LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நளவெண்பா

கலிநீங்கு காண்டம்

தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் தீயிடைப்பட்ட ஒருவன் துயரக்குரல் கேட்டது

317. மன்னா வுனக்கபய மென்னா வனத்தீயில்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.

நளன் ஒரு பாம்பைத் தீயிடைக் கண்டது

318. ஆருந் திரியா அரையிருளில் அங்கனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டா னெதிர்.

நளன் தீயிடம் சென்றது

319. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி யருளா லரவரசை - நோக்கி
அடைந்தா னடைதலுமே ஆரழலோ னஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து.

பாம்பு தனது வரலாறு கூறித் தன்னை விடுவிக்க வேண்டியது

320. வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்

ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.


321. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.

322. என்றுரைத்த அவ்வளவி லேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றா னாரணியந் தன்னின்
இரவரசை வென்றா னெடுத்து.

323. மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளா லொன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த வுதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று.

324. ஆங்கவன்றா னவ்வா றுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்ற வாய்மையால்
எண்ணினான் வைத்தா னெயிறு.

325. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்
கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.

அரவை நோக்கி நளன் உரைத்தது

326. ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றா னேற்றமரிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து.

அரவின் மறுமொழியும் அது அளித்த வரமும்

327. காயுங் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து.

328. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயுந் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினா யிந்த
அணியாடை கொள்கென்றா னாங்கு.

329. சாதி மணித்துகில்நி சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கு முரு.

330. வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.

நளன் அக்கான் கடந்து சென்றது

331. இணையாரு மில்லா னிழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும்
எண்ணாக வேந்த னெழுந்து.

நளன் கடற்கரையைக் கண்டது

332. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தன்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.

நளன் கடற்கரையில் பலவற்றைக் கண்டு புலம்பல்

333. கொம்ப ரிளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.

334. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தா னறவுயிர்த்து
நெஞ்சினா லெல்லாம் நினைந்து.

335. காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ வுரை.

336. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீ ரெனக்கு.

நளன் அயோத்தி நகரை அடைந்தது

337. முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீ ரயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு.

நளன் அயோத்தி மன்னனை அடைதல்

338. மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலா னுயர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமி னென்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று.

339. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயநீ
எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு.

340. அன்னம் மிதிப்ப அலர்வழியுந் தேறல்போயச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலுந் தேர்த்தொழிலும் வல்லன்யா னென்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து.

தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது

341. என்னை யிருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானா ளுணர்ந்து.

342. காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தா நேர்நின் றெதிர்மாற்றந் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.

புரோகிதன் அயோத்தியை அடைந்தது

343. மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடுங் கானகமு நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தா னயோத்தி நகர்.

புரோகிதன் கூறிய மொழிகேட்டு நளன் கூறிய மறுமொழி

344. கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினா னந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தா னெதிர்.

345. ஒண்டொடி தன்னை யுறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தானென் றையுறேல் நீ.

தமயந்தி வந்த புரோகிதனை வினாவியது

346. எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையா ளாங்கு.

புரோகிதன் மறுமொழி

347. வாக்கினால் மன்னவனை யொப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கி னவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாக னென்றுரைத்தான்
ஏந்துநூல் மார்ப னெடுத்து.

தமயந்தி தன் இரண்டாஞ் சுயம்வரச் செய்தி அறிவிக்கச் செய்தது

348. மீண்டோ ர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரந் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்த னென்றாள் பரிந்து.

இரண்டாஞ் சுயம்வரச் செய்தி கேட்டு இருதுபன்னன் கூறியது

349. எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரச மறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றா னந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து.

350. வேத மொழிவாணன் மீண்டுஞ் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றா னிகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து.

நளன் அதுகேட்டுக் கூறியது

351. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையா ளின்று - பறிபீறி
நெல்லிற் பருவரா லோடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்.

இருதுபன்னன் கூறிய சமாதானம்

352. என்மே லெறிகின்ற மாலை யெழில்நளன்தன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தா னீதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தா னன்னான் மறித்து.

நளனது தியக்கம்

353. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது?

நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டிச் செல்ல உடன்பட்டது

354. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவன் முடிப்ப னினியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன்.

355. ஒற்றைத் தனியாழித் தேரென்ன வோடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.

நளன் தேர் ஓட்டிய சிறப்பு

356. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.

357. மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

இருதுபன்னனது கணிதச் சிறப்பு

358. இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணில்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்
தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான்.

