீனப் பொண்ணு மலாய்க்காரப் பொண்ணுங்ககிட்ட ஒங்க வீரத்தக் காட்டிப் பாருங்களேன். எப்படி ஒத வாங்கிச் சாவப் போறிங்கன்னு தெரியும்!” அந்தப் புதியவன் உறுதியாகச் சொன்னான்.
“என்னப்பா ரொம்பதான் கோவிச்சிக்கிற! எல்லாம் ஒரு வேடிக்கைக்குத்தான! நம்ப ·பிரஷியா வரும்போது நம்பள என்னல்லாம் பண்ணுனாங்க!”
“அப்ப ஒன்னோடு மனசு என்ன பாடு பட்டிச்சின்னு நினச்சிப் பாத்தியா? மலாய்க்கார சீன மாணவர்கள்ளாம் இந்த ரேகிங்க நிறுத்திட்டு அவங்கவங்க இன மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் தயாரிச்சிக் குடுக்கிறாங்க. வழிகாட்டுறாங்க! உங்களுக்குத்தான் உங்க படிப்பிலும் அக்கற இல்ல, மத்தவங்க படிப்பையும் கெடுக்கிறிங்க!”
“ஆமா இவரு பெரிய அறிவாளி! போடா!” என்றான் ஒருவன்.
“போறேண்டா! உங்களோட எனக்கென்ன பேச்சு. நாளைக்கு இந்த விஷயம் கெசலாமாத்தானுக்கு (பாதுகாப்புத் துறை) போச்சின்னா அப்ப சாட்சி சொல்ல நான் வருவேன். அப்ப “போடா”ன்னு என் மொகத்தப் பாத்து சொல்லு பார்க்கலாம்”
கூட்டம் ஆத்திரத்தில் பொருமிக்கொண்டு அடங்கியிருந்தது.
அந்தப் புதியவன் பரசுராமனைப் பார்த்தான். “ஏய்! நீ எந்திருச்சி ஓடு” என்றான். பரசுராமன் தன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென ஓடினான்.
பற்றிய கையைத் தளரவிடாமல் அவளை இழுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடந்தான் அவன். ஆபத்து நீங்கி விட்டது போலத் தோன்றினாலும் அவள் நெஞ்சு ஒரு புறாவின் நெஞ்சைப் போல படபடத்துக்கொண்டிருந்தது.
“நீங்க எந்த தேசா?” என்று கேட்டான். “தேசா கெமிலாங்” என்று பெயர் சொன்னாள்.
“வாங்க போலாம்!” என்று அவள் கையை விட்டு விட்டு ஆதரவாகப் பக்கத்தில் நடந்தான்.
இவன் எப்படி என்று தெரியவில்லை. கொதிக்கும் எண்ணெயிலிருந்து கொள்ளிக்கட்டையில் விழுந்து விட்டேனோ என்று சந்தேகத்தோடு நடந்தாள். எப்படியும் இந்தத் தருணத்துக்கு அவன் நல்லவனாக இருந்தான். உறுதியாக நடந்தான். உயரமாக இருந்தான். முகத்தைச் சரியாக ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. பயமும் நடுக்கமும் அடங்கவில்லை.
“எப்படி இவங்ககிட்ட மாட்டினிங்க?” அவன் கேட்டான்.
“ராஜன்னு ஒரு பையன். கம்ப்யூட்டர் கிளாசில பாத்தேன். அவரு பேசிக்கிட்டே இங்க கொண்டு போயிட்டாரு!”
“ஓ ராஜனா? ரொம்ப கெட்டவன். “காராட்” கேங்னு ஒரு கேங் வச்சிருக்கானுங்க. நம்ப தமிழ்ப் பையன்களுக்கே அவமானம். ஒரு வாரத்துக்கு எங்க போனாலும் உங்க ·பிரஷி தோழிகளோட போங்க. சீனியர்ஸ் கூட அதிகம் சேர வேணாம். இப்படித்தான் நடிச்சி ஏமாத்துவானுங்க!” என்றான்.
“அவரு சீனியர்னு தெரியாது! எங்கிட்ட மொதல்ல சொல்லல ”
கெமிலாங் அருகில் வந்ததும் “ஓக்கே! நீங்க போகலாம்!” என்று திரும்பி நடந்தான்.
ஓட்டமும் நடையுமாக தன் அறையை அடைந்தாள் அகிலா. படுக்கையில் விழுந்தாள். பொருமிப் பொருமி அழுதாள்.
அறைத் தோழி ஜெசிக்கா இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவள் வந்து தோளைத் தடவி “என்ன நடந்தது அகிலா?” என்று கேட்டாள்.
——————————————————————————–
3
அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம் ஆண்டு அவன் முன் பூதாகாரமாக இருந்தது. புதிய பாடங்கள் தொடங்கவிருக்கின்றன.
அவன் சிறப்புத் துறையாக எடுத்துக் கொண்ட வர்த்தக நிர்வாகத் துறையில் கால அட்டவணை தாமதமாகத்தான் வந்தது. அப்படி வந்தும் பாடங்களின் நேரத்தை விரிவுரையாளர்கள் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பதிவுக்காக அவன் மேலும் கீழும் அலைய வேண்டியதாயிற்று. அலைந்தும் அவன் விரும்பிய முக்கியமான இரண்டு பாடங்களில் பெயர் பதிந்து கொள்ள முடியவில்லை. இணைப் பேராசிரியர் டாக்டர் சீத்தாராமன் நடத்தும் கணக்கியல் வகுப்பின் விரிவுரை நேரங்கள் மற்றொரு பாடத்தோடு மோதின. அவருடைய வகுப்பு அவனுக்குப் பிடிக்கும். இந்தியாவிலிருந்து வந்த அனுபவமிக்க விரிவுரையாளர். சுவையாகப் பேசுவார். மனமில்லாமல் அந்தப் பாடத்தை அடுத்த பருவத்துக்குத் தள்ளிப் போட்டுவிட்டான். மேலும் ஒரு பாடமும் துணை (மைனர்) பாடமான பொருளாதாரத்தோடு ஒத்துவரவில்லை. பொருளாதாரப் பாடமான அனைத்துலகப் பொருளாதாரம் பாடத்தை இந்த பருவத்தில் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மைனர் யூனிட்டுகளை நிறைவு செய்ய முடியாது.
புறப்பாடங்கள், கட்டாய பாடமான பஹாசா மலேசியா இவற்றுக்கும் பதிவு குழப்பமானதாக இருந்தது. அந்த ஆண்டில்தான் முதன் முறையாக விரிவுரையாளர்கள் நேரடியாகக் கணினியில் பதிவு செய்யும் முறையை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்த வேலை மிக மெதுவாக நடந்தது. பாதி விரிவுரையாளர்களுக்கு கணினியை சரியாக இயக்கத் தெரியவில்லை. தவறான விசைகளைத் தட்டி இருந்த “டேட்டா”வையெல்லாம் அழித்துவிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மத்திய கணினியும் சோம்பேறித்தனமாக இயங்கியது. நேரம் நீண்டது. பதிவுக்காகக் காத்திருந்த மாணவர்கள் வரிசையும் ஆங்காங்கே நீண்டு நீண்டு நின்றது.
இந்த ஆண்டு ப்ரொஜக்ட், பரொஜக்ட் என்று நிறைய வேலை கொடுத்துக் கொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டில் செயல்முறைப் பயிற்சியும் இருக்கிறது. எந்த நிறுவனத்துக்கு அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே அவன் பொறுப்பிலிருக்கும் மாணவர் சங்கங்கள் இந்த ஆண்டில் இரண்டு மூன்று தேசிய அளவிலான திட்டங்களை ஏற்பாடு செய்ய அவனை ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தன. பருவத்தின் தொடக்கத்தில் “கெர்த்தாஸ் கெர்ஜா” (திட்டத் தாள்) விரிவாக எழுதி மாணவர் விவகாரங்களின் உதவித் துணை வேந்தருக்கு சமர்ப்பித்து அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் அந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். அந்தத் தாள்களை தயார் செய்யும் வேலை தன் தலையில் ஒரு பகுதியாவது விழும் என அவனுக்குத் தோன்றியது. சென்ற ஆண்டு இறுதியில் பரிட்சை முடிந்து விடுமுறைக்குப் புறப்பட்ட போதே இரண்டு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள்.
ஆனால் அவன் இந்த வாரம் புதிய பருவத்திற்கு யுஎஸ்எம் வளாகத்திற்குள் வந்ததும் அவனுக்குப் புதிய கவலைகள் காத்திருந்தன. மாணவர் விவகாரப் பிரிவில் உதவிப் பதிவாளராகவும் இந்திய மாணவர்கள் நலனுக்குப் பொறுப்பாகவும் இருந்த முத்துராமன் முதல் நாளே அவன் “பர்ஸரி”யில் அந்தப் பருவக் கட்டணம் செலுத்த வந்திருந்த போது அவனைப் பார்த்தார். அவனைத் தனியே அழைத்தார்.
“கணேசன், இந்த வருஷமும் நம்ப பையங்க ரேகிங் ஆரம்பிப்பாங்க போல இருக்கு. துணைவேந்தர் எவ்வளவோ எச்சரிக்கை குடுத்திருந்தும் நம்ப பசங்க அதுக்குச் சவால் விட்ற மாதிரி நடந்துக்கிறாங்க. புதிய இந்திய மாணவர்கள் ரொம்ப பயந்திருக்காங்க. பல பெற்றோர்கள் வேற எங்கிட்ட வந்து பிள்ளைங்க பத்திரமா இருப்பாங்களான்னு திரும்பத் திரும்ப கேக்கிறாங்க. உன்னைப் போல சீனியர் மாணவர்கள்தான் இதைத் தடுக்க முடியும். ஒரு கண்ணு வச்சிரு. ஏதாச்சும் நடந்தா எங்கிட்ட வந்து சொல்லு” என்று சொல்லிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க அவசரமாக நகர்ந்து விட்டார்.
முதல் நாளிலிருந்து ஒரு சிறிய மாணவர் குழு ரேகிங்கிற்குத் தயாராகி வருகிறது என்பதை கணேசன் கேள்விப் பட்டிருந்தான். எத்தனை கடுமையான காவல்கள் போட்டிருந்தாலும் எண்ணாயிரம் மாணவர்கள் அலையும் இந்த வளாகத்தை எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் கண்காணிக்க முடியாது. புதிய பழைய மாணவர்களைப் பிரித்து வைக்கவும் முடியாது. அவர்கள் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். அது முக்கியம். அப்போதுதான் சகோதரத்துவம் வளரும். ஆனால் அதைப் பயன் படுத்திக் கொண்டு சொந்தச் சகோதரர்களை எல்லை மீறி எள்ளுவதும் அசிங்கமாக நடத்துவதும் சில சீனியர் மாணவர்களுக்கு விகாரமான விளையாட்டாக இருந்தது.
அந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரண்டாம் நாள் சில ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் ஆட்டுக் குட்டிகளாக அகப்பட்டுக் கொண்டு அவதிப்பட்டதை அவன் பார்த்தான்.
இந்த மாணவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை. அந்தப் பெண்ணை இந்த முரடர்களிடமிருந்து காப்பாற்றி அவளை விடுதியில் கொண்டு விட்டு வந்தது முதல் அவன் சிந்தனை இந்த மாணவர்களையும் அவர்களின் அட்டகாசத்தில் பயந்து மருண்டு கலங்கிப் போயிருந்த பெண்ணைப் பற்றியுமே மாறி மாறிச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயரைக் கூட அவன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவள் இருந்த பயத்தில் தன்னைப் பார்த்தாலும் அவளை மானபங்கம் செய்ய வந்திருக்கும் முரடன் போலத்தான் தெரிந்திருக்கும். ஆகவேதான் அவளிடம் அவன் அதிகம் பேசவில்லை. அவளைப் பாதுகாப்பாக அவளுடைய தேசாவில் சென்று விட்டு விடுவதே முக்கியமாகப் பட்டது.
ஏன் இந்த மாணவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் வளர்ப்பில் உள்ள குற்றமா? அவர்கள் படிப்பில் உள்ள குறைபாடுகளா? அவர்கள் சமுதாயப் பின்னணி அப்படிப் பட்டதா? ஏன் சமுதாய, பல்கலைக் கழகப் பண்பாடுகளுக்கு அந்நியமாக இருக்கிறார்கள்?
இந்த மாணவர்கள் எல்லாம் அவனுக்கு அறிமுகமானவர்கள்தாம். எல்லாரும் இடை நிலைப்பள்ளிக் கூடங்களில் நல்ல தேர்வெண்கள் வாங்கியவர்கள். எஸ்டிபிஎம் என்னும் இடைநிலைப் பள்ளிக்குப் பிந்திய தேர்விலும் தேர்வு பெற்று பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றவர்கள். சிலர் வேண்டுமானால் அரசாங்கம் விதிக்கும் கோட்டா முறையினால் குறைந்த மதிப்பெண்கள் இருந்தாலும் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருக்கலாம். அறிவியல் துறையில் இந்த மாதிரிக் குறைந்த மதிப்பெண்களுடன் வந்து இடம் பெற்றுள்ள சில மாணவர்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று போட்டியில் வென்று வந்த புத்திசாலி மாணவர்கள்தான். ஆண்டுக்கு ஆண்டு பள்ளிக்கூடங்களிலிருந்து உதிர்ந்து விடும் மற்ற சோதா இந்திய மாணவர்களைப் போன்றவர்கள் அல்ல.
ஆனால் அவர்கள் படிப்பில் உள்ள அந்தப் புத்திசாலித் தனத்தை அவர்கள் பேச்சிலோ நடத்தையிலோ காண முடியவில்லை. உண்மையில் இடைநிலைப் பள்ளிக் கூடங்களில் இருந்த அவர்களுடைய படிப்பு அக்கறை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தவுடன் அடியோடு குறைந்து விட்டது போலிருந்தது. புதிதாகத் தங்கள் குடும்பங்களிலிருந்து கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் முற்றாக வீணடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
அவர்களின் குடும்ப வளர்ப்பு, குடும்பக் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதையும் கணேசனால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டேயிருக்க ஆசைப் படுகிறார்கள். கேன்டீனில் மரத்தடியில் புல்வெளிகளில் என்னேரமும் கூடியிருப்பார்கள். சத்தமாகப் பேசுவார்கள். சத்தமாகச் சிரிப்பார்கள். மற்ற இன மாணவர்கள் வேடிக்கை பார்த்து சுட்டிக் காட்டிச் சிரிக்குமளவுக்குப் பேசுவார்கள். மாலையில் இரவில் நள்ளிரவிலும் இவர்கள் கூடிப் பேசுவதைக் காணலாம்.
கணேசன் ஆரம்ப காலத்தில் இவர்களோடு இருந்திருக்கிறான். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த புதிதில் கலாச்சாரத் தாகத்தோடு தமிழ் மாணவர்கள் என்ற சகோதர பாசத்தோடு அவர்களிடம் சேர்ந்திருக்கிறான். ஆனால் போகப்போக அவர்களுடைய கலாச்சாரம் அவனுக்கு அந்நியமானதாகத் தெரிந்தது. அதிலுள்ள கொச்சைத் தனத்தை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழ்ப் பேச்சு என்றாலும் முற்றாகக் கொச்சையாக இருக்கும். நிறைய மலாய் வார்த்தைகள் இருக்கும்.”ஆமாலா, இல்லைலா” என்று ஏராளமாக “லா” போட்டுப் பேசுவார்கள். பேசும் விஷயம் எல்லாம் “குட்டிகள்”, சினிமாவில் வரும் காமாந்தகாரங்கள், மற்றவர்களைப் பற்றிய வம்பளப்பு. இதற்கிடையே “தமிளன்” “தமிளன்” என்ற பெருமித உணர்வும் சகோதர பாசமும் குறையாமல் வழியும். ஆனால் இதே கூட்டம் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தங்கள் தமிழ்ச் சகோதரிகளை வம்புக்கிழுக்கவும் கேலி கிண்டல் செய்யவும் தயங்குவதில்லை. இந்த சகோதர பாசம் கூட்டமாக சிகிரெட் பிடிப்பது, பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியில் உள்ள காப்பிக் கடையில் உட்கார்ந்து பீர் குடிப்பது என்று பொங்கி வழிந்தது.
கணேசன் மெதுமெதுவாக அவர்களிடமிருந்து விலகிவிட்டான். இதே பல்கலைக் கழகத்தில் முறையான இன, மொழி உணர்வோடு ஒரு சிறிய குழு இருந்தது. அவர்கள் இந்திய பண்பாட்டுச் கழகத்தில் இணைந்து கலை விழாக்களும் சமய விழாக்களும் நடத்தினார்கள். மாணவர்களுக்குக் கடனுதவி வழங்க நிதி திரட்டினார்கள். ஆண்டுக்கு ஒரு முறை தோட்டப்புறங்களுக்குச் சென்று தங்கி சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களில் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு குழு பேச்சுப் போட்டிகள், தமிழ் வகுப்பு என நடத்தியது. கணேசன் அவர்களோடு ஒன்றாக இருந்தான். சென்ற ஆண்டிலிருந்து அந்தச் சங்கத்துக்கு துணைத் தலைவராகவும் இருக்கிறான்.
அவனுடைய நிர்வாகத்துறை சிறப்புப் பாடம் மிகக் கடுமையாக இருந்தாலும் மாணவர் சங்க நடவடிக்கைகளை அவன் புறக்கணிப்பதில்லை. “ஐசெக்” என்ற பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் அக்கறையுள்ள அனைத்துலக மாணவர் சங்கத்தின் பல்கலைக் கழக கிளையில் பொருளாளராக இருந்தான். இதனால் அனைத்துலக மாணவர் சங்கங்களில் உள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்ள முடிந்தது.
அவனுக்கு நீச்சல் சிறுவயதிலிருந்தே தெரியும். ஆகவே நீச்சல் குளத்து உயிர் காப்புச் சங்கத்திலும் இடம் பெற்று அந்த சங்கத்தின் செயலாளராகவும் இருந்தான். இந்த நடவடிக்கைகளினால் புள்ளிகள் அதிகம் பெற்று இந்த மூன்று ஆண்டுகளிலும் விடுதியில் தங்க அவனுக்குத் தொடர்ந்து இடம் கிடைத்தது.
இந்த தறுதலை மாணவர்கள் இந்திய பண்பாட்டுக் கழகத்திடம் சேருவதில்லை. ஆனால் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து கூச்சலிட்டுக் கலாட்டா செய்வார்கள். கேலி செய்வார்கள். கெட்ட வார்த்தைகளைக் கூவிவிட்டு ஒளிந்து கொள்வார்கள். இதனால் இந்த இரு குழுக்களிடையே அடிநாதமாக ஒரு பகைமை உணர்வு பரவிக்கொண்டே வந்தது.
இந்தப் பகைமையின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தங்களுக்குள் ஒரு ரகசியச் சங்கம் அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் கிளம்பியது. தங்களை “காராட் கேங்” என்று அழைத்துக் கொண்டார்கள். அவர்கள் அடையாளமாக ஒரு காதில் கடுக்கண் அணிந்து கொண்டார்கள். தலையை மொட்டையாக வெட்டிக் கொண்டார்கள்.
பல்கலைக் கழகம் இவர்களைக் கவனித்துக் கொண்டு வந்தது. ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்வதில் இவர்கள் திறமை சாலிகளாக இருந்தார்கள். இவர்களை நேரடியாகக் கேட்டால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதை இவர்கள் உறுதியாக மறுத்து விடுவார்கள்.
இப்படி ஒரு ரகசியச் சங்கம் இருப்பது பற்றித் தான் கேள்விப் பட்டிருப்பதை மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் சில சமயம் இந்தியப் பண்பாட்டுக் கழக மாணவ அலுவலர்களிடம் பேசி எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் ஆலோசனை எதையும் இந்த மாணவர்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதை அதன் நடப்பாண்டுத் தலைவர் உதவித் துணை வேந்தரிடம் விளக்கி விட்டார்.
காராட் கேங்கின் அட்டகாசம் கடந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கையின் போது உச்ச கட்டத்தை எட்டியது. பல்கலைக் கழகம் இந்த நடவடிக்கையை முற்றாகத் தடை செய்திருந்தாலும் மாணவர்களை ஆங்காங்கே ரேகிங் செய்கிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமிருந்தன. குறிப்பாக இந்திய மாணவர்கள் மட்டுமே தீவிரமான ரேகிங்கில் ஈடுபடுவதாகவும் அதற்குப் பலியாகுபவர்களும் இந்திய மாணவர்களே என்றும் தெரிந்தது. இந்த ரேகிங்கினால் வதை பட்ட மாணவர்கள் பயத்தினால் வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். அதைத் தெரிந்திருந்த சீனியர் மாணவர்களும் இந்திய இனப் பற்றின் காரணமாக குற்றம் செய்தவர்களை மூடி மறைத்தார்கள். காராட் கேங் என்பது இந்திய மாணவர்களின் மனதில் திகிலை எழுப்பும் விஷயமாக வளர்ந்து விட்டிருந்தது.
போன ஆண்டில் இந்திய மாணவர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் முருகேசு இந்திய மாணவர்கள் இப்படிச் செய்வதை ஆத்திரத்துடன் கண்டித்துப் பேசினார்.
“இந்த காராட் கேங் மாணவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் திருந்துபவர்கள் அல்ல. வெளிப்படையாக சமுதாயத்தைப் பகைத்துக் கொள்ளுவது அவர்களுக்குப் பெருமையான செயலாக இருக்கிறது. ஆகவே இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர் பார்க்கப் பட்டதுதான். ஆனால் இவர்களை இந்தியர் என்ற இனப்பற்றுடன் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களே, நீங்கள்தான் கண்டிக்கத் தக்கவர்கள். இவர்கள் நம் இனமாக இருக்கலாம். ஆனால் நம் இனத்தின் விஷ வித்துக்கள். கோடரிக் காம்புகள். இவர்களை களையெடுக்காவிட்டால் நம் இனம் தழைக்காது. ஆகவே ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
“புதிய மாணவர்கள் இவர்களுக்கு பயந்து பயந்து சாக வேண்டாம். தமிழர்களின் வீரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால் உண்மை வாழ்க்கையில் படு கோழைகளாக இருக்கிறோம்.
“பாதகம் செய்பவரைக் கண்டால், – நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!”
என்று பாரதியார் யாருக்காகப் பாடினார்? அக்கிரமம் செய்யும் மாணவர்களை எதிர்க்கக் கற்றக் கொள்ளுங்கள். அவர்கள் முகத்தில் ஓரிரு முறை உமிழ்ந்தால் எல்லாம் திருந்துவார்கள்” என்று அவர் கூறியதைக் கேட்டு கூட்டம் உற்சாகமாகக் கைதட்டியது.
ஆனால் காராட் கேங்கின் அக்கிரமங்கள் இந்த ஆண்டிலும் நீடித்துள்ளன. அதிகாரிகள் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அவர்கள் செயல்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிப் பெண்ணும் பையனும் மாட்டிக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் அழகிய பயந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்தப் பையன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய காட்சியும் நினைவுக்கு வந்தது. சிரித்துக் கொண்டான்.
உறக்கம் வருவதுபோல இருந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விளக்கை அணைக்க அவன் எழுந்த போது அவன் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்தான். கதவின் முன்னால் ராஜன் நின்றிருந்தான். இவன் ஏன் இந்த நேரத்தில்… அறையைத் தேடி..?
என்ன என்பது போல் அவனைப் பார்த்தான் கணேசன்.
“கீழ வா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ராஜன்.
“என்ன பேசவேண்டியிருக்கு இந்த நடு ராத்திரியில?” என்று கேட்டான் கணேசன்.
“கீழ வா தெரியும்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று இறங்கிப் போனான் ராஜன்.
இது நல்லதற்கா கெட்டதற்கா என்று தெரியவில்லை. ஆனால் இறங்கி என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனான்.
வரவேற்பறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் இருந்தது. பெரும்பாலும் காலியாகவே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தவாறு இரண்டு மூன்று மாணவர்கள் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிச்சம் மட்டுமே அந்த அறையை மங்கலாக ஒளிப்படுத்திக் கொண்டிருந்தது. தூரமூலையில் நான்கு இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களாகத்தான் இருக்க வேண்டுமென கணேசன் அவர்களை நோக்கிப் போனான்.
ராஜன் அங்கிருந்தான். காராட் கேங்கைச் சேர்ந்த இன்னொரு மாணவன் இருந்தான். கணேசன் அவனைப் பார்த்திருக்கிறான். அவன் பெயர் தெரியவில்லை. மற்ற இரண்டு பேர்கள் புதியவர்கள். முகத்திலும் உடையிலுமிருந்து வெளியாட்கள் போலத் தெரிந்தது. அவர்கள் முறைப்பிலிருந்து இவர்கள் நட்போடு வரவில்லை எனத் தெரிந்தது.
ராஜன் எழுந்து நின்றான். அடுத்தவர்களுக்குக் கேட்காத தணிந்த குரலில் “கணேசன். இன்னைக்கு என்னை “மாலு” (அவமானம்) பண்ணிட்ட இல்ல! அதுக்காக ஒன்ன எச்சரிச்சிட்டுப் போகத்தான் வந்தோம்!” என்றான்.
கணேசனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. குற்றத்தையும் செய்து விட்டு இத்தனை தைரியமாகப் பேசுகிறானே! “நீ செஞ்ச அநியாயத்துக்கு எச்சரிக்கை எனக்கா ராஜன்? இவங்க யாரு?” என்று புதியவர்களைக் காட்டிக் கேட்டான்.
புதியவர்களில் ஒருத்தன் எழுந்து வந்து கணேசனின் தோளில் கைவைத்தான். “இதோ பாரு பிரதர்! நாங்க யாரு தெரியுமா? ஆறு சீட்டு கேங் கேள்விப் பட்டிருக்கியா! நாங்கதான்.”
கணேசன் கேள்விப்பட்டிருக்கிறான். பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே உள்ள சுங்கை டுவா பகுதியில் இயங்கிவரும் ஒரு ரகசியக் கும்பல். வெட்டுக்கும் குத்துக்கும் அஞ்சாத கும்பல். இவர்கள் எப்படி பல்கலைக் கழகத்தின் வளாகத்துக்குள் வந்தார்கள்?
“தோ பாரு! இந்த ராஜன் என்னோட தம்பி மாதிரி. அவங்ககிட்ட ராங்கி பண்ணாத. நம்பள்ளாம் தமிளங்க இல்ல? ஒத்துமையா இருக்கணும். அவன பத்தி நீ ஏதாவது மேல போய் சொன்ன, உனக்கு அது நல்லதில்ல!”
தொலைக்காட்சிப் பெட்டியின் இருண்டும் பிரகாசித்தும் வரும் ஒளியில் அந்த ஆளின் முகம் ஒரு அசல் தமிழ்ப்பட வில்லன் முகம் போல் இருந்தது. கணேசனுக்கு ஆத்திரம் புரண்டு கொண்டு வந்தது. கத்தி உதவிக்கு ஆட்களைக் கூப்பிடலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில். அவர்கள் போவதற்கு எழுந்து விட்டார்கள்.
அந்த முரடன் வந்து கணேசனின் நெஞ்சில் கைவைத்தான். லேசாக அழுத்தினான்
“ஒத்துமையா போயிடு பிரதர். தமிளனுக்குத் தமிளன் சண்ட வேணாம். ஒரு தடவதான் வார்னிங். அடுத்த தடவ பாராங்கோ, ஆசிட்டோ சொல்ல முடியாது. வௌங்குதா?”
எழுந்தார்கள். மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உதைத்து ஸ்டார்ட் பண்ணி சத்தமாக வெளியேறினார்கள். இருளில் வந்து இருளிலேயே உட்கார்ந்து கட்டைக் குரலில் பேசிவிட்டு இருளோடு கலந்து மறைந்தார்கள்.
கணேசன் கொஞ்ச நேரம் அங்கிருந்த சோபாவில் அதிர்ந்து உட்கார்ந்து விட்டான்.
முதலில் ஆத்திரம்தான் பொங்கிப் பொங்கி வந்தது. வெளியிலுள்ள குண்டர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? அப்படித் திருட்டுத் தனமாக வந்தவர்கள் துளியும் பயமில்லாமல் ஒரு மாணவனை மிரட்டுவதா? அதற்குப் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களே துணையா? இந்த ராஜன் தன் நெஞ்சில் இத்தனை தைரியம் கொண்டிருக்கிறானா?
அப்புறம் பயம் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவர்கள் இனி தீமை செய்யத் தயங்குவார்களா? சொன்னது போல இருட்டில் தன்னை அரிவாளால் வெட்டவோ, முகத்தில் அமிலம் ஊத்துவதற்கோ தயங்குவார்களா? போலிசுக்கே பயப்படாதவர்கள் இந்தப் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கா பயப்படுவார்கள்?
இதுவரை இந்த பல்கலைக் கழக மாணவர்களின் ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் கேலியும் கிண்டலும் பேச்சும் குடியும் என்ற அளவில் எரிச்சலூட்டுவதாக மட்டிலும்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் அது வெறும் எரிச்சலாக இல்லாமல் வன்செயலின் எல்லையைத் தொட்டுவிட்டது.
தனக்கு இந்தச் சண்டையெல்லாம் தேவைதானா? படிக்க வந்தவன் மற்றவர்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போனால் நல்லதில்லையா?
இல்லை என்று சொல்லிக் கொண்டான். பேராசிரியர் முருகேசு சொன்னது சரிதான். இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்களிடையே நச்சுக் கன்றுகள் துளிர்த்துள்ளன. இவற்றை இப்போதே களையா விட்டால் இவை வளர்ந்து வேர் பிடித்து விடும். ஏற்கனவே தமிழ்ச் சமுதாயத்தின் அடிப் பகுதிகளில் இவ்வாறான அவலங்கள் தோன்றியிருப்பதற்கு மொத்தமாகச் சமுதாயத்தின் அக்கறையின்மைதான் காரணம். அது போல இந்தப் பல்கலைக் கழகத்துக்கு உள்ளும் நடக்க அனுமதிக்கக் கூடாது.
மற்ற இன மாணவர்கள் அறிவுத் தெளிவு பெற்று ரேகிங் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு தங்கள் இனப் புதிய மாணவர்களுக்கு கல்வி, புறப்பாட நடவடிக்கைகளுக்கு ஆக்கரமான வழிகாட்டிகளாக மாறிவிட்ட பிறகு இந்திய மாணவர்கள் மட்டும் இப்படி வெறி பிடித்துத் திரிவது ஏற்கனவே பல்கலைக் கழக மாணவர்களிடையே அவமானப் பேச்சாகி விட்டது. இந்த நிலையில் ரகசியச் சங்க நடவடிக்கைகள் வெளியார் கும்பல்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் இந்த இனத்திற்கு ஏற்படும் அவமானத்தை இரத்தம் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டி வரும். இதை அனுமதிக்கக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிக் கவலையில்லை. மாணவர்களின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.
உண்மையில் இன்று காலை நடந்த சம்பவத்தைப் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகளிடம் அவன் முறையீடு செய்ய மனமில்லாமல் இருந்தான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ பையனோ முறையீடு செய்தால் அவர்களுக்காகச் சாட்சி சொல்லத் தயாராக இருந்தான். ஆனால் தானாகச் சென்று முறையீடு செய்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமென்று இருந்தான். ஆனால் இப்போது ராஜன் எல்லை மீறிவிட்டான். தன்னை நேரடியாக மிரட்டி என்னையே பாதிக்கப் பட்டவனாக ஆக்கிவிட்டான்
“மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று பேராசிரியர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. உமிழத்தான் வேண்டும். அந்த ஒரு மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும் என்று தோன்றியது. நான் எச்சில் உமிழாவிட்டால் அவர்கள் என் முகத்தில் அமிலம் உமிழ்வார்கள்.
மணியைப் பார்த்தான். இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் போய் விடுதியின் பெங்காவாவையோ பாதுகாப்பு அதிகாரிகளையோ தொந்திரவு செய்ய வேண்டாமென நினைத்தான். நாளைக் காலையில் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த தள்ளிப் போடும் முடிவு பெரிய இக்கட்டில் கொண்டு விடப் போகிறது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
——————————————————————————–
4
காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி மாரிமுத்து நின்று கொண்டிருந்தார். நல்லவர். இந்திய மாணவர்களுடன் சகோதர பாசத்தோடு பழகக் கூடியவர்.
“வணக்கம் தம்பி! இப்பதான் எந்திரிக்கிறிங்களா?” என்றார்.
“வணக்கண்ண. நேத்து படுக்க நேரமாயிடுச்சி…! என்ன இத்தன காலயில என் அறையத் தேடி வந்திருக்கிறிங்க?” என்று கொட்டாவி விட்டான்.
மாரிமுத்து உள்ளே வந்து அவன் நாற்காலியில் உட்கார்ந்து தனது தொப்பியைக் கழற்றி வைத்தார். கணேசன் படுக்கையில் உட்கார்ந்தான்.
“ஏன் தம்பி! ·பிரஷிப் பசங்களோட ஏதும் தகராறா?” என்று கேட்டார்.
நேற்று நடந்தது அதற்குள் பாதுகாப்புத் துறைக்குத் தெரிந்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டான்.
“ஓ அதுக்குள்ள உங்களுக்குத் தகவல் வந்திருச்சா? நான் இப்ப எந்திரிச்சதும் வந்து ரிப்போர்ட் பண்ணலான்னுதான் இருந்தேன்” என்றான்.
“ரிப்போர்ட் எல்லாம் பண்ணியாச்சி!”
“யார் பண்ணுனாங்க?”
“அத நான் சொல்ல முடியாது. ஆனா நம்ப கெத்துவா கெசலாமத்தான் (பாதுகாப்புத் துறைத் தலைவர்) உங்களை உடனே வந்து பார்க்கச் சொன்னார். அதச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று மாரிமுத்து எழுந்தார்.
“சரிண்ண. நானே வரணுன்னுதான் இருந்தேன். குளிச்சவுடனே போறேன்!” என்றான்.
“சரி. கொஞ்சம் கவனமா பொறுமையா பேசுங்க தம்பி. இந்த வருஷம் ரேகிங் பத்தி ரொம்ப சீரியசா இருக்காங்க. பிடிபட்டவங்க குற்றம் நிருபிக்கப் பட்டா பல்கலைக் கழகத்த விட்டு சஸ்பென்ட் பண்ணவும் நீக்கவுங்கூட தயாரா இருக்காங்க!” என்று சொல்லிப் போய்விட்டார்.
இந்திய மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் உள்ள மனிதர். பெரும்பாலும் எல்லா இந்தியர்களும் இந்த அக்கறையோடும் கவலையோடும்தான் இருக்கிறார்கள். ஆனால் ராஜனுக்கும் அவன் கும்பலுக்கும் இதில் கொஞ்சமும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நெருப்போடு விளையாடுகிறார்கள். சுடும் என்று எச்சரித்தாலும் கேட்பதில்லை என்று யோசித்தவாறு குளிக்கப் போனான்.
*** *** ***
பல்கலைக் கழகத்தின் பிரதான சாலையில் முதல் போக்குவரத்து வட்டத்தின் இடது முனையில் ஒரு சிறிய கட்டடத்தில் பாதுகாப்புத் தலைவரின் அலுவலகம் இருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் பல்கலைக் கழகத்தின் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் தெரியும். நீச்சல் குளத்தில் உயிர் காப்பாளர் கடமையில் நீச்சல் சிலுவார் அணிந்து உட்கார்ந்து பொழுது போக்கிய நாட்களில் அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால் இந்தக் கட்டடம் தெரியும். ஒரு பிரம்மாண்டமான மழை மரத்தின் கிளைகள் கூரையை வருடியிருக்கும் மேட்டில் அது இருந்தது.
அவன் இந்தக் கட்டடத்திற்குள் பலமுறை வந்திருக்கிறான். பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ரித்வான் அஹ்மாட்டை அவனுக்குத் தெரியும். மாணவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவனும் அவன் சக நண்பர்களும் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.
தனது மோட்டார் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே போனான். காலையில் நடந்த அந்த ரேகிங் விவகாரத்தையும் இரவில் ராஜனும் அவன் கும்பலும் வந்து மிரட்டியதையும் அவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சில குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தான்.
வரவேற்புக் கௌன்டரைக் கடந்து சென்று ரித்வான் அஹ்மட் என்று பெயர் எழுதப் பட்டிருந்த கதவைத் தட்டினான். “மாசோக்” (உள்ளே வா) என்ற குரல் கேட்டு கதவைத் திறந்து நுழைந்தான்.
ரித்வான் தன் மேசையில் ஒரு கோப்புடன் தயாராக உட்கார்ந்திருந்தார்.
“சிலாமட் பகி (காலை வணக்கம்) சே ரித்வான்” என்றான்
ஒன்றும் சொல்லாமல் இருக்கையைக் காட்டினார். உட்கார்ந்தான். அவர் கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசினார்.
“கணேசன், இந்த ஆண்டில் இந்திய மாணவர்களின் ரேகிங் நடவடிக்கையை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். இதைக் கண்டிப்பாக ஒழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். துணை வேந்தரும் இதைப் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.”
“மிக நல்லது சே ரித்வான். அப்படித்தான் செய்ய வேண்டும்.”
கோப்பிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தார். “ஆனால் நீயே இப்படிப் பண்ணுவாய் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!”
கொஞ்சம் திகைத்தான். தான் உடனடியாக வராமல் காலந் தாழ்த்தி வந்ததால் கோபமுற்றிருக்கிறாரோ என நினைத்தான். “நான் நேற்றே வந்து முறையீடு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டான்.
“நீ என்ன முறையீடு செய்வது? இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும்!” என்றார்.
அதிர்ச்சியடைந்தான். “என்னைப் பற்றி முறையீடா? விளங்கவில்லையே!”
“நீ நேற்று காலையில் ஒரு முதலாண்டு மாணவனை ரேக் பண்ணியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் இங்கே முறையீடு வந்திருக்கிறது!” என்று கோப்பைக் காட்டிச் சொன்னார்.
விஷயம் விளங்குவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது. அந்தப் பெண்ணைத் தற்காப்பதற்காக அந்த மாணவனை அறைந்து தள்ளப் போய் அது தன் மேல் குற்றமாக உருவெடுத்திருக்கிறது. தீமை செய்தவர்கள் முந்திக்கொண்டதால் தானே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாகிவிட்டது.
வாயடைத்துப் போயிருந்தவனைப் பார்த்து ரித்வான் கேட்டார். “நீ இதற்கு என்ன சொல்கிறாய் கணேசன்? உன் வாதத்தையும் கேட்டுவிட்டுத்தான் இதை நான் மாணவர் விவகாரப் பிரிவு உதவித் துணை வேந்தருக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.
“சே ரித்வான்! நான் குற்றவாளியல்ல. ஒரு முதலாண்டுப் பெண்ணையும் ஒரு முதலாண்டுப் பையனையும் ஒரு சீனியர் மாணவர் கும்பல் பிடித்து ரேக் செய்து கொண்டிருந்தது. அந்தப் பையனை அந்தப் பெண்ணிடம் அசிங்கமான முறையில் நடந்து கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் அந்தப் பையனை அறைந்து தள்ளிவிட்டு பெண்ணைக் கொண்டு போய் அவள் விடுதியில் விட்டு வந்தேன்! நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம்! இதை யாரோ திரித்துக் கூறியிருக்கிறார்கள்” என்றான்.
“யாரோ அல்ல! பரசுராமன் என்ற அந்தப் புதிய மாணவனே முறையீடு செய்திருக்கிறான். அதற்கு சீனியர் மாணவர்கள் இருவர் சாட்சியும் உண்டு!”
மீண்டும் திகைப்பாக இருந்தது. ஒரு சுண்டெலியைப் போல எழுந்து ஓடிய அந்த மாணவனா முன்வந்து முறையீடு செய்திருக்கிறான்? பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. “சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு!” என்றான்.
“நீ சொல்வது உண்மையானால் இந்த ரேகிங் பற்றி நீ ஏன் முதலில் வந்து எங்களிடம் முறையீடு செய்யவில்லை?” என்று கேட்டார்.
ஏன் செய்யவில்லை? தன்னையே கேட்டுக் கொண்டான். நல்லெண்ணத்தினால் செய்யவில்லை. சக இந்திய மாணவனுக்குத் தொந்திரவு விளையுமே என்றுதான் சொல்லவில்லை. ராஜனும் அவன் நண்பர்களும் என்னதான் முரடர்களாக இருந்தாலும் ஏழை இந்தியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் படிப்பில் மண் போட வேண்டாம், அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என்றுதான் செய்யவில்லை. ஆனால் இப்போது நடப்பதென்ன? ஒரு குற்றமும் செய்யாத என் எதிர்காலத்தில் இவர்கள் மண் அள்ளி வீசத் தயாராகிவிட்டார்களே!
ஒருநிமிடம் தலைகுனிந்திருந்து சொன்னான். “அவர்களைத் தற்காக்க வேண்டும் என்று எண்ணி முறையீடு செய்யாமல் இருந்தது என் குற்றம்தான். ஆனால் நான் சொல்வதுதான் உண்மை. அந்தப் பெண்ணைக் கேட்டால் விளங்கிவிடும்!” என்றான்.
“பெண்ணைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை! எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண்?”
யார் அந்தப் பெண்? அந்தக் கேள்விதான் அவன் மனதிலும் நின்றது. அந்தக் கணத்தில் ஒரு ஆதரவற்ற அபலைப் பெண்ணாக அவளைப் பார்த்தது தவிர அவளை முன்பின் தெரியாது.
“எனக்குப் பெயர் தெரியாது. ஆனால் கண்டுபிடித்துவிடலாம்!” என்றான்.
“அந்தப் பெண் சாட்சி சொல்ல வராவிட்டால்…!”
ஆமாம். அந்த சாத்தியம் இருக்கிறது. தன் பெயர் பொதுவில் இழுக்கப்படும் என்று பயந்து பல மாணவர்கள் முறையீடு செய்வதில்லை. ஆனால் இந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும். தான் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றியாக அவள்தான் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும்.
