|
||||||||
கால்வாயா வாய்க்காலா ? |
||||||||
கால்வாய் என்றால் என்ன ? வாய்க்கால் என்றால் என்ன ? கால்வாயும் வாய்க்காலும் ஒன்றேதானா ? அல்லது வேறு வேறா ? வெவ்வேறு என்றால் இரண்டுக்கும் பொருள் வேறுபாடு என்ன ? பார்ப்போம்.
கால்வாய், வாய்க்கால் - இரண்டும் ஒன்றுபோல் தோன்றும் சொற்கள் என்றாலும் வெகு நுணுக்கமான பொருள் வேறுபாடு கொண்டிருக்க வேண்டும். அந்த வேறுபாட்டின் பொருட்டே அச்சொற்கள் மீண்டும் மீண்டும் மக்கள் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
இச்சொற்களுக்கு அகராதி சுட்டும் பொருள் என்னவென்று தேடினால் அதிர்ச்சி காத்திருக்கிறது. அகராதிகள் பலவற்றிலும் கால்வாய் என்பதற்கான பொருள் வாய்க்கால் என்றிருக்கிறது. வாய்க்கால் என்பதற்கான பொருள் கால்வாய் என்றிருக்கிறது. “அவரைப் பார்க்கப் போனால் இவரைப் பார் என்கிறார், இவரைப் பார்க்கப்போனால் அவரைப் பார் என்கிறார்” என்னும் கதைதான். நம் அகராதிகள் குறையுடையவை என்பதற்கு இவ்விரண்டு சொற்களுக்கும் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நல்ல எடுத்துக்காட்டு.
பால்மாடு என்பதும் மாட்டுப்பால் என்பதும் ஒரே பொருளையா சுட்டுகிறது ? பால்மாடு என்பது மாட்டைச் சுட்டுகிறது. மாட்டுப்பால் என்பது பாலைச் சுட்டுகிறது. இருபெயரொட்டி ஒருசொல் உருவாகியிருந்தால் அச்சொல் அதன் பிற்பாதியைத்தான் சுட்டும் என்பது புலனாகிறது. அதன் முன்னொட்டு, விளக்கி விவரிப்பதற்காகத் தோன்றியிருக்கிறது. மாடுதான், ஆனால் பால் சுரப்பு தற்போதும் உள்ளது என்பதைச் சொல்ல பால்மாடு. பால்தான் ஆனால் எருமையிடமோ ஆட்டிடமோ கறந்ததன்று, மாட்டிடம் கறந்தது என்பதைச் சுட்ட மாட்டுப்பால். இந்த எடுத்துக்காட்டின் வழிகாட்டுதல்படி கால்வாயையும் வாய்க்காலையும் ஆராய்வோம்.
கால் என்பது உடலுறுப்புகளில் ஒன்று. வாய் என்பதும் உடலுறுப்புத்தான். ஆக உடலுறுப்பை உருவகப்படுத்தி இச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கால் என்பது அடிப்பகுதி. வாய் என்பது தலைப்பகுதி. வாய் என்பது ஒன்றைக் கொள்வதற்காகத் திறப்பது... உள்ளே ஏற்றுக்கொண்டதும் மூடிக்கொள்வது. கால் என்பது இரண்டாக நான்காக பற்பலவாகப் பிரிவது. ஒவ்வொரு காலும் கீழ்ப்பகுதிக்குச் சென்று விரல்களாகப் பிரிகின்றன. அத்தோடு வடிவம் முடிகிறது.
கால்வாய் என்பது வாய் என்று முடிவதால் வாயைக் குறிக்கிறது. கால் என்பது அதன் முன்னொட்டு. காலுக்கு நீர்கொள்ளும் வாய் - என்பதுதான் கால்வாய் என்பதன் பொருள். ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. நீர்கொள்வதற்காக வாய்போல் திறக்கும் மதகுகள் அமைந்துள்ள பகுதி. நீர்க்கோள் முடிந்ததும் மதகுகள் மூடிக்கொள்ளும். வாய்மூடிக்கொள்வது போல. ஆக, ஆற்றிலிருந்து, அணையிலிருந்து, ஏரி குளங்களிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் மதகுகள்வழியே விடுபட்டுப் பாயத் தொடங்கும் தலைமை வழியைக் ‘கால்வாய்’ என்று கொள்ளவேண்டும்.
கிருட்டிணை நதி பூண்டி நீர்த்தேக்கத்திற்குக் கால்வாய் வழியாக வருகிறது. காளிங்கராயன் கால்வாயில் பாயும் பவானியாற்றுத் தண்ணீர் கொங்குப் பகுதியை வளங்கொழிக்கச் செய்கிறது.
அடுத்து உள்ளது வாய்க்கால். கால் என்று முடிவதால் இச்சொற்சேர்க்கை கால்பகுதியைக் குறிக்கிறது. கால்வாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கிளைவிட்டுப் பிரிந்து கடைமடைவரை சென்று பாத்திக்குள் பாய்வது. நீர்வழிப்பாதையின் கடைசிப் பகுதியை, கால்பகுதியைக் குறிப்பது வாய்க்கால்.
கால்கள் எங்கும் திரும்புமல்லவா... வாய்க்கால்களையும் எங்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம். வரப்பையும் வாய்க்காலையும் தனியாள் வெட்டலாம். கால்வாய் எடுக்க ஊர்கூட வேண்டும். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது எப்படித் தோன்றிற்று என்றால் உங்கள் வாய்க்காலுக்குத் தண்ணீர் வரவேண்டுமென்றால் நீர்முறையை வல்லவன் வகுத்துத் தரவேண்டும். அவன் மறுத்தால் வாய்க்கால் தண்ணீரின்றிக் காயும். கால்வாய்த்தண்ணீர் வேறு காட்டுக்குப் போய்விடும் !
- மகுடேசுவரன் |
||||||||
by Swathi on 19 Dec 2014 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|