“சே ரித்வான்! நான் அந்தப் பெண்ணைத் தேடி அழைத்து வருகிறேன். அதுவரை இந்தக் கோப்பை மாணவர் விவகாரப் பிரிவுக்கு அனுப்பாதீர்கள்!” என்றான்.
கொஞ்ச நேரம் யோசித்தார். அப்புறம் கேட்டார். “நீ இந்தப் பரசுராமன் என்ற பையனை அடித்தது உண்மையா?”
“உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன!”
“உண்மை என நீயே ஒத்துக் கொள்ளும் போது இந்த விவகாரத்தை நான் மேலே கொண்டு போகாமல் இருக்க முடியாது. காரணங்கள் இருந்தால் விசாரணையில் நீயே விளக்கலாம்!” என்றார்.
இந்த விவகாரம் தன் கைமீறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. “சே ரித்வான். இந்த குற்றச்சாட்டுத் திரிக்கப் பட்டிருப்பது மட்டுமல்ல. இதைச் செய்த மாணவர்கள் வெளியில் உள்ள குண்டர் கும்பல்காரர்களை அழைத்துவந்து என்னை என் தேசாவிலேயே வந்து மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூறினார்கள்!” என்றான். குரலில் கோபம் இருந்தது.
ரித்வான் திகைத்தவர் போல் காணப் பட்டார். “வெளியில் உள்ள குண்டர்களா? அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்?” சந்தேகத்துடன் கேட்டார்.
“தெரியாது. ஆனால் அழைத்து வந்த மாணவர்கள் யார் என எனக்குத் தெரியும்!”
“எப்போது நடந்தது?”
“நேற்றிரவு!”
“எங்கே?”
“என் தேசாவில், ·பாஜார் பக்தியில்!”
“பெங்காவாவிடம் சொன்னாயா?”
“இன்னும் இல்லை!”
“ஏன்?”
“இரவு லேட்டாகி விட்டது. காலையில் சொல்லலாம் என இருந்தேன்! நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன்!”
நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் கணேசனுக்குப் புரிந்தது. குற்றம் சுமத்தப் பட்டுவிட்டதால் தற்காப்புக்காக இட்டுக்கட்டிச் சொல்லுகிறான் என நினைக்கிறார் போலும்.
“உன்னை அவர்கள் மிரட்டியதற்கும் வெளியாட்கள் வளாகத்துக்குள் வந்ததற்கும் சாட்சியங்கள் உண்டா?”
சாட்சியங்களா? அந்த இருட்டில் அந்த விடுதியின் வரவேற்பறையில் யார் இருந்தார்கள் என்பதை அவன் கவனிக்கவில்லை. யாரோ டெலிவிஷனில் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்தது. ஆனால் இவர்கள் நின்று பேசியதை யாரும் கவனித்திருப்பார்களா தெரியவில்லை.
“யாரும் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வரவேற்பறை பெரும்பாலும் காலியாக இருந்தது. யாரோ டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களைக் கவனித்தார்களா என்று தெரியாது!”
“சரி! உன் பங்கிற்கு நீ ஒரு முறையீடு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! நான் விசாரிக்கிறேன்!” என்றார். அவர் முகத்தில் கோபமும் எரிச்சலும் இருந்தன.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தான். கௌன்டரில் முறையீட்டு பாரம் ஒன்று வாங்கி நேற்று நடந்த இரு சம்பவங்களையும் விரிவாக எழுதினான். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாவல் அதிகாரி சில மேல் விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.
பாதுகாப்பு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அந்தப் பெண்ணை எப்படியாவது தேடிப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவள் பெயர் தெரியவில்லை. எந்த கல்விப் பிரிவு என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன் என்றும் அங்குதான் ராஜனைச் சந்தித்தேன் என்றும் சொன்னாள் என்று ஞாபகம் வந்தது.
அந்தக் கூட்டத்தில் அன்று அவளைத் துன்புறுத்தக் கூடியிருந்த யாரையும் அணுகிக் கேட்க முடியாது. எல்லாரும் அவனை எதிரியாகப் பாவிப்பார்கள்.
அவள் இருக்கும் விடுதி தெரியும். விடுதிக்கு முன்னால் போய் காத்திருந்து கண்ணில் படுகிறாளா என்று பார்க்கலாமா? ஆனால் அப்படிக் காத்திருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள். அங்குள்ள தெரிந்த இந்தியப் பெண்கள் யாரையாவது பார்த்துப் பேசி அடையாளம் சொல்லிக் கேட்கலாம்.
சிகப்பாக இருந்தாள். கருப்புப் பொட்டு வைத்திருந்தாள். ஒல்லியாக அநேகமாய் ஐந்தடி இரண்டங்குலம் மூன்றங்குலம் இருக்கலாம். ஜீன்ஸ¤ம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் டீ சட்டையும் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றி இத்தனை விஷயங்கள் தனக்கு நினைவில் தங்கியிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மனித இயல் கட்டடத்தைக் கடந்து பல்கலைக் கழக கிளினிக் வழியாக நான்கு மாடிக் கட்டடமான தேசா கெமிலாங் விடுதிக்குப் போனான். அநேகமாக எல்லாரும் விரிவுரைகளுக்குப் போய்விட்ட இந்த நேரத்தில் விடுதி ஓவென்றிருந்தது. மோட்டார் சைக்கிளை விடுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு நின்றவாறு யோசித்தான். தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஒன்றிரண்டு மலாய்க்கார மாணவர்கள் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து விரிவுரைகளுக்குப் பறந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டட நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த ஒரு மர பெஞ்சில் சோர்ந்து உட்கார்ந்தான்.
கணேசனுக்கும் பத்து மணிக்கு விரிவுரை இருந்தது. முதல் நாள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும். இன்று “இன்டர்மீடியட் நிதிக் கணக்கியல் 1″ தொடங்குகிறது. இந்தப் பருவம் முழுவதுக்குமான பாடத்திட்டம் விநியோகிக்கப்பட்டு விளக்கப்படும். போகாவிட்டால் மற்ற மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாடத்திட்டப் பிரதியை கடன் வாங்கி பட நகல் எடுக்க வேண்டி வரும். விரிவுரையாளரும் கோபித்துக் கொள்வார்.
ஆனால் தனக்கு முன் நிற்கின்ற இந்த இக்கட்டு பெரிதாக இருந்தது. தான் நல்லது செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டாயிற்று. ராஜாவும் அவன் நண்பர்களும் தன்னை நன்றாக மாட்டி வைத்து விட்டார்கள். இந்த பாதிக்கப்பட்ட முதலாண்டுப் பெண் முன் வந்து உதவி செய்தால்தான் உண்டு. அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் போய்க் கேட்பதென்றாலும் பெயர் தெரியாது. அறை எண் தெரியாது. அரச நடன நிகழ்ச்சிக்கு வந்த சின்டெரெல்லா பனிரெண்டு மணிக்கு மறைந்தது போல புகை மண்டலத்தில் மறைந்து போனாள்.
இன்னொரு வழி அந்தப் புகார் செய்த பரசுராமன் என்ற மாணவனைச் சந்தித்துப் பேசுவது. அவன் பெயர் தெரிகிறது. ஆனால் அவனைப் பார்த்துப் பேசுவதில் பலன் இருக்குமா அல்லது நேர்மாறான விளைவுகள் இருக்குமா எனத் தெரியவில்லை. ராஜனும் அவன் கும்பலும் பரசுராமனை மிரட்டித்தான் முறையீடு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது அவன் அவர்களுடைய முற்றான பாதுகாப்பில் இருப்பான். அவனிடம் கணேசன் நெருங்க விடமாட்டார்கள். அப்படியே நெருங்கிப் பேசிவிட்டாலும் முறையீடு செய்த காரணத்தால் மீண்டும் என்னை மிரட்டினான் என்று மறு முறையீடு கொடுக்கச் செய்து காரியத்தை இன்னும் சிக்கலாக்குவார்கள்.
கணேசன் மனதில் பயம் வந்து தங்கியது. இந்த ஆண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். ரித்வான் தனக்கு நண்பராக இருந்தும் கடுமையாகப் பேசியதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததையும் எண்ணிப் பார்த்தான். இந்த முறை வெளியில் உள்ளவர்களும் பல்கலைக் கழகம் இந்த இந்திய மாணவர்கள் ரேகிங் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறது என உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். ஆகவே நாங்களும் செயல்படுகிறோம் எனக் காட்டிக்கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் கேஸ்கள் வேண்டும். வேறு கேஸ் கிடைக்காவிட்டால் என்னையே பலிகடா ஆக்கிவிடுவார்களோ?
தள்ளிவைத்தல், நீக்கம் என்று வந்து விட்டால் அந்த அவமானத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இது வரை இந்தப் பல்கலைக் கழகத்தில் கௌரவமாக இருந்து விட்டான். மாணவர்கள் திட்டங்களுக்கு முதன்மை வகித்து தலைமைத்துவ பதவிகள் பல வகித்துவிட்டான். இந்த விஷயம் வெளியானால் அவனுடைய ஆசிரியர்கள் “நீயா அப்படிச் செய்தாய்?” என்று கேட்பார்கள். மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் “உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே!” என்பார். பேராசிரியர் முருகேசு முகத்தில் எப்படி விழிப்பது? அவரே தன் முகத்தில் உமிழும் நிலை வந்து விடுமா?
பெற்றோர்கள் தனக்கு உதவ முடியாத நிலையில் தன்னை மகனாகப் பாவித்து தனக்குப் பண உதவி தந்து படிக்க வைக்கும் அத்தையின் நினைவு வந்தது. எவ்வளவு ஏமாந்து போவாள் அத்தை! இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வேன்?
ஒரு ஆற்றாமை உணர்வும் திகிலும் மனதுக்குள் வந்தன. கண்களில் நீர் மல்கியது. இரண்டு உள்ளங்கைகளாலும் கசக்கிவிட்டுக் கொண்டபோது “ஹாய் கணேசன்! என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஜெசிக்கா.
***
——————————————————————————–
5
“பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்” என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். “பூசாட் பஹாசா” என்னும் மொழிகள் மையம் அந்தப் பாடத்தை நடத்தியது.
முதல் வாரத்தில் முதலாண்டு மாணவர்களுக்கான அந்தப் பாடத்தின் டுயுடோரியல் வகுப்புக்களுக்கான நாள் நேரப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு வசதியான நாள் நேரத்தை அதில் குறிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்கள். ஒரு டியூட்டோரியல் வகுப்பில் பதினைந்து பேர்தான் பெயர் எழுத முடியும். எல்லா நல்ல வசதியான நேரங்களிலும் பெயர்கள் நிறைந்து கொண்டே வந்தன. சில பட்டியல்கள் முழுமை ஆகிவிட்டன.
பெயர் குறிக்கும் அறிக்கைப் பலகைக்கு முன் மாணவர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அகிலாவால் பலகைக்கு முன் செல்லத் தள்ளி முன்னேற முடியவில்லை. மாணவர் முதுகுக்குப் பின் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன் இந்தக் கூட்டத்தில் அவள் பரசுராமனைப் பார்த்தாள். அவளைப் போலவே பட்டியலில் பெயர் எழுத அவனும் முயன்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஒரு கோமாளித் தனமாகச் சிரித்தான். அகிலா சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள். நேற்று அவன் முகம் ஒரு விஷக்காற்று போல தன் கன்னத்தைத் தீண்ட வந்த அவமானமான நினைவு இன்னும் அவளுக்கு அகலவில்லை.
முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்த போது அறைத் தோழி ஜெசிக்கா நின்றிருந்தாள். “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.
“உன்னுடன் பேச வேண்டும். முக்கியம், அவசரம்!” என்றாள் ஜெசிக்கா.
அகிலா திரும்பி கூட்டத்தைப் பார்த்தாள். அப்புறம் ஜெசிக்காவைப் பார்த்தாள். “டியுட்டோரியலுக்கு இப்போது பெயர் குறிக்காவிட்டால் எனக்கு வேண்டிய நேரம் கிடைக்காதே!” என்றாள் இரக்கமாக.
ஜெசிக்கா அறிக்கைப் பலகையையும் கூடியிருந்த கூட்டத்தையும் கொஞ்சம் கண்ணோட்டம் விட்டாள். “உனக்கு எந்த நாள், நேரம் வேண்டும்?” என்று கேட்டாள் ஜெசிக்கா.
“புதன்கிழமை காலையில் எந்த நேரமும். வெள்ளிக்கிழமை பிற்பகல். இதுதான் எனக்கு ஓய்வாக உள்ள நேரங்கள் மற்ற நாட்களிலும் நேரங்களிலும் விரிவுரைகள் வேறு டியூட்டோரியல்கள் இருக்கின்றன!”
“என்னுடன் வா!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தாள் ஜெசிக்கா. “எக்ஸ்யூஸ் மீ, எக்ஸ்யூஸ் மீ!” என்று அவள் போட்ட அதிகாரமான சத்தத்தில் யாரோ விரிவுரையாளர் வந்திருக்கிறார் போலும் என்று சில மாணவர்கள் வழி விட்டார்கள்.
பலகை அருகில் சென்றதும் புதன்கிழமை பட்டியலைக் கண்டுபிடித்து காலை 9 – 10 மணிப் பட்டியலில் அகிலாவின் பெயரை எழுதினாள். வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டியல் எல்லாம் நிறைந்திருந்தன. 3 – 4 மணிப்பட்டியலில் 15 பேர்கள் நிறைந்திருக்க 16வது பெயராக அகிலாவின் பெயரை எழுதினாள். அப்புறம் இருவரும் வெளிவந்தார்கள்.
ஜெசிக்காவின் செயல் அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்து. துணிச்சலான பெண். அவள் துணிச்சல் எனக்கு வராமல் போவது ஏன்? ஆனால் ஜெசிக்கா செய்ததை நினைத்துக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
“அதெப்படி ஜெசிக்கா! ஒரு டுயூட்டோரியலுக்கு 15 பேர்தானே இருக்க முடியும். 16வதாத என் பெயரை எழுதியிருக்கிறாயே!” என்று பயத்துடன் கேட்டாள் அகிலா.
“அதெல்லாம் விரிவுரையாளரிடம் பின்னால் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். மன்னித்து சேர்த்துக் கொள்வார்கள். அல்லது இந்தப் பட்டியலிலிருந்து ஒன்றிரண்டு பேர் மாறி வேறு நேரத்துக்குப் போகக் கூடும். அப்போதும் இடம் காலியாகும். பிரச்சினை இருக்காது!” என்றாள் ஜெசிக்கா.
“இதையெல்லாம் விரிவுரையாளர்கள் சொல்லவில்லையே!” என்றாள் அகிலா.
“இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! காரியத்தை சாதித்துக் கொள்ள கொஞ்சம் குறுக்கு வழிகளை நாடுவதில் தப்பில்லை”
பூசாட் பஹாசா கட்டடத்திற்கு வெளியில் வந்தார்கள்.
“எதற்கு என்னை அவசரமாகப் பார்க்க வந்தாய் ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.
“உன்னை ரேகிங்கிற்கு ஆளாக்கியவர்கள் பற்றி உடனே போய் முறையீடு செய் என்று நேற்றே உனக்குச் சொன்னேன். நீ மறுத்துவிட்டாய். இன்றைக்கு அது கொஞ்சம் விபரீதமாகப் போய்விட்டது”
ஜெசிக்கா வலியுறுத்தியும் அகிலா முறையீடு செய்யாமல் விட்டது உண்மைதான். அன்று பிற்பகல் முழுதும் அழுதும் ஆத்திரமடைந்தும் இருந்து, இந்த காராட் கேங்கை கத்தியெடுத்துக் குத்திக் கிழிக்க வேண்டுமென நினைத்து மாலையில் கொஞ்சம் ஆறுதல் வந்தவுடன் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவதுதான் நல்லது என அவளுக்குத் தோன்றியது.
முதலில் இந்த விவகாரம் பெரிதாகி துணை வேந்தர் அலுவலகத்தில் வழக்காகி பல்கலைக் கழக வளாகத்தில் தான் விளம்பரமாகிப் போவதில் அவளுக்கு ஆசையில்லை. இரண்டாவதாக இதில் சம்பந்தப் பட்ட மாணவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் பெயரைக் கெடுக்கவும் விரும்பவில்லை.
அன்று இரவு வீட்டுக்குப் போன் செய்து அப்பாவுடன் பேசிய போது தான் ரேகிங் செய்யப்பட்ட விஷயத்தை அதன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துத்தான் சொன்னாள். கேலி செய்யப்பட்டதாகச் சொன்னாள். அந்த முத்த விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியிருந்தும் அப்பா படபடத்தார். “பத்திரமா பாத்துக்கம்மா! நான் வேணுமானா பேராசிரியர் முருகேசுகிட்ட பேசட்டா? எனக்குத் தெரிஞ்சவர்தான்!” என்றார். அகிலா மறுத்துவிட்டாள். சமாளித்துக் கொள்ளுகிறேன் என்று தள்ளிவிட்டாள்.
இது எப்படி இப்போது விபரீதமாகப் போனது?
“என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”
“நீ ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால் அந்த ரௌடிக் கும்பல் அந்த பரசுராமனை வற்புறுத்தி கணேசன் மேல் ரிப்போர்ட் கொடுக்க வைத்துவிட்டது!”
பரசுராமனை அந்தக் கூட்டத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒரு கோமாளியைப் போல எப்போதும் இளித்த வாயுடன் இருக்கும் அவனா போய் முறையீடு செய்தான்? ஆனால் யார் இந்த கணேசன்?
“கணேசன் என்பது யார்?” என்று கேட்டாள்.
“உன்னைக் காப்பாற்றினான் என்று சொன்னாயே, அவர்தான். அந்த சீனியர் மாணவன். மேனேஜ்மென்ட் மேஜர். என்னுடைய நண்பன்!” என்றாள்.
அந்த ஆணழகன் ஒரு அழகான ராஜகுமாரன் போல அகிலாவின் நினைவுக்கு வந்தான். ஆம்! அன்று வெள்ளைக் குதிரையில் ஏறி வந்து இந்த வில்லன்களிடமிருந்து தன்னைக் கவர்ந்து சென்றிராவிட்டில் தான் இன்னும் என்ன துன்பமெல்லாம் பட்டு அவமானப்பட்டுப் போயிருப்பேனென்று சொல்ல முடியாது.
“அவர் மேல் எப்படி ரிப்போர்ட் கொடுக்க முடியும்? அவர் ஒன்றும் செய்யவில்லையே!”
“அந்தப் பரசுராமன் என்ற பையனை கணேசன் ரேகிங் பண்ண முயன்றதாகவும் அவனை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பொய்யாக ரிப்போர்ட் செய்து விட்டார்கள்!”
“ஐயோ! அப்புறம்?”
“கணேசன் பாதுகாப்புத் துறையில் விளக்கிச் சொல்ல முயன்றும் விளக்கம் எடுபடவில்லையாம். உன்னைக் காப்பாற்றத்தான் அந்த மாணவனை அடிக்க வேண்டியதாயிற்று என்று சொன்ன போது, எந்தப் பெண்ணும் ரேகிங் செய்யப்பட்டதாக ரிப்போர்ட் இல்லையாதலால் அதை நம்பத் தயங்குகிறார்களாம்!”
“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ஜெசிக்கா?”
“கணேசன் உன்னைத் தேடி தேசா கெமிலாங்கிற்கு வந்திருந்தார். உன் பெயரும் தெரியாமல் விவரம் தெரியாமல் சோர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தார். நான் தற்செயலாகப் பார்த்தேன். நண்பன் என்பதால் விசாரித்தேன். விவரம் வெளிவந்தது.”
“ஆகவே…?”
“இப்போது நீ சென்று ரிப்போர்ட் செய்து விஷயத்தை விளக்கப் படுத்தினால்தான் கணேசனின் பெயர் தெளிவாகும். இல்லையானால் அவர் மேல் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்கள்!”
அகிலாவுக்கு இதயத்தில் திகில் பிடித்தது. கணேசனைக் காப்பாற்றத்தான் வேண்டும். மனசுக்குள் நிறைய நன்றி உணர்ச்சி இருந்தது. ஆனால் இதற்கு விசாரணையென்றும் வழக்கென்றும் அலைய வேண்டும். தான் தவிர்க்க நினைத்த விளம்பரம் இன்னும் இரு மடங்காகிவிடும். தயங்கினாள்.
“என்ன யோசிக்கிறாய்?”
“இல்லை ஜெசிக்கா. இந்த விஷயம் பெரிதாகி கேம்பஸ் முழுக்கவும் பேசத் தொடங்கிவிடும். அவமானமாகிவிடும்!”
“அகிலா! நீ ஒரு கோழை மட்டுமல்ல. நன்றியில்லாதவள். உனக்கு நன்மை செய்ய வந்து கணேசன் இப்படி மாட்டிக் கொள்ளுவதா? கணேசன் என் நண்பன். ஐசெக் சங்கத்தில் நானும் அவரும் ஒன்றாகப் பல மாணவர் செயல் திட்டங்களில் உழைத்திருக்கிறோம். அருமையான குணமுள்ளவர். நீ அவருக்கு உதவ முன் வராவிடில் நானே போய் பாதுகாப்புத் துறையில் உண்மையைச் சொல்லிவிடுவேன். நேற்று அறைக்கு வந்த நீ அழுது என்னிடம் சொன்னதைச் சொல்லி விடுவேன். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் பெயர் இழு படும். என்ன சொல்கிறாய்?”
ஜெசிக்காவின் துணிச்சலும் கோபமும் அகிலா தன்னையே எண்ணி வெட்க வைத்தன. ஒரு சீனப் பெண்ணுக்கு அவளுடைய இந்திய நண்பன் மேல் உள்ள அன்பும் அக்கறையும் தனக்கு இல்லாமல் போனதே!
சட்டென்று ஜெசிக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “மன்னித்துவிடு ஜெசிக்கா! நீ சொல்வது சரி! நீயும் வா, போய் முறையீடு செய்து விடுவோம்!” என்றாள்.
ஜெசிக்கா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள். “சரி. ஆனால் கணேசன் விரிவுரைக்குப் போயிருக்கிறார். நாம் தேசாவுக்குப் போய் அவருக்காகக் காத்திருப்போம். 12 மணிக்கு வருவார். மூவருமாகச் சேர்ந்து போய் முறையீடு கொடுத்து வருவோம்!” என்றாள்.
ஜெசிக்கா தன் மோட்டார் பைக்கிலேயே அகிலாவைப் பின்னால் ஏற்றிக் கொண்டாள். விடுதிக்குத் திரும்பி கணேசனுக்குக் காத்திருந்தார்கள்.
*** *** ***
கணக்கியல் பாடத்தின் முதல் விரிவுரை விரிவுரை மண்டபம் க்யூ(Q)வில் நடந்தது. மாணவர்கள் கூட்டமாக இருந்தார்கள். உட்காரப் போதிய இடம் இல்லை. தாமதமாக வந்ததால் கணேசனுக்கு இருக்கை கிடைக்காமல் படியில் உட்கார வேண்டியதாயிற்று.
விரிவுரையாளர் பாடத் திட்டத்தை விநியோகம் செய்து இந்தப் பருவத்தில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேலைகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் விரிவுரையில் கணேசனுக்குக் கவனம் செல்லவில்லை. ஜெசிக்கா அந்தப் பெண்ணைப் பார்த்திருப்பாளா பேசியிருப்பாளா, அந்தப் பெண் முறையாக முறையீடு எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பாளா என்ற கேள்விகளே சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தன.
ஜெசிக்காவை இரண்டாம் ஆண்டிலிருந்தே அவனுக்குப் பழக்கம். தொடர்புத் துறையில் ஒலிபரப்புத் துறையை மேஜராக எடுத்துக் கொண்ட மாணவி. நிர்வாகத் துறையைத் துணைப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நிர்வாகத் துறைப் பாடங்களில் கணேசன் – ஜெசிக்கா இருவரும் இருந்தார்கள். ஐசெக் சங்கத்தில் செயலவையில் அவள் இடம் பெற்றிருந்தாள். அடிக்கடி சந்தித்ததன் மூலம் அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஜெசிக்கா அவனுடன் பாசமாகப் பழகுவாள். “கணேசான், கணேசான்” என கொஞ்சம் நீட்டி வாய் நிறையக் கூப்பிடுவாள்.
சீனப் பெண்களுக்கே உரித்தான சுறுசுறுப்பு, துணிச்சல், கடுமையான உழைப்பு அனைத்தையும் கொண்டவள். பாடங்களிலும் புறப்பாடங்களிலும் ரொம்பவும் கவனமாக இருப்பாள். கடும் உழைப்பாளி. வகுப்பில் விரிவுரையாளர்களைத் துருவித் துருவி கேள்வி கேட்டு விளக்கம் பெறுவாள். அவளால் மற்றவர்களும் பலன் பெறுவார்கள்.
இது சீன மாணவர்களுக்கே உரித்தான குணம் என்பதை கணேசன் கவனித்திருக்கிறான். அறிவை ஒரு மூர்க்கத்தனமான வேகத்தோடு சென்று அடைவது அவர்களுக்கே கை வந்த கலையாக இருக்கிறது. மார்க் வாங்குவதில் குறியாக இருப்பார்கள். கொடுத்த வேலையை விரிவுரையாளர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டு கட்டுரைகளைக் கம்ப்யூட்டரில் அழகிய எழுத்துக்களில் அமைத்து, கட்டங்கள் போட்டு, வரைபடங்களும் கிரா·ப்களும் போட்டு பணம் செலவு செய்து கச்சிதமாக பைன்டு பண்ணி ஒப்படைப்பார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையானால் விரிவுரையாளர்களிடம் தைரியமாகக் காரணம் கேட்பார்கள். அவர்கள் தவறாக இருந்தால் ஏற்று மறுமுறை கட்டுரை எழுதும்போது அந்தத் தவறுகளைக் களைந்து கொடுப்பார்கள். குழுவாக இருந்து விவாதித்துப் பாடங்களைப் படிப்பார்கள்.
சீன மாணவர்களிடமிருந்து மலாய்க்கார இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்பதை கணேசன் அறிந்திருந்தான். குறிப்பாக சீன மாணவர்கள் எதிலும் ஒற்றுமையாக இருந்து முன்னேற்றத்துக்கு உழைப்பதை இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்களிடையே பிளவுகள் பல இருந்தன. ஒற்றுமையாக அவர்கள் செயல்படுவது இந்த காராட் கேங் போன்ற குண்டல் கும்பல் ஒன்றில்தான்.
இந்த காராட் கேங் இந்த முறை தன்னைத் தண்டிப்பதில் வெற்றி பெற விட்டால் அவர்கள் அட்டகாசம் இன்னும் ஓங்கிவிடும். அவர்களின் இந்தப் பொய் வெற்றி பெற பல்கலைக் கழகம் அனுமதிக்காது என அவன் உள் உணர்வு சொல்லியது. ஆனால் பல்கலைக் கழகம் கண்மூடித் தனமாக விதிகளை வலியுறுத்துவதன் மூலமும் நல்ல இந்திய மாணவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவும் அந்தப் பொய்யும் வெற்றி பெற முடியும் என நினைத்தான். உள்ளத்துக்குள் அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம் வந்தது.
ஜெசிக்காவைத் தற்செயலாக தேசா கெமிலாங்கில் சந்தித்தது நல்லதாகப் போயிற்று. அவளிடம் தன் நிலைமையைச் சொன்ன போது, “ஓ! அந்த அகிலா என்ற இந்தியப் பெண் என் அறைத் தோழிதான்” என அவள் கூறியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் முறையீடு செய்ய மறுத்துவிட்டாள் என்று தெரிந்த போது மனம் இன்னும் கலவரம் அடைந்தது. ஆனால் ஜெசிக்கா அவனுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தாள்.
“கவலைப் படாதே கணேசன். அவள் இன்று காலை பஹாசா மலேசியா வகுப்பில் டுயுடோரியலுக்குப் பெயர் பதியப் போயிருக்கிறாள். தேடிப் பிடித்து அவளை முறையீடு செய்ய சம்மதிக்க வைக்கிறேன். நீ வகுப்புக்குப் போ. வகுப்பு முடிந்து 12 மணிக்கு இங்கே வா. நானும் அகிலாவும் இங்கு உனக்காகக் காத்திருக்கிறோம்”
ஜெசிக்கா அகிலாவைத் தேடிப் பிடித்திருப்பாளா? அந்த பயந்தாங்கொளிப் பெண் முறையீடு செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளா? என் எதிர்காலத்தைக் காப்பாற்றுவாளா?
“சரி! உங்களுக்கு புத்தகப் பட்டியல் கொடுத்திருக்கிறேன். போய் எடுத்துப் படியுங்கள். டுயூடோரியல் அடுத்த வாரம் ஆரம்பிக்கும். சில நிறுவனங்களின் உண்மைக் கணக்குகளை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு கணக்குத் தயாரிக்கும் சட்டங்களை ஆராயவிருக்கிறோம்!” என்று கூறி வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் விரிவுரையாளர்.
வகுப்பு 11.50க்கெல்லாம் முடிந்தது. அடுத்த விரிவுரைக்காக மாணவர்கள் விரிவுரை மண்டபத்தைத் தேடி நடந்து செல்ல கால அவகாசம் அளிப்பதற்காக எல்லா விரிவுரைகளும் பத்து நிமிடம் முன்னதாக முடிவடைய வேண்டும் என்பது பல்லகலைக் கழக விதிகளில் ஒன்று. அதை விரிவுரையைளர்கள் கடைப்பிடிப்பதும் உண்டு, புறக்கணிப்பதும் உண்டு. இந்த விரிவுரையார் சரியாகக் கடைபிடித்தது நல்லதாகப் போயிற்று.
அவனுடைய மோட்டார் சைக்கிள் நூல் நிலையத்தின் பின் புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்து. நூல்நிலையத் தாழ்வாரம் வழியாகச் சென்று படிகளில் கீழே இறங்கி பேஸ்மன்ட் வழியாக வந்தால் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை சீக்கிரம் அடையலாம் என்று விரைந்தான்.
நூல் நிலையத்துக்கு வெளியில் போடப்பட்ட பெஞ்சுகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். பருவத்தின் முதல் வாரத்தில் இப்படித்தான் மாணவர் கூட்டம் அலைமோதும். விரிவுரையாளர் புத்தகப் பட்டியலைக் கொடுத்தவுடன் புத்தகம் எடுக்க முந்திக் கொள்வார்கள். போகப் போக இந்தக் கூட்டம் குறையும்.
அந்தக் கூட்டத்தினுள் நுழைந்த போதுதான் நுழைவாயில் படியருகில் காராட் கேங் கூடியிருப்பது தெரிந்தது. ஒரு நிமிடம் நின்று திரும்பி வேறு வழியாகப் போகலாமா என நினைத்தான். ஆனால் இவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து நடந்தான்.
ராஜன், கருணாகரன், டேவிட், தினகரன் இவர்களை அடையாளம் தெரிந்தது. ராஜன் அவனைப் பார்த்துவிட்டான்.
“டேய் ஹீரோ வர்ராரு பாத்தியா?” சத்தமாக கணேசன் காதில் விழச் சொன்னான்.
கூட்டத்தின் கவனம் கணேசன் பக்கம் திரும்பியது.
“ஹாய் ஹீரோ! உன்ன ஜீரோவாக்கப் போறோம் தெரியுமா?” இன்னொருத்தன் கத்தினான்.
அவர்களிடமிருந்து ஓட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்களை நோக்கிப் போனான். அவர்கள் எதிரில் நின்றான்.
“உனக்கு என்ன வேணும் ராஜன்?” என்று கேட்டான்.
“கணேசன்! ஒன்ன நாங்க சரியா ·பிக்ஸ் பண்ணாம விடமாட்டோம். ஒண்ணு நீ நம்ப யுஎஸ்எம் உள்ளயே மாட்டிக்குவ! அப்படி இல்ல வெளியில வச்சி ·பிக்ஸ் பண்ணிடுவோம். தமிளனுக்குத் தமிளன் நீ அவமானப் படுத்திட்டில்ல பாத்துக்குவோம்’லா!” என்றான் ராஜன்.
“நீ என்ன ·பிக்ஸ் பண்றத பின்னால பாப்போம் ராஜன்! ஆனா தமிளனுக்குத் தமிளன்னு சொல்றவன் நம்ப பிள்ளைங்களேயே பிடிச்சி கொடுமைப் படுத்திறதுதான் பெரிய விசுவாசமா?”
“அது என்ன ஒரு சின்ன வெளையாட்டு. நீ தலையிட்டதினாலதான் அது இப்ப கேசா போச்சி!”
“ஒரு பையனப் பிடிச்சி ஒரு பெண்ண முத்தம் குடுக்க வைக்கிறதுதான் வெளையாட்டா?”
“முத்தம்தான குடுக்க வச்சோம், என்னமோ ரேப் பண்ணிட்ட மாறி கோவிச்சிக்கிறிய!”
“இந்த கேம்பசுக்கு பயந்து பயந்து வர்ர இளம் பெண்களுக்கு இப்படி வலுக்கட்டாயமா முத்தம் குடுக்க வைக்கிறது ரேப் பண்றதுக்கு சமானம்தான்”
ராஜன் முறைத்தான். “போடா ஒன்னப் பாக்க வேண்டிய எடத்தில பாத்திக்கிறோம்!” என்றான்.
கணேசன் அங்கிருந்து நடந்தான். அவர்களுக்குப் பயப்படாமல் அவர்களுக்கு முன்நின்று பதில் சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மருட்டல் அவனுக்கு மருட்சியை அதிகப் படுத்தியது.
இவர்கள் பாதகத்திற்கு அஞ்சாதவர்கள். இவர்களை வளர விடக் கூடாது. ஆனால் இவர்களை நான் வெல்வதும் தோற்பதும் அகிலா என்ற முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கையில் இப்போது இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.
***
——————————————————————————–
6
அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட கச்சிதமான முகம். கண்களில் ஒரு தைரியமும் கருணையும் இருந்தன. அவன் தன்னைக் காப்பாற்றிய செய்கையின் நன்றி உணர்ச்சியோடு இந்த உருவம் அவள் மனதில் கலந்த போது அவளுக்கு அவன் மேல் அன்பு சுரந்தது.
மோட்டார் சைக்கிளைப் பார்க் பண்ணிவிட்டு தேசா கெமிலாங்கின் வரவேற்பறைக்குள் நுழைந்தவனை ஜெசிக்கா போய் கைகோர்த்து அழைத்து வந்தாள். அவள் முகம் நிறைய சிரிப்பு இருந்தது.
“அகிலா. இவர்தான் கணேசன், உனது சேவியர்!” என்றாள்.
அவன் கைநீட்டினான். அகிலா ஒரு புன்னகையுடன் கொஞ்சம் தயக்கத்தோடு மிருதுவாகப் பிடித்துக் குலுக்கினாள். கை கொஞ்சம் கூசியது. என்னதான் கல்வியில் முன்னேறிப் பல்கலைக் கழகம் வரை வந்து விட்டாலும் அந்நிய ஆண்களுடன் பழகுவதில் தூரமும் அடக்கமும் வேண்டும் என்னும் அவள் தாய் கற்றுக் கொடுத்துள்ள தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள தயக்கம்தான் முன் வந்து நின்றது. ஜெசிக்கா அவனை அத்தனை உரிமையுடன் கைகோர்த்து வரவேற்பதைப் பார்க்கும்போது தான்தான் தன்னை இந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது.
நேற்று தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற இவன் தன்னை உறுதியாகக் கைப்பற்றித்தான் இழுத்து வந்தான். அப்போது கை கூசவில்லை. “என்னைத் தொடாதே” என இழுத்துக் கொள்ளவில்லை. ஆபத்பாந்தவன் என்று எண்ணித் தன்னை முற்றாக ஒப்படைத்துக் கொள்ளும் நிம்மதிதான் இருந்தது.
கணேசன் உட்கார்ந்தான். “மன்னிக்கணும். அன்னைக்கு உங்களோட நான் சரியா பேசில. உங்க பேரக் கூட கேக்காம போயிட்டேன். நல்ல வேளை ஜெசிக்காவுக்கு நீங்க அறைத் தோழியா இருக்கிறதினால உங்கள மறுபடி கண்டு பிடிக்க முடிஞ்சது”
அகிலா ஒரு வெட்கங்கலந்த சிரிப்பை உதிர்த்தாள். “நீங்கதான் மன்னிக்கணும். என்னக் காப்பாத்தின உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம ஓடிட்டேன் நேத்து! என்ன நன்றியில்லாதவள்னு நெனச்சிருப்பிங்க!”
“இல்ல, இல்ல அகிலா. நீங்க எவ்வளவு பயந்திருந்திங்கன்னு எனக்குத் தெரியும். ஆகவே நீங்க நன்றி சொல்லாமப் போனத நான் கொஞ்சமும் பெரிசா எடுத்துக்கில! அப்புறம் என்ன நடந்திச்சின்னு ஜெசிக்கா சொன்னாங்களா?”
தமிழ் உரையாடலுக்கிடையில் தன் பேர் கூறப்படுவதைப் புரிந்து கொண்டு ஜெசிக்கா குறுக்கிட்டுப் பேசினாள். “நான் அகிலாவுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். பாதுகாப்புத் தலைவரிடம் முறையீடு செய்ய அவள் ஒப்புக் கொண்டு விட்டாள். மூவருமாகப் போவோம். அகிலா அலறிக் கொண்டு வந்து அறைக்குள் அழுததற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!” என்றாள்.
“ரொம்ப நன்றி ஜெசிக்கா! ஆனால் அகிலா, நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும். ராஜாவும் நண்பர்களும் இப்படி முந்திக் கொண்டுவிட்டதால் நான் இப்பொழுது ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். வாதியாக இருக்க வேண்டியவன் பிரதிவாதியாகிவிட்டேன். ஆகவே நாம் என்ன மாதிரி முறையீடு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான் ஏற்கனவே எழுதிக் கொடுத்த முறையீட்டுக்கும் இப்போது அகிலா செய்கின்ற முறையீட்டுக்கும் விவரங்களில் முரண்பாடு இருந்தால் அதைப் பிடித்துக் கொள்வார்கள். நாம் கூறுவது பொய் போலத் தோன்றும். ஆகவே என்ன எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பேசி முடிவு செய்து கொள்ளுவோம்!” என்றான் கணேசன்.
அவனுடைய நிதானம், திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற போக்கு அகிலாவைக் கவர்ந்தது. அவன் அவளுக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தான்.
“அகிலா! நேற்று அந்த ரேகிங் போது என்ன நடந்தது, எப்படி அவர்களிடம் சிக்கினீர்கள், யார் அழைத்துப் போனது, அழைத்துப் போனதும் படிப்படியாக என்ன நடந்தது என்பதை முதலில் என்னிடம் சொல்லுங்கள். ஒரு காகிதத்தில் குறிப்பை எழுதிக் கொள்ளுங்கள். அதையே முறையீட்டு பாரத்தில் எழுதுங்கள். பின்னால் விசாரணையில் இதையே சொல்ல வேண்டும்!”
அகிலா கொஞ்ச நேரம் தலை குனிந்து நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்திப் பார்த்தாள். அந்த நினைவு அவளுக்குப் பயமாக இருந்தது. கூச்சமாக இருந்தது. அவமானமாக இருந்தது. இவையனைத்தும் அவள் கண்களிலும் முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.
“நடந்த உண்மைகளை அப்படியே சொல் அகிலா. எதையும் மிகைப்படுத்த வேண்டாம். உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்றாள் ஜெசிக்கா.
அகிலா அவளை நம்பிக்கையுடன் நிமிர்ந்து பார்த்தாள். இந்த இரண்டு நல்ல நண்பர்கள் துணையிருக்கும் போது தான் பயப்படத் தேவையில்லை என்று பட்டது.
நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்தி கணேசனிடம் ஒப்புவித்தாள். அங்கிருந்தவர்களில் ராஜன், பரசுராமன் தவிர வேறு மாணவர்களின் பெயர்கள் தெரியாது என்று அவள் சொன்ன போது மற்றவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தும் கணேசன் அவற்றை அவளுக்குச் சொல்லவில்லை. தெரியாத பேர்கள் தெரியாமலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
அவர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து எழுந்து பாதுகாப்பு அலவலகத்திற்குப் புறப்பட்டபோது மணி ஒன்றாகிவிட்டிருந்தது.
*** *** ***
பல்கலைக் கழகக் கல்வி என்பது தான் இதுவரை கண்டிராத புதிய உலகம் என்பதை அகிலா கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு வந்தாள். ஒரு வாரத்தில் தொடக்க விரிவுரைகளுக்குப் போய் வந்தவுடனேயே அது விளங்கிவிட்டது. “விரிவுரையாளர்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள் என்றும், வாயில் வந்து ஊட்டுவார்கள் என்றும் எதிர் பார்க்க வேண்டாம். புத்தகங்கள் இருக்கின்றன, நூலகம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டிய விளக்கம் எல்லாம் அங்கிருந்தே கிடைக்கும். எங்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்” என்றே எல்லா விரிவுரையாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
விரிவுரையாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமானால் அப்பய்ன்ட்மன்ட் வைத்துத்தான் போக வேண்டியிருந்தது. மற்ற நேரங்களில் போனால் விரட்டி விடுவார்கள். அவளுடைய விரிவுரையாளர்கள் எல்லாம் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.
கணினிக்குத் திட்டம் (புரோக்ராம்) எழுதும் வழிமுறைகள் என்ற பாடத்தின் விரிவுரையாளரை மட்டும் அவள் போய்ப் பார்க்க நேர்ந்தது. அவர் முதல் விரிவுரையில் கொடுத்த புத்தகப் பட்டியலில் எட்டு புத்ததகங்களில் நான்கு புத்ததகங்களை நூல்நிலையக் கணினியில் கண்டுபிடிக்க முடியவில்லை. நூல்நிலையப் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் கிரிசாலிஸ் என்ற அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்தின் பெயர் தெரிந்தால் கிரிசாலிசில் அதைத் தேடி அதன் புத்தக அடுக்கு எண்ணைக் கண்டுபிடித்து மாணவர்கள் தாமாக இடந்தேடி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டாக்டர் அஹமட் தாஜுடின் கொடுத்த பட்டியலில் இருந்த நான்கு தலைப்புக்களும் ஆசிரியர் பெயரும் கிரிசாலிசில் இல்லை. தேடி அலுத்த முதலாண்டு மாணவர்கள் அவரை இந்த வாரத்திலேயே நேரில் கண்டு இது பற்றிச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். யார் போவது என்று பயந்து விழித்த போது அகிலா “நான் போய்க் கேட்கிறேன்” என்றாள். ஜெசிக்காவைப் பார்த்துப் பழகியதிலிருந்து அகிலாவுக்கும் ஒரு புது தைரியம் வந்திருந்தது.
யுஎஸ்எம்மின் மருத்துவக் கல்லூரி கிளந்தான் மாநிலத்திற்குச் சென்று தனி வளாகம் அமைத்துக் கொண்ட பிறகு அது முன்பு இருந்த கட்டடத்தை பல கல்விப் பிரிவுகள் பகிர்ந்து கொண்டன. மருந்து தயாரிப்பு இயல் (·பார்மசி), போதைப்பொருள் ஆய்வு நிலையம் (டிரக் ரிசர்ச்), மேற்பட்டப் படிப்புத் துறை ( இன்ஸ்டிடியுட் ஆ·ப் கிராஜுவேட் ஸ்டடிஸ்)) இவற்றுடன் கணினி அறிவியல் துறையும் அங்கு போயிருந்தது. பெரிய பரந்த கட்டடம். குகைகள் போல் அதன் காரிடோர்கள் விரிந்திருந்தன. எந்தக் காரிடோர் போனாலும் பழைய மருந்து வாசனை அடித்தது.
மங்கிய விளக்கொளியில் உள்ள காரிடோரில் நடந்து போய் வெறும் தாஜுடின் அஹ்மட் என்று பெயர் போட்டிருந்த பெயரைக் கண்டு பிடித்தாள் அகிலா. இந்த விரிவுரையாளர்களின் கத்வுகளில் உள்ள பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களும் பதவிகளும் போட்டுக் கொள்வதில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கதவை மிருதுவாகத் தட்டினாள். “யா மாசோக்” என்ற குரல் கேட்டது.
கதவு திறந்து உள்ளே போனாள்.
ஒரு விரிவுரையாளர் அறைக்குள் அவள் போவது இதுதான் முதன் முறை. அவர் தன் மேசையை விட்டு இன்னொரு பக்கத்து மேசையில் ஒரு கணினித் திரை முன் உட்கார்ந்திருந்தார். கீ போர்டில் கடகடவென தட்டிக் கொண்டிருந்தவர் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.
“சிலாமாட் பகி டாக்டர். உங்கள் புத்தகப் பட்டியலில் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்றாள். குரலில் பயம் இருந்தாலும் தெளிவாகச் சொன்னாள்.
“நீ யார்?”
“அகிலா. உங்கள் CAP 101 மாணவி”
“உட்கார், இதை முடித்துவிட்டு வருகிறேன்!”
உட்கார்ந்தாள். தாஜூடின் தொடர்ந்து திரைக்குத் திரும்பி கீ போர்டில் தட்டினார். அவர் திறந்திருந்தது ஈமெய்ல் என்று தெரிந்தது. ஏதோ ஒரு கடிதத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்தது. சிந்தனை ஓட்டம் தடைபடுவதற்கு முன் முடித்து விட மும்முரமாக இருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டாள்.
அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். புத்தகங்கள் சுற்றிலும் இறைந்து கிடந்தன. சில விரித்தவாறு இருந்தன. சிறிய மஞ்சள் தாள்களில் புத்தகங்களில் அடையாளங்கள் வைத்திருந்தார். கணினி பிரின்ட் அவுட் தாள்கள் மடிப்பு மடிப்பாகக் குவிந்து கிடந்தன. நோட்டீஸ் போர்டில் கால அட்டவணை, அவருடைய அலுவலக மெமோக்கள், சில தேங்க்யூ கார்டுகள், சில வெளிநாட்டு கருத்தரங்க நோட்டீசுகள், மாணவர் பட்டியல், மீட்டிங் பட்டியல் அனைத்தையும் தாறுமாறாகக் குத்தி வைத்திருந்தார். மொத்தத்தில் தன் அம்மாவை உள்ளே அனுமதிக்காத பதின்ம வயது மாணவனின் அறை போல இருந்தது.
விரிவுரையாளர்கள் அனைவரும் பாதிப் பைத்தியங்கள் என மாணவர்கள் கிசுகிசுத்துக் கொள்வது உண்மைதான் போலும் என நினைத்துக் கொண்டாள். தனக்கு இரண்டு மணி நேரம் கொடுத்தால் இந்த அறையை ஒழுங்கு படுத்தி பளிச்சென்று ஆக்க முடியும் என நினைத்துக் கொண்டாள்.
டாக்டர் தாஜூடின் தான் எழுதியதைப் படித்தார். சில திருத்தங்கள் செய்தார். கம்ப்யூட்ர் மௌசை உருட்டி அம்புக் கர்சரை “சென்ட்” (அனுப்பு) என்ற கட்டளைக்குக் கொண்டு வந்து கிளிக் செய்தார். திரையில் நீலப் பட்டை ஒன்று தோன்றி “அனுப்ப வேண்டிய செய்தி ஒன்று” என்று காட்டியது. அதன் கீழ் வெள்ளைப் பட்டை ஒன்று தோன்றி அதில் நீல நிறம் ஓடி நிறைந்தவுடன் அந்தப் பட்டைகள் முழுதாக மறைந்தன. மின்னஞ்சல் அது போக வேண்டிய அமெரிக்காவுக்கோ ஆஸ்த்திரேலியாவுக்கோ பயணப்பட்டது. சொல்ல முடியாது. பக்கத்து அறையில் உள்ள அவருடைய சக விரிவுரையாளருக்காகவும் இருக்கலாம். கணினிக்கு எல்லாத் தூரமும் ஒன்றுதான்.
தாஜுடின் தனது ஓடும் சுழல் நாற்காலியையே வாகனமாக்கிக் கொண்டு கணினி மேஜைக்கு முன்னிருந்து தன் எழுத்து மேசைக்கு வந்தார். “எஸ் அகிலா! நான் என்ன செய்யலாம் உனக்கு?” என்று கேட்டார்.
“தொந்திரவு கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் டாக்டர். இந்தப் புத்தகப் பட்டியலில் உள்ள நான்கு புத்தகங்களை நூல் நிலைய கேட்டலாக்கில் கண்டு பிடிக்க முடியவில்லை!” என்றாள்.
“ஏன் முடியவில்லை? கிரிசாலிஸ் பயன் படுத்தத் தெரியுமா உனக்கு?”
“தெரியும். நானும் மற்ற பல மாணவர்களும் தேடியும் கிடைக்கவில்லை!”
பட்டியலை வாங்கிப் பார்த்தார். கிடைக்காத புத்தகங்களை அவள் கோடிட்டு வைத்திருந்தாள்.
“ஓல்ரைட், ஓல்ரைட்! இந்த நான்கும் புதிய புத்ததகங்கள். இந்த மாதம்தான் வந்து சேர்ந்தன. லைப்ரரி இன்னும் அதை கேட்டலோக் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். நல்ல வேளை எனக்குத் தெரியப் படுத்தினீர்கள். இந்தப் புத்தகங்களை “சிறப்புச் சேமிப்பு” பகுதியில் வைக்க ஏற்பாடு பண்ணுகிறேன். நீங்கள் உடனடியாக கடன் வாங்க முடியாவிட்டாலும் நூல் நிலையத்துக்கு உள்ளேயை வைத்துப் படிக்கலாம். லைப்பரரிக்கு நான் மெமோ அனுப்புகிறேன்” என்றார்.
“நன்றி டாக்டர்!” என்றாள் அகிலா.
“ஓக்கே. விரிவுரையெல்லாம் விளங்குகிறதா?” என்று கேட்டார்.
“விளங்குகிறது. கம்ப்யூட்டர் கலைச் சொற்கள் பஹாசாவில் நீங்கள் சொல்லுவது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. புத்தகங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார்கள்!”
“அடுத்தவாரம் ஆங்கிலம் – பஹாசா மொழிபெயர்ப்பு அட்டவணை கொடுக்கிறேன். அப்புறம் குழப்பம் இருக்காது!” என்றார்.
அவருடைய டெலிபோன் அடித்தது. அதன் மேல் கை வைத்தவாறு “வேறு என்ன அகிலா?” என்றார். “எனக்கு வேலை இருக்கிறது. கிளம்பு!” என்று அதற்கு அர்த்தம் என அகிலா தெரிந்து கொண்டாள்.
“ஒன்றும் இல்லை டாக்டர். நன்றி!” என்று எழுந்தாள். அவள் வெளியே வந்த போது அவர் டெலிபோனுக்குள் “ஹலோ” சொல்லிக் கொண்டிருந்தார்,
ஒரு விரிவுரையாளரை அவருடைய அறைக்குள் சென்று பார்த்த அனுபவம் அவ்வளவு மோசமாக இல்லை என மகிழ்ந்தவாறு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கணினித் துறை வளாகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. அந்தப்பகுதியில்தான் தேசா இன்டா விடுதியும் தேசா கெம்பாரா விடுதியும் அமைந்திருந்தன. இந்த விடுதிகள் அனைத்துமே விரிவுரை மண்டபங்களிலிருந்து மிக தூரத்தில் இருந்தன. வாகனங்கள் இல்லாமல் நடையை மட்டும் நம்பியிருப்பவர்களுக்கு மிகச் சிரமம்தான்.
பல்கலைக் கழகத்தின் மேற்கு வாயில் நோக்கிப் போகும் ஜாலான் யுனிவர்சிட்டியில் ஓரத்தில் வாகனப் போக்குவரத்தின் மிரட்டல்கள் இல்லாமல் நடக்க கற்களால் நடைபாதை போட்டிருந்தார்கள். அதில் ஏறி நடந்தாள் அகிலா. மத்தியான வெயில் சாலையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு புதன் கிழமை. இந்த இரண்டாம் வாரத்தில் புதன்கிழமை அகிலாவுக்கு விரிவுரைகள் ஒன்றும் இல்லை. அடுத்த வாரம் டியோடிரியல் ஆரம்பிக்கும். ஆனால் இந்த முதல் வாரம் ஒருநாள் ஓய்வுதான்.
அவளுடைய தேசா கெமிலாங் அத்தனை தூரமில்லை. வேப்ப மர நிழல்களுக்கிடையில் நடந்தாள். முனை வளைந்ததும் இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட பழைய ஆயுத சேமிப்புக் கிடங்கைத் தாண்ட வேண்டியிருந்து. இரண்டு சுரங்கங்கள் தோண்டி சிமெண்டினால் பலப்படுத்தப்பட்ட அமைப்புகள். சில ஆண்டுகளுக்கு முன் கூட இங்கிருந்து போர்க்கால குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன என்பதை அகிலா பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். அவற்றைக் கடக்கும் போது கொஞ்சம் அச்சமாக இருந்தது.
இந்த வளாகம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தினரின் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருந்தன. அவற்றின் உட்புறத்தை புதுமைப் படுத்தியிருந்தாலும் அவற்றின் முகப்புக்களை அப்படியே விட்டிருந்தார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் காலாற நடக்கும் இந்த வளாகத்தில் ஒரு காலத்தில் ராணுவத்தினரின் பூட்ஸ் ஒலியும் “லெ·ப்ட் ரைட், லெ·ப்ட் ரைட், அபவுட் டெர்ன்” என்ற கட்டளைகளும் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டிருக்கும் என்று அகிலா நினைத்துப் பார்த்தாள். மலேசியா சுதந்திரம் பெற்ற சிலகாலத்தில் ஒரு ரிங்கிட் அடையாள விலையில் இந்த போர்த்தளம் கல்வித்தளமாக மாறிவிட்டது.
அந்தப் பல்கலைக் கழக வளாகத்தின் பரப்பு எவ்வளவு பெரியது என்பதை இந்த இரண்டாவது வாரத்தில் அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். கணினி விரிவுரை முடிந்து கணக்கு விரிவுரைக்கு வேறு மண்டபத்துக்கு நடப்பதற்குள் நேரமாகிவிடுகிறது. நேரமாகிவிட்டால் உட்கார இடம் கிடைப்பது கஷ்டம். அடுத்தடுத்த வாரத்தில் வீட்டிற்குப் போகும்போது அப்பாவிடம் பேசி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று பார்க்க வேண்டும். இது ஒரு வசதி. அகிலாவின் வீடு பக்கத்தில் அலோர் ஸ்டாரில் இருந்ததனால் நினைத்த நேரம் அவள் பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடலாம். இரண்டு இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம். இந்த ரேகிங் விவகாரம் விசாரிக்கப்பட்டு முடித்த பின் கண்டிப்பாக வீட்டுக்குப் போக முடிவு செய்திருந்தாள்.
வந்து இரண்டு வாரங்களே ஆனாலும் வீட்டின் நினைவு பிய்த்துத் தின்றது. அவளுடைய, அவளுக்கே சொந்தமான அந்தக் குட்டி அறை. அதன் படுக்கை, தலையணையின் வாசம், அம்மாவின் சமையல், தம்பியின் சேஷ்டைகள் அனைத்தும் நினைத்து ஏங்க வைத்தன. விடுதியிலுள்ள பொதுத் தொலைபேசியில் இதுவரை மூன்று நான்கு முறை வீட்டுக்குப் பேசிவிட்டாள்.
வளாகத்தில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்கள். சிலர் கார்களும் வைத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அப்பா முடியாது என்று சொல்ல மாட்டார். ஆனால் பணத்துக்குத்தான் சிரமப்படுவார். அப்பா வீடு வாங்கிப் போட்டிருந்தார். அதற்குத் தவணை ப்பணம் கட்டி வந்தார். தம்முடைய பதினான்கு வருடத்திய டாட்சன் காரை விற்று அண்மையில்தான் 30 ஆயிரம் கொடுத்து ஒரு இரண்டாண்டுகள் பயன்படுத்திய புரோட்டோன் சாகா வாங்கினார். அதற்கும் பணம் கட்டி வந்தார். தம்பியைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தங்கை – அகிலாவின் அத்தை – பிள்ளைகள் இருவருக்கு படிக்க உதவிகள் செய்து வந்தார். அகிலாவுக்குப் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்ததும் அவளுக்கு வேண்டிய எல்லா கட்டணங்களையும் கொடுத்தார். கைச்செலவுக்கும் பணம் கொடுத்தார். போதுமா இன்னும் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.
அகிலாவுக்கு எல்லாம் தெரியும். அப்பாவின் நல்ல மனமும் இரக்க சுபாவமும் குடும்பத்தின் மீது உள்ள அன்பும் நன்கு தெரியும். ஆகவே மோட்டார் சைக்கிள் பேச்சை எடுத்தால் சரி என்றுதான் சொல்லுவார். அப்புறம் பணம் திரட்டக் கஷ்டப்படுவார். தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்.
அகிலா அந்த வாரம் பல்கலைக் கழக உபகாரச் சம்பளங்கள், கடன் உதவி ஆகியவற்றுக்கான மனு பாரங்களை வாங்கி வைத்திருந்தாள். கெடா மாநில உபகாரச் சம்பள பாரமும் கொடுத்திருந்தார்கள். அப்பாவும் கெடா மாநில மஇகா பிரமுகர்களிடம் பேசி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இவற்றில் ஏதாவது ஒரு உபகாரச் சம்பளம் அல்லது கடன் கிடைத்தால் அப்பாவின் சுமையைக் குறைக்கலாம்.
முதல் வாரத்தில் ரேகிங்கினால் பட்ட மனத்துன்பங்கள் ஆறியிருந்தன. ஆனால் இந்த வெள்ளிக் கிழமை மாணவர் விவகாரப் பிரிவில் விசாரணை இருக்கிறது. அவளுக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் வந்திருந்தது. கணேசன், ஜெசிக்காவுக்கும் கடிதம் வந்திருந்தது. அவள் பாதிக்கப்பட்டவள் என்றாலும் விசாரணைக்குப் போவதற்கு ஒரு குற்றவாளியைப் போல் பயந்தாள். இந்த விசாரணை எப்படித் திரும்பும் என்று சொல்வதற்கில்லை என்று கணேசன் கூறியிருந்தான்.
எப்படியிருந்தாலும் விசாரணை யாராவது ஒருவருக்குப் பாதகமாகத்தான் முடியப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. ராஜன் தண்டிக்கப் படுவான். அவன் நண்பர்கள் தண்டிக்கப் படுவார்கள். ஆனால் ராஜனின் பொய்யும் பரசுராமனின் நடிப்பும் நிலைபெற்றால் கணேசன் தண்டிக்கப் படலாம். அங்கே நியாயம் தோற்கும். ஏமாற்று வெல்லும். எப்படியிருந்தாலும் யுஎஸ்எம் இந்திய மாணவர்களுக்கு அது பெரிய அவமானம் என்றுதான் தோன்றியது.
அவள் தேசா கெமிலாங்கை அடைந்து உள்ளே நுழைந்த போது இந்த எண்ணம்தான் அவளுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
***
——————————————————————————–
7
எட்டே முக்கால் மணிக்கு ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டத்தின் முன்னால் அகிலா வந்து இறங்கியபோது கணேசன் ஏற்கனவே அங்கு காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தவாறே அவர்களிடம் சென்றான்.
விசாரணை ஒன்பது மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ராஜன், மனோகரன், வின்சன்ட் ஆகியோர் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு இன்னொரு இடத்தில் நின்றார்கள். கணேசனைப் பார்த்து கேலிச் சிரிப்புகளும் கெக்களிப்புக்களும் எழுந்தன. இந்த இரண்டு மூன்று வாரங்களில் அந்தக் கூட்டம் பரசுராமனை விட்டு அகலவில்லை. பரசுராமன் தனது உரிமைப் பதிவான கோணல் சிரிப்புடன் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்.
அகிலா மனப்படபடப்புடன் கணேசனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெசிக்கா வழக்கம் போல் “ஹை கணேஷ்” என்று பிரகாசமான குரலில் கூவினாள்.
“ரெடியா இருக்கிங்களா அகிலா?” என்று கேட்டான் கணேஷ்.
“ரெடிதான். ஆனால் பயமா இருக்கு!”
“இவள் ரொம்பவும் பயப்படுகிறாள் கணேஷ். உண்மையைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்?” என்றாள் ஜெசிக்கா.
“உண்மையைச் சொல்ல பயப்படவில்லை. விசாரணை என்றாலே ஏதோ கோர்ட்டுக்குப் போவது போல நடுக்கம் வருகிறது”
“அந்த பயமே வேண்டாம். இந்த அதிகாரிகளை நிமிர்ந்து பார். உரக்கப் பேசு!” என்று தைரியமூட்டினாள் ஜெசிக்கா.
“ஆமாம் அகிலா. நாம் மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் என்ன இருக்கிறது. தைரியமாகப் பேசுங்கள்!” என்றான் கணேசன். அகிலா பலவீனமாகத் தலையாட்டினாள்.
ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் மாணவர் பிரிவு உதவிப் பதிவதிகாரி முத்துராமன் வந்து எல்லாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்தார். பொதுவாகப் பேசினார்.
“முதலில் முறையீடு செய்த பரசுராமனையும் அவரது சாட்சிகளையும் உள்ளே கூப்பிட்டு விசாரிப்போம். அது முடிந்ததும் கணேசனையும் அவருடைய சாட்சிகளையும் கூப்பிடுவேன். தயாராக இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றார்.
கொஞ்ச நேரத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவர் ரிட்வான் வந்தார். “பல்கலைக் கழகத்தின் பேரைப் பாழ்படுத்துகிறீர்களே!” என்பதைப் போல் எல்லாரையும் ஒரு கடுமையான குற்றவாளிப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் பேராசிரியர் முருகேசு காரில் வந்து காரை நிறுத்திவிட்டு ஒரு கோப்புடன் இறங்கினார். விசாரணைக் குழுவில் அவர் இருக்கிறார் என்று தெரிந்த போது கணேசனுக்குத் தைரியமாக இருந்தது. ஆனால் அவர் முன்பு பேசியிருப்பது அவன் நினைவுக்கு வந்து அவனைப் பயமுறுத்தியது. “ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”
அகிலா அறிமுக வாரத்தில் இந்து மாணவர்களுக்கான சமய விளக்கக் கூட்டத்தில் அவர் பேசக் கேட்டிருக்கிறாள். அவர் தன் அப்பாவுக்கு அறிமுகமானவர் என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் அவரைப் பார்த்து புன்னகைத்தனர். ஜெசிக்கா “ஹலோ புரொ·பெசர்!” என்று தனது இயற்கையான உச்சக் குரலில் கத்தினாள். சரித்திர இயலில் அவருடைய பாடம் ஒன்றை ஜெசிக்கா எடுத்திருக்கிறாள். ஆகவே அவரைத் தெரியும்.
“ஜெசிக்கா! உனக்கென்ன வேலை இங்கே?” என்று கேட்டார் முருகேசு.
“நான் கணேசன் சார்பில் முக்கிய சாட்சி!” என்றாள் ஜெசிக்கா.
“அப்படியா! சரி. குட் லக்!” என்று ராஜன் பக்கமாகவும் திரும்பி ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு உள்ளே நடந்தார்.
ஒன்பது மணிக்கு சரியாக முத்துராமன் கூப்பிட பரசுராமன், ராஜன் குழு கூட்டமாக உள்ளே சென்றது. கதவு அடைக்கப் பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கணேசன், அகிலா, ஜெசிக்கா தணலில் இருப்பது போல் இருந்தார்கள்.
“அன்றைக்கு அந்தக் கூட்டத்தில நடந்த உண்மைகளை நமக்காகப் பேச சாட்சிகள் இல்லை அகிலா. இருந்தவங்க அத்தனை பேரும் அவங்க ஆளுங்க. ஆகவே நீங்களும் நானுந்தான் உறுதியாகப் பேசணும்!” என்றான் கணேசன்.
“ஜெசிக்கா இருக்காங்களே!”
“ஜெசிக்கா நேரடியான சாட்சி இல்ல. நடந்தத உங்க வாயால கேட்ட வெளி சாட்சிதான். ஆகவே அவ்வளவு பலமா இருக்காது.!”
அகிலாவுக்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது.
9.20க்கு முத்துராமன் கதவைத் திறந்து வெளியே வந்து “வாங்க!” என்றார்.
உள்ளே நுழைந்தார்கள். முட்டை வடிவ மேசையில் விசாரணை அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவே மாணவர்கள் விவகாரப் பிரிவின் உதவித் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ சலீம் தலைவராக இருந்தார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் மென்மையாகப் பேசி இனிமையாகப் பழகும் மனிதர். கணேசனை அவருக்குத் தெரியும் அவருக்கு இடது பக்கத்தில் ரித்வான். வலது பக்கத்தில் பேராசிரியர் முருகேசு. கொஞ்சம் தள்ளி உதவிப் பதிவதிகாரி முத்துராமன்.
பரசுராமன், ராஜன் குழுவினர் எதிர்ப்பக்கத்தில் கூட்டாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடனான விசாரணை முடிந்து விட்டதற்கான ஆறுதல் அவர்கள் முகங்களில் தெரிந்தது.
டத்தோ சலீம் மிருதுவான மலாயில் பேசினார். “கணேசன். இது விசாரணைக் குழு. இந்தக் குழுவில் இந்திய மாணவர் பண்பாட்டுச் சங்கத்தின் ஆலோசகர் என்ற முறையில் பேராசிரியர் முருகேசுவையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது தெரியும் அல்லவா? பரசுராமன் என்ற இந்தப் புதிய மாணவனை நீங்கள் ரேக் பண்ணியதாகவும், கன்னத்தில் அறைந்து தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அந்தச் சம்பவம் நடந்தபோது உடனிருந்ததாக ராஜன், மனோகரன், வின்சன்ட் சாட்சியம் கூறியிருக்கிறார்கள். ரேகிங்கைப் பல்கலைக் கழகம் தடைசெய்திருப்பதுடன் ரேகிங் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்திருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
கணேசன் முதலில் பரசுராமனைப் பார்த்தான். அவன் கோணல் சிரிப்பு மறைந்து அவன் முகத்தில் கொஞ்சம் பயம் படர்ந்திருந்தது.
“டத்தோ. நடந்த சம்பவத்தை இவர்கள் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை அகிலா என்ற இந்த முதலாண்டு மாணவியின் விளக்கத்திலும் நான் எழுதிக் கொடுத்துள்ள முறையீட்டிலுமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரேகிங் செய்தது ராஜன், மனோகரன், வின்சன்ட் குழுவும் அவர்கள் நண்பர்களும்தான். ரேகிங்கிற்கு உட்படுத்தப் பட்டவர்கள் பரசுராமனும் அகிலாவும். நான் தற்செயலாக அங்கு போக நேர்ந்தது. இந்தப் பரசுராமன் அகிலாவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பெண் பயந்து ஒடுங்கியிருந்தார். இவரைக் காப்பாற்றவே நான் பரசுராமனை அறைந்து தள்ளி இவரை விடுவித்து வந்தேன்! ரேகிங்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!” அதோடு நிறுத்தினான். இப்போது அதிகம் பேசவேண்டாம் என முடிவு செய்து கொண்டான்.
டத்தோ அகிலாவைப் பார்த்தார். “அகிலா! நீ என்ன சொல்கிறாய்?”
அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டை வரண்டு போனது. “அவர் சொல்வதுதான் உண்மை டத்தோ, அப்படித்தான் நடந்தது!” என்று அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.
“இது உண்மையாக இருந்தால் இந்தச் சம்பவம் பற்றி நீ ஏன் முதலில் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு முறையீடு செய்யவில்லை. இதுபற்றி அறிமுக வாரத்தில் படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறோமே!”
ஆமாம். படித்துப்படித்துச் சொன்னார்கள். பயம். கூச்சம். தப்பித்ததே போதும், இந்த சனியன்களிடம் இன்னமும் விகாரம் வேண்டாம் என்று பயந்து ஓடும் புத்தி. விசாரணை வழக்குகள் என்ற தொல்லைகளைத் தவிர்த்தல். “சும்மா வேடிக்கையா விளையாண்ட நம்ம இந்தியப் பசங்களப் போய் காட்டிக் குடுத்திட்டியே!” என்று மற்ற இந்திய மாணவர்கள் சொல்வார்கள் என்ற அச்சம். இதில் எந்தக் காரணத்தைச் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள்?
“எனக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது டத்தோ!”
“அப்புறம் மறுநாள் காலந் தாழ்த்தி சொல்வதற்கு எப்படி தைரியம் வந்தது?”
“கணேசன் மேல் பழி வந்தது என்று கேள்விப் பட்டவுடன் உண்மையைச் சொல்ல முன் வந்தேன்!”
“அப்படியானால் கணேசனைக் காப்பாற்றத்தான் இப்படிச் செய்தாயா?”
திகைத்தாள். இந்தக் கேள்விக்கு ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அது தவறாகப் போய்விடக் கூடும் என அவளுக்குப் பட்டது. ஆனால் உண்மையைச் சொல்லுவதைத் தவிர வேறு யுத்திகளைப் பற்ற யோசிக்க வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள். “உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்று ஜெசிக்கா அன்று சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
“ஆம் டத்தோ! உண்மையைச் சொன்னால் அவர் மீதுள்ள குற்றம் நீங்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்!”
“அப்படிச் சொல்ல உன்னை யாராவது வலியுறுத்தினார்களா?”
கேள்வியின் தொனி நன்றாக இல்லை. ஜெசிக்காவைத் திரும்பிப் பார்த்தாள். ஜெசிக்காவின் சிரித்த முகத்தில் கூடக் கொஞ்சம் கலவரம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்.
“ஜெசிக்கா என் ரூம் மேட். அவர் மூலமாகத்தான் கணேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டேன். அவர் கூறிய ஆலோசனைதான். ஆனால் அவர் வலியுறுத்தியிராவிட்டாலும் செய்தி தெரிந்தவுடன் நானாக முன் வந்திருப்பேன்! ஏனென்றால் ரேகிங்கிலிருந்து அவர் என்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றி உணர்ச்சி இருக்கிறது” குரலில் தைரியம் ஏறிக் கொண்டிருந்தது. நான் ஏன் குற்றவாளி போலப் பயந்து பேச வேண்டும் என்ற கோபம் வந்தது.
டத்தோ சலீம் ஜெசிக்காவைப் பார்த்தார். “ஜெசிக்கா. உனக்கு கணேசனைத் தெரியுமா?”
“நன்கு தெரியும். நண்பர். சில பாடங்கள் ஒன்றாக எடுக்கிறோம்!” ஜெசிக்கா தெளிவாகச் சொன்னாள்.
“கணேசன் உன் நண்பர் என்பதால் அவர் மீதுள்ள குற்றத்தைத் தவிர்ப்பதற்காக நீங்கள் மூவரும் சேர்ந்து இந்தப் பொய்யை ஜோடித்திருப்பதாக ராஜன் என்ற இந்த மாணவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”
ஜெசிக்கா அதிர்ச்சியடைந்திருந்தாள். கணேசனும் விதிர்த்திருந்தான். அகிலாவின் முகம் இரத்தக் களையிழந்தது.
“இல்லை இது பொய் டத்தோ. நாங்கள் மூவரும் நடந்ததைத்தான் பேசுகிறோம்!”
“ஆனால் ரேகிங் போது நடந்தது என்ன என உனக்குத் தெரிய வாய்ப்பில்லையே?”
“ரேகிங் நடந்து அதிலிருந்து மீண்டு அகிலா அறைக்குத் திரும்பியதும் படுக்கையில் படுத்து விம்மி அழுதார். நான் கேட்டவுடன் நடந்ததைச் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் அவர் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அதை நான் நம்பினேன். அதைத்தான் உங்களிடம் சொல்லுகிறேன்!”
பேராசிரியர் முருகேசு தொண்டையைக் கனைத்தார். “டத்தோ! நான் இந்த பரசுராமனை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்!” என்றார்.
“கேளுங்கள்” என்றார் டத்தோ சலீம்.
அவர் பரசுராமனைப் பார்த்துக் கேட்டார். “ரேகிங் ஒன்றும் நடக்கவில்லை. சும்மா பேசிக்கொண்டுதான் இருந்தோம் என்று முறையீட்டில் எழுதியிருக்கிறாய். கணேசன் வந்துதான் ரேகிங் ஆரம்பித்தார் என்றும் நீ அவர் சொல்லியதைச் செய்ய மறுத்ததால் அறைந்து தள்ளியதாகவும் சொல்லியிருக்கிறாய். அந்த இடத்தில் அகிலா என்ற பெண் இருந்தாரா? அதைப்பற்றி உன் முறையீட்டில் ஒன்றும் இல்லையே?”
பரசுராமன் கொஞ்சம் பரக்கப் பரக்க விழித்தான். “அங்கே பலபேர் கூட்டமாக இருந்தார்கள். யார் யார் என எனக்குத் தெரியாது. எல்லார் பெயரையும் நான் ரிப்போர்ட்டில் எழுதவில்லை. இந்தப் பெண் இருந்தாரா என்றும் தெரியாது. இருந்திருந்தாலும் நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்”
“அப்படியானால் இந்தப் பெண் சொன்ன எதுவும் அங்கு நடக்கவில்லை. இவரை நீ முத்தமிட முயன்றதாக அவர் சொல்லியிருப்பது கணேசன் சொல்லியிருப்பது பொய். அப்படித்தானே?”
பரசுராமன் மேலும் கீழும் பார்த்தான். “அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது எனக்கு முற்றாக நினைவில்லை. கணேசன் வந்து என்னை அடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைத்தான் எழுதினேன்!”
“அப்படியானால் இந்தப் பெண்ணை முத்தமிடு என்று யாரும் உனக்குச் சொல்லவுமில்லை, நீ அப்படிச் செய்யவுமில்லை!”
ஒரு நிமிடம் தயங்கி ராஜாவைப் பார்த்துவிட்டு பலவீனமான குரலில் சொன்னான்: “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!”
“அப்படியானால் இந்தப் பெண் உன்மீது பொய்க்குற்றச் சாட்டு சுமத்துகிறாரா?”
பரசுராமன் மேலும் மிரண்டான். “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!” என்றான்.
ராஜன் முந்திக் கொண்டு சொன்னான்: “டத்தோ! அங்கு நடந்ததைக் கண்ணால் பார்த்தவர்கள் நாங்கள். ஏன் நாங்கள் சொல்வதை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்?”
டத்தோ சலீம் சொன்னார்: “இங்கே நடப்பது விசாரணைதான். உண்மையை வெளிக் கொணர்வதே எங்கள் வேலை. சந்தேகம் எல்லார் மீதும் உண்டு. ஆகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி உதவி செய்யுங்கள்!” என்றார்.
இன்னும் சில கேள்விகள் கேட்டார்கள். ஆனால் புதிய விவரங்கள் ஏதும் வரவில்லை.
இறுதியாக டத்தோ சொன்னார். “சரி எல்லோரும் வெளியில் சென்று காத்திருங்கள்! நாங்கள் கலந்து பேசி எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்!”
கணேசனும் மற்றவர்களும் எழுந்து வெளியே வந்தார்கள். கட்டடத்தை விட்டு வெளியேறி மர நிழலுக்கு வந்தார்கள். கணேசன் அங்குள்ள பானம் வழங்கும் இயந்திரத்தில் காசு போட்டு அவர்கள் மூவருக்கும் டின் பானங்கள் வாங்கி வந்தான். வறண்ட தொண்டைகளை நனைத்துக் கொண்டார்கள்.
ஒரு மிணறு கொக்கோ கோலா பருகிவிட்டு ஜெசிக்கா சொன்னாள்: “நாம் சொல்லியதை அவர்கள் நம்பவில்லை என்றுதான் தெரிகிறது கணேசன்!”
கணேசன் பேசாமல் இருந்தான். அகிலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. “சேச்சே! அழாதிங்க அகிலா!” என்றான்.
“இல்லை கணேஷ். இது என்னுடைய குற்றம்தான். நான் உடனே ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும். அவர்கள் முந்திக் கொண்டதால் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்து குற்றவாளி ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது தண்டனை என்றால் எனக்குப் பொறுக்காது” என்றாள்.
“சேச்சே! அப்படியெல்லாம் நடக்காது!” என்றான் கணேசன். ஆனால் அப்படியும் நடக்கலாம் என உள்மனம் சொல்லிற்று. அவனுடைய எதிர்காலத்தில் திக்கென இருள் கவிந்து நின்றது.
ஓர் இருபது நிமிடம் அவர்கள் நிம்மதி கொள்ளாமல் தங்கள் பயங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். வெறும் பேச்சுக்கள் பேசினார்கள். அதே போல இன்னொரு மூலையில் ராஜனும் அவன் தோழர்களும் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு நின்றும் நடந்தும் அலைந்தார்கள்.
முத்துராமன் கதவு திறந்து வந்து அழைத்தார். அனைவரும் உள்ளே போனார்கள். மனப் படபடப்புடன் உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.
டத்தோ அவர்களைத் தீர்க்கமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். “இந்த இடத்தில் எல்லாரும் உண்மை பேசவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் உங்கள் முறையீடுகளில் உள்ள முற்றிலும் முரண்பாடான தகவல்களைப் பார்க்கும் போது யாரோ ஒரு தரப்பினர் பொய் பேசுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.”
சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார். அனைவரையும் இன்னொரு சுற்றுப் பார்த்தார். அந்த மௌனம் கனத்தது.
“இப்போது ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன். பொய் சொல்லியவர் உண்மையை ஒப்புக்கொள்ள விருப்பமா?”
“நான் பொய் சொல்வில்லை!” என உரக்கக் கூவவேண்டும் என கணேசனுக்குத் தோன்றியது. ஆனால் அதனால் பயன் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்தது. பரசுராமன் தலை கவிழ்ந்திருந்தான். ராஜன் முகத்தை மரம் போல வைத்துக் கொண்டிருந்தான்.
“சரி. நீங்கள் யாரும் சொல்லத் தயாராக இல்லை. இந்த விசாரணையில் நிருபிக்கப்படும் ஒரே உண்மை கணேசன் பரசுராமனை அடித்தார், தள்ளினார் என்பது. அதை கணேசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் கூறும் காரணங்கள் வேறாக இருக்கின்றன. இது ரேகிங் என்று எடுத்துக் கொண்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். ஆகவே ரேகிங் குற்றச்சாட்டை நிராகரிப்பது என குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் பரசுராமனைத் தாக்கியதற்காக கணேசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு 100 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறோம்!”
அகிலா விம்மும் சப்தம் கேட்டது. பரசுராமன் உம்மென்று இருந்தான். ராஜனும் வின்செண்டும் சிரித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
கணேசனின் மனது இருண்டு போனது. நீதி தேவதைக்குக் கண்ணில்லை என்பது உண்மைதானோ? எப்படி நான் இந்த நிலைக்கு ஆளானேன்? என்ன தவறு செய்தேன்? இந்தக் கழிவிரக்கக் கேள்விகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.
“என்ன சொல்கிறாய் கணேசன்?” டத்தோ கேட்டார்.
என்ன சொல்வது? மேலும் மறுத்து மேலும் தண்டனைக்கும் சிக்கலுக்கும் உள்ளாவதா? அது விவேகமாகாது எனப்பட்டது. ஆனால்… ஆனால் இந்த விஷயம் இதனோடு முடிந்து விட்டதா?
“டத்தோ. உங்கள் தீர்ப்பை நான் மறுப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் இந்த விஷயம் இதனோடு முடியவில்லையே. இந்தச் சம்பவம் நடந்த பிறகு ராஜனும் அவன் நண்பர்களும் வெளியிலிருந்து குண்டர் கும்பல்காரர்களை அழைத்து வந்து என் விடுதிக்கே வந்து என்னை மிரட்டினார்கள். அது பற்றி நான் முறையீடு செய்திருக்கிறேன். அதை விசாரித்தால்தானே இந்த விவகாரம் முடியும்?” என்றான்.
டத்தோ சலீம் கொஞ்சம் திகைத்து ரித்வானைப் பார்த்தார். பேராசிரியர் முருகேசுவும் ரித்வானைப் பார்த்தார். “இது உண்மையா ரித்வான். நீங்கள் இதை என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லையே!” என்றார்.
ரித்வான் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ. இப்படி ஒரு முறையீடு கணேசன் செய்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து இந்தப் பரசுராமனின் முறையீட்டுக்குப் பிறகுதான் செய்யப் பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து விட்டோம்!”
“ஏன்?”
“இரண்டு காரணங்கள் டத்தோ. ஒன்று இதற்கும் சாட்சிகள் யாரும் இல்லை. கணேசனின் வார்த்தை ஒன்றுதான். ராஜனை விசாரித்த போது இது உண்மையில்லை என மறுத்துவிட்டார். கணேசன் தன் முதல் குற்றத்தை மறைப்பதற்காக ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களை அடுக்குவது போலத்தான் தெரிகிறது. இரண்டாவது இந்தக் குற்றச் சாட்டு மிகக் கடுமையானது. ரேகிங் குற்றச்சாட்டுப் போல இதுவும் பொய்யாய்ப் போனால் கணேசனுக்கு அது நல்லதல்ல. கணேசனை எனக்குத் தெரியும் நல்ல மாணவர். அவரைக் காப்பாற்றத்தான் நான் இதை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை!”
கணேசனுக்குத் தலை சுற்றியது. நாற்காலியின் பிடிகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களா? நானா? எப்படி நான் செய்வது சொல்லுவதெல்லாம் இப்படித் தலை கீழாகப் போகின்றது?
“ம்… எப்படி கணேசன்?” டத்தோ கேட்டார்.
சேற்றில் முழுகிக் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் நிர்வாணமாகி அவமானப்பட்டு முழுக மாட்டேன். என் எதிரிகள் தற்காலிக பலம் பெற்றிருக்கிறார்கள். காற்று அவர்கள் பக்கம் வீசுகிறது. ஆனால் நான் நேர்மையானவன். வளைய வேண்டிய அவசியம் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்டதும் பலம் வந்தது.
“டத்தோ. நான் மேலும் மேலும் பொய்ப்பட்டம் கட்டிக் கொள்ள விரும்பவில்லை. இது நடந்தது உண்மை. ஆகவே அதை நீங்கள் விசாரிக்கத்தான் வேண்டும். உங்கள் இறுதித் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்!”
“முழுகி விடுவாய்! மூச்சுத் திணறி விடுவாய்! இந்த மரணச் சேறு உன்னை விழுங்கிவிடும்” என உள் மனம் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. பரவாயில்லை. உண்மை என்னைக் கொல்லுமானால் அப்படியே ஆகட்டும் என்று உறுதியாக இருந்தான்.
பேராசிரியர் பேசினார்: “சே ரித்வான். இந்த கணேசனின் முறையீடு மீது ஏதாவது விசாரணை நடத்தினீர்களா?”
“குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜனை அழைத்து விசாரித்தேன். இல்லை என்று சொன்னார். அதோடு கோப்பை மூடிவிட்டேன்!”
“விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததா என்று கண்டறிய முயன்றீர்களா?”
“பார்த்தவர்கள் யாரும் இல்லை. யாரை விசாரிப்பது?”
கணேசன் சொன்னான்: “சே ரித்வான். அன்றிரவில் விடுதியின் வரவேற்பறையில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் ஓடிக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்பதை ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்!”
ரித்வான் கோபப் பட்டவர் போல இருந்தார். “ஆள் இருந்ததா இல்லையா என்பதே தெரியாது என்கிறாய். டெலிவிஷன் யாரும் இல்லாமலே கூட ஓடிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? யாராவது அடைக்க மறந்து போயிருக்கலாமல்லவா?”
டத்தோ சலீம் குறுக்கிட்டார். “ரித்வான். இது கடுமையான குற்றச் சாட்டாக இருக்கிறது. கணேசன் இதில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் தயவு செய்து விசாரித்து எனக்கு ஒரு அறிக்கை தயார் படுத்துங்கள்”
டத்தோ கணேசனைப் பார்த்தார். “கணேசன். நீ விரும்பியபடி செய்துவிட்டேன். இரண்டாவது குற்றச் சாட்டு நிருபணமாகும் வரையில் இந்த முதல் குற்றச்சாட்டுக்கான தண்டனையை நான் தள்ளி வைக்கிறேன். ஆனால் இந்த இரண்டாம் குற்றச்சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் உன் தண்டனை இன்னும் கடுமையாகக் கூடும். சம்மதமா?” என்றார்.
மரணச் சேறு மேலும் என்னை அழுத்துகிறது. இதில் மூச்சு முட்டச் சாக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படியே நடக்கட்டும்.
“சம்மதம் டத்தோ!” என்றான்.
“சரி. அடுத்த விசாரணைக்கு விரைவில் நாள் குறிக்கிறேன். அனைவருக்கும் நன்றி!” எழுந்து தன் சகாக்களுடன் கைகுலுக்கிவிட்டு அவர் தன் அலுவலகத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் எழுந்தார்கள்.
அகிலா தன் வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
***
——————————————————————————–

        காதல் என்பது உன்னதமான பொருள்.காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது — அதாவது தானே தனக்குத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது — ஒரு தவறு என்று கருதப்பட்டது. அவள் பெற்றோர்கள் சொற்படி அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடவனை மணப்பது என்பதுதான் அவளுக்குள்ள கடமை எனக் கருதப்பட்டது.

 

        ஆரியர்கள் பெண்ணுரிமையை அடக்கி வைத்த காலத்திலிருந்தே இது ஆரம்பித்திருக்கலாம்.இன்று நாம் அறிவொளி பெற்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்குக் கல்வி பெருகிவிட்டது. பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை விட (அறிவிலும் அனுபவத்தாலும் இல்லாவிட்டாலும்) கல்வியில் உயர்ந்தவர்களாக இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர் சமுதாயத்தில் இது உண்மை.ஆனாலும் இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது.

 

       பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.இந்த நாவலை எழுதியதன் இன்னொரு காரணம் 24 ஆண்டுகளாக நான் கண்டு, நடந்து, பழகி, பருகிய மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இயற்கை அழகின் ஒரு பகுதியையாவது ஒரு நாவலில் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆசையும்தான். நாவல் பூர்த்தியடைந்து அதை மீண்டும் படித்த போது இந்த வளாகத்தின் இயற்கை எழில் என் எழுத்துத் திறத்தை விட மிகப் பெரியது என்று தெரிந்து கொண்டு வியந்து குனிந்திருக்கிறேன்.இயற்கை என்பது மேலும் உன்னதமான பொருள்.

 

     காதலினால் அல்ல!1அந்த வெளிர் நீலக் கடல் பரப்பை அகிலா ஆசையுடன் பார்த்தாள். காலை எட்டு மணி இளவெயிலில் அதன் மேனியில் பளபளப்பு ஏறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் கண்களைத் தாழ்த்தினால் பாலச் சுவரில் விட்டு விட்டுக் கட்டியுள்ள சிமிந்திக் கம்பங்களூடே அது துண்டு துண்டாய் உடைந்து படபடத்தது. அந்த பனிரெண்டு கிலோமீட்டர் பினாங்கு பாலத்தில் விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து பார்க்கும் போது ஒரு சினிமாவில் வருகிற மாதிரி அந்தத் தூண்கள் “விஷ் விஷ்” என்று செங்குத்துக் கோடுகளாய் ஓடி மறைந்தன. ஆனால் பாலத்தின் பக்கச் சுவர்களின் விளிம்பின் மேலாகக் கண்களை ஓடவிட்டால் கடல் எல்லையில்லாமல் நீண்டிருந்தது.வலது பக்கத்தில் ஜியார்ஜ் டவுனின் கட்டடங்கள் வான் வெளியில் செங்குத்துக் கற்களாய் நினறிருந்தன. கொம்தார் கட்டடம் எல்லாக் கட்டடங்களுக்கும் மேலே உயர்ந்து கொடிக்கம்பமாய் நின்றிருந்தது. பினாங்குத் தீவுக்கும் அக்கரையிலுள்ள பட்டர்வொர்த் துறைமுகத்திற்குமிடையே உள்ள வடநீரிணையில் பல கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பிரயாணிகள் ·பெர்ரிகள் ஏராளமான ஜன்னல்கள் அமைத்த பெட்டிகளாய் மிதந்து கொண்டிருந்தன. இவற்றுக்கு ஒரு கழுத்தும் தலையும் அமைத்தால் பிரம்மாண்டமான அன்னங்கள் போல இருக்கும் என அகிலா வேடிக்கையாகக் கற்பனை பண்ணிக் கொண்டாள்.இடது பக்கத்தில் காட்சிகள் இன்னும் பசுமையாக இருந்தன.

 

     கடலுக்குக் கோணல்மாணலாய்க் கரை போட்ட மாதிரி ஜெர்ஜாக் தீவின் குன்றுகள் தெரிந்தன. ஒரு குறுகிய வெண்மணல் திட்டு அந்த குன்றுகளுக்கு அடிக்கோடிட்டிருந்தது. அந்த விரிந்த கடலில் அந்த நேரத்தில் ஒரே ஒரு சிறிய இயந்திரப் படகு மட்டும் “டுப் டுப்” என்று சத்தமெழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. எதிரில் பாயான் லெப்பாசின் புதிய மின்னியல் தொழிற்சாலைகளும் தூரத்தில் விமான நிலையத்தின் ஓடும் பாட்டையும் தெரிந்தன.கொஞ்சம் தலை நிமிர்ந்த போது கடலுக்கும் வானுக்குமிடையே உள்ள வெளியில் விமானம் ஒன்று கோழிக் குஞ்சுக்குக் குறி வைத்து இறங்கும் பருந்து போல நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது. விமானத்தின் வால் பகுதியில் பொறித்திருந்த மாஸ் நிறுவனத்தின் கிளந்தான் பட்டம் அகிலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அதன் நீண்ட முன்னிறக்கைகள் வலது பக்கம் கொஞ்சம் இறங்கி நிமிர்ந்து நேராகின. பருந்தின் விரித்த கால் நகங்கள் போல் அந்த விமானத்தின் சக்கரங்கள் வெளியாகி நீண்டிருந்தன. அதன் பூதாகார உடல் தரையைத் தொட விரைந்து கொண்டிருந்தது.தன் லட்சியங்களும் தரை தொடுகின்ற நேரம் இதுதான் என அகிலா எண்ணிய போது அவள் மனம் கிளுகிளுத்தது.

 

    இரண்டு வாரங்களுக்கு முன் பினாங்கு அஞ்சல் முத்திரையிட்ட கனமான நீண்ட உரையில் “உங்களுக்கு மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இயலில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் பத்திரங்களுடன் …. தேதி இப்பல்கலைக் கழகத்தின் “தேசா கெமிலாங்” மாணவர் விடுதியில் வந்து பதிந்து கொண்டு..” என்ற கடிதம் வந்த அன்றே அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது.எவ்வளவு துன்பங்களுக்குப் பின்! எத்தனை தூங்கா இரவின் படிப்புகள்! ஒவ்வோர் ஆண்டும் அவள் முந்தைய வகுப்பு மாணவிகள் பரிட்சைப் படிகள் ஏற ஏற, பல்கலைக் கழகங்களில் இடம் பெற்று விடை பெற்றுப் போகப் போக “நம்மால் முடியுமா? முடியுமா?” என்று எத்தனை பதைபதைப்புகள்!எஸ்டிபிஎம் முடிவு வருவதற்கு முந்திய இரவில் என்ன பாடு பட்டது மனம்! அன்றிரவு தூங்காமல் ஜன்னலை வெறித்துப் பார்த்திருந்து, பெயிலாகப் போகிறோம் என்று பயந்து, தோழிகள் சிரிப்பதாகக் கனவு கண்டு, பத்து முறை எழுந்து விளக்குப் போட்டுத் தண்ணீர் குடித்து, “தூங்கம்மா!” எனத் தாயைக் கெஞ்ச வைத்து, மறுநாள் ஒரு “ஏ” இரண்டு “பி”, இரண்டு “சி” என்று அறிந்து வாய் பிளந்து சிரித்து குதித்து தோழிகளைக் கட்டிக்கொண்டு, அந்த படபடப்பில் காரில் காத்திருந்த அப்பாவை மறந்து விட்டு, அப்புறம் ஓடிவந்து அவரிடம் காட்டி அவர் தன் கன்னத்தில் முத்தமிட்டு…படபடப்புகள் முடியவில்லை. எந்தப் பல்கலைக் கழகம், என்ன பாடம், எப்படி வரிசைப்படுத்துவது என்று பலரிடம் ஆலோசனை கேட்டு அலைந்து, “நீ அறிவியல் மாணவி. பௌதிகத்தில் “ஏ”, கணக்கில் “பி”, ரசாயனத்தில் “பி”, வாங்கியிருக்கிறாய்.

 

      ·பார்மசி முதலில் போடு, கம்ப்யூட்டர் இரண்டாவது போடு” என்ற ஒரு பட்டதாரி ஆசிரியர் ஆலோசனையை ஏற்று, மனுச் செய்து நாட்களை எண்ணிக் காத்திருந்து…“அதோ அந்தப்பொண்ணுக்கு இடம் கெடச்சி லெட்டர் வந்திருச்சின்னு சொல்றாங்களே! உனக்கு ஏன் இன்னும் வரல…?” என்று அப்பா பீதியை எழுப்பி, “கெடைக்கலன்னா லட்டர் அனுப்ப மாட்டாங்களாம்! ரெண்டு வாரம்வரைக்கும் வரலன்னா இல்லன்னுதான் அர்த்தம்” என்ற ஒரு தகவல் கேட்டு அன்றிரவு அழுது…மறுநாள் காலையில் “இடம் கெடைக்காதவங்க மஇகா கல்விக் குழுத் தலைவரப் போய்ப் பாக்கச் சொல்றாங்கள, கோலாலம்பூர் போய் பாத்திட்டு வந்திருவமா…” என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த அஞ்சல்காரர் வீசிப்போன தடிப்பான உரையில் செய்தி கிடைத்து,..கடித்தைப் பார்த்ததும் வாய்திறந்து சிரித்த அப்பா அப்புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களில் ஊறிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். “என்ன அப்பா?” என்று கேட்டவளை அணைத்துக் கொண்டார்.“இல்லம்மா! இது ரொம்ப சந்தோஷமா… எனக்குப் பேசவே முடியில.

 

      எங்கப்பா, உன் தாத்தா, தோட்டத்தில தொழிலாளியா இருந்தவரு. அவருக்கு மகனாப் பொறந்து தமிழ்ப் பள்ளிக்கூடத்தில படிச்சி ஒரு தமிழ் வாத்தியாராவும் தலைமை ஆசிரியராவும் நான் வந்தேன். அதுதான் என்னால ஏற முடிஞ்ச உயரம். நீ பாரு, பட்டதாரியாகப் போற, அதுவும் கம்ப்யூட்டர் துறையில! நம்ம குடும்பத்தில பல்கலைக் கழகத்தில அடியெடுத்து வைக்கிற முதல் ஆள் நீதான். என் பரம்பரைய உயர்த்தப் போற, அந்த சந்தோஷம் தாங்க முடியில…!” அவளும் ஆனந்தத்தில் அழுதாள், அம்மா வந்து உச்சி மோந்து உட்கார வைக்கும் வரை.அதன் பிறகு எல்லாம் அத்தனை வேகத்தில் நடந்தன. முதலில் சாமான்கள் வாங்கும் படலம்: பள்ளிக்கூடச் சீருடைகளை மூட்டை கட்டிவிட்டு வகுப்புக்களுக்கு சுதந்திரமாகப் போட்டுச் செல்ல சில ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள், பிளவுஸ், புதிய உள்ளாடைகள், பஞ்சாபி ஆடைகள், அம்மா வற்புறுத்திக் கொடுத்த இரண்டு புடவைகள், எல்லாவற்றையும் திணிக்க புதிதாக ஒரு பேக்.பினாங்கு விடுதியில் தங்குவதற்கான தட்டுமுட்டுச் சாமான்கள், “வேண்டாம். வேண்டாம்” என்று மறுத்தும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள், அதன் பின் மருத்துவ சோதனை, கட்ட வேண்டிய கட்டணங்களுக்கு பேங்க் டிரா·ப்ட், செலவுக்குப் பணம், தோழிகளிடம் விடைபெறுதல், ஆசிரியர்களிடம் ஆசி வாங்குதல், உடன் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்த தம்பிக்கு அவன் பள்ளிக்கூடத்திலிருந்து அனுமதி பெறுதல், இன்று காலை ஆறு மணியிலிருந்து பிரயாண ஏற்பாடுகள்… எல்லாம் ஒரு குடைராட்டினத்தில் சுற்றும்போது கண்ட காட்சிகளாக “விர் விர்”ரென்று ஓடிவிட்டன.இதோ இது அந்த ஏற்பாடுகளின் கடைசிக்கட்டம். அப்பா காரோட்டிப் போகிறார். தம்பி முன்னிருக்கையில்.

 

       தான் பின்னாலிருந்து கடலையும் பினாங்குப் பாலத்தையும் வேடிக்கை பார்த்தவாறு…. இது வெறும் பாலமல்ல; தன் முந்திய வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் இணைக்கின்ற உறவுப் பாலம். இனி நான்காண்டுகளுக்குத் தன் இல்லமாக இருக்கப்போகும் பல்கலைக்கழகத்திற்கான பாதை.“அதோ தெரியுது பாரம்மா, அதுதான் சான்ஸலரி, துணைவேந்தர் அலுவலகம் அப்புறம் பதிவாளர் அலுவலகம் எல்லாம் அங்கதான்!” என்று அப்பா சுட்டிக்காட்டினார். காரின் முன் கண்ணாடிகள் ஊடே மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு குன்றில் கம்பீரமாக நின்றிருந்தது அந்தக் கட்டடம்.*** *** ***அகிலாவுக்கு அந்தப் பல்கலைக் கழக வளாகம் புதிய உலகமாய் இருந்தது. ஒலிகள், அசைவுகள், வாசனைகள் அனைத்தும் புதியவையாக இருந்தன. இந்த 150 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த நிலப் பரப்பு, ஒழுங்கான நேரான சாலைகள், சாலைகளை நிழலில் அரவணைக்கும் பிரமாண்டமான வரிசை மரங்கள். கைகளில் கோப்புகளை ஏந்தியவாறு துருதுருவென்று அலைகிற மாணவர் கூட்டம்.வந்து சேர்ந்த அந்த முதல் நாள் மாணவியாய்ப் பதிவு செய்து கொள்ளும்போது அப்பா முழுக்கவும் உடனிருந்து உதவினார். பதிவுக்கு பேட்ஜ் அணிந்திருந்த சில மூத்த மாணவிகள் உடனிருந்து வழிகாட்டினார்கள்.

 

       தம்பி பெட்டிகளையும் சாமான்களையும் முக்கி முக்கித் தூக்கினான். “தேசா” என்று அழைக்கப்படும் மாணவர் விடுதிகளில் “கெமிலாங்”கில் (“பிரகாசம்”) இரண்டாம் மாடியில் அகிலாவுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிய அறை. அவளுடைய அறைத் தோழி இன்னும் வரவில்லை. சிறிய படுக்கையும் எழுது மேசையும் இருந்தன. சின்னஞ்சிறு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் மரங்கள் தெரிந்தன.அவளை அறையில் விட்டு விட்டு “இன்னும் எதாச்சும் வேணுமா? காசு போதுமா? அடிக்கடி போன் பண்ணு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு அப்பா தம்பியுடன் திரும்பிப் போய்விட்டார். அவர்கள் போனவுடன் இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்திராத புதிய அனுபவம் பயமாக வந்து கவிந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற ஆயிரம் புதிய மாணவர்களுக்கும் இந்த அனுபவம் புதிதுதான் என்ற எண்ணம் ஆறுதலாக இருந்தது. மேலும் அந்தத் தனிமையை எண்ணவே முடியாதபடி அவள் செய்ய வேண்டிய பல காரியங்கள் காத்துக் கிடந்தன.பகல் முழுக்க அவள் பல இடங்களுக்கு அலைந்தாள். பல்கலைக் கழகத்தை அவளுக்குப் பழக்கப் படுத்த பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

      விரிவுரை அறைகளைத் தேடிப்போக வரைபடமும் வழிகாட்டிப் புத்தகமும் கொடுத்தார்கள். விடுதிப் பதிவு, வகுப்புப் பதிவு, நூல்நிலையப் பதிவு, மாணவர் சங்கப் பதிவு, துணைப்பாடப் பதிவு, மொழிப் பதிவு என்று ஏராளமான பதிவுகளுக்கு விளக்க நாள் குறித்து அட்டவணை தந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் விடுதி முன் கூட்டமாகக் கூடி வரிசை பிடித்துக்கொண்டு மூத்த மாணவிகள் வழிகாட்ட நடநட என்று நடக்கவேண்டியதாயிற்று.ஆனால் நடப்பது என்பது இங்கு இன்பமான அனுபவமாக இருந்தது. கால் பரவி நடப்பதற்கு ஆனந்தமான சோலையாக இருந்தது. எங்கும் நிழல் தரும் பிரம்மாண்டமான மரங்கள். மழை மரங்கள், வேப்ப மரங்கள், காட்டுத் தீக்கொழுந்து மரங்கள் இன்னும் அவளுக்குப் பெயர் தெரியாத வெப்ப மண்டல பலவகை மரங்கள். நேரான ஒழுங்கான சாலைகள். புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன.

 

      தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன. அந்தக் குன்றிலிருந்து பார்த்தால் நீண்ட கிளைகள் நீட்டித் தவழ்ந்திருந்த மழைமரங்களூடே கடலும் பாலமும் சட்டமடித்து மாட்டப்பட்ட அழகிய ஓவியங்களாய்த் தெரிந்தன. சூரிய ஒளி பட்டுப் பட்டு கடல் தகதகத்தது.மனதில் மகிழ்ச்சி இருந்தது.

 

      எஸ்டிபிஎம் பரிட்சையை வெற்றி கொண்ட பெருமை இருந்தது. பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிவிடவில்லை என்ற நிம்மதி இருந்தது. பல்கலைக் கழகத்தில் இடம் பிடித்துவிட்ட களிப்பு இருந்தது. ஒரு கவின் சோலையாக உள்ள இந்தக் கல்விச் சாலையில் இருக்கிறோம் என்ற பெருமிதம் வந்தது. “புதிய வானம், புதிய பூமி” பாட்டு அவள் உதட்டுக்கு வந்தது. தன்னையே வரவேற்க இவையெல்லாம் அமைந்தது போல.ஆனால் ஒன்று மட்டும் பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்தே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. இந்த ஒரு வாரம் முதலாண்டு மாணவர்கள் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் அடுத்த வாரத்தில் மூத்த மாணவர்களும் மாணவியர்களும் தங்கள் புதிய ஆண்டுப் பதிவுக்கு வந்து சேருவார்கள்; அப்போதுதான் அவர்களின் ரேகிங் ஆரம்பமாகும். முன்பு கேட்டிருந்த “நடனமாடு, கொச்சைக் கதை சொல், சட்டையை அவிழு” போன்ற கதைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து மனசு கலவரப்பட்டது. அந்த பயங்கர எதிர்பார்ப்பில் மனதில் இன்னும் அதிகமாக மருட்சி மண்டியது.

 

     அகிலா தன்னுடைய துணை (மைனர்) பாடமாக கணிதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். தனக்குத் தெரிந்த, பழகிய பாடங்களிலேயே நிற்பது நல்லது என அவளுக்குத் தோன்றியது. அறிமுக உரையில் அவளுடைய கணினி இயல் டீன் பேசும்போதும் அதைத்தான் சொன்னார். “இந்தப் பல்கலைக் கழகத்தில் துணைப் பாடமாக நீங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அறிவியல் மாணவராக இருந்தாலும் மனித இயலில் கூட துணைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இலக்கியம் கூட எடுக்கலாம். ஆகவே எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழக்கமில்லாத புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அவதிப்படவேண்டாம்” என்றார்.அகிலாவுக்கு இலக்கியத்தைத் துணைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது. அவள் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் கற்றபோதே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறாள். இடைநிலைப் பள்ளிக்கூடத்தில் மலாய் மொழியில் அதன் தற்கால இலக்கியங்கள் பலவற்றை அறிமுகம் செய்து கொண்டாள். அவளுடைய ஆங்கிலமும் சரளமாக இருந்ததனால் தானாகவே ஆங்கிலத்தில் பொழுது போக்கு இலக்கியங்கள் பலவற்றைப் படித்திருக்கிறாள்.

 

      எல்லா இலக்கியங்களும் அவளைக் கவர்ந்துள்ளன.இந்தப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை வலுவானது என அவள் அறிந்திருந்தாள். தேசிய இலக்கியவாதி ஷனோன் அஹமாட் இங்குதான் பேராசிரியராக இருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். இங்கு மலாய் இலக்கியம் மட்டுமல்லாது ஆங்கில இலக்கியமும், ஆசிய ஆப்பிரிக்க ஒப்பீட்டு இலக்கியமும் சொல்லித் தரப்படுகிறது என்பதையும் வழிகாட்டிப் புத்தகங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இலக்கியம் எடு எடு என ஆசை தூண்டிக் கொண்டே இருந்தது.ஆனால் அந்த ஆசையைக் கட்டிப் போட்டுவிட்டாள். இலக்கியம் படிக்க இன்னும் ஆயுசு இருக்கிறது. ஆனால் அதிக பரிச்சயமில்லாத பாடத்தை எடுத்து பட்டத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது. கணக்கு அவளுக்கு எளிதாக வரும். அதை எடுப்பது நல்லது. கணினித் துறைக்கும் அது துணையாக இருக்கும். ஆகவே கணிதத்தையே பதிந்து கொண்டாள்.

 

      புதன் கிழமை இரவு எல்லா சமயங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சமயச் சொற்பொழிவுகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்து சமய மாணவர்கள் விரிவுரை மண்டபம் “வி”யில் கூடவேண்டும் என அறிவிக்கப்பட்டது.அந்த மண்டபத்தில்தான் முதன் முதலாக இந்திய மாணவர்களை அவள் ஒருமொத்தமாகப் பார்த்தாள். கெமிலாங் விடுதியில் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்ட மாலதியுடன் அவள் உட்கார்ந்தாள். மாலதி மனிதவியல் மற்றும் கல்வியியலில் இருந்தாள். ஆசிரியை ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்திருந்தாள். ஏறக்குறைய 80 மாணவர்கள் வந்திருந்தார்கள். இந்திய மாணவர்கள் சுமுகமாகத் தமிழில் பேசி அறிமுகம் செய்து கொண்டார்கள். மலேசியாவின் பல பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தார்கள்.விரிவுரை அரங்கத்தின் உட்காரும் இடம் படிகள் படிகளாக உயரமாகவும் பேச்சாளர் மேடை தாழ்வாகவும் அமைக்கப்பட்டிருந்து. தான் உயரமான இடத்திலிருந்து பேச்சாளர்களைக் குனிந்து பார்ப்பதை இனிப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அறையில் குளிர்சாதனம் இதமாக இருந்தது.

 

    பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு இந்தியப் பேராசிரியர்களும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் சமயப் பேச்சாளர் ஒருவரும் பேசினார்கள். கல்வித்துறைப் பேராசிரியர் கமலநாதன் இந்து சமயத்தைப் பற்றியும் குறிப்பாக சைவ சமயத்தின் பழமையைப் பற்றியும் பேசினார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முருகேசு தொடர்ந்து இந்து மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தன்னம்பிக்கையைப் பற்றியே அதிகம் பேசினார். புதிய மாணவர் அறிமுகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் கடுமையான “ரேகிங்” செய்வதையும், இப்படிச் செய்பவர்களை அதிகாரிகளிடம் புகார் செய்ய புதிய மாணவர்கள் தயங்கக் கூடாது என்று அவர் சொன்ன போது ரேகிங் இருப்பது உறுதியாகி மனதில் திகில் பரவியது.இப்படி நடந்தால் அதிகாரிகளிடம் சொல்ல பயப்படுபவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னால், புகார் கொடுத்தவர் பெயர் வெளிப்படாமல் தாம் அதிகாரிகளுடன் நடவடிக்கை எடுக்க அவர் உறுதி கூறியது அவர்களுக்குத் தெம்பாக இருந்தது.

 

      இராமகிருஷ்ணா ஆசிரமப் பேச்சாளர் ரமணீதரன் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். மூவருமே சரளமான எளிய தமிழில் பேசியது அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு பேராசிரியர்களுமே தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் படித்து இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.திரும்ப விடுதிக்கு அவளும் மாலதியும் பேசிக்கொண்டே வந்தார்கள். மாலதி ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவள். “நீங்க மலேசியாவில் தெற்கு, நான் வடக்கு. இங்க வந்து சேந்திருக்கிறோம். ஆனா நீங்கதான் ரொம்ப தூரம் வந்திருக்கிறீங்க!” என்று அகிலா சொன்னாள்.“நான் இந்தப் பல்கலைக் கழகத்தைத்தான் முதல் தேர்வாப் போட்டிருந்தேன். ஏன்னா இங்கதான் நாலு ஆண்டுகளுக்குள்ள பட்டதாரி ஆசிரியரா ஆக முடியுது. மத்த பல்கலைக் கழகங்கள்ள மொதல்ல ஒரு பட்டம் வாங்கிட்டு அப்புறம் இன்னொரு வருஷம் ஆசிரியர் பயிற்சிக்கு தனியா டிப்ளோமா செய்யணும்” என்றாள் மாலதி.

 

     இரவு பத்து மணிக்குப் பல்கலைக் கழகம் அமைதி பூண்டிருந்தது. இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டிருந்து. சாலை விளக்குகள் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன. மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மரத்தடியில் நடந்த போது அங்சானா மரத்தின் மஞ்சள் பூக்கள் காலடியில் நசுங்கின.“ரொம்ப அழகா இருக்குங்க மாலதி இந்தக் கேம்பஸ்” என்றாள் அகிலா.“ஆமா அகிலா! நான் வந்ததும் இந்தக் காட்சிகளைப் பாத்து அசந்து போயிட்டேன். ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல்! ரொம்ப அழகா இருக்கு! ஒரு உல்லாசத் தளம் போல இருக்கு” என்று ஒத்துக் கொண்டாள் மாலதி.“குடும்பத்த விட்டு நாலு வருஷம் பிரிஞ்சிருக்கிறதுக்கு இந்த அழகான இடத்தில இருக்கிறது ஒரு ஆறுதல்தான்!”“ரொம்ப மகிழ்ந்து போயிடாதம்மா! பாடங்கள் ஆரம்பிச்ச பிறகு இந்த அழகையெல்லாம் நின்னு பாக்கிறதுக்குக் கூட நேரமிருக்காதின்னு சொல்றாங்க. அதோட மாணவர்கள் இயக்கத்தில சேர்ந்து தொடர்ந்து நடவடிக்கைகள்ள ஈடுபடணும். அதுக்கெல்லாம் மார்க் உண்டு. அந்த மார்க் வச்சித்தான் அடுத்த வருஷம் விடுதியில இடம் கெடைக்கிறதும் கெடைக்காததும் இருக்கு!”அகிலா புறப் பாடத்திட்டத்தில் கலாச்சார நடனக் குழுவில் பதிந்து கொண்டிருந்தாள். மேலும் பேச்சுப்போட்டி சங்கத்திலும் சேரவேண்டுமென்று உறுதி செய்து கொண்டாள்.

 

    பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலும் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால் பாடங்களும் பாடங்களுக்கான ப்ராஜக்ட் செய்முறைகளும் நிறைய இருக்கும் போது இத்தனையையும் சமாளிக்க முடியுமா என்ற பயம் வேறு வந்தது.“ஆனா இதுக்கெல்லாம் மொதல்ல அடுத்த வாரத்துப் பிரச்சினைய மொதல்ல சமாளிச்சாகணுமே!” என்று பெருமூச்சு விட்டாள் மாலதி.“என்ன அடுத்த வாரப் பிரச்ன?”“அதான் நம்ம சீனியர் கொரங்குங்க வரப் போகுத! இப்ப நம்ம பேராசிரியர் சொன்னார ரேகிங்!”“சீ! அதெல்லாம் ரொம்ப இருக்காதுங்க மாலதி! அதிகாரிகள் ரொம்ப கண்டிப்பாத்தான இருக்காங்க!”“அப்படி நெனைக்காதம்மா! அதிகாரிகள் கண்ணில மண்ணத் தூவிட்டு எல்லாம் பண்ணிடுவாங்க. எனக்கு இங்குள்ள ஒரு சீனியர் மாணவியத் தெரியும். அவ அனுபவத்தைக் கேட்டீன்னா ஒடம்பெல்லாம் சிலுத்துப் போயிடும்! அவங்களத் தற்கொல பண்ணிக்க யோசிக்கிற அளவுக்கு கொடுமைப் படுத்தியிருக்காங்க தெரியுமா? அத்தனையும் ஒரு அதிகாரிக்கும் தெரியாது!”அகிலாவுக்குக் “குப்”பென்று ஒரு பயம் வந்து பற்றியது. அறைக்குள் வந்து நுழைந்த போதும் அந்த பயம் போகவில்லை. உடல் வியர்த்திருந்தது.

 

      எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த நாள் முதலாண்டு மாணவர்களைக் கொஞ்சம் ஏளனமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள். கண்ணடித்தார்கள்.அகிலாவின் அறைத் தோழியாக தொடர்புத் துறையில் (மாஸ் கம்யூனிகேஷன்) மூன்றாம் ஆண்டு மாணவியான ஜெசிக்கா என்ற சீன மாணவி பெட்டி படுக்கையுடன் வந்து சேர்ந்தாள். ஹாய் என்று சத்தமாய்ப் பேசினாள். எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருந்தாள். அகிலா பயந்தது போல் இல்லாமல் ஒரு தமக்கையைப் போல சரளமாகப் பழகினாள்.இந்திய மாணவர்கள் கூட்டங் கூட்டமாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். கேன்டீனிலிருந்து “என்ன நம்மளப் பாக்காது மாரிப் போறீங்க?” என்று கேட்டார்கள். அகிலா அவர்களைப் பார்த்து அசடாகச் சிரித்துவிட்டு பயந்து ஒதுங்கி ஒடுங்கி நடந்தாள்.“CAS 101 – கணினி அமைப்பு” முதல் விரிவுரைக்கு அவள் சென்றபோது 200க்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். ஒரு அழகான இளம் மலாய்ப் பெண் விரிவுரையாளர் அந்த விரிவுரையை வழங்கினார்.

 

     “என் பெயர் சித்தி ஆய்ஷா ஹம்டான். உங்கள் பெயரையெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பம்தான். ஆனால் இந்தக் கூட்டத்தில் அது முடியாது. டியூட்டோரியலில் பின்னர் உங்களை நான் மெதுவாகத் தெரிந்து கொள்கிறேன்” என்று புன்னகையுடன் கனிவாகப் பேசினார்.“கம்ப்யூட்டர் கணிதம் மிகவும் சிரமமானதென்று நினைக்க வேண்டாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே எண்கள்தான். ஒன்று பூஜ்யம் மற்றொன்று ஒன்று. இதைத் தெரியாதவர்கள் யாராவது இங்கிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது வகுப்பு “ஓ”வென்று சிரித்தது.“மிக எளிது அல்லவா? அதுதான் சிரிக்கிறீர்கள். ஆனால் கொஞ்சநாள் பொறுத்து ப்ரோக்ராம் எழுத ஆரம்பிக்கும் போது இதன் முக்கியத்துவம் தெரியும். ஒரு பூஜ்யத்தை விட்டு விட்டால் அழப் போகிறீர்கள்!”ஓவர்ஹெட் புரொஜக்டரில் கணினியின் தோற்றம் வரலாறு பற்றி விளக்கினார். எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள மலாய்ப் பெண் குனிந்து அகிலாவின் காதில் கிசுகிசுத்தாள்: “இந்த விரிவுரையாளர் யாரென்று தெரியுமா?”அகிலா புரியாமல் அவளைப் பார்த்துத் தலையாட்டி விழித்தாள். “இவர் துன் ஹம்டானின் மகள். பினாங்கின் கவர்னர். யுஎஸ்எம்மின் முன்னாள் துணைவேந்தரின் மகள்”அகிலா “ஆ”வென்று வாய் பிளந்தாள்.

 

      துன் ஹம்டானின் பெயர் அவளுக்குப் பரிச்சயமானதுதான். முன்னாள் கல்வித் துறை இயக்குனர். அவருடைய பெயர் பாடப் புத்தகங்களில் கூட இருக்கிறது. இந்தக் குடும்பத்தில் கல்வி அவர்கள் நரம்பில் ரத்தமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இந்தப் பல்கலைக் கழகத்தில் இன்னும் பல அறிவு ஜீவிகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்து கிளுகிளுப்பூட்டியது. அவர்கள் இருக்குமிடத்தில் தானும் இருப்பது பெருமையாக இருந்தது.ஷனோன் அஹமாட் என்னும் நாடறிந்த இலக்கியவாதியை எப்படியாவது ஒருநாள் சந்திக்க வேண்டும். அவருடைய “வழியெல்லாம் ஆணிகள்” என்ற நாவலைத் தான் படித்து அனுபவித்திருப்பதைச் சொல்ல வேண்டும். அரசியல் ஆய்வில் புகழ்பெற்றவரும் அறிவார்ந்த அரசியல் விமர்சகருமான டாக்டர் சந்திரா முசாபார் இங்குதான் இருக்கிறாராம். அவரும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என அவர் பெயரை பத்திரிகைகளில் பார்க்கும் போதெல்லாம் அப்பா சொல்லுவார், போலியோ நோயில் கால் விளங்காமல் போனாலும் மூளையின் பலத்தால் உலகப் புகழ் பெற்றவர். எப்படியாவது ஒருமுறை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும்.ஆனால் விரிவுரை விட்டு வெளியே வரும் போது இவர்களுக்கெல்லாம் முற்றாக வேறுபட்ட ஒருத்தனை அவள் சந்திக்க வேண்டி நேர்ந்தது.

 

       “ஹலோ” என்று சிரித்துக் கொண்டே வந்தான். “நீங்க என்ன கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?” என்று கேட்டான். ஆமாம் என்று தலையாட்டினாள். அதே விரிவுரையிலிருந்து அவனும் வெளிவந்ததால் அவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வகுப்பில் ஒரு சக இந்திய மாணவனைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான் என எண்ணிக் கொண்டாள்.“என் பெயர் ராஜன்!” என்று கை நீட்டினான். மென்மையாகப் பிடித்தாள். அவன் அழுத்தினான்.“உங்க பேரென்ன?” என்று கேட்டான்.“அகிலா”“எங்கிருந்து வந்திருக்கிறிங்க?”“அலோர் ஸ்டார், கெடா”“நான் கோலாலம்பூர்”“நீங்களும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?”“இல்ல. நான் பிசிக்ஸ், மூணாம் வருஷம்”அவளுக்குத் திக்கென்றது. சீனியர் மாணவன் இந்த வகுப்பிற்கு ஏன் வந்தான்?“என்ன சீனியர்னவொண்ண பயந்திட்டிங்களா? பயப்படாதிங்க! இங்க சில பயலுங்க உங்கள “ரேக்” பண்ண அலஞ்சிக்கிட்டு இருக்கானுங்க! நீங்க என் கூடவே நடந்து வாங்க! பசங்க வந்தா நான் பாத்துக்கிறேன்”தலை முடியை மொட்டையாக வெட்டியிருந்தான். ஒரு காதில் கடுக்கன் போட்டிருந்தான். ஆனால் வாயில் அகன்ற சிரிப்பு இருந்தது. ஆதரவாகப் பேசினான்.

 

      சீனியர் மாணவர்களிடமிருந்து தப்பிக்க இப்படி ஒரு துணை இருந்தால் நல்லதுதான் என அகிலா எண்ணிக் கொண்டாள்.“வாங்க இப்படியே நடந்து பக்தி விடுதிக் கேன்டீனுக்குப் போகலாம். அங்க ஒரு இந்திய அம்மா வடையெல்லாம் சுட்டு விக்கிறாங்க! நான் காட்டுறேன் வாங்க!”பேசிக்கொண்டே பக்கம் பக்கமாக நடந்தார்கள்.“நீங்க மூன்றாம் ஆண்டு மாணவர், ஏன் முதல் ஆண்டு வகுப்புக்கு வந்திங்க?” என்று அகிலா கேட்டாள்.“போனவருஷம் இந்தப் பாடம் எடுத்தேன். ஆனா பெயிலாயிட்டேன்லா. ஆகவே “பேசிக்” பாடத்தில “யூனிட்” போதில. அதுதான் இந்த வருஷம் “ரிப்பீட்” பண்றேன்”“அவ்வளவு கஷ்டமான பாடமா?”“கஷ்டமில்ல. போன வருஷம் கொஞ்சம் வெளையாடிட்டேன்லா! அதான்!”பேசிக்கொண்டே கண்டீனுக்கு வந்தார்கள். கண்டீனுக்கு வெளியே புல் வெளியில் ஒரு இந்தியப் பையன்கள் கூட்டம் உட்கார்ந்திருந்தது. ராஜாவைக் கண்டு “டே மச்சான்” என்று கூப்பிட்டது.

 

     ராஜா உற்சாகமாகக் கையசைத்தான்.“வாங்க! இவங்கல்லாம் என் கேங். உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்!” என்று அகிலாவைக் கூப்பிட்டான்.அகிலாவுக்கு மனதில் திகில் பரவியது. “வேணாம். வேணாம்! நான் வரல. பயமாயிருக்கு!” என்றாள்.“சீ! பயப்படாதிங்க அகிலா. எல்லாம் நல்ல பசங்க. நம்ப கேங். இவங்களையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கனும். அப்புறம் ரொம்ப உதவியா இருப்பாங்க. கொஞ்சம் வேடிக்கையா பேசுவாங்க அவ்வளவுதான்!” என்றான். அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். கொஞ்சம் இழுத்தவாறு நடந்தான்.அந்தக் கூட்டத்தில் ஒரு பத்துப் பேர் இருந்தார்கள். அத்தனை பேரும் இந்திய மாணவர்கள். எல்லோரும் ராஜனைப் போலவே தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார்கள். சிலர் ஒரு காதில் மட்டும் வளையம் அணிந்திருந்தார்கள். பிருஷ்டங்களைப் பிதுக்கும் ஜீன்சும் டீ சட்டையும் போட்டிருந்தார்கள். சிகிரெட்டுகள் பிடித்தவாறிருந்தார்கள்.அவளுக்குப் புரிந்து விட்டது. ரேகிங் செய்யக் காத்திருக்கும் ஓநாய்கள்தான் இவை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஏற்கனவே ஒரு பையன் பயங்கலந்த முகத்தில் கோணலான சிரிப்போடு உட்கார்ந்திருந்தான். இவர்களால் பிடிக்கப்பட்ட அவனும் முதலாண்டாக இருக்க வேண்டுமென அகிலா ஊகித்துக் கொண்டாள்.“டே, நம்ம ராஜன் ·பிரஷி குட்டி பிடிச்சிட்டு வந்துட்டான் பாத்தியா!” என்றான் ஒருவன். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.தனக்கு இரை போட்டு இழுத்து வந்து விட்டான். உனக்குத் தழை போடுகிறேன் என்று பறித்துக் காட்டி ஆட்டுக் குட்டியை மெதுவாக இழுத்து வந்து கண்ணியில் மாட்ட வைத்துவிட்டான். உள்ளே நடுங்கினாள்.

 

     கூட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்கள். தயங்கித் தயங்கி உட்கார்ந்தாள். மனதை பய இருள் கப்பென்று பிடித்துக் கொண்டது. யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்று பார்த்தாள். தனது சக தோழிகள் யாராவது… பல்கலைக்கழக அதிகாரிகள்… விரிவுரையாளர்கள்…? கூப்பிடு தூரத்தில் கேன்டீனில் மாணவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சிலர் அவர்கள் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் யாரும் இந்தக் கூட்டத்தின் பக்கம் வரவில்லை.“என்ன மயிலு அப்படியும் இப்படியும் பாக்குது! இதோ பாரு அண்ணனுக்கெல்லாம் வணக்கம் சொல்லும்மா!” என்றான் ஒருவன்.கைகூப்பி வணக்கம் சொன்னாள்.“மயிலு பேரென்னா?”“அகிலா!” என்றாள். குரல் நடுங்கியது.“என்ன மயிலு பயப்பிடுது! நாங்கல்லாம் உங்க அண்ணன்மாருங்கதான, என்னா பண்ணிடுவோம் ஒன்ன…?” கூட்டம் கெக்கலித்தது.“டேய் நீ வேணுன்னா அண்ணனா இரு. நா இதுக்கு அத்தான்!” என்றான் ஒருவன். அருகில் வந்தான். “என் கண்ணே!” என்று அவள் தலை மயிரைத் தடவினான்.அவனைத் தீண்டலில் அருவருப்புப் பட்டுத் தலையை மேலும் குனிந்து கொண்டாள்.

 

     “டேய் தொடாதடா! இதுக்கு வேற திட்டம் இருக்கு!” என்று ஒருவன் முன் வந்தான்.“அகிலா மயிலு! இவரப் பாத்தியா! இவரும் ஒன்னப்போல ·பிரஷிதான். இவரு பேரு… சொல்லுடா! அறிமுகப் படுத்திக்க!” அந்த முதலாண்டு மாணவனிடம் கத்தினான்.முகத்தில் மாறாத கோணங்கிச் சிரிப்பைக் கொண்டிருந்த அந்த மாணவன் “ஹலோ, ஐ ஏம் பரசுராமன், சோஷியல் சயன்ஸ்!” என்று அவளிடம் கை நீட்டினான்.“அடி செருப்பால! இங்கிலீஷ்ல பேசிறான் பாருடா! இங்க இருக்கிறவங்கல்லாம் செந்தமிழர் இல்ல? தமிழ்ள்ள பேசுடா!” என்று ஒருவன் அவன் தலையைத் தட்டினான்.“ஹலோ என் பேரு பரசுராமன். நான் சோஷியல் சயன்ஸ்!” மீண்டும் கைகுலுக்க வந்தான்.“டேய்! தமிழ் முறைப்படி விளுந்து கும்பிட்றா!”தடாலென்று விழுந்து கும்பிட்டான். சொன்னதையெல்லாம் செய்யத் தயாரான கோமாளியாக இருந்தான்.“பாத்தியா நல்ல பிள்ள. உருப்பிட்ருவான். மயிலு, அதே மாதிரி அறிமுகம் படுத்திக்கிட்டு உளுந்து கும்பிடும்மா!”அகிலாவுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. மீண்டும் தன்னைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று பார்த்தாள்.“தோ பாரு! அப்படியெல்லாம் பாக்காத! எவனும் வரமாட்டான். அதுக்கெல்லாம் காவல் வச்சிருக்கோம். நாங்க சொல்றத மாத்திரம் செஞ்சிரு.

 

      சீனியருக்கு மரியாத குடுத்திரு! அப்புறம் பாரு ஒனக்காக உயிரையே கொடுப்போம்!”அந்த இளித்தவாய்ப் பரசுராமனைப் பார்த்தாள். “வணக்கம், என் பேர் அகிலா! கம்ப்யூட்டர் சயன்ஸ்!” என்றாள்.கூட்டம் கைதட்டியது. “உளுந்து கும்பிடு!” என்றது.விழுந்து கும்பிடும் கோமாளித் தனத்தைச் செய்ய வேண்டியதில்லை என்று அவளுக்குப் பட்டது. “அதான் வணக்கம் சொல்லிட்டேனே, அது போதும்!” என்றாள்“நோ, நோ! நாங்க உளுந்து கும்பிடச் சொன்னா உளுந்துதான் கும்பிடணும்!”பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.“பாத்தியா, மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இதுக்கு வேற வேல பண்ணனும்!”கூடிக் குசுகுசுத்துக் கொண்டார்கள்.“சரி, டே பரசுராமா! இப்ப இந்த மயிலு உன் காதலி! காதலிய எப்படிக் கொஞ்சுவ காட்டு பாக்கலாம்!”காத்திருந்தவன் போல பரசுராமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் தாடைக்கு அருகில் கையைக் கொண்டு வந்து “என் கண்ணே!” என்றான்.அவனைத் தொடவிடாமல் அவள் தலையைச் சடக்கென்று திருப்பினாள். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.உற்சாகம் வந்தவனைப் போல பரசுராமன் “என் அன்பே! ஏன் கோபம்?” என்று மேலும் வசனம் பேசினான்.கூட்டம் மீண்டும் “ஹே” என்று கை தட்டியது.

 

      “நீ கை வைக்கிலியேன்னுதான் கோபம்!” என்றான் ஒருவன்.“அப்ப கை வச்சர்ரா!”பரசுராமன் தயங்கினான்.“டேய் ·பிரஷி! நீ கை வைக்கில, நாங்க ஒம்மேல வச்சிருவோம். இன்னக்கி ராத்திரி ஒன்ன “ரேப்” பண்ணாம விட்றதில்ல! பாத்துக்க!” கூட்டம் சிரிப்பும் கும்மாளமுமாய் கத்தியது.குனிந்தவாறிருந்தாள். இந்தக் கூட்டத்திற்குத் தான் காட்சிப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிவிட்ட அவமானம் தாங்கவில்லை. கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு வந்தது. உள்ளத்தில் அவமானமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. “ஏன் வந்தோம் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு” என்ற வெறுப்பு திடீர் எனப் பரவியது. இந்த வளாகத்தைவிட்டே ஓடிவிட வேண்டும் என்ற நினைப்பு வந்தது. உடனே அலோர் ஸ்டாரில் தன் வீட்டின் பாதுகாப்புக்குள் சென்று புகுந்துவிட வேண்டும் என்று தோன்றியது. அம்மாவைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.பரசுராமனைக் கூட்டம் உற்சாகப் படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவன் அவள் முதுகில் கைவைத்தான். மெதுவாகத்தான். ஆனால் ஆயிரம் புழுக்கள் ஊர்வதைப் போல இருந்தது.“டேய், முன்ன பின்ன காதல் பண்ணியிருக்கியா! இதோ பாரு இப்படி!” இன்னொருவன் மின்னால் ஓடிவந்து அவள் தோள்களை அழுத்தித் தேய்த்துவிட்டு ஓடினான்.

 

     தொட்ட இடம் பற்றி எரிந்தது.கையில் கத்தி இருந்தால் ஒன்று அகிலா அவனைக் குத்தியிருப்பாள். அல்லது தன்னையே குத்திக் கொண்டிருப்பாள். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. தரையையே பார்த்திருந்தாள். இந்த அசிங்கங்களைப் பார்க்க விரும்பவில்லை. தன் முகத்தை அவர்களுக்குக் காட்டி அவர்களைக் கௌரவப் படுத்த அவள் விரும்பவில்லை.முன்னுதாரணம் பெற்ற உற்சாகத்தில் பரசுராமன் கையை இன்னும் அழுத்தமாக வைத்தான். தேய்த்தான். “என் அன்பே! என் மேல் கோபமா?” என்று வசனம் பேசினான்.அகிலா முகத்தை மேலும் தரையை நோக்கித் தாழ்த்தினாள். உடல் எரிந்தது. மனம் கொதித்தது. கண்களில் கொதிநீர் வழிய ஆரம்பித்துவிட்டது.“ஒரு முத்தம் குட்றா!” என்று ஒருவன் கத்தினான். அந்தச் சொற்கள் அகிலாவை ஈட்டியாய்க் குத்தின. இரண்டு கைகளையும் தூக்கி முகத்தைப் பொத்திக் கொண்டாள்.

 

        பரசுராமனின் முகம் ஒரு தீய நச்சு மேகமாக அவள் முகத்தின் அருகில் வருவது நிழலாகத் தெரிந்தது. அவனுடைய மூச்சு அவள் கன்னத்தில் அனலாய்ப் பட்டது.“டேய் முத்தம்னா என்னன்னு தெரியுமா, இடியட்? கன்னத்தில குடுத்தா தங்கச்சின்னு அர்த்தம். வாய்ல குடுத்தாத்தான் காதலி. தெரியுதா?” என்று ஒருவன் கத்தினான்.பரசுராமன் முகம் குனிந்து தன் முகத்தை மூடியிருந்த கைகளுக்குக் கீழ் வந்தது தெரிந்தது. முகத்தைத் திருப்ப முயன்றாள். யாரோ தலையைப் பின்னால் அழுத்தமாகப் பிடித்திருந்தார்கள்.“பளார்” என்ற சத்தம் கேட்டது. “ஐயோ” என்று பரசுராமன் கத்தியது கேட்டது. அவள் தலை நிமிர்ந்த போது பரசுராமன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். ஓர் உறுதியான கை அகிலாவின் இடது கையைப் பற்றி இழுத்துத் தூக்கியது. “எழுந்திரு, போகலாம்!” என்ற குரல் கேட்டது.அகிலா அதிர்ந்து எழுந்தாள். இடது கையில் புத்தகங்களை ஏந்திக் கொண்டு வலது கையால் அவளை இறுகப் பற்றித் தூக்கினான் அந்த அந்நிய ஆண்பிள்ளை.கூட்டம் “ஏ” என்று ஏமாற்றம் தெரிவித்துக் கொண்டது.“ஏய். நீ ஏண்டா இதில தலையிட்ற இதில?” என்று கேட்டான் ஒருவன்.

 

     “ஏண்டா! நம்ம பொண்ணுங்களயே போட்டு இப்படி அனியாயம் பண்றிங்க! போய் யாராவது சீனப் பொண்ணு மலாய்க்காரப் பொண்ணுங்ககிட்ட ஒங்க வீரத்தக் காட்டிப் பாருங்களேன். எப்படி ஒத வாங்கிச் சாவப் போறிங்கன்னு தெரியும்!” அந்தப் புதியவன் உறுதியாகச் சொன்னான்.“என்னப்பா ரொம்பதான் கோவிச்சிக்கிற! எல்லாம் ஒரு வேடிக்கைக்குத்தான! நம்ப ·பிரஷியா வரும்போது நம்பள என்னல்லாம் பண்ணுனாங்க!”“அப்ப ஒன்னோடு மனசு என்ன பாடு பட்டிச்சின்னு நினச்சிப் பாத்தியா? மலாய்க்கார சீன மாணவர்கள்ளாம் இந்த ரேகிங்க நிறுத்திட்டு அவங்கவங்க இன மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் தயாரிச்சிக் குடுக்கிறாங்க. வழிகாட்டுறாங்க! உங்களுக்குத்தான் உங்க படிப்பிலும் அக்கற இல்ல, மத்தவங்க படிப்பையும் கெடுக்கிறிங்க!”“ஆமா இவரு பெரிய அறிவாளி! போடா!” என்றான் ஒருவன்.“போறேண்டா! உங்களோட எனக்கென்ன பேச்சு. நாளைக்கு இந்த விஷயம் கெசலாமாத்தானுக்கு (பாதுகாப்புத் துறை) போச்சின்னா அப்ப சாட்சி சொல்ல நான் வருவேன். அப்ப “போடா”ன்னு என் மொகத்தப் பாத்து சொல்லு பார்க்கலாம்”கூட்டம் ஆத்திரத்தில் பொருமிக்கொண்டு அடங்கியிருந்தது.அந்தப் புதியவன் பரசுராமனைப் பார்த்தான். “ஏய்! நீ எந்திருச்சி ஓடு” என்றான்.

 

      பரசுராமன் தன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென ஓடினான்.பற்றிய கையைத் தளரவிடாமல் அவளை இழுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடந்தான் அவன். ஆபத்து நீங்கி விட்டது போலத் தோன்றினாலும் அவள் நெஞ்சு ஒரு புறாவின் நெஞ்சைப் போல படபடத்துக்கொண்டிருந்தது.“நீங்க எந்த தேசா?” என்று கேட்டான். “தேசா கெமிலாங்” என்று பெயர் சொன்னாள்.“வாங்க போலாம்!” என்று அவள் கையை விட்டு விட்டு ஆதரவாகப் பக்கத்தில் நடந்தான்.இவன் எப்படி என்று தெரியவில்லை. கொதிக்கும் எண்ணெயிலிருந்து கொள்ளிக்கட்டையில் விழுந்து விட்டேனோ என்று சந்தேகத்தோடு நடந்தாள். எப்படியும் இந்தத் தருணத்துக்கு அவன் நல்லவனாக இருந்தான். உறுதியாக நடந்தான். உயரமாக இருந்தான். முகத்தைச் சரியாக ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. பயமும் நடுக்கமும் அடங்கவில்லை.“எப்படி இவங்ககிட்ட மாட்டினிங்க?” அவன் கேட்டான்.“ராஜன்னு ஒரு பையன். கம்ப்யூட்டர் கிளாசில பாத்தேன். அவரு பேசிக்கிட்டே இங்க கொண்டு போயிட்டாரு!”“ஓ ராஜனா? ரொம்ப கெட்டவன். “காராட்” கேங்னு ஒரு கேங் வச்சிருக்கானுங்க. நம்ப தமிழ்ப் பையன்களுக்கே அவமானம். ஒரு வாரத்துக்கு எங்க போனாலும் உங்க ·பிரஷி தோழிகளோட போங்க. சீனியர்ஸ் கூட அதிகம் சேர வேணாம். இப்படித்தான் நடிச்சி ஏமாத்துவானுங்க!” என்றான்.“அவரு சீனியர்னு தெரியாது! எங்கிட்ட மொதல்ல சொல்லல ”கெமிலாங் அருகில் வந்ததும் “ஓக்கே! நீங்க போகலாம்!” என்று திரும்பி நடந்தான்.ஓட்டமும் நடையுமாக தன் அறையை அடைந்தாள் அகிலா. படுக்கையில் விழுந்தாள். பொருமிப் பொருமி அழுதாள்.அறைத் தோழி ஜெசிக்கா இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவள் வந்து தோளைத் தடவி “என்ன நடந்தது அகிலா?” என்று கேட்டாள்.

 

       அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம் ஆண்டு அவன் முன் பூதாகாரமாக இருந்தது. புதிய பாடங்கள் தொடங்கவிருக்கின்றன.அவன் சிறப்புத் துறையாக எடுத்துக் கொண்ட வர்த்தக நிர்வாகத் துறையில் கால அட்டவணை தாமதமாகத்தான் வந்தது. அப்படி வந்தும் பாடங்களின் நேரத்தை விரிவுரையாளர்கள் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பதிவுக்காக அவன் மேலும் கீழும் அலைய வேண்டியதாயிற்று. அலைந்தும் அவன் விரும்பிய முக்கியமான இரண்டு பாடங்களில் பெயர் பதிந்து கொள்ள முடியவில்லை. இணைப் பேராசிரியர் டாக்டர் சீத்தாராமன் நடத்தும் கணக்கியல் வகுப்பின் விரிவுரை நேரங்கள் மற்றொரு பாடத்தோடு மோதின. அவருடைய வகுப்பு அவனுக்குப் பிடிக்கும். இந்தியாவிலிருந்து வந்த அனுபவமிக்க விரிவுரையாளர். சுவையாகப் பேசுவார். மனமில்லாமல் அந்தப் பாடத்தை அடுத்த பருவத்துக்குத் தள்ளிப் போட்டுவிட்டான். மேலும் ஒரு பாடமும் துணை (மைனர்) பாடமான பொருளாதாரத்தோடு ஒத்துவரவில்லை.

 

        பொருளாதாரப் பாடமான அனைத்துலகப் பொருளாதாரம் பாடத்தை இந்த பருவத்தில் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மைனர் யூனிட்டுகளை நிறைவு செய்ய முடியாது.புறப்பாடங்கள், கட்டாய பாடமான பஹாசா மலேசியா இவற்றுக்கும் பதிவு குழப்பமானதாக இருந்தது. அந்த ஆண்டில்தான் முதன் முறையாக விரிவுரையாளர்கள் நேரடியாகக் கணினியில் பதிவு செய்யும் முறையை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்த வேலை மிக மெதுவாக நடந்தது. பாதி விரிவுரையாளர்களுக்கு கணினியை சரியாக இயக்கத் தெரியவில்லை. தவறான விசைகளைத் தட்டி இருந்த “டேட்டா”வையெல்லாம் அழித்துவிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மத்திய கணினியும் சோம்பேறித்தனமாக இயங்கியது. நேரம் நீண்டது. பதிவுக்காகக் காத்திருந்த மாணவர்கள் வரிசையும் ஆங்காங்கே நீண்டு நீண்டு நின்றது.இந்த ஆண்டு ப்ரொஜக்ட், பரொஜக்ட் என்று நிறைய வேலை கொடுத்துக் கொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டில் செயல்முறைப் பயிற்சியும் இருக்கிறது. எந்த நிறுவனத்துக்கு அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே அவன் பொறுப்பிலிருக்கும் மாணவர் சங்கங்கள் இந்த ஆண்டில் இரண்டு மூன்று தேசிய அளவிலான திட்டங்களை ஏற்பாடு செய்ய அவனை ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தன.

 

      பருவத்தின் தொடக்கத்தில் “கெர்த்தாஸ் கெர்ஜா” (திட்டத் தாள்) விரிவாக எழுதி மாணவர் விவகாரங்களின் உதவித் துணை வேந்தருக்கு சமர்ப்பித்து அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் அந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். அந்தத் தாள்களை தயார் செய்யும் வேலை தன் தலையில் ஒரு பகுதியாவது விழும் என அவனுக்குத் தோன்றியது. சென்ற ஆண்டு இறுதியில் பரிட்சை முடிந்து விடுமுறைக்குப் புறப்பட்ட போதே இரண்டு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள்.ஆனால் அவன் இந்த வாரம் புதிய பருவத்திற்கு யுஎஸ்எம் வளாகத்திற்குள் வந்ததும் அவனுக்குப் புதிய கவலைகள் காத்திருந்தன. மாணவர் விவகாரப் பிரிவில் உதவிப் பதிவாளராகவும் இந்திய மாணவர்கள் நலனுக்குப் பொறுப்பாகவும் இருந்த முத்துராமன் முதல் நாளே அவன் “பர்ஸரி”யில் அந்தப் பருவக் கட்டணம் செலுத்த வந்திருந்த போது அவனைப் பார்த்தார். அவனைத் தனியே அழைத்தார்.“கணேசன், இந்த வருஷமும் நம்ப பையங்க ரேகிங் ஆரம்பிப்பாங்க போல இருக்கு. துணைவேந்தர் எவ்வளவோ எச்சரிக்கை குடுத்திருந்தும் நம்ப பசங்க அதுக்குச் சவால் விட்ற மாதிரி நடந்துக்கிறாங்க.

 

     புதிய இந்திய மாணவர்கள் ரொம்ப பயந்திருக்காங்க. பல பெற்றோர்கள் வேற எங்கிட்ட வந்து பிள்ளைங்க பத்திரமா இருப்பாங்களான்னு திரும்பத் திரும்ப கேக்கிறாங்க. உன்னைப் போல சீனியர் மாணவர்கள்தான் இதைத் தடுக்க முடியும். ஒரு கண்ணு வச்சிரு. ஏதாச்சும் நடந்தா எங்கிட்ட வந்து சொல்லு” என்று சொல்லிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க அவசரமாக நகர்ந்து விட்டார்.முதல் நாளிலிருந்து ஒரு சிறிய மாணவர் குழு ரேகிங்கிற்குத் தயாராகி வருகிறது என்பதை கணேசன் கேள்விப் பட்டிருந்தான். எத்தனை கடுமையான காவல்கள் போட்டிருந்தாலும் எண்ணாயிரம் மாணவர்கள் அலையும் இந்த வளாகத்தை எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் கண்காணிக்க முடியாது. புதிய பழைய மாணவர்களைப் பிரித்து வைக்கவும் முடியாது. அவர்கள் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். அது முக்கியம். அப்போதுதான் சகோதரத்துவம் வளரும். ஆனால் அதைப் பயன் படுத்திக் கொண்டு சொந்தச் சகோதரர்களை எல்லை மீறி எள்ளுவதும் அசிங்கமாக நடத்துவதும் சில சீனியர் மாணவர்களுக்கு விகாரமான விளையாட்டாக இருந்தது.அந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரண்டாம் நாள் சில ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் ஆட்டுக் குட்டிகளாக அகப்பட்டுக் கொண்டு அவதிப்பட்டதை அவன் பார்த்தான்.இந்த மாணவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை. அந்தப் பெண்ணை இந்த முரடர்களிடமிருந்து காப்பாற்றி அவளை விடுதியில் கொண்டு விட்டு வந்தது முதல் அவன் சிந்தனை இந்த மாணவர்களையும் அவர்களின் அட்டகாசத்தில் பயந்து மருண்டு கலங்கிப் போயிருந்த பெண்ணைப் பற்றியுமே மாறி மாறிச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயரைக் கூட அவன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவள் இருந்த பயத்தில் தன்னைப் பார்த்தாலும் அவளை மானபங்கம் செய்ய வந்திருக்கும் முரடன் போலத்தான் தெரிந்திருக்கும். ஆகவேதான் அவளிடம் அவன் அதிகம் பேசவில்லை. அவளைப் பாதுகாப்பாக அவளுடைய தேசாவில் சென்று விட்டு விடுவதே முக்கியமாகப் பட்டது.

 

    ஏன் இந்த மாணவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் வளர்ப்பில் உள்ள குற்றமா? அவர்கள் படிப்பில் உள்ள குறைபாடுகளா? அவர்கள் சமுதாயப் பின்னணி அப்படிப் பட்டதா? ஏன் சமுதாய, பல்கலைக் கழகப் பண்பாடுகளுக்கு அந்நியமாக இருக்கிறார்கள்?இந்த மாணவர்கள் எல்லாம் அவனுக்கு அறிமுகமானவர்கள்தாம். எல்லாரும் இடை நிலைப்பள்ளிக் கூடங்களில் நல்ல தேர்வெண்கள் வாங்கியவர்கள். எஸ்டிபிஎம் என்னும் இடைநிலைப் பள்ளிக்குப் பிந்திய தேர்விலும் தேர்வு பெற்று பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றவர்கள். சிலர் வேண்டுமானால் அரசாங்கம் விதிக்கும் கோட்டா முறையினால் குறைந்த மதிப்பெண்கள் இருந்தாலும் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருக்கலாம். அறிவியல் துறையில் இந்த மாதிரிக் குறைந்த மதிப்பெண்களுடன் வந்து இடம் பெற்றுள்ள சில மாணவர்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று போட்டியில் வென்று வந்த புத்திசாலி மாணவர்கள்தான். ஆண்டுக்கு ஆண்டு பள்ளிக்கூடங்களிலிருந்து உதிர்ந்து விடும் மற்ற சோதா இந்திய மாணவர்களைப் போன்றவர்கள் அல்ல.ஆனால் அவர்கள் படிப்பில் உள்ள அந்தப் புத்திசாலித் தனத்தை அவர்கள் பேச்சிலோ நடத்தையிலோ காண முடியவில்லை.

 

      உண்மையில் இடைநிலைப் பள்ளிக் கூடங்களில் இருந்த அவர்களுடைய படிப்பு அக்கறை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தவுடன் அடியோடு குறைந்து விட்டது போலிருந்தது. புதிதாகத் தங்கள் குடும்பங்களிலிருந்து கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் முற்றாக வீணடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.அவர்களின் குடும்ப வளர்ப்பு, குடும்பக் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதையும் கணேசனால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டேயிருக்க ஆசைப் படுகிறார்கள். கேன்டீனில் மரத்தடியில் புல்வெளிகளில் என்னேரமும் கூடியிருப்பார்கள். சத்தமாகப் பேசுவார்கள். சத்தமாகச் சிரிப்பார்கள். மற்ற இன மாணவர்கள் வேடிக்கை பார்த்து சுட்டிக் காட்டிச் சிரிக்குமளவுக்குப் பேசுவார்கள். மாலையில் இரவில் நள்ளிரவிலும் இவர்கள் கூடிப் பேசுவதைக் காணலாம்.கணேசன் ஆரம்ப காலத்தில் இவர்களோடு இருந்திருக்கிறான். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த புதிதில் கலாச்சாரத் தாகத்தோடு தமிழ் மாணவர்கள் என்ற சகோதர பாசத்தோடு அவர்களிடம் சேர்ந்திருக்கிறான். ஆனால் போகப்போக அவர்களுடைய கலாச்சாரம் அவனுக்கு அந்நியமானதாகத் தெரிந்தது. அதிலுள்ள கொச்சைத் தனத்தை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.தமிழ்ப் பேச்சு என்றாலும் முற்றாகக் கொச்சையாக இருக்கும்.

 

      நிறைய மலாய் வார்த்தைகள் இருக்கும்.”ஆமாலா, இல்லைலா” என்று ஏராளமாக “லா” போட்டுப் பேசுவார்கள். பேசும் விஷயம் எல்லாம் “குட்டிகள்”, சினிமாவில் வரும் காமாந்தகாரங்கள், மற்றவர்களைப் பற்றிய வம்பளப்பு. இதற்கிடையே “தமிளன்” “தமிளன்” என்ற பெருமித உணர்வும் சகோதர பாசமும் குறையாமல் வழியும். ஆனால் இதே கூட்டம் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தங்கள் தமிழ்ச் சகோதரிகளை வம்புக்கிழுக்கவும் கேலி கிண்டல் செய்யவும் தயங்குவதில்லை. இந்த சகோதர பாசம் கூட்டமாக சிகிரெட் பிடிப்பது, பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியில் உள்ள காப்பிக் கடையில் உட்கார்ந்து பீர் குடிப்பது என்று பொங்கி வழிந்தது.கணேசன் மெதுமெதுவாக அவர்களிடமிருந்து விலகிவிட்டான். இதே பல்கலைக் கழகத்தில் முறையான இன, மொழி உணர்வோடு ஒரு சிறிய குழு இருந்தது. அவர்கள் இந்திய பண்பாட்டுச் கழகத்தில் இணைந்து கலை விழாக்களும் சமய விழாக்களும் நடத்தினார்கள். மாணவர்களுக்குக் கடனுதவி வழங்க நிதி திரட்டினார்கள். ஆண்டுக்கு ஒரு முறை தோட்டப்புறங்களுக்குச் சென்று தங்கி சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களில் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு குழு பேச்சுப் போட்டிகள், தமிழ் வகுப்பு என நடத்தியது. கணேசன் அவர்களோடு ஒன்றாக இருந்தான்.

 

      சென்ற ஆண்டிலிருந்து அந்தச் சங்கத்துக்கு துணைத் தலைவராகவும் இருக்கிறான்.அவனுடைய நிர்வாகத்துறை சிறப்புப் பாடம் மிகக் கடுமையாக இருந்தாலும் மாணவர் சங்க நடவடிக்கைகளை அவன் புறக்கணிப்பதில்லை. “ஐசெக்” என்ற பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் அக்கறையுள்ள அனைத்துலக மாணவர் சங்கத்தின் பல்கலைக் கழக கிளையில் பொருளாளராக இருந்தான். இதனால் அனைத்துலக மாணவர் சங்கங்களில் உள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்ள முடிந்தது.அவனுக்கு நீச்சல் சிறுவயதிலிருந்தே தெரியும். ஆகவே நீச்சல் குளத்து உயிர் காப்புச் சங்கத்திலும் இடம் பெற்று அந்த சங்கத்தின் செயலாளராகவும் இருந்தான். இந்த நடவடிக்கைகளினால் புள்ளிகள் அதிகம் பெற்று இந்த மூன்று ஆண்டுகளிலும் விடுதியில் தங்க அவனுக்குத் தொடர்ந்து இடம் கிடைத்தது.இந்த தறுதலை மாணவர்கள் இந்திய பண்பாட்டுக் கழகத்திடம் சேருவதில்லை. ஆனால் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து கூச்சலிட்டுக் கலாட்டா செய்வார்கள். கேலி செய்வார்கள்.

 

     கெட்ட வார்த்தைகளைக் கூவிவிட்டு ஒளிந்து கொள்வார்கள். இதனால் இந்த இரு குழுக்களிடையே அடிநாதமாக ஒரு பகைமை உணர்வு பரவிக்கொண்டே வந்தது.இந்தப் பகைமையின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தங்களுக்குள் ஒரு ரகசியச் சங்கம் அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் கிளம்பியது. தங்களை “காராட் கேங்” என்று அழைத்துக் கொண்டார்கள். அவர்கள் அடையாளமாக ஒரு காதில் கடுக்கண் அணிந்து கொண்டார்கள். தலையை மொட்டையாக வெட்டிக் கொண்டார்கள்.பல்கலைக் கழகம் இவர்களைக் கவனித்துக் கொண்டு வந்தது. ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்வதில் இவர்கள் திறமை சாலிகளாக இருந்தார்கள். இவர்களை நேரடியாகக் கேட்டால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதை இவர்கள் உறுதியாக மறுத்து விடுவார்கள்.இப்படி ஒரு ரகசியச் சங்கம் இருப்பது பற்றித் தான் கேள்விப் பட்டிருப்பதை மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் சில சமயம் இந்தியப் பண்பாட்டுக் கழக மாணவ அலுவலர்களிடம் பேசி எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் ஆலோசனை எதையும் இந்த மாணவர்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதை அதன் நடப்பாண்டுத் தலைவர் உதவித் துணை வேந்தரிடம் விளக்கி விட்டார்.காராட் கேங்கின் அட்டகாசம் கடந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கையின் போது உச்ச கட்டத்தை எட்டியது.

 

     பல்கலைக் கழகம் இந்த நடவடிக்கையை முற்றாகத் தடை செய்திருந்தாலும் மாணவர்களை ஆங்காங்கே ரேகிங் செய்கிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமிருந்தன. குறிப்பாக இந்திய மாணவர்கள் மட்டுமே தீவிரமான ரேகிங்கில் ஈடுபடுவதாகவும் அதற்குப் பலியாகுபவர்களும் இந்திய மாணவர்களே என்றும் தெரிந்தது. இந்த ரேகிங்கினால் வதை பட்ட மாணவர்கள் பயத்தினால் வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். அதைத் தெரிந்திருந்த சீனியர் மாணவர்களும் இந்திய இனப் பற்றின் காரணமாக குற்றம் செய்தவர்களை மூடி மறைத்தார்கள். காராட் கேங் என்பது இந்திய மாணவர்களின் மனதில் திகிலை எழுப்பும் விஷயமாக வளர்ந்து விட்டிருந்தது.போன ஆண்டில் இந்திய மாணவர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் முருகேசு இந்திய மாணவர்கள் இப்படிச் செய்வதை ஆத்திரத்துடன் கண்டித்துப் பேசினார்.“இந்த காராட் கேங் மாணவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் திருந்துபவர்கள் அல்ல. வெளிப்படையாக சமுதாயத்தைப் பகைத்துக் கொள்ளுவது அவர்களுக்குப் பெருமையான செயலாக இருக்கிறது. ஆகவே இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர் பார்க்கப் பட்டதுதான். ஆனால் இவர்களை இந்தியர் என்ற இனப்பற்றுடன் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களே, நீங்கள்தான் கண்டிக்கத் தக்கவர்கள். இவர்கள் நம் இனமாக இருக்கலாம். ஆனால் நம் இனத்தின் விஷ வித்துக்கள். கோடரிக் காம்புகள். இவர்களை களையெடுக்காவிட்டால் நம் இனம் தழைக்காது. ஆகவே ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.“புதிய மாணவர்கள் இவர்களுக்கு பயந்து பயந்து சாக வேண்டாம்.

 

     தமிழர்களின் வீரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால் உண்மை வாழ்க்கையில் படு கோழைகளாக இருக்கிறோம்.“பாதகம் செய்பவரைக் கண்டால், – நீபயங் கொள்ளலாகாது பாப்பா!மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!”என்று பாரதியார் யாருக்காகப் பாடினார்? அக்கிரமம் செய்யும் மாணவர்களை எதிர்க்கக் கற்றக் கொள்ளுங்கள். அவர்கள் முகத்தில் ஓரிரு முறை உமிழ்ந்தால் எல்லாம் திருந்துவார்கள்” என்று அவர் கூறியதைக் கேட்டு கூட்டம் உற்சாகமாகக் கைதட்டியது.ஆனால் காராட் கேங்கின் அக்கிரமங்கள் இந்த ஆண்டிலும் நீடித்துள்ளன. அதிகாரிகள் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அவர்கள் செயல்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிப் பெண்ணும் பையனும் மாட்டிக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் அழகிய பயந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்தப் பையன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய காட்சியும் நினைவுக்கு வந்தது.

 

     சிரித்துக் கொண்டான்.உறக்கம் வருவதுபோல இருந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விளக்கை அணைக்க அவன் எழுந்த போது அவன் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்தான். கதவின் முன்னால் ராஜன் நின்றிருந்தான். இவன் ஏன் இந்த நேரத்தில்… அறையைத் தேடி..?என்ன என்பது போல் அவனைப் பார்த்தான் கணேசன்.“கீழ வா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ராஜன்.“என்ன பேசவேண்டியிருக்கு இந்த நடு ராத்திரியில?” என்று கேட்டான் கணேசன்.“கீழ வா தெரியும்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று இறங்கிப் போனான் ராஜன்.இது நல்லதற்கா கெட்டதற்கா என்று தெரியவில்லை. ஆனால் இறங்கி என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனான்.வரவேற்பறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் இருந்தது. பெரும்பாலும் காலியாகவே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தவாறு இரண்டு மூன்று மாணவர்கள் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிச்சம் மட்டுமே அந்த அறையை மங்கலாக ஒளிப்படுத்திக் கொண்டிருந்தது. தூரமூலையில் நான்கு இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களாகத்தான் இருக்க வேண்டுமென கணேசன் அவர்களை நோக்கிப் போனான்.

 

     ராஜன் அங்கிருந்தான். காராட் கேங்கைச் சேர்ந்த இன்னொரு மாணவன் இருந்தான். கணேசன் அவனைப் பார்த்திருக்கிறான். அவன் பெயர் தெரியவில்லை. மற்ற இரண்டு பேர்கள் புதியவர்கள். முகத்திலும் உடையிலுமிருந்து வெளியாட்கள் போலத் தெரிந்தது. அவர்கள் முறைப்பிலிருந்து இவர்கள் நட்போடு வரவில்லை எனத் தெரிந்தது.ராஜன் எழுந்து நின்றான். அடுத்தவர்களுக்குக் கேட்காத தணிந்த குரலில் “கணேசன். இன்னைக்கு என்னை “மாலு” (அவமானம்) பண்ணிட்ட இல்ல! அதுக்காக ஒன்ன எச்சரிச்சிட்டுப் போகத்தான் வந்தோம்!” என்றான்.கணேசனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. குற்றத்தையும் செய்து விட்டு இத்தனை தைரியமாகப் பேசுகிறானே! “நீ செஞ்ச அநியாயத்துக்கு எச்சரிக்கை எனக்கா ராஜன்? இவங்க யாரு?” என்று புதியவர்களைக் காட்டிக் கேட்டான்.புதியவர்களில் ஒருத்தன் எழுந்து வந்து கணேசனின் தோளில் கைவைத்தான். “இதோ பாரு பிரதர்! நாங்க யாரு தெரியுமா? ஆறு சீட்டு கேங் கேள்விப் பட்டிருக்கியா! நாங்கதான்.”கணேசன் கேள்விப்பட்டிருக்கிறான். பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே உள்ள சுங்கை டுவா பகுதியில் இயங்கிவரும் ஒரு ரகசியக் கும்பல். வெட்டுக்கும் குத்துக்கும் அஞ்சாத கும்பல். இவர்கள் எப்படி பல்கலைக் கழகத்தின் வளாகத்துக்குள் வந்தார்கள்?“தோ பாரு! இந்த ராஜன் என்னோட தம்பி மாதிரி. அவங்ககிட்ட ராங்கி பண்ணாத. நம்பள்ளாம் தமிளங்க இல்ல? ஒத்துமையா இருக்கணும். அவன பத்தி நீ ஏதாவது மேல போய் சொன்ன, உனக்கு அது நல்லதில்ல!”தொலைக்காட்சிப் பெட்டியின் இருண்டும் பிரகாசித்தும் வரும் ஒளியில் அந்த ஆளின் முகம் ஒரு அசல் தமிழ்ப்பட வில்லன் முகம் போல் இருந்தது.

 

     கணேசனுக்கு ஆத்திரம் புரண்டு கொண்டு வந்தது. கத்தி உதவிக்கு ஆட்களைக் கூப்பிடலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில். அவர்கள் போவதற்கு எழுந்து விட்டார்கள்.அந்த முரடன் வந்து கணேசனின் நெஞ்சில் கைவைத்தான். லேசாக அழுத்தினான்“ஒத்துமையா போயிடு பிரதர். தமிளனுக்குத் தமிளன் சண்ட வேணாம். ஒரு தடவதான் வார்னிங். அடுத்த தடவ பாராங்கோ, ஆசிட்டோ சொல்ல முடியாது. வௌங்குதா?”எழுந்தார்கள். மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உதைத்து ஸ்டார்ட் பண்ணி சத்தமாக வெளியேறினார்கள். இருளில் வந்து இருளிலேயே உட்கார்ந்து கட்டைக் குரலில் பேசிவிட்டு இருளோடு கலந்து மறைந்தார்கள்.கணேசன் கொஞ்ச நேரம் அங்கிருந்த சோபாவில் அதிர்ந்து உட்கார்ந்து விட்டான்.முதலில் ஆத்திரம்தான் பொங்கிப் பொங்கி வந்தது. வெளியிலுள்ள குண்டர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? அப்படித் திருட்டுத் தனமாக வந்தவர்கள் துளியும் பயமில்லாமல் ஒரு மாணவனை மிரட்டுவதா? அதற்குப் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களே துணையா? இந்த ராஜன் தன் நெஞ்சில் இத்தனை தைரியம் கொண்டிருக்கிறானா?அப்புறம் பயம் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவர்கள் இனி தீமை செய்யத் தயங்குவார்களா? சொன்னது போல இருட்டில் தன்னை அரிவாளால் வெட்டவோ, முகத்தில் அமிலம் ஊத்துவதற்கோ தயங்குவார்களா? போலிசுக்கே பயப்படாதவர்கள் இந்தப் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கா பயப்படுவார்கள்?இதுவரை இந்த பல்கலைக் கழக மாணவர்களின் ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் கேலியும் கிண்டலும் பேச்சும் குடியும் என்ற அளவில் எரிச்சலூட்டுவதாக மட்டிலும்தான் இருந்தது.

 

     ஆனால் இன்றைக்கு ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் அது வெறும் எரிச்சலாக இல்லாமல் வன்செயலின் எல்லையைத் தொட்டுவிட்டது.தனக்கு இந்தச் சண்டையெல்லாம் தேவைதானா? படிக்க வந்தவன் மற்றவர்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போனால் நல்லதில்லையா?இல்லை என்று சொல்லிக் கொண்டான். பேராசிரியர் முருகேசு சொன்னது சரிதான். இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்களிடையே நச்சுக் கன்றுகள் துளிர்த்துள்ளன. இவற்றை இப்போதே களையா விட்டால் இவை வளர்ந்து வேர் பிடித்து விடும். ஏற்கனவே தமிழ்ச் சமுதாயத்தின் அடிப் பகுதிகளில் இவ்வாறான அவலங்கள் தோன்றியிருப்பதற்கு மொத்தமாகச் சமுதாயத்தின் அக்கறையின்மைதான் காரணம். அது போல இந்தப் பல்கலைக் கழகத்துக்கு உள்ளும் நடக்க அனுமதிக்கக் கூடாது.மற்ற இன மாணவர்கள் அறிவுத் தெளிவு பெற்று ரேகிங் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு தங்கள் இனப் புதிய மாணவர்களுக்கு கல்வி, புறப்பாட நடவடிக்கைகளுக்கு ஆக்கரமான வழிகாட்டிகளாக மாறிவிட்ட பிறகு இந்திய மாணவர்கள் மட்டும் இப்படி வெறி பிடித்துத் திரிவது ஏற்கனவே பல்கலைக் கழக மாணவர்களிடையே அவமானப் பேச்சாகி விட்டது. இந்த நிலையில் ரகசியச் சங்க நடவடிக்கைகள் வெளியார் கும்பல்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் இந்த இனத்திற்கு ஏற்படும் அவமானத்தை இரத்தம் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டி வரும். இதை அனுமதிக்கக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிக் கவலையில்லை. மாணவர்களின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

 

     உண்மையில் இன்று காலை நடந்த சம்பவத்தைப் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகளிடம் அவன் முறையீடு செய்ய மனமில்லாமல் இருந்தான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ பையனோ முறையீடு செய்தால் அவர்களுக்காகச் சாட்சி சொல்லத் தயாராக இருந்தான். ஆனால் தானாகச் சென்று முறையீடு செய்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமென்று இருந்தான். ஆனால் இப்போது ராஜன் எல்லை மீறிவிட்டான். தன்னை நேரடியாக மிரட்டி என்னையே பாதிக்கப் பட்டவனாக ஆக்கிவிட்டான்“மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று பேராசிரியர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. உமிழத்தான் வேண்டும். அந்த ஒரு மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும் என்று தோன்றியது. நான் எச்சில் உமிழாவிட்டால் அவர்கள் என் முகத்தில் அமிலம் உமிழ்வார்கள்.மணியைப் பார்த்தான். இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் போய் விடுதியின் பெங்காவாவையோ பாதுகாப்பு அதிகாரிகளையோ தொந்திரவு செய்ய வேண்டாமென நினைத்தான். நாளைக் காலையில் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த தள்ளிப் போடும் முடிவு பெரிய இக்கட்டில் கொண்டு விடப் போகிறது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

      காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி மாரிமுத்து நின்று கொண்டிருந்தார். நல்லவர். இந்திய மாணவர்களுடன் சகோதர பாசத்தோடு பழகக் கூடியவர்.“வணக்கம் தம்பி! இப்பதான் எந்திரிக்கிறிங்களா?” என்றார்.“வணக்கண்ண. நேத்து படுக்க நேரமாயிடுச்சி…! என்ன இத்தன காலயில என் அறையத் தேடி வந்திருக்கிறிங்க?” என்று கொட்டாவி விட்டான்.மாரிமுத்து உள்ளே வந்து அவன் நாற்காலியில் உட்கார்ந்து தனது தொப்பியைக் கழற்றி வைத்தார். கணேசன் படுக்கையில் உட்கார்ந்தான்.“ஏன் தம்பி! ·பிரஷிப் பசங்களோட ஏதும் தகராறா?” என்று கேட்டார்.நேற்று நடந்தது அதற்குள் பாதுகாப்புத் துறைக்குத் தெரிந்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டான்.“ஓ அதுக்குள்ள உங்களுக்குத் தகவல் வந்திருச்சா? நான் இப்ப எந்திரிச்சதும் வந்து ரிப்போர்ட் பண்ணலான்னுதான் இருந்தேன்” என்றான்.“ரிப்போர்ட் எல்லாம் பண்ணியாச்சி!”“யார் பண்ணுனாங்க?”“அத நான் சொல்ல முடியாது. ஆனா நம்ப கெத்துவா கெசலாமத்தான் (பாதுகாப்புத் துறைத் தலைவர்) உங்களை உடனே வந்து பார்க்கச் சொன்னார். அதச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று மாரிமுத்து எழுந்தார்.“சரிண்ண. நானே வரணுன்னுதான் இருந்தேன். குளிச்சவுடனே போறேன்!” என்றான்.“சரி. கொஞ்சம் கவனமா பொறுமையா பேசுங்க தம்பி. இந்த வருஷம் ரேகிங் பத்தி ரொம்ப சீரியசா இருக்காங்க. பிடிபட்டவங்க குற்றம் நிருபிக்கப் பட்டா பல்கலைக் கழகத்த விட்டு சஸ்பென்ட் பண்ணவும் நீக்கவுங்கூட தயாரா இருக்காங்க!” என்று சொல்லிப் போய்விட்டார்.இந்திய மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் உள்ள மனிதர்.

 

       பெரும்பாலும் எல்லா இந்தியர்களும் இந்த அக்கறையோடும் கவலையோடும்தான் இருக்கிறார்கள். ஆனால் ராஜனுக்கும் அவன் கும்பலுக்கும் இதில் கொஞ்சமும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நெருப்போடு விளையாடுகிறார்கள். சுடும் என்று எச்சரித்தாலும் கேட்பதில்லை என்று யோசித்தவாறு குளிக்கப் போனான்.பல்கலைக் கழகத்தின் பிரதான சாலையில் முதல் போக்குவரத்து வட்டத்தின் இடது முனையில் ஒரு சிறிய கட்டடத்தில் பாதுகாப்புத் தலைவரின் அலுவலகம் இருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் பல்கலைக் கழகத்தின் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் தெரியும். நீச்சல் குளத்தில் உயிர் காப்பாளர் கடமையில் நீச்சல் சிலுவார் அணிந்து உட்கார்ந்து பொழுது போக்கிய நாட்களில் அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால் இந்தக் கட்டடம் தெரியும். ஒரு பிரம்மாண்டமான மழை மரத்தின் கிளைகள் கூரையை வருடியிருக்கும் மேட்டில் அது இருந்தது.அவன் இந்தக் கட்டடத்திற்குள் பலமுறை வந்திருக்கிறான். பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ரித்வான் அஹ்மாட்டை அவனுக்குத் தெரியும். மாணவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவனும் அவன் சக நண்பர்களும் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.தனது மோட்டார் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே போனான்.

 

      காலையில் நடந்த அந்த ரேகிங் விவகாரத்தையும் இரவில் ராஜனும் அவன் கும்பலும் வந்து மிரட்டியதையும் அவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சில குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தான்.வரவேற்புக் கௌன்டரைக் கடந்து சென்று ரித்வான் அஹ்மட் என்று பெயர் எழுதப் பட்டிருந்த கதவைத் தட்டினான். “மாசோக்” (உள்ளே வா) என்ற குரல் கேட்டு கதவைத் திறந்து நுழைந்தான்.ரித்வான் தன் மேசையில் ஒரு கோப்புடன் தயாராக உட்கார்ந்திருந்தார்.“சிலாமட் பகி (காலை வணக்கம்) சே ரித்வான்” என்றான்ஒன்றும் சொல்லாமல் இருக்கையைக் காட்டினார். உட்கார்ந்தான். அவர் கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசினார்.“கணேசன், இந்த ஆண்டில் இந்திய மாணவர்களின் ரேகிங் நடவடிக்கையை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். இதைக் கண்டிப்பாக ஒழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். துணை வேந்தரும் இதைப் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.”“மிக நல்லது சே ரித்வான். அப்படித்தான் செய்ய வேண்டும்.”கோப்பிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தார். “ஆனால் நீயே இப்படிப் பண்ணுவாய் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!”கொஞ்சம் திகைத்தான். தான் உடனடியாக வராமல் காலந் தாழ்த்தி வந்ததால் கோபமுற்றிருக்கிறாரோ என நினைத்தான்.

 

       “நான் நேற்றே வந்து முறையீடு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டான்.“நீ என்ன முறையீடு செய்வது? இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும்!” என்றார்.அதிர்ச்சியடைந்தான். “என்னைப் பற்றி முறையீடா? விளங்கவில்லையே!”“நீ நேற்று காலையில் ஒரு முதலாண்டு மாணவனை ரேக் பண்ணியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் இங்கே முறையீடு வந்திருக்கிறது!” என்று கோப்பைக் காட்டிச் சொன்னார்.விஷயம் விளங்குவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது. அந்தப் பெண்ணைத் தற்காப்பதற்காக அந்த மாணவனை அறைந்து தள்ளப் போய் அது தன் மேல் குற்றமாக உருவெடுத்திருக்கிறது. தீமை செய்தவர்கள் முந்திக்கொண்டதால் தானே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாகிவிட்டது.வாயடைத்துப் போயிருந்தவனைப் பார்த்து ரித்வான் கேட்டார். “நீ இதற்கு என்ன சொல்கிறாய் கணேசன்? உன் வாதத்தையும் கேட்டுவிட்டுத்தான் இதை நான் மாணவர் விவகாரப் பிரிவு உதவித் துணை வேந்தருக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.“சே ரித்வான்! நான் குற்றவாளியல்ல. ஒரு முதலாண்டுப் பெண்ணையும் ஒரு முதலாண்டுப் பையனையும் ஒரு சீனியர் மாணவர் கும்பல் பிடித்து ரேக் செய்து கொண்டிருந்தது. அந்தப் பையனை அந்தப் பெண்ணிடம் அசிங்கமான முறையில் நடந்து கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் அந்தப் பையனை அறைந்து தள்ளிவிட்டு பெண்ணைக் கொண்டு போய் அவள் விடுதியில் விட்டு வந்தேன்! நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம்! இதை யாரோ திரித்துக் கூறியிருக்கிறார்கள்” என்றான்.

 

      “யாரோ அல்ல! பரசுராமன் என்ற அந்தப் புதிய மாணவனே முறையீடு செய்திருக்கிறான். அதற்கு சீனியர் மாணவர்கள் இருவர் சாட்சியும் உண்டு!”மீண்டும் திகைப்பாக இருந்தது. ஒரு சுண்டெலியைப் போல எழுந்து ஓடிய அந்த மாணவனா முன்வந்து முறையீடு செய்திருக்கிறான்? பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. “சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு!” என்றான்.“நீ சொல்வது உண்மையானால் இந்த ரேகிங் பற்றி நீ ஏன் முதலில் வந்து எங்களிடம் முறையீடு செய்யவில்லை?” என்று கேட்டார்.ஏன் செய்யவில்லை? தன்னையே கேட்டுக் கொண்டான். நல்லெண்ணத்தினால் செய்யவில்லை. சக இந்திய மாணவனுக்குத் தொந்திரவு விளையுமே என்றுதான் சொல்லவில்லை. ராஜனும் அவன் நண்பர்களும் என்னதான் முரடர்களாக இருந்தாலும் ஏழை இந்தியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் படிப்பில் மண் போட வேண்டாம், அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என்றுதான் செய்யவில்லை. ஆனால் இப்போது நடப்பதென்ன? ஒரு குற்றமும் செய்யாத என் எதிர்காலத்தில் இவர்கள் மண் அள்ளி வீசத் தயாராகிவிட்டார்களே!ஒருநிமிடம் தலைகுனிந்திருந்து சொன்னான். “அவர்களைத் தற்காக்க வேண்டும் என்று எண்ணி முறையீடு செய்யாமல் இருந்தது என் குற்றம்தான். ஆனால் நான் சொல்வதுதான் உண்மை. அந்தப் பெண்ணைக் கேட்டால் விளங்கிவிடும்!” என்றான்.“பெண்ணைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை! எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண்?”யார் அந்தப் பெண்? அந்தக் கேள்விதான் அவன் மனதிலும் நின்றது. அந்தக் கணத்தில் ஒரு ஆதரவற்ற அபலைப் பெண்ணாக அவளைப் பார்த்தது தவிர அவளை முன்பின் தெரியாது.“எனக்குப் பெயர் தெரியாது. ஆனால் கண்டுபிடித்துவிடலாம்!” என்றான்.

 

      “அந்தப் பெண் சாட்சி சொல்ல வராவிட்டால்…!”ஆமாம். அந்த சாத்தியம் இருக்கிறது. தன் பெயர் பொதுவில் இழுக்கப்படும் என்று பயந்து பல மாணவர்கள் முறையீடு செய்வதில்லை. ஆனால் இந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும். தான் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றியாக அவள்தான் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும்.“சே ரித்வான்! நான் அந்தப் பெண்ணைத் தேடி அழைத்து வருகிறேன். அதுவரை இந்தக் கோப்பை மாணவர் விவகாரப் பிரிவுக்கு அனுப்பாதீர்கள்!” என்றான்.கொஞ்ச நேரம் யோசித்தார். அப்புறம் கேட்டார். “நீ இந்தப் பரசுராமன் என்ற பையனை அடித்தது உண்மையா?”“உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன!”“உண்மை என நீயே ஒத்துக் கொள்ளும் போது இந்த விவகாரத்தை நான் மேலே கொண்டு போகாமல் இருக்க முடியாது. காரணங்கள் இருந்தால் விசாரணையில் நீயே விளக்கலாம்!” என்றார்.இந்த விவகாரம் தன் கைமீறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. “சே ரித்வான். இந்த குற்றச்சாட்டுத் திரிக்கப் பட்டிருப்பது மட்டுமல்ல. இதைச் செய்த மாணவர்கள் வெளியில் உள்ள குண்டர் கும்பல்காரர்களை அழைத்துவந்து என்னை என் தேசாவிலேயே வந்து மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூறினார்கள்!” என்றான்.

 

       குரலில் கோபம் இருந்தது.ரித்வான் திகைத்தவர் போல் காணப் பட்டார். “வெளியில் உள்ள குண்டர்களா? அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்?” சந்தேகத்துடன் கேட்டார்.“தெரியாது. ஆனால் அழைத்து வந்த மாணவர்கள் யார் என எனக்குத் தெரியும்!”“எப்போது நடந்தது?”“நேற்றிரவு!”“எங்கே?”“என் தேசாவில், ·பாஜார் பக்தியில்!”“பெங்காவாவிடம் சொன்னாயா?”“இன்னும் இல்லை!”“ஏன்?”“இரவு லேட்டாகி விட்டது. காலையில் சொல்லலாம் என இருந்தேன்! நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன்!”நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் கணேசனுக்குப் புரிந்தது. குற்றம் சுமத்தப் பட்டுவிட்டதால் தற்காப்புக்காக இட்டுக்கட்டிச் சொல்லுகிறான் என நினைக்கிறார் போலும்.“உன்னை அவர்கள் மிரட்டியதற்கும் வெளியாட்கள் வளாகத்துக்குள் வந்ததற்கும் சாட்சியங்கள் உண்டா?”சாட்சியங்களா? அந்த இருட்டில் அந்த விடுதியின் வரவேற்பறையில் யார் இருந்தார்கள் என்பதை அவன் கவனிக்கவில்லை. யாரோ டெலிவிஷனில் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்தது. ஆனால் இவர்கள் நின்று பேசியதை யாரும் கவனித்திருப்பார்களா தெரியவில்லை.“யாரும் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வரவேற்பறை பெரும்பாலும் காலியாக இருந்தது. யாரோ டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களைக் கவனித்தார்களா என்று தெரியாது!”“சரி! உன் பங்கிற்கு நீ ஒரு முறையீடு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! நான் விசாரிக்கிறேன்!” என்றார். அவர் முகத்தில் கோபமும் எரிச்சலும் இருந்தன.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

 

      கௌன்டரில் முறையீட்டு பாரம் ஒன்று வாங்கி நேற்று நடந்த இரு சம்பவங்களையும் விரிவாக எழுதினான். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாவல் அதிகாரி சில மேல் விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.பாதுகாப்பு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அந்தப் பெண்ணை எப்படியாவது தேடிப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவள் பெயர் தெரியவில்லை. எந்த கல்விப் பிரிவு என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன் என்றும் அங்குதான் ராஜனைச் சந்தித்தேன் என்றும் சொன்னாள் என்று ஞாபகம் வந்தது.அந்தக் கூட்டத்தில் அன்று அவளைத் துன்புறுத்தக் கூடியிருந்த யாரையும் அணுகிக் கேட்க முடியாது. எல்லாரும் அவனை எதிரியாகப் பாவிப்பார்கள்.அவள் இருக்கும் விடுதி தெரியும். விடுதிக்கு முன்னால் போய் காத்திருந்து கண்ணில் படுகிறாளா என்று பார்க்கலாமா? ஆனால் அப்படிக் காத்திருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள். அங்குள்ள தெரிந்த இந்தியப் பெண்கள் யாரையாவது பார்த்துப் பேசி அடையாளம் சொல்லிக் கேட்கலாம்.சிகப்பாக இருந்தாள். கருப்புப் பொட்டு வைத்திருந்தாள்.

 

       ஒல்லியாக அநேகமாய் ஐந்தடி இரண்டங்குலம் மூன்றங்குலம் இருக்கலாம். ஜீன்ஸ¤ம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் டீ சட்டையும் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றி இத்தனை விஷயங்கள் தனக்கு நினைவில் தங்கியிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மனித இயல் கட்டடத்தைக் கடந்து பல்கலைக் கழக கிளினிக் வழியாக நான்கு மாடிக் கட்டடமான தேசா கெமிலாங் விடுதிக்குப் போனான். அநேகமாக எல்லாரும் விரிவுரைகளுக்குப் போய்விட்ட இந்த நேரத்தில் விடுதி ஓவென்றிருந்தது. மோட்டார் சைக்கிளை விடுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு நின்றவாறு யோசித்தான். தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஒன்றிரண்டு மலாய்க்கார மாணவர்கள் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து விரிவுரைகளுக்குப் பறந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டட நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த ஒரு மர பெஞ்சில் சோர்ந்து உட்கார்ந்தான்.கணேசனுக்கும் பத்து மணிக்கு விரிவுரை இருந்தது. முதல் நாள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும். இன்று “இன்டர்மீடியட் நிதிக் கணக்கியல் 1″ தொடங்குகிறது. இந்தப் பருவம் முழுவதுக்குமான பாடத்திட்டம் விநியோகிக்கப்பட்டு விளக்கப்படும்.

 

       போகாவிட்டால் மற்ற மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாடத்திட்டப் பிரதியை கடன் வாங்கி பட நகல் எடுக்க வேண்டி வரும். விரிவுரையாளரும் கோபித்துக் கொள்வார்.ஆனால் தனக்கு முன் நிற்கின்ற இந்த இக்கட்டு பெரிதாக இருந்தது. தான் நல்லது செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டாயிற்று. ராஜாவும் அவன் நண்பர்களும் தன்னை நன்றாக மாட்டி வைத்து விட்டார்கள். இந்த பாதிக்கப்பட்ட முதலாண்டுப் பெண் முன் வந்து உதவி செய்தால்தான் உண்டு. அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் போய்க் கேட்பதென்றாலும் பெயர் தெரியாது. அறை எண் தெரியாது. அரச நடன நிகழ்ச்சிக்கு வந்த சின்டெரெல்லா பனிரெண்டு மணிக்கு மறைந்தது போல புகை மண்டலத்தில் மறைந்து போனாள்.இன்னொரு வழி அந்தப் புகார் செய்த பரசுராமன் என்ற மாணவனைச் சந்தித்துப் பேசுவது. அவன் பெயர் தெரிகிறது. ஆனால் அவனைப் பார்த்துப் பேசுவதில் பலன் இருக்குமா அல்லது நேர்மாறான விளைவுகள் இருக்குமா எனத் தெரியவில்லை.

 

       ராஜனும் அவன் கும்பலும் பரசுராமனை மிரட்டித்தான் முறையீடு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது அவன் அவர்களுடைய முற்றான பாதுகாப்பில் இருப்பான். அவனிடம் கணேசன் நெருங்க விடமாட்டார்கள். அப்படியே நெருங்கிப் பேசிவிட்டாலும் முறையீடு செய்த காரணத்தால் மீண்டும் என்னை மிரட்டினான் என்று மறு முறையீடு கொடுக்கச் செய்து காரியத்தை இன்னும் சிக்கலாக்குவார்கள்.கணேசன் மனதில் பயம் வந்து தங்கியது. இந்த ஆண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். ரித்வான் தனக்கு நண்பராக இருந்தும் கடுமையாகப் பேசியதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததையும் எண்ணிப் பார்த்தான். இந்த முறை வெளியில் உள்ளவர்களும் பல்கலைக் கழகம் இந்த இந்திய மாணவர்கள் ரேகிங் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறது என உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். ஆகவே நாங்களும் செயல்படுகிறோம் எனக் காட்டிக்கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் கேஸ்கள் வேண்டும். வேறு கேஸ் கிடைக்காவிட்டால் என்னையே பலிகடா ஆக்கிவிடுவார்களோ?தள்ளிவைத்தல், நீக்கம் என்று வந்து விட்டால் அந்த அவமானத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இது வரை இந்தப் பல்கலைக் கழகத்தில் கௌரவமாக இருந்து விட்டான். மாணவர்கள் திட்டங்களுக்கு முதன்மை வகித்து தலைமைத்துவ பதவிகள் பல வகித்துவிட்டான். இந்த விஷயம் வெளியானால் அவனுடைய ஆசிரியர்கள் “நீயா அப்படிச் செய்தாய்?” என்று கேட்பார்கள்.

 

      மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் “உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே!” என்பார். பேராசிரியர் முருகேசு முகத்தில் எப்படி விழிப்பது? அவரே தன் முகத்தில் உமிழும் நிலை வந்து விடுமா?பெற்றோர்கள் தனக்கு உதவ முடியாத நிலையில் தன்னை மகனாகப் பாவித்து தனக்குப் பண உதவி தந்து படிக்க வைக்கும் அத்தையின் நினைவு வந்தது. எவ்வளவு ஏமாந்து போவாள் அத்தை! இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வேன்?ஒரு ஆற்றாமை உணர்வும் திகிலும் மனதுக்குள் வந்தன. கண்களில் நீர் மல்கியது. இரண்டு உள்ளங்கைகளாலும் கசக்கிவிட்டுக் கொண்டபோது “ஹாய் கணேசன்! என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஜெசிக்கா.

 

       பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்” என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். “பூசாட் பஹாசா” என்னும் மொழிகள் மையம் அந்தப் பாடத்தை நடத்தியது.முதல் வாரத்தில் முதலாண்டு மாணவர்களுக்கான அந்தப் பாடத்தின் டுயுடோரியல் வகுப்புக்களுக்கான நாள் நேரப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு வசதியான நாள் நேரத்தை அதில் குறிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்கள். ஒரு டியூட்டோரியல் வகுப்பில் பதினைந்து பேர்தான் பெயர் எழுத முடியும். எல்லா நல்ல வசதியான நேரங்களிலும் பெயர்கள் நிறைந்து கொண்டே வந்தன. சில பட்டியல்கள் முழுமை ஆகிவிட்டன.பெயர் குறிக்கும் அறிக்கைப் பலகைக்கு முன் மாணவர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அகிலாவால் பலகைக்கு முன் செல்லத் தள்ளி முன்னேற முடியவில்லை.

 

     மாணவர் முதுகுக்குப் பின் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.கொஞ்ச நேரத்துக்கு முன் இந்தக் கூட்டத்தில் அவள் பரசுராமனைப் பார்த்தாள். அவளைப் போலவே பட்டியலில் பெயர் எழுத அவனும் முயன்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஒரு கோமாளித் தனமாகச் சிரித்தான். அகிலா சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள். நேற்று அவன் முகம் ஒரு விஷக்காற்று போல தன் கன்னத்தைத் தீண்ட வந்த அவமானமான நினைவு இன்னும் அவளுக்கு அகலவில்லை.முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்த போது அறைத் தோழி ஜெசிக்கா நின்றிருந்தாள். “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.“உன்னுடன் பேச வேண்டும். முக்கியம், அவசரம்!” என்றாள் ஜெசிக்கா.அகிலா திரும்பி கூட்டத்தைப் பார்த்தாள். அப்புறம் ஜெசிக்காவைப் பார்த்தாள். “டியுட்டோரியலுக்கு இப்போது பெயர் குறிக்காவிட்டால் எனக்கு வேண்டிய நேரம் கிடைக்காதே!” என்றாள் இரக்கமாக.ஜெசிக்கா அறிக்கைப் பலகையையும் கூடியிருந்த கூட்டத்தையும் கொஞ்சம் கண்ணோட்டம் விட்டாள். “உனக்கு எந்த நாள், நேரம் வேண்டும்?” என்று கேட்டாள் ஜெசிக்கா.“புதன்கிழமை காலையில் எந்த நேரமும். வெள்ளிக்கிழமை பிற்பகல். இதுதான் எனக்கு ஓய்வாக உள்ள நேரங்கள் மற்ற நாட்களிலும் நேரங்களிலும் விரிவுரைகள் வேறு டியூட்டோரியல்கள் இருக்கின்றன!”“என்னுடன் வா!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தாள் ஜெசிக்கா.

 

        “எக்ஸ்யூஸ் மீ, எக்ஸ்யூஸ் மீ!” என்று அவள் போட்ட அதிகாரமான சத்தத்தில் யாரோ விரிவுரையாளர் வந்திருக்கிறார் போலும் என்று சில மாணவர்கள் வழி விட்டார்கள்.பலகை அருகில் சென்றதும் புதன்கிழமை பட்டியலைக் கண்டுபிடித்து காலை 9 – 10 மணிப் பட்டியலில் அகிலாவின் பெயரை எழுதினாள். வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டியல் எல்லாம் நிறைந்திருந்தன. 3 – 4 மணிப்பட்டியலில் 15 பேர்கள் நிறைந்திருக்க 16வது பெயராக அகிலாவின் பெயரை எழுதினாள். அப்புறம் இருவரும் வெளிவந்தார்கள்.ஜெசிக்காவின் செயல் அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்து. துணிச்சலான பெண். அவள் துணிச்சல் எனக்கு வராமல் போவது ஏன்? ஆனால் ஜெசிக்கா செய்ததை நினைத்துக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.“அதெப்படி ஜெசிக்கா! ஒரு டுயூட்டோரியலுக்கு 15 பேர்தானே இருக்க முடியும். 16வதாத என் பெயரை எழுதியிருக்கிறாயே!” என்று பயத்துடன் கேட்டாள் அகிலா.“அதெல்லாம் விரிவுரையாளரிடம் பின்னால் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.

 

       மன்னித்து சேர்த்துக் கொள்வார்கள். அல்லது இந்தப் பட்டியலிலிருந்து ஒன்றிரண்டு பேர் மாறி வேறு நேரத்துக்குப் போகக் கூடும். அப்போதும் இடம் காலியாகும். பிரச்சினை இருக்காது!” என்றாள் ஜெசிக்கா.“இதையெல்லாம் விரிவுரையாளர்கள் சொல்லவில்லையே!” என்றாள் அகிலா.“இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! காரியத்தை சாதித்துக் கொள்ள கொஞ்சம் குறுக்கு வழிகளை நாடுவதில் தப்பில்லை”பூசாட் பஹாசா கட்டடத்திற்கு வெளியில் வந்தார்கள்.“எதற்கு என்னை அவசரமாகப் பார்க்க வந்தாய் ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.“உன்னை ரேகிங்கிற்கு ஆளாக்கியவர்கள் பற்றி உடனே போய் முறையீடு செய் என்று நேற்றே உனக்குச் சொன்னேன். நீ மறுத்துவிட்டாய். இன்றைக்கு அது கொஞ்சம் விபரீதமாகப் போய்விட்டது”ஜெசிக்கா வலியுறுத்தியும் அகிலா முறையீடு செய்யாமல் விட்டது உண்மைதான். அன்று பிற்பகல் முழுதும் அழுதும் ஆத்திரமடைந்தும் இருந்து, இந்த காராட் கேங்கை கத்தியெடுத்துக் குத்திக் கிழிக்க வேண்டுமென நினைத்து மாலையில் கொஞ்சம் ஆறுதல் வந்தவுடன் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவதுதான் நல்லது என அவளுக்குத் தோன்றியது.முதலில் இந்த விவகாரம் பெரிதாகி துணை வேந்தர் அலுவலகத்தில் வழக்காகி பல்கலைக் கழக வளாகத்தில் தான் விளம்பரமாகிப் போவதில் அவளுக்கு ஆசையில்லை.

 

      இரண்டாவதாக இதில் சம்பந்தப் பட்ட மாணவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் பெயரைக் கெடுக்கவும் விரும்பவில்லை.அன்று இரவு வீட்டுக்குப் போன் செய்து அப்பாவுடன் பேசிய போது தான் ரேகிங் செய்யப்பட்ட விஷயத்தை அதன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துத்தான் சொன்னாள். கேலி செய்யப்பட்டதாகச் சொன்னாள். அந்த முத்த விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியிருந்தும் அப்பா படபடத்தார். “பத்திரமா பாத்துக்கம்மா! நான் வேணுமானா பேராசிரியர் முருகேசுகிட்ட பேசட்டா? எனக்குத் தெரிஞ்சவர்தான்!” என்றார். அகிலா மறுத்துவிட்டாள். சமாளித்துக் கொள்ளுகிறேன் என்று தள்ளிவிட்டாள்.இது எப்படி இப்போது விபரீதமாகப் போனது?“என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”“நீ ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால் அந்த ரௌடிக் கும்பல் அந்த பரசுராமனை வற்புறுத்தி கணேசன் மேல் ரிப்போர்ட் கொடுக்க வைத்துவிட்டது!”பரசுராமனை அந்தக் கூட்டத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒரு கோமாளியைப் போல எப்போதும் இளித்த வாயுடன் இருக்கும் அவனா போய் முறையீடு செய்தான்? ஆனால் யார் இந்த கணேசன்?“கணேசன் என்பது யார்?” என்று கேட்டாள்.“உன்னைக் காப்பாற்றினான் என்று சொன்னாயே, அவர்தான். அந்த சீனியர் மாணவன். மேனேஜ்மென்ட் மேஜர். என்னுடைய நண்பன்!” என்றாள்.அந்த ஆணழகன் ஒரு அழகான ராஜகுமாரன் போல அகிலாவின் நினைவுக்கு வந்தான். ஆம்! அன்று வெள்ளைக் குதிரையில் ஏறி வந்து இந்த வில்லன்களிடமிருந்து தன்னைக் கவர்ந்து சென்றிராவிட்டில் தான் இன்னும் என்ன துன்பமெல்லாம் பட்டு அவமானப்பட்டுப் போயிருப்பேனென்று சொல்ல முடியாது.

 

      “அவர் மேல் எப்படி ரிப்போர்ட் கொடுக்க முடியும்? அவர் ஒன்றும் செய்யவில்லையே!”“அந்தப் பரசுராமன் என்ற பையனை கணேசன் ரேகிங் பண்ண முயன்றதாகவும் அவனை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பொய்யாக ரிப்போர்ட் செய்து விட்டார்கள்!”“ஐயோ! அப்புறம்?”“கணேசன் பாதுகாப்புத் துறையில் விளக்கிச் சொல்ல முயன்றும் விளக்கம் எடுபடவில்லையாம். உன்னைக் காப்பாற்றத்தான் அந்த மாணவனை அடிக்க வேண்டியதாயிற்று என்று சொன்ன போது, எந்தப் பெண்ணும் ரேகிங் செய்யப்பட்டதாக ரிப்போர்ட் இல்லையாதலால் அதை நம்பத் தயங்குகிறார்களாம்!”“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ஜெசிக்கா?”“கணேசன் உன்னைத் தேடி தேசா கெமிலாங்கிற்கு வந்திருந்தார். உன் பெயரும் தெரியாமல் விவரம் தெரியாமல் சோர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தார். நான் தற்செயலாகப் பார்த்தேன். நண்பன் என்பதால் விசாரித்தேன். விவரம் வெளிவந்தது.”“ஆகவே…?”“இப்போது நீ சென்று ரிப்போர்ட் செய்து விஷயத்தை விளக்கப் படுத்தினால்தான் கணேசனின் பெயர் தெளிவாகும். இல்லையானால் அவர் மேல் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்கள்!”அகிலாவுக்கு இதயத்தில் திகில் பிடித்தது. கணேசனைக் காப்பாற்றத்தான் வேண்டும். மனசுக்குள் நிறைய நன்றி உணர்ச்சி இருந்தது. ஆனால் இதற்கு விசாரணையென்றும் வழக்கென்றும் அலைய வேண்டும். தான் தவிர்க்க நினைத்த விளம்பரம் இன்னும் இரு மடங்காகிவிடும். தயங்கினாள்.“என்ன யோசிக்கிறாய்?”“இல்லை ஜெசிக்கா. இந்த விஷயம் பெரிதாகி கேம்பஸ் முழுக்கவும் பேசத் தொடங்கிவிடும். அவமானமாகிவிடும்!”“அகிலா! நீ ஒரு கோழை மட்டுமல்ல. நன்றியில்லாதவள்.

 

      உனக்கு நன்மை செய்ய வந்து கணேசன் இப்படி மாட்டிக் கொள்ளுவதா? கணேசன் என் நண்பன். ஐசெக் சங்கத்தில் நானும் அவரும் ஒன்றாகப் பல மாணவர் செயல் திட்டங்களில் உழைத்திருக்கிறோம். அருமையான குணமுள்ளவர். நீ அவருக்கு உதவ முன் வராவிடில் நானே போய் பாதுகாப்புத் துறையில் உண்மையைச் சொல்லிவிடுவேன். நேற்று அறைக்கு வந்த நீ அழுது என்னிடம் சொன்னதைச் சொல்லி விடுவேன். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் பெயர் இழு படும். என்ன சொல்கிறாய்?”ஜெசிக்காவின் துணிச்சலும் கோபமும் அகிலா தன்னையே எண்ணி வெட்க வைத்தன. ஒரு சீனப் பெண்ணுக்கு அவளுடைய இந்திய நண்பன் மேல் உள்ள அன்பும் அக்கறையும் தனக்கு இல்லாமல் போனதே!சட்டென்று ஜெசிக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “மன்னித்துவிடு ஜெசிக்கா! நீ சொல்வது சரி! நீயும் வா, போய் முறையீடு செய்து விடுவோம்!” என்றாள்.ஜெசிக்கா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள். “சரி. ஆனால் கணேசன் விரிவுரைக்குப் போயிருக்கிறார். நாம் தேசாவுக்குப் போய் அவருக்காகக் காத்திருப்போம். 12 மணிக்கு வருவார். மூவருமாகச் சேர்ந்து போய் முறையீடு கொடுத்து வருவோம்!” என்றாள்.ஜெசிக்கா தன் மோட்டார் பைக்கிலேயே அகிலாவைப் பின்னால் ஏற்றிக் கொண்டாள். விடுதிக்குத் திரும்பி கணேசனுக்குக் காத்திருந்தார்கள்.

 

    கணக்கியல் பாடத்தின் முதல் விரிவுரை விரிவுரை மண்டபம் க்யூ(Q)வில் நடந்தது. மாணவர்கள் கூட்டமாக இருந்தார்கள். உட்காரப் போதிய இடம் இல்லை. தாமதமாக வந்ததால் கணேசனுக்கு இருக்கை கிடைக்காமல் படியில் உட்கார வேண்டியதாயிற்று.விரிவுரையாளர் பாடத் திட்டத்தை விநியோகம் செய்து இந்தப் பருவத்தில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேலைகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் விரிவுரையில் கணேசனுக்குக் கவனம் செல்லவில்லை. ஜெசிக்கா அந்தப் பெண்ணைப் பார்த்திருப்பாளா பேசியிருப்பாளா, அந்தப் பெண் முறையாக முறையீடு எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பாளா என்ற கேள்விகளே சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தன.ஜெசிக்காவை இரண்டாம் ஆண்டிலிருந்தே அவனுக்குப் பழக்கம். தொடர்புத் துறையில் ஒலிபரப்புத் துறையை மேஜராக எடுத்துக் கொண்ட மாணவி. நிர்வாகத் துறையைத் துணைப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நிர்வாகத் துறைப் பாடங்களில் கணேசன் – ஜெசிக்கா இருவரும் இருந்தார்கள். ஐசெக் சங்கத்தில் செயலவையில் அவள் இடம் பெற்றிருந்தாள். அடிக்கடி சந்தித்ததன் மூலம் அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஜெசிக்கா அவனுடன் பாசமாகப் பழகுவாள். “கணேசான், கணேசான்” என கொஞ்சம் நீட்டி வாய் நிறையக் கூப்பிடுவாள்.சீனப் பெண்களுக்கே உரித்தான சுறுசுறுப்பு, துணிச்சல், கடுமையான உழைப்பு அனைத்தையும் கொண்டவள். பாடங்களிலும் புறப்பாடங்களிலும் ரொம்பவும் கவனமாக இருப்பாள். கடும் உழைப்பாளி. வகுப்பில் விரிவுரையாளர்களைத் துருவித் துருவி கேள்வி கேட்டு விளக்கம் பெறுவாள். அவளால் மற்றவர்களும் பலன் பெறுவார்கள்.இது சீன மாணவர்களுக்கே உரித்தான குணம் என்பதை கணேசன் கவனித்திருக்கிறான்.

 

       அறிவை ஒரு மூர்க்கத்தனமான வேகத்தோடு சென்று அடைவது அவர்களுக்கே கை வந்த கலையாக இருக்கிறது. மார்க் வாங்குவதில் குறியாக இருப்பார்கள். கொடுத்த வேலையை விரிவுரையாளர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டு கட்டுரைகளைக் கம்ப்யூட்டரில் அழகிய எழுத்துக்களில் அமைத்து, கட்டங்கள் போட்டு, வரைபடங்களும் கிரா·ப்களும் போட்டு பணம் செலவு செய்து கச்சிதமாக பைன்டு பண்ணி ஒப்படைப்பார்கள்.அவர்கள் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையானால் விரிவுரையாளர்களிடம் தைரியமாகக் காரணம் கேட்பார்கள். அவர்கள் தவறாக இருந்தால் ஏற்று மறுமுறை கட்டுரை எழுதும்போது அந்தத் தவறுகளைக் களைந்து கொடுப்பார்கள். குழுவாக இருந்து விவாதித்துப் பாடங்களைப் படிப்பார்கள்.சீன மாணவர்களிடமிருந்து மலாய்க்கார இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்பதை கணேசன் அறிந்திருந்தான். குறிப்பாக சீன மாணவர்கள் எதிலும் ஒற்றுமையாக இருந்து முன்னேற்றத்துக்கு உழைப்பதை இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்களிடையே பிளவுகள் பல இருந்தன. ஒற்றுமையாக அவர்கள் செயல்படுவது இந்த காராட் கேங் போன்ற குண்டல் கும்பல் ஒன்றில்தான்.இந்த காராட் கேங் இந்த முறை தன்னைத் தண்டிப்பதில் வெற்றி பெற விட்டால் அவர்கள் அட்டகாசம் இன்னும் ஓங்கிவிடும். அவர்களின் இந்தப் பொய் வெற்றி பெற பல்கலைக் கழகம் அனுமதிக்காது என அவன் உள் உணர்வு சொல்லியது. ஆனால் பல்கலைக் கழகம் கண்மூடித் தனமாக விதிகளை வலியுறுத்துவதன் மூலமும் நல்ல இந்திய மாணவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவும் அந்தப் பொய்யும் வெற்றி பெற முடியும் என நினைத்தான்.

 

     உள்ளத்துக்குள் அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம் வந்தது.ஜெசிக்காவைத் தற்செயலாக தேசா கெமிலாங்கில் சந்தித்தது நல்லதாகப் போயிற்று. அவளிடம் தன் நிலைமையைச் சொன்ன போது, “ஓ! அந்த அகிலா என்ற இந்தியப் பெண் என் அறைத் தோழிதான்” என அவள் கூறியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் முறையீடு செய்ய மறுத்துவிட்டாள் என்று தெரிந்த போது மனம் இன்னும் கலவரம் அடைந்தது. ஆனால் ஜெசிக்கா அவனுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தாள்.“கவலைப் படாதே கணேசன். அவள் இன்று காலை பஹாசா மலேசியா வகுப்பில் டுயுடோரியலுக்குப் பெயர் பதியப் போயிருக்கிறாள். தேடிப் பிடித்து அவளை முறையீடு செய்ய சம்மதிக்க வைக்கிறேன். நீ வகுப்புக்குப் போ. வகுப்பு முடிந்து 12 மணிக்கு இங்கே வா. நானும் அகிலாவும் இங்கு உனக்காகக் காத்திருக்கிறோம்”ஜெசிக்கா அகிலாவைத் தேடிப் பிடித்திருப்பாளா? அந்த பயந்தாங்கொளிப் பெண் முறையீடு செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளா? என் எதிர்காலத்தைக் காப்பாற்றுவாளா?“சரி! உங்களுக்கு புத்தகப் பட்டியல் கொடுத்திருக்கிறேன். போய் எடுத்துப் படியுங்கள்.

 

     டுயூடோரியல் அடுத்த வாரம் ஆரம்பிக்கும். சில நிறுவனங்களின் உண்மைக் கணக்குகளை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு கணக்குத் தயாரிக்கும் சட்டங்களை ஆராயவிருக்கிறோம்!” என்று கூறி வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் விரிவுரையாளர்.வகுப்பு 11.50க்கெல்லாம் முடிந்தது. அடுத்த விரிவுரைக்காக மாணவர்கள் விரிவுரை மண்டபத்தைத் தேடி நடந்து செல்ல கால அவகாசம் அளிப்பதற்காக எல்லா விரிவுரைகளும் பத்து நிமிடம் முன்னதாக முடிவடைய வேண்டும் என்பது பல்லகலைக் கழக விதிகளில் ஒன்று. அதை விரிவுரையைளர்கள் கடைப்பிடிப்பதும் உண்டு, புறக்கணிப்பதும் உண்டு. இந்த விரிவுரையார் சரியாகக் கடைபிடித்தது நல்லதாகப் போயிற்று.அவனுடைய மோட்டார் சைக்கிள் நூல் நிலையத்தின் பின் புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்து. நூல்நிலையத் தாழ்வாரம் வழியாகச் சென்று படிகளில் கீழே இறங்கி பேஸ்மன்ட் வழியாக வந்தால் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை சீக்கிரம் அடையலாம் என்று விரைந்தான்.நூல் நிலையத்துக்கு வெளியில் போடப்பட்ட பெஞ்சுகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். பருவத்தின் முதல் வாரத்தில் இப்படித்தான் மாணவர் கூட்டம் அலைமோதும். விரிவுரையாளர் புத்தகப் பட்டியலைக் கொடுத்தவுடன் புத்தகம் எடுக்க முந்திக் கொள்வார்கள்.

 

    போகப் போக இந்தக் கூட்டம் குறையும்.அந்தக் கூட்டத்தினுள் நுழைந்த போதுதான் நுழைவாயில் படியருகில் காராட் கேங் கூடியிருப்பது தெரிந்தது. ஒரு நிமிடம் நின்று திரும்பி வேறு வழியாகப் போகலாமா என நினைத்தான். ஆனால் இவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து நடந்தான்.ராஜன், கருணாகரன், டேவிட், தினகரன் இவர்களை அடையாளம் தெரிந்தது. ராஜன் அவனைப் பார்த்துவிட்டான்.“டேய் ஹீரோ வர்ராரு பாத்தியா?” சத்தமாக கணேசன் காதில் விழச் சொன்னான்.கூட்டத்தின் கவனம் கணேசன் பக்கம் திரும்பியது.“ஹாய் ஹீரோ! உன்ன ஜீரோவாக்கப் போறோம் தெரியுமா?” இன்னொருத்தன் கத்தினான்.அவர்களிடமிருந்து ஓட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்களை நோக்கிப் போனான். அவர்கள் எதிரில் நின்றான்.“உனக்கு என்ன வேணும் ராஜன்?” என்று கேட்டான்.“கணேசன்! ஒன்ன நாங்க சரியா ·பிக்ஸ் பண்ணாம விடமாட்டோம். ஒண்ணு நீ நம்ப யுஎஸ்எம் உள்ளயே மாட்டிக்குவ! அப்படி இல்ல வெளியில வச்சி ·பிக்ஸ் பண்ணிடுவோம். தமிளனுக்குத் தமிளன் நீ அவமானப் படுத்திட்டில்ல பாத்துக்குவோம்’லா!” என்றான் ராஜன்.

 

      “நீ என்ன ·பிக்ஸ் பண்றத பின்னால பாப்போம் ராஜன்! ஆனா தமிளனுக்குத் தமிளன்னு சொல்றவன் நம்ப பிள்ளைங்களேயே பிடிச்சி கொடுமைப் படுத்திறதுதான் பெரிய விசுவாசமா?”“அது என்ன ஒரு சின்ன வெளையாட்டு. நீ தலையிட்டதினாலதான் அது இப்ப கேசா போச்சி!”“ஒரு பையனப் பிடிச்சி ஒரு பெண்ண முத்தம் குடுக்க வைக்கிறதுதான் வெளையாட்டா?”“முத்தம்தான குடுக்க வச்சோம், என்னமோ ரேப் பண்ணிட்ட மாறி கோவிச்சிக்கிறிய!”“இந்த கேம்பசுக்கு பயந்து பயந்து வர்ர இளம் பெண்களுக்கு இப்படி வலுக்கட்டாயமா முத்தம் குடுக்க வைக்கிறது ரேப் பண்றதுக்கு சமானம்தான்”ராஜன் முறைத்தான். “போடா ஒன்னப் பாக்க வேண்டிய எடத்தில பாத்திக்கிறோம்!” என்றான்.கணேசன் அங்கிருந்து நடந்தான். அவர்களுக்குப் பயப்படாமல் அவர்களுக்கு முன்நின்று பதில் சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மருட்டல் அவனுக்கு மருட்சியை அதிகப் படுத்தியது.இவர்கள் பாதகத்திற்கு அஞ்சாதவர்கள். இவர்களை வளர விடக் கூடாது. ஆனால் இவர்களை நான் வெல்வதும் தோற்பதும் அகிலா என்ற முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கையில் இப்போது இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.

 

       அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட கச்சிதமான முகம். கண்களில் ஒரு தைரியமும் கருணையும் இருந்தன. அவன் தன்னைக் காப்பாற்றிய செய்கையின் நன்றி உணர்ச்சியோடு இந்த உருவம் அவள் மனதில் கலந்த போது அவளுக்கு அவன் மேல் அன்பு சுரந்தது.மோட்டார் சைக்கிளைப் பார்க் பண்ணிவிட்டு தேசா கெமிலாங்கின் வரவேற்பறைக்குள் நுழைந்தவனை ஜெசிக்கா போய் கைகோர்த்து அழைத்து வந்தாள். அவள் முகம் நிறைய சிரிப்பு இருந்தது.“அகிலா. இவர்தான் கணேசன், உனது சேவியர்!” என்றாள்.அவன் கைநீட்டினான். அகிலா ஒரு புன்னகையுடன் கொஞ்சம் தயக்கத்தோடு மிருதுவாகப் பிடித்துக் குலுக்கினாள். கை கொஞ்சம் கூசியது. என்னதான் கல்வியில் முன்னேறிப் பல்கலைக் கழகம் வரை வந்து விட்டாலும் அந்நிய ஆண்களுடன் பழகுவதில் தூரமும் அடக்கமும் வேண்டும் என்னும் அவள் தாய் கற்றுக் கொடுத்துள்ள தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள தயக்கம்தான் முன் வந்து நின்றது. ஜெசிக்கா அவனை அத்தனை உரிமையுடன் கைகோர்த்து வரவேற்பதைப் பார்க்கும்போது தான்தான் தன்னை இந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது.நேற்று தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற இவன் தன்னை உறுதியாகக் கைப்பற்றித்தான் இழுத்து வந்தான். அப்போது கை கூசவில்லை. “என்னைத் தொடாதே” என இழுத்துக் கொள்ளவில்லை.

 

       ஆபத்பாந்தவன் என்று எண்ணித் தன்னை முற்றாக ஒப்படைத்துக் கொள்ளும் நிம்மதிதான் இருந்தது.கணேசன் உட்கார்ந்தான். “மன்னிக்கணும். அன்னைக்கு உங்களோட நான் சரியா பேசில. உங்க பேரக் கூட கேக்காம போயிட்டேன். நல்ல வேளை ஜெசிக்காவுக்கு நீங்க அறைத் தோழியா இருக்கிறதினால உங்கள மறுபடி கண்டு பிடிக்க முடிஞ்சது”அகிலா ஒரு வெட்கங்கலந்த சிரிப்பை உதிர்த்தாள். “நீங்கதான் மன்னிக்கணும். என்னக் காப்பாத்தின உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம ஓடிட்டேன் நேத்து! என்ன நன்றியில்லாதவள்னு நெனச்சிருப்பிங்க!”“இல்ல, இல்ல அகிலா. நீங்க எவ்வளவு பயந்திருந்திங்கன்னு எனக்குத் தெரியும். ஆகவே நீங்க நன்றி சொல்லாமப் போனத நான் கொஞ்சமும் பெரிசா எடுத்துக்கில! அப்புறம் என்ன நடந்திச்சின்னு ஜெசிக்கா சொன்னாங்களா?”தமிழ் உரையாடலுக்கிடையில் தன் பேர் கூறப்படுவதைப் புரிந்து கொண்டு ஜெசிக்கா குறுக்கிட்டுப் பேசினாள். “நான் அகிலாவுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். பாதுகாப்புத் தலைவரிடம் முறையீடு செய்ய அவள் ஒப்புக் கொண்டு விட்டாள். மூவருமாகப் போவோம். அகிலா அலறிக் கொண்டு வந்து அறைக்குள் அழுததற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!” என்றாள்.“ரொம்ப நன்றி ஜெசிக்கா! ஆனால் அகிலா, நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

 

       ராஜாவும் நண்பர்களும் இப்படி முந்திக் கொண்டுவிட்டதால் நான் இப்பொழுது ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். வாதியாக இருக்க வேண்டியவன் பிரதிவாதியாகிவிட்டேன். ஆகவே நாம் என்ன மாதிரி முறையீடு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான் ஏற்கனவே எழுதிக் கொடுத்த முறையீட்டுக்கும் இப்போது அகிலா செய்கின்ற முறையீட்டுக்கும் விவரங்களில் முரண்பாடு இருந்தால் அதைப் பிடித்துக் கொள்வார்கள். நாம் கூறுவது பொய் போலத் தோன்றும். ஆகவே என்ன எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பேசி முடிவு செய்து கொள்ளுவோம்!” என்றான் கணேசன்.அவனுடைய நிதானம், திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற போக்கு அகிலாவைக் கவர்ந்தது. அவன் அவளுக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தான்.“அகிலா! நேற்று அந்த ரேகிங் போது என்ன நடந்தது, எப்படி அவர்களிடம் சிக்கினீர்கள், யார் அழைத்துப் போனது, அழைத்துப் போனதும் படிப்படியாக என்ன நடந்தது என்பதை முதலில் என்னிடம் சொல்லுங்கள். ஒரு காகிதத்தில் குறிப்பை எழுதிக் கொள்ளுங்கள். அதையே முறையீட்டு பாரத்தில் எழுதுங்கள். பின்னால் விசாரணையில் இதையே சொல்ல வேண்டும்!”அகிலா கொஞ்ச நேரம் தலை குனிந்து நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்திப் பார்த்தாள். அந்த நினைவு அவளுக்குப் பயமாக இருந்தது. கூச்சமாக இருந்தது. அவமானமாக இருந்தது. இவையனைத்தும் அவள் கண்களிலும் முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.“நடந்த உண்மைகளை அப்படியே சொல் அகிலா. எதையும் மிகைப்படுத்த வேண்டாம். உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்றாள் ஜெசிக்கா.அகிலா அவளை நம்பிக்கையுடன் நிமிர்ந்து பார்த்தாள். இந்த இரண்டு நல்ல நண்பர்கள் துணையிருக்கும் போது தான் பயப்படத் தேவையில்லை என்று பட்டது.

 

       நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்தி கணேசனிடம் ஒப்புவித்தாள். அங்கிருந்தவர்களில் ராஜன், பரசுராமன் தவிர வேறு மாணவர்களின் பெயர்கள் தெரியாது என்று அவள் சொன்ன போது மற்றவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தும் கணேசன் அவற்றை அவளுக்குச் சொல்லவில்லை. தெரியாத பேர்கள் தெரியாமலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.அவர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து எழுந்து பாதுகாப்பு அலவலகத்திற்குப் புறப்பட்டபோது மணி ஒன்றாகிவிட்டிருந்தது.பல்கலைக் கழகக் கல்வி என்பது தான் இதுவரை கண்டிராத புதிய உலகம் என்பதை அகிலா கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு வந்தாள். ஒரு வாரத்தில் தொடக்க விரிவுரைகளுக்குப் போய் வந்தவுடனேயே அது விளங்கிவிட்டது. “விரிவுரையாளர்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள் என்றும், வாயில் வந்து ஊட்டுவார்கள் என்றும் எதிர் பார்க்க வேண்டாம். புத்தகங்கள் இருக்கின்றன, நூலகம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டிய விளக்கம் எல்லாம் அங்கிருந்தே கிடைக்கும்.

 

     எங்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்” என்றே எல்லா விரிவுரையாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.விரிவுரையாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமானால் அப்பய்ன்ட்மன்ட் வைத்துத்தான் போக வேண்டியிருந்தது. மற்ற நேரங்களில் போனால் விரட்டி விடுவார்கள். அவளுடைய விரிவுரையாளர்கள் எல்லாம் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.கணினிக்குத் திட்டம் (புரோக்ராம்) எழுதும் வழிமுறைகள் என்ற பாடத்தின் விரிவுரையாளரை மட்டும் அவள் போய்ப் பார்க்க நேர்ந்தது. அவர் முதல் விரிவுரையில் கொடுத்த புத்தகப் பட்டியலில் எட்டு புத்ததகங்களில் நான்கு புத்ததகங்களை நூல்நிலையக் கணினியில் கண்டுபிடிக்க முடியவில்லை. நூல்நிலையப் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் கிரிசாலிஸ் என்ற அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்தின் பெயர் தெரிந்தால் கிரிசாலிசில் அதைத் தேடி அதன் புத்தக அடுக்கு எண்ணைக் கண்டுபிடித்து மாணவர்கள் தாமாக இடந்தேடி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டாக்டர் அஹமட் தாஜுடின் கொடுத்த பட்டியலில் இருந்த நான்கு தலைப்புக்களும் ஆசிரியர் பெயரும் கிரிசாலிசில் இல்லை. தேடி அலுத்த முதலாண்டு மாணவர்கள் அவரை இந்த வாரத்திலேயே நேரில் கண்டு இது பற்றிச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். யார் போவது என்று பயந்து விழித்த போது அகிலா “நான் போய்க் கேட்கிறேன்” என்றாள்.

 

      ஜெசிக்காவைப் பார்த்துப் பழகியதிலிருந்து அகிலாவுக்கும் ஒரு புது தைரியம் வந்திருந்தது.யுஎஸ்எம்மின் மருத்துவக் கல்லூரி கிளந்தான் மாநிலத்திற்குச் சென்று தனி வளாகம் அமைத்துக் கொண்ட பிறகு அது முன்பு இருந்த கட்டடத்தை பல கல்விப் பிரிவுகள் பகிர்ந்து கொண்டன. மருந்து தயாரிப்பு இயல் (·பார்மசி), போதைப்பொருள் ஆய்வு நிலையம் (டிரக் ரிசர்ச்), மேற்பட்டப் படிப்புத் துறை ( இன்ஸ்டிடியுட் ஆ·ப் கிராஜுவேட் ஸ்டடிஸ்)) இவற்றுடன் கணினி அறிவியல் துறையும் அங்கு போயிருந்தது. பெரிய பரந்த கட்டடம். குகைகள் போல் அதன் காரிடோர்கள் விரிந்திருந்தன. எந்தக் காரிடோர் போனாலும் பழைய மருந்து வாசனை அடித்தது.மங்கிய விளக்கொளியில் உள்ள காரிடோரில் நடந்து போய் வெறும் தாஜுடின் அஹ்மட் என்று பெயர் போட்டிருந்த பெயரைக் கண்டு பிடித்தாள் அகிலா. இந்த விரிவுரையாளர்களின் கத்வுகளில் உள்ள பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களும் பதவிகளும் போட்டுக் கொள்வதில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.கதவை மிருதுவாகத் தட்டினாள். “யா மாசோக்” என்ற குரல் கேட்டது.கதவு திறந்து உள்ளே போனாள்.

 

        ஒரு விரிவுரையாளர் அறைக்குள் அவள் போவது இதுதான் முதன் முறை. அவர் தன் மேசையை விட்டு இன்னொரு பக்கத்து மேசையில் ஒரு கணினித் திரை முன் உட்கார்ந்திருந்தார். கீ போர்டில் கடகடவென தட்டிக் கொண்டிருந்தவர் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.“சிலாமாட் பகி டாக்டர். உங்கள் புத்தகப் பட்டியலில் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்றாள். குரலில் பயம் இருந்தாலும் தெளிவாகச் சொன்னாள்.“நீ யார்?”“அகிலா. உங்கள் CAP 101 மாணவி”“உட்கார், இதை முடித்துவிட்டு வருகிறேன்!”உட்கார்ந்தாள். தாஜூடின் தொடர்ந்து திரைக்குத் திரும்பி கீ போர்டில் தட்டினார். அவர் திறந்திருந்தது ஈமெய்ல் என்று தெரிந்தது. ஏதோ ஒரு கடிதத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்தது. சிந்தனை ஓட்டம் தடைபடுவதற்கு முன் முடித்து விட மும்முரமாக இருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டாள்.அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். புத்தகங்கள் சுற்றிலும் இறைந்து கிடந்தன. சில விரித்தவாறு இருந்தன. சிறிய மஞ்சள் தாள்களில் புத்தகங்களில் அடையாளங்கள் வைத்திருந்தார். கணினி பிரின்ட் அவுட் தாள்கள் மடிப்பு மடிப்பாகக் குவிந்து கிடந்தன. நோட்டீஸ் போர்டில் கால அட்டவணை, அவருடைய அலுவலக மெமோக்கள், சில தேங்க்யூ கார்டுகள், சில வெளிநாட்டு கருத்தரங்க நோட்டீசுகள், மாணவர் பட்டியல், மீட்டிங் பட்டியல் அனைத்தையும் தாறுமாறாகக் குத்தி வைத்திருந்தார்.

 

        மொத்தத்தில் தன் அம்மாவை உள்ளே அனுமதிக்காத பதின்ம வயது மாணவனின் அறை போல இருந்தது.விரிவுரையாளர்கள் அனைவரும் பாதிப் பைத்தியங்கள் என மாணவர்கள் கிசுகிசுத்துக் கொள்வது உண்மைதான் போலும் என நினைத்துக் கொண்டாள். தனக்கு இரண்டு மணி நேரம் கொடுத்தால் இந்த அறையை ஒழுங்கு படுத்தி பளிச்சென்று ஆக்க முடியும் என நினைத்துக் கொண்டாள்.டாக்டர் தாஜூடின் தான் எழுதியதைப் படித்தார். சில திருத்தங்கள் செய்தார். கம்ப்யூட்ர் மௌசை உருட்டி அம்புக் கர்சரை “சென்ட்” (அனுப்பு) என்ற கட்டளைக்குக் கொண்டு வந்து கிளிக் செய்தார். திரையில் நீலப் பட்டை ஒன்று தோன்றி “அனுப்ப வேண்டிய செய்தி ஒன்று” என்று காட்டியது. அதன் கீழ் வெள்ளைப் பட்டை ஒன்று தோன்றி அதில் நீல நிறம் ஓடி நிறைந்தவுடன் அந்தப் பட்டைகள் முழுதாக மறைந்தன. மின்னஞ்சல் அது போக வேண்டிய அமெரிக்காவுக்கோ ஆஸ்த்திரேலியாவுக்கோ பயணப்பட்டது. சொல்ல முடியாது. பக்கத்து அறையில் உள்ள அவருடைய சக விரிவுரையாளருக்காகவும் இருக்கலாம். கணினிக்கு எல்லாத் தூரமும் ஒன்றுதான்.தாஜுடின் தனது ஓடும் சுழல் நாற்காலியையே வாகனமாக்கிக் கொண்டு கணினி மேஜைக்கு முன்னிருந்து தன் எழுத்து மேசைக்கு வந்தார். “எஸ் அகிலா! நான் என்ன செய்யலாம் உனக்கு?” என்று கேட்டார்.“தொந்திரவு கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் டாக்டர். இந்தப் புத்தகப் பட்டியலில் உள்ள நான்கு புத்தகங்களை நூல் நிலைய கேட்டலாக்கில் கண்டு பிடிக்க முடியவில்லை!” என்றாள்.“ஏன் முடியவில்லை? கிரிசாலிஸ் பயன் படுத்தத் தெரியுமா உனக்கு?”“தெரியும்.

 

        நானும் மற்ற பல மாணவர்களும் தேடியும் கிடைக்கவில்லை!”பட்டியலை வாங்கிப் பார்த்தார். கிடைக்காத புத்தகங்களை அவள் கோடிட்டு வைத்திருந்தாள்.“ஓல்ரைட், ஓல்ரைட்! இந்த நான்கும் புதிய புத்ததகங்கள். இந்த மாதம்தான் வந்து சேர்ந்தன. லைப்ரரி இன்னும் அதை கேட்டலோக் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். நல்ல வேளை எனக்குத் தெரியப் படுத்தினீர்கள். இந்தப் புத்தகங்களை “சிறப்புச் சேமிப்பு” பகுதியில் வைக்க ஏற்பாடு பண்ணுகிறேன். நீங்கள் உடனடியாக கடன் வாங்க முடியாவிட்டாலும் நூல் நிலையத்துக்கு உள்ளேயை வைத்துப் படிக்கலாம். லைப்பரரிக்கு நான் மெமோ அனுப்புகிறேன்” என்றார்.“நன்றி டாக்டர்!” என்றாள் அகிலா.“ஓக்கே. விரிவுரையெல்லாம் விளங்குகிறதா?” என்று கேட்டார்.“விளங்குகிறது. கம்ப்யூட்டர் கலைச் சொற்கள் பஹாசாவில் நீங்கள் சொல்லுவது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. புத்தகங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார்கள்!”“அடுத்தவாரம் ஆங்கிலம் – பஹாசா மொழிபெயர்ப்பு அட்டவணை கொடுக்கிறேன். அப்புறம் குழப்பம் இருக்காது!” என்றார்.அவருடைய டெலிபோன் அடித்தது. அதன் மேல் கை வைத்தவாறு “வேறு என்ன அகிலா?” என்றார். “எனக்கு வேலை இருக்கிறது.

 

     கிளம்பு!” என்று அதற்கு அர்த்தம் என அகிலா தெரிந்து கொண்டாள்.“ஒன்றும் இல்லை டாக்டர். நன்றி!” என்று எழுந்தாள். அவள் வெளியே வந்த போது அவர் டெலிபோனுக்குள் “ஹலோ” சொல்லிக் கொண்டிருந்தார்,ஒரு விரிவுரையாளரை அவருடைய அறைக்குள் சென்று பார்த்த அனுபவம் அவ்வளவு மோசமாக இல்லை என மகிழ்ந்தவாறு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.கணினித் துறை வளாகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. அந்தப்பகுதியில்தான் தேசா இன்டா விடுதியும் தேசா கெம்பாரா விடுதியும் அமைந்திருந்தன. இந்த விடுதிகள் அனைத்துமே விரிவுரை மண்டபங்களிலிருந்து மிக தூரத்தில் இருந்தன. வாகனங்கள் இல்லாமல் நடையை மட்டும் நம்பியிருப்பவர்களுக்கு மிகச் சிரமம்தான்.பல்கலைக் கழகத்தின் மேற்கு வாயில் நோக்கிப் போகும் ஜாலான் யுனிவர்சிட்டியில் ஓரத்தில் வாகனப் போக்குவரத்தின் மிரட்டல்கள் இல்லாமல் நடக்க கற்களால் நடைபாதை போட்டிருந்தார்கள். அதில் ஏறி நடந்தாள் அகிலா.

 

      மத்தியான வெயில் சாலையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு புதன் கிழமை. இந்த இரண்டாம் வாரத்தில் புதன்கிழமை அகிலாவுக்கு விரிவுரைகள் ஒன்றும் இல்லை. அடுத்த வாரம் டியோடிரியல் ஆரம்பிக்கும். ஆனால் இந்த முதல் வாரம் ஒருநாள் ஓய்வுதான்.அவளுடைய தேசா கெமிலாங் அத்தனை தூரமில்லை. வேப்ப மர நிழல்களுக்கிடையில் நடந்தாள். முனை வளைந்ததும் இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட பழைய ஆயுத சேமிப்புக் கிடங்கைத் தாண்ட வேண்டியிருந்து. இரண்டு சுரங்கங்கள் தோண்டி சிமெண்டினால் பலப்படுத்தப்பட்ட அமைப்புகள். சில ஆண்டுகளுக்கு முன் கூட இங்கிருந்து போர்க்கால குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன என்பதை அகிலா பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். அவற்றைக் கடக்கும் போது கொஞ்சம் அச்சமாக இருந்தது.இந்த வளாகம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தினரின் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருந்தன. அவற்றின் உட்புறத்தை புதுமைப் படுத்தியிருந்தாலும் அவற்றின் முகப்புக்களை அப்படியே விட்டிருந்தார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் காலாற நடக்கும் இந்த வளாகத்தில் ஒரு காலத்தில் ராணுவத்தினரின் பூட்ஸ் ஒலியும் “லெ·ப்ட் ரைட், லெ·ப்ட் ரைட், அபவுட் டெர்ன்” என்ற கட்டளைகளும் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டிருக்கும் என்று அகிலா நினைத்துப் பார்த்தாள்.

 

       மலேசியா சுதந்திரம் பெற்ற சிலகாலத்தில் ஒரு ரிங்கிட் அடையாள விலையில் இந்த போர்த்தளம் கல்வித்தளமாக மாறிவிட்டது.அந்தப் பல்கலைக் கழக வளாகத்தின் பரப்பு எவ்வளவு பெரியது என்பதை இந்த இரண்டாவது வாரத்தில் அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். கணினி விரிவுரை முடிந்து கணக்கு விரிவுரைக்கு வேறு மண்டபத்துக்கு நடப்பதற்குள் நேரமாகிவிடுகிறது. நேரமாகிவிட்டால் உட்கார இடம் கிடைப்பது கஷ்டம். அடுத்தடுத்த வாரத்தில் வீட்டிற்குப் போகும்போது அப்பாவிடம் பேசி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று பார்க்க வேண்டும். இது ஒரு வசதி. அகிலாவின் வீடு பக்கத்தில் அலோர் ஸ்டாரில் இருந்ததனால் நினைத்த நேரம் அவள் பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடலாம். இரண்டு இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம். இந்த ரேகிங் விவகாரம் விசாரிக்கப்பட்டு முடித்த பின் கண்டிப்பாக வீட்டுக்குப் போக முடிவு செய்திருந்தாள்.வந்து இரண்டு வாரங்களே ஆனாலும் வீட்டின் நினைவு பிய்த்துத் தின்றது. அவளுடைய, அவளுக்கே சொந்தமான அந்தக் குட்டி அறை. அதன் படுக்கை, தலையணையின் வாசம், அம்மாவின் சமையல், தம்பியின் சேஷ்டைகள் அனைத்தும் நினைத்து ஏங்க வைத்தன. விடுதியிலுள்ள பொதுத் தொலைபேசியில் இதுவரை மூன்று நான்கு முறை வீட்டுக்குப் பேசிவிட்டாள்.வளாகத்தில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்கள். சிலர் கார்களும் வைத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அப்பா முடியாது என்று சொல்ல மாட்டார். ஆனால் பணத்துக்குத்தான் சிரமப்படுவார். அப்பா வீடு வாங்கிப் போட்டிருந்தார். அதற்குத் தவணை ப்பணம் கட்டி வந்தார்.

 

        தம்முடைய பதினான்கு வருடத்திய டாட்சன் காரை விற்று அண்மையில்தான் 30 ஆயிரம் கொடுத்து ஒரு இரண்டாண்டுகள் பயன்படுத்திய புரோட்டோன் சாகா வாங்கினார். அதற்கும் பணம் கட்டி வந்தார். தம்பியைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தங்கை – அகிலாவின் அத்தை – பிள்ளைகள் இருவருக்கு படிக்க உதவிகள் செய்து வந்தார். அகிலாவுக்குப் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்ததும் அவளுக்கு வேண்டிய எல்லா கட்டணங்களையும் கொடுத்தார். கைச்செலவுக்கும் பணம் கொடுத்தார். போதுமா இன்னும் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.அகிலாவுக்கு எல்லாம் தெரியும். அப்பாவின் நல்ல மனமும் இரக்க சுபாவமும் குடும்பத்தின் மீது உள்ள அன்பும் நன்கு தெரியும். ஆகவே மோட்டார் சைக்கிள் பேச்சை எடுத்தால் சரி என்றுதான் சொல்லுவார். அப்புறம் பணம் திரட்டக் கஷ்டப்படுவார். தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்.அகிலா அந்த வாரம் பல்கலைக் கழக உபகாரச் சம்பளங்கள், கடன் உதவி ஆகியவற்றுக்கான மனு பாரங்களை வாங்கி வைத்திருந்தாள். கெடா மாநில உபகாரச் சம்பள பாரமும் கொடுத்திருந்தார்கள். அப்பாவும் கெடா மாநில மஇகா பிரமுகர்களிடம் பேசி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இவற்றில் ஏதாவது ஒரு உபகாரச் சம்பளம் அல்லது கடன் கிடைத்தால் அப்பாவின் சுமையைக் குறைக்கலாம்.

 

     முதல் வாரத்தில் ரேகிங்கினால் பட்ட மனத்துன்பங்கள் ஆறியிருந்தன. ஆனால் இந்த வெள்ளிக் கிழமை மாணவர் விவகாரப் பிரிவில் விசாரணை இருக்கிறது. அவளுக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் வந்திருந்தது. கணேசன், ஜெசிக்காவுக்கும் கடிதம் வந்திருந்தது. அவள் பாதிக்கப்பட்டவள் என்றாலும் விசாரணைக்குப் போவதற்கு ஒரு குற்றவாளியைப் போல் பயந்தாள். இந்த விசாரணை எப்படித் திரும்பும் என்று சொல்வதற்கில்லை என்று கணேசன் கூறியிருந்தான்.எப்படியிருந்தாலும் விசாரணை யாராவது ஒருவருக்குப் பாதகமாகத்தான் முடியப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. ராஜன் தண்டிக்கப் படுவான். அவன் நண்பர்கள் தண்டிக்கப் படுவார்கள். ஆனால் ராஜனின் பொய்யும் பரசுராமனின் நடிப்பும் நிலைபெற்றால் கணேசன் தண்டிக்கப் படலாம். அங்கே நியாயம் தோற்கும். ஏமாற்று வெல்லும். எப்படியிருந்தாலும் யுஎஸ்எம் இந்திய மாணவர்களுக்கு அது பெரிய அவமானம் என்றுதான் தோன்றியது.அவள் தேசா கெமிலாங்கை அடைந்து உள்ளே நுழைந்த போது இந்த எண்ணம்தான் அவளுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

 

      எட்டே முக்கால் மணிக்கு ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டத்தின் முன்னால் அகிலா வந்து இறங்கியபோது கணேசன் ஏற்கனவே அங்கு காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தவாறே அவர்களிடம் சென்றான்.விசாரணை ஒன்பது மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ராஜன், மனோகரன், வின்சன்ட் ஆகியோர் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு இன்னொரு இடத்தில் நின்றார்கள். கணேசனைப் பார்த்து கேலிச் சிரிப்புகளும் கெக்களிப்புக்களும் எழுந்தன. இந்த இரண்டு மூன்று வாரங்களில் அந்தக் கூட்டம் பரசுராமனை விட்டு அகலவில்லை. பரசுராமன் தனது உரிமைப் பதிவான கோணல் சிரிப்புடன் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்.அகிலா மனப்படபடப்புடன் கணேசனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெசிக்கா வழக்கம் போல் “ஹை கணேஷ்” என்று பிரகாசமான குரலில் கூவினாள்.“ரெடியா இருக்கிங்களா அகிலா?” என்று கேட்டான் கணேஷ்.“ரெடிதான். ஆனால் பயமா இருக்கு!”“இவள் ரொம்பவும் பயப்படுகிறாள் கணேஷ். உண்மையைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்?” என்றாள் ஜெசிக்கா.“உண்மையைச் சொல்ல பயப்படவில்லை. விசாரணை என்றாலே ஏதோ கோர்ட்டுக்குப் போவது போல நடுக்கம் வருகிறது”“அந்த பயமே வேண்டாம். இந்த அதிகாரிகளை நிமிர்ந்து பார். உரக்கப் பேசு!” என்று தைரியமூட்டினாள் ஜெசிக்கா.“ஆமாம் அகிலா. நாம் மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் என்ன இருக்கிறது. தைரியமாகப் பேசுங்கள்!” என்றான் கணேசன். அகிலா பலவீனமாகத் தலையாட்டினாள்.

 

      ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் மாணவர் பிரிவு உதவிப் பதிவதிகாரி முத்துராமன் வந்து எல்லாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்தார். பொதுவாகப் பேசினார்.“முதலில் முறையீடு செய்த பரசுராமனையும் அவரது சாட்சிகளையும் உள்ளே கூப்பிட்டு விசாரிப்போம். அது முடிந்ததும் கணேசனையும் அவருடைய சாட்சிகளையும் கூப்பிடுவேன். தயாராக இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றார்.கொஞ்ச நேரத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவர் ரிட்வான் வந்தார். “பல்கலைக் கழகத்தின் பேரைப் பாழ்படுத்துகிறீர்களே!” என்பதைப் போல் எல்லாரையும் ஒரு கடுமையான குற்றவாளிப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார்.அடுத்த ஐந்து நிமிடங்களில் பேராசிரியர் முருகேசு காரில் வந்து காரை நிறுத்திவிட்டு ஒரு கோப்புடன் இறங்கினார். விசாரணைக் குழுவில் அவர் இருக்கிறார் என்று தெரிந்த போது கணேசனுக்குத் தைரியமாக இருந்தது. ஆனால் அவர் முன்பு பேசியிருப்பது அவன் நினைவுக்கு வந்து அவனைப் பயமுறுத்தியது. “ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”அகிலா அறிமுக வாரத்தில் இந்து மாணவர்களுக்கான சமய விளக்கக் கூட்டத்தில் அவர் பேசக் கேட்டிருக்கிறாள். அவர் தன் அப்பாவுக்கு அறிமுகமானவர் என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் அவரைப் பார்த்து புன்னகைத்தனர். ஜெசிக்கா “ஹலோ புரொ·பெசர்!” என்று தனது இயற்கையான உச்சக் குரலில் கத்தினாள்.

 

     சரித்திர இயலில் அவருடைய பாடம் ஒன்றை ஜெசிக்கா எடுத்திருக்கிறாள். ஆகவே அவரைத் தெரியும்.“ஜெசிக்கா! உனக்கென்ன வேலை இங்கே?” என்று கேட்டார் முருகேசு.“நான் கணேசன் சார்பில் முக்கிய சாட்சி!” என்றாள் ஜெசிக்கா.“அப்படியா! சரி. குட் லக்!” என்று ராஜன் பக்கமாகவும் திரும்பி ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு உள்ளே நடந்தார்.ஒன்பது மணிக்கு சரியாக முத்துராமன் கூப்பிட பரசுராமன், ராஜன் குழு கூட்டமாக உள்ளே சென்றது. கதவு அடைக்கப் பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கணேசன், அகிலா, ஜெசிக்கா தணலில் இருப்பது போல் இருந்தார்கள்.“அன்றைக்கு அந்தக் கூட்டத்தில நடந்த உண்மைகளை நமக்காகப் பேச சாட்சிகள் இல்லை அகிலா. இருந்தவங்க அத்தனை பேரும் அவங்க ஆளுங்க. ஆகவே நீங்களும் நானுந்தான் உறுதியாகப் பேசணும்!” என்றான் கணேசன்.“ஜெசிக்கா இருக்காங்களே!”“ஜெசிக்கா நேரடியான சாட்சி இல்ல. நடந்தத உங்க வாயால கேட்ட வெளி சாட்சிதான். ஆகவே அவ்வளவு பலமா இருக்காது.!”அகிலாவுக்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது.9.20க்கு முத்துராமன் கதவைத் திறந்து வெளியே வந்து “வாங்க!” என்றார்.உள்ளே நுழைந்தார்கள்.

 

        முட்டை வடிவ மேசையில் விசாரணை அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவே மாணவர்கள் விவகாரப் பிரிவின் உதவித் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ சலீம் தலைவராக இருந்தார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் மென்மையாகப் பேசி இனிமையாகப் பழகும் மனிதர். கணேசனை அவருக்குத் தெரியும் அவருக்கு இடது பக்கத்தில் ரித்வான். வலது பக்கத்தில் பேராசிரியர் முருகேசு. கொஞ்சம் தள்ளி உதவிப் பதிவதிகாரி முத்துராமன்.பரசுராமன், ராஜன் குழுவினர் எதிர்ப்பக்கத்தில் கூட்டாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடனான விசாரணை முடிந்து விட்டதற்கான ஆறுதல் அவர்கள் முகங்களில் தெரிந்தது.டத்தோ சலீம் மிருதுவான மலாயில் பேசினார். “கணேசன். இது விசாரணைக் குழு. இந்தக் குழுவில் இந்திய மாணவர் பண்பாட்டுச் சங்கத்தின் ஆலோசகர் என்ற முறையில் பேராசிரியர் முருகேசுவையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது தெரியும் அல்லவா? பரசுராமன் என்ற இந்தப் புதிய மாணவனை நீங்கள் ரேக் பண்ணியதாகவும், கன்னத்தில் அறைந்து தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அந்தச் சம்பவம் நடந்தபோது உடனிருந்ததாக ராஜன், மனோகரன், வின்சன்ட் சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.

 

       ரேகிங்கைப் பல்கலைக் கழகம் தடைசெய்திருப்பதுடன் ரேகிங் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்திருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”கணேசன் முதலில் பரசுராமனைப் பார்த்தான். அவன் கோணல் சிரிப்பு மறைந்து அவன் முகத்தில் கொஞ்சம் பயம் படர்ந்திருந்தது.“டத்தோ. நடந்த சம்பவத்தை இவர்கள் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை அகிலா என்ற இந்த முதலாண்டு மாணவியின் விளக்கத்திலும் நான் எழுதிக் கொடுத்துள்ள முறையீட்டிலுமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரேகிங் செய்தது ராஜன், மனோகரன், வின்சன்ட் குழுவும் அவர்கள் நண்பர்களும்தான். ரேகிங்கிற்கு உட்படுத்தப் பட்டவர்கள் பரசுராமனும் அகிலாவும். நான் தற்செயலாக அங்கு போக நேர்ந்தது. இந்தப் பரசுராமன் அகிலாவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பெண் பயந்து ஒடுங்கியிருந்தார். இவரைக் காப்பாற்றவே நான் பரசுராமனை அறைந்து தள்ளி இவரை விடுவித்து வந்தேன்! ரேகிங்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!” அதோடு நிறுத்தினான். இப்போது அதிகம் பேசவேண்டாம் என முடிவு செய்து கொண்டான்.

 

        டத்தோ அகிலாவைப் பார்த்தார். “அகிலா! நீ என்ன சொல்கிறாய்?”அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டை வரண்டு போனது. “அவர் சொல்வதுதான் உண்மை டத்தோ, அப்படித்தான் நடந்தது!” என்று அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.“இது உண்மையாக இருந்தால் இந்தச் சம்பவம் பற்றி நீ ஏன் முதலில் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு முறையீடு செய்யவில்லை. இதுபற்றி அறிமுக வாரத்தில் படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறோமே!”ஆமாம். படித்துப்படித்துச் சொன்னார்கள். பயம். கூச்சம். தப்பித்ததே போதும், இந்த சனியன்களிடம் இன்னமும் விகாரம் வேண்டாம் என்று பயந்து ஓடும் புத்தி. விசாரணை வழக்குகள் என்ற தொல்லைகளைத் தவிர்த்தல். “சும்மா வேடிக்கையா விளையாண்ட நம்ம இந்தியப் பசங்களப் போய் காட்டிக் குடுத்திட்டியே!” என்று மற்ற இந்திய மாணவர்கள் சொல்வார்கள் என்ற அச்சம். இதில் எந்தக் காரணத்தைச் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள்?“எனக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது டத்தோ!”“அப்புறம் மறுநாள் காலந் தாழ்த்தி சொல்வதற்கு எப்படி தைரியம் வந்தது?”“கணேசன் மேல் பழி வந்தது என்று கேள்விப் பட்டவுடன் உண்மையைச் சொல்ல முன் வந்தேன்!”“அப்படியானால் கணேசனைக் காப்பாற்றத்தான் இப்படிச் செய்தாயா?”திகைத்தாள். இந்தக் கேள்விக்கு ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அது தவறாகப் போய்விடக் கூடும் என அவளுக்குப் பட்டது. ஆனால் உண்மையைச் சொல்லுவதைத் தவிர வேறு யுத்திகளைப் பற்ற யோசிக்க வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள். “உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம்.

 

       உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்று ஜெசிக்கா அன்று சொன்னதை நினைத்துக் கொண்டாள்.“ஆம் டத்தோ! உண்மையைச் சொன்னால் அவர் மீதுள்ள குற்றம் நீங்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்!”“அப்படிச் சொல்ல உன்னை யாராவது வலியுறுத்தினார்களா?”கேள்வியின் தொனி நன்றாக இல்லை. ஜெசிக்காவைத் திரும்பிப் பார்த்தாள். ஜெசிக்காவின் சிரித்த முகத்தில் கூடக் கொஞ்சம் கலவரம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்.“ஜெசிக்கா என் ரூம் மேட். அவர் மூலமாகத்தான் கணேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டேன். அவர் கூறிய ஆலோசனைதான். ஆனால் அவர் வலியுறுத்தியிராவிட்டாலும் செய்தி தெரிந்தவுடன் நானாக முன் வந்திருப்பேன்! ஏனென்றால் ரேகிங்கிலிருந்து அவர் என்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றி உணர்ச்சி இருக்கிறது” குரலில் தைரியம் ஏறிக் கொண்டிருந்தது. நான் ஏன் குற்றவாளி போலப் பயந்து பேச வேண்டும் என்ற கோபம் வந்தது.டத்தோ சலீம் ஜெசிக்காவைப் பார்த்தார். “ஜெசிக்கா. உனக்கு கணேசனைத் தெரியுமா?”“நன்கு தெரியும். நண்பர்.

 

      சில பாடங்கள் ஒன்றாக எடுக்கிறோம்!” ஜெசிக்கா தெளிவாகச் சொன்னாள்.“கணேசன் உன் நண்பர் என்பதால் அவர் மீதுள்ள குற்றத்தைத் தவிர்ப்பதற்காக நீங்கள் மூவரும் சேர்ந்து இந்தப் பொய்யை ஜோடித்திருப்பதாக ராஜன் என்ற இந்த மாணவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”ஜெசிக்கா அதிர்ச்சியடைந்திருந்தாள். கணேசனும் விதிர்த்திருந்தான். அகிலாவின் முகம் இரத்தக் களையிழந்தது.“இல்லை இது பொய் டத்தோ. நாங்கள் மூவரும் நடந்ததைத்தான் பேசுகிறோம்!”“ஆனால் ரேகிங் போது நடந்தது என்ன என உனக்குத் தெரிய வாய்ப்பில்லையே?”“ரேகிங் நடந்து அதிலிருந்து மீண்டு அகிலா அறைக்குத் திரும்பியதும் படுக்கையில் படுத்து விம்மி அழுதார். நான் கேட்டவுடன் நடந்ததைச் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் அவர் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அதை நான் நம்பினேன். அதைத்தான் உங்களிடம் சொல்லுகிறேன்!”பேராசிரியர் முருகேசு தொண்டையைக் கனைத்தார். “டத்தோ! நான் இந்த பரசுராமனை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்!” என்றார்.“கேளுங்கள்” என்றார் டத்தோ சலீம்.அவர் பரசுராமனைப் பார்த்துக் கேட்டார். “ரேகிங் ஒன்றும் நடக்கவில்லை. சும்மா பேசிக்கொண்டுதான் இருந்தோம் என்று முறையீட்டில் எழுதியிருக்கிறாய்.

 

     கணேசன் வந்துதான் ரேகிங் ஆரம்பித்தார் என்றும் நீ அவர் சொல்லியதைச் செய்ய மறுத்ததால் அறைந்து தள்ளியதாகவும் சொல்லியிருக்கிறாய். அந்த இடத்தில் அகிலா என்ற பெண் இருந்தாரா? அதைப்பற்றி உன் முறையீட்டில் ஒன்றும் இல்லையே?”பரசுராமன் கொஞ்சம் பரக்கப் பரக்க விழித்தான். “அங்கே பலபேர் கூட்டமாக இருந்தார்கள். யார் யார் என எனக்குத் தெரியாது. எல்லார் பெயரையும் நான் ரிப்போர்ட்டில் எழுதவில்லை. இந்தப் பெண் இருந்தாரா என்றும் தெரியாது. இருந்திருந்தாலும் நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்”“அப்படியானால் இந்தப் பெண் சொன்ன எதுவும் அங்கு நடக்கவில்லை. இவரை நீ முத்தமிட முயன்றதாக அவர் சொல்லியிருப்பது கணேசன் சொல்லியிருப்பது பொய். அப்படித்தானே?”பரசுராமன் மேலும் கீழும் பார்த்தான். “அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது எனக்கு முற்றாக நினைவில்லை. கணேசன் வந்து என்னை அடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைத்தான் எழுதினேன்!”“அப்படியானால் இந்தப் பெண்ணை முத்தமிடு என்று யாரும் உனக்குச் சொல்லவுமில்லை, நீ அப்படிச் செய்யவுமில்லை!”ஒரு நிமிடம் தயங்கி ராஜாவைப் பார்த்துவிட்டு பலவீனமான குரலில் சொன்னான்: “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!”“அப்படியானால் இந்தப் பெண் உன்மீது பொய்க்குற்றச் சாட்டு சுமத்துகிறாரா?”பரசுராமன் மேலும் மிரண்டான். “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!” என்றான்.ராஜன் முந்திக் கொண்டு சொன்னான்: “டத்தோ! அங்கு நடந்ததைக் கண்ணால் பார்த்தவர்கள் நாங்கள். ஏன் நாங்கள் சொல்வதை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்?”டத்தோ சலீம் சொன்னார்: “இங்கே நடப்பது விசாரணைதான். உண்மையை வெளிக் கொணர்வதே எங்கள் வேலை.

 

       சந்தேகம் எல்லார் மீதும் உண்டு. ஆகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி உதவி செய்யுங்கள்!” என்றார்.இன்னும் சில கேள்விகள் கேட்டார்கள். ஆனால் புதிய விவரங்கள் ஏதும் வரவில்லை.இறுதியாக டத்தோ சொன்னார். “சரி எல்லோரும் வெளியில் சென்று காத்திருங்கள்! நாங்கள் கலந்து பேசி எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்!”கணேசனும் மற்றவர்களும் எழுந்து வெளியே வந்தார்கள். கட்டடத்தை விட்டு வெளியேறி மர நிழலுக்கு வந்தார்கள். கணேசன் அங்குள்ள பானம் வழங்கும் இயந்திரத்தில் காசு போட்டு அவர்கள் மூவருக்கும் டின் பானங்கள் வாங்கி வந்தான். வறண்ட தொண்டைகளை நனைத்துக் கொண்டார்கள்.ஒரு மிணறு கொக்கோ கோலா பருகிவிட்டு ஜெசிக்கா சொன்னாள்: “நாம் சொல்லியதை அவர்கள் நம்பவில்லை என்றுதான் தெரிகிறது கணேசன்!”கணேசன் பேசாமல் இருந்தான். அகிலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. “சேச்சே! அழாதிங்க அகிலா!” என்றான்.“இல்லை கணேஷ். இது என்னுடைய குற்றம்தான். நான் உடனே ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும். அவர்கள் முந்திக் கொண்டதால் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள்.

 

      நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்து குற்றவாளி ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது தண்டனை என்றால் எனக்குப் பொறுக்காது” என்றாள்.“சேச்சே! அப்படியெல்லாம் நடக்காது!” என்றான் கணேசன். ஆனால் அப்படியும் நடக்கலாம் என உள்மனம் சொல்லிற்று. அவனுடைய எதிர்காலத்தில் திக்கென இருள் கவிந்து நின்றது.ஓர் இருபது நிமிடம் அவர்கள் நிம்மதி கொள்ளாமல் தங்கள் பயங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். வெறும் பேச்சுக்கள் பேசினார்கள். அதே போல இன்னொரு மூலையில் ராஜனும் அவன் தோழர்களும் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு நின்றும் நடந்தும் அலைந்தார்கள்.முத்துராமன் கதவு திறந்து வந்து அழைத்தார். அனைவரும் உள்ளே போனார்கள். மனப் படபடப்புடன் உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.டத்தோ அவர்களைத் தீர்க்கமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். “இந்த இடத்தில் எல்லாரும் உண்மை பேசவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் உங்கள் முறையீடுகளில் உள்ள முற்றிலும் முரண்பாடான தகவல்களைப் பார்க்கும் போது யாரோ ஒரு தரப்பினர் பொய் பேசுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.”சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார். அனைவரையும் இன்னொரு சுற்றுப் பார்த்தார். அந்த மௌனம் கனத்தது.“இப்போது ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன்.

 

       பொய் சொல்லியவர் உண்மையை ஒப்புக்கொள்ள விருப்பமா?”“நான் பொய் சொல்வில்லை!” என உரக்கக் கூவவேண்டும் என கணேசனுக்குத் தோன்றியது. ஆனால் அதனால் பயன் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்தது. பரசுராமன் தலை கவிழ்ந்திருந்தான். ராஜன் முகத்தை மரம் போல வைத்துக் கொண்டிருந்தான்.“சரி. நீங்கள் யாரும் சொல்லத் தயாராக இல்லை. இந்த விசாரணையில் நிருபிக்கப்படும் ஒரே உண்மை கணேசன் பரசுராமனை அடித்தார், தள்ளினார் என்பது. அதை கணேசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் கூறும் காரணங்கள் வேறாக இருக்கின்றன. இது ரேகிங் என்று எடுத்துக் கொண்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். ஆகவே ரேகிங் குற்றச்சாட்டை நிராகரிப்பது என குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் பரசுராமனைத் தாக்கியதற்காக கணேசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு 100 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறோம்!”அகிலா விம்மும் சப்தம் கேட்டது. பரசுராமன் உம்மென்று இருந்தான். ராஜனும் வின்செண்டும் சிரித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள்.கணேசனின் மனது இருண்டு போனது. நீதி தேவதைக்குக் கண்ணில்லை என்பது உண்மைதானோ? எப்படி நான் இந்த நிலைக்கு ஆளானேன்? என்ன தவறு செய்தேன்? இந்தக் கழிவிரக்கக் கேள்விகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.“என்ன சொல்கிறாய் கணேசன்?” டத்தோ கேட்டார்.என்ன சொல்வது? மேலும் மறுத்து மேலும் தண்டனைக்கும் சிக்கலுக்கும் உள்ளாவதா? அது விவேகமாகாது எனப்பட்டது. ஆனால்… ஆனால் இந்த விஷயம் இதனோடு முடிந்து விட்டதா?“டத்தோ.

 

         உங்கள் தீர்ப்பை நான் மறுப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் இந்த விஷயம் இதனோடு முடியவில்லையே. இந்தச் சம்பவம் நடந்த பிறகு ராஜனும் அவன் நண்பர்களும் வெளியிலிருந்து குண்டர் கும்பல்காரர்களை அழைத்து வந்து என் விடுதிக்கே வந்து என்னை மிரட்டினார்கள். அது பற்றி நான் முறையீடு செய்திருக்கிறேன். அதை விசாரித்தால்தானே இந்த விவகாரம் முடியும்?” என்றான்.டத்தோ சலீம் கொஞ்சம் திகைத்து ரித்வானைப் பார்த்தார். பேராசிரியர் முருகேசுவும் ரித்வானைப் பார்த்தார். “இது உண்மையா ரித்வான். நீங்கள் இதை என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லையே!” என்றார்.ரித்வான் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ. இப்படி ஒரு முறையீடு கணேசன் செய்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து இந்தப் பரசுராமனின் முறையீட்டுக்குப் பிறகுதான் செய்யப் பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து விட்டோம்!”“ஏன்?”“இரண்டு காரணங்கள் டத்தோ. ஒன்று இதற்கும் சாட்சிகள் யாரும் இல்லை. கணேசனின் வார்த்தை ஒன்றுதான். ராஜனை விசாரித்த போது இது உண்மையில்லை என மறுத்துவிட்டார்.

 

        கணேசன் தன் முதல் குற்றத்தை மறைப்பதற்காக ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களை அடுக்குவது போலத்தான் தெரிகிறது. இரண்டாவது இந்தக் குற்றச் சாட்டு மிகக் கடுமையானது. ரேகிங் குற்றச்சாட்டுப் போல இதுவும் பொய்யாய்ப் போனால் கணேசனுக்கு அது நல்லதல்ல. கணேசனை எனக்குத் தெரியும் நல்ல மாணவர். அவரைக் காப்பாற்றத்தான் நான் இதை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை!”கணேசனுக்குத் தலை சுற்றியது. நாற்காலியின் பிடிகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களா? நானா? எப்படி நான் செய்வது சொல்லுவதெல்லாம் இப்படித் தலை கீழாகப் போகின்றது?“ம்… எப்படி கணேசன்?” டத்தோ கேட்டார்.சேற்றில் முழுகிக் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் நிர்வாணமாகி அவமானப்பட்டு முழுக மாட்டேன். என் எதிரிகள் தற்காலிக பலம் பெற்றிருக்கிறார்கள். காற்று அவர்கள் பக்கம் வீசுகிறது. ஆனால் நான் நேர்மையானவன். வளைய வேண்டிய அவசியம் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்டதும் பலம் வந்தது.“டத்தோ. நான் மேலும் மேலும் பொய்ப்பட்டம் கட்டிக் கொள்ள விரும்பவில்லை. இது நடந்தது உண்மை. ஆகவே அதை நீங்கள் விசாரிக்கத்தான் வேண்டும். உங்கள் இறுதித் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்!”“முழுகி விடுவாய்! மூச்சுத் திணறி விடுவாய்! இந்த மரணச் சேறு உன்னை விழுங்கிவிடும்” என உள் மனம் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. பரவாயில்லை.

 

       உண்மை என்னைக் கொல்லுமானால் அப்படியே ஆகட்டும் என்று உறுதியாக இருந்தான்.பேராசிரியர் பேசினார்: “சே ரித்வான். இந்த கணேசனின் முறையீடு மீது ஏதாவது விசாரணை நடத்தினீர்களா?”“குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜனை அழைத்து விசாரித்தேன். இல்லை என்று சொன்னார். அதோடு கோப்பை மூடிவிட்டேன்!”“விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததா என்று கண்டறிய முயன்றீர்களா?”“பார்த்தவர்கள் யாரும் இல்லை. யாரை விசாரிப்பது?”கணேசன் சொன்னான்: “சே ரித்வான். அன்றிரவில் விடுதியின் வரவேற்பறையில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் ஓடிக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்பதை ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்!”ரித்வான் கோபப் பட்டவர் போல இருந்தார். “ஆள் இருந்ததா இல்லையா என்பதே தெரியாது என்கிறாய். டெலிவிஷன் யாரும் இல்லாமலே கூட ஓடிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? யாராவது அடைக்க மறந்து போயிருக்கலாமல்லவா?”டத்தோ சலீம் குறுக்கிட்டார். “ரித்வான். இது கடுமையான குற்றச் சாட்டாக இருக்கிறது. கணேசன் இதில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் தயவு செய்து விசாரித்து எனக்கு ஒரு அறிக்கை தயார் படுத்துங்கள்”டத்தோ கணேசனைப் பார்த்தார்.

 

       “கணேசன். நீ விரும்பியபடி செய்துவிட்டேன். இரண்டாவது குற்றச் சாட்டு நிருபணமாகும் வரையில் இந்த முதல் குற்றச்சாட்டுக்கான தண்டனையை நான் தள்ளி வைக்கிறேன். ஆனால் இந்த இரண்டாம் குற்றச்சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் உன் தண்டனை இன்னும் கடுமையாகக் கூடும். சம்மதமா?” என்றார்.மரணச் சேறு மேலும் என்னை அழுத்துகிறது. இதில் மூச்சு முட்டச் சாக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படியே நடக்கட்டும்.“சம்மதம் டத்தோ!” என்றான்.“சரி. அடுத்த விசாரணைக்கு விரைவில் நாள் குறிக்கிறேன். அனைவருக்கும் நன்றி!” எழுந்து தன் சகாக்களுடன் கைகுலுக்கிவிட்டு அவர் தன் அலுவலகத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் எழுந்தார்கள்.அகிலா தன் வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.***

by parthi   on 15 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
27-Nov-2016 05:56:18 vasudevan said : Report Abuse
நல்ல முயற்சி . நன்றி இச்சிறுகதை என் கல்விக்கு தேவையான ஒன்று இக்கதையின் மூன்றாம் பாகம் தேவை படுகிறது. கிடைக்குமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.