இருதுபன்னன் நளனிடம் கூறியது

359. ஏரடிப்பார் கோலெடுப்ப இந்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலு மித்தொழிலும் மாற்றுதியோ வென்றுரைத்தான்
தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.

கலி நளனைவிட்டு நீங்கியது

360. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.

இருதுபன்னன் குண்டினபுரி அடைந்தது

361. ஆமை முதுகி லலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையா னாங்கு.

இருதுபன்னன் வீமராசனுக்குத் தன் வரவு அறிவித்தது

362. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.

வீமராசன் இருதுபன்னனை வினாவியது

363. கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.

இருதுபன்னன் மறுமொழி

364. இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மே லுள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.

நளன் மடைவாயிற் புக்கது

365. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதி லடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து.

நளன் புக்க மடைவாயிற் சிறப்பு

366. ஆதி மறைநூ லனைத்துந் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாம லெல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.

தமயந்தி நளன் செய்யும் மடைத்தொழிலை அறிந்துவரச் செய்தது

367. இடைச்சுரத்தில் தன்னை யிடையிருளில் நீத்த
கொடைத் தொழிலா னென்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து.

தமயந்தி தன் மக்களை நளன்பால் விடுத்தது

368. கோதை நெடுவேற் குமரனையுந் தங்கையையும்
ஆதி யரச னருகாகப் - போத
விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து.

தன் மக்களைக் கண்ட நளன் அவர்களோடு உரையாடியது

369. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.

370. மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோ மெங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் னென்றா ரழுது.

371. ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா வுயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணீ ருகுத்து.

372. உங்க ளரசொருவன் ஆளநீ ரோடிப்போந்
திங்க ணுறைத லிழுக்கன்றோ - செங்கை
வளவரசே யென்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி யெடுத்து.

373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.

374. எந்தை கழலிணையி லெம்மருங்குங் காணலாம்
கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு.

375. மன்னர் பெருமை மடைய ரறிவரோ
உன்னை யறியா துரைசெய்த - என்னை
முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.

அச்செய்தியைக் கேட்ட தமயந்தியின் துயரம்

376. கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான்கண்டு
மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தா ளழுது.

377. கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டு மடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ வென்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து.

உள்ள நிலைமையைத் தமயந்தி தன் தந்தைக்கு அறிவித்தது

378. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்
கொற்றத் தனித்தேருங் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலா னென்றாள் குறித்து.

வீமராசன் நளனைத் தோற்றத்தால் அறிய முடியாது வாக்கினால் அறிந்தது

379. போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.

380. செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினா னோக்கித் தெளிந்தா னுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.


வீமராசன் நளனைத் தன் உருக்காட்ட வேண்டியது

381. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்குந் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் னுரு.


நளன் கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்ததும் சுய உருப்பெற்றதும்

382. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.

383. மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோ ரருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.

நளன் மக்கள் அவனைச் சுயவடிவில் கண்டு மகிழ்ந்து வணங்கியது

384. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்

போதலருங் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.


தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது

385. பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்
சீதக் களபதனஞ் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.

தமயந்தியின் துயரநிலை

386. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.

வானவர் நளனை வாழ்த்திப் பூமாரி பெய்தது

387. உத்தமரின் மற்றிவனை யொப்பா ரொருவரிலை
இத்தலத்தி லென்றிமையோ ரெம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.

கலி, நளனைத் தன்பால் வரம் கொள்ள வேண்டியது

388. தேவியிவள் கற்புக்குஞ் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகி லொப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன்.

நளன் கேட்ட வரம்

389. உன்சரிதஞ் செல்ல வுலகாளுங் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையே லென்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.

கலி நளனுக்கு வரமளித்து மீண்டது

390. என்காலத் துன்சரிதங் கேட்டாரை யானடையேன்
மின்கா லயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று

கட்டுரைத்துப் போனான் கலி.

வீமராசன் நளன் முதலியோர்க்கு விருந்தளித்தது

391. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையு மக்களையுங் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.

இருதுபன்னன் நளனிடம் தன் பிழை பொறுக்க வேண்டிப் பின் தன் நகர்க்கேகியது


392. உன்னையா னொன்று முணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீ ரயோத்தியார் மன்.

நளன் தனது மனைவி மக்களுடன் நிடதநாடு சென்றது

393. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேநீ ரளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.

394. தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி யெத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனு நம்பதிதான் மிக்கு.


சூரியோதயம்

395. இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்
கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.

நளன், மாவிந்த நகரைச் சார்ந்த ஒரு சோலையில் தங்கியது

396. மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில்.

நளன் புட்கரனுக்கு அறிவித்தது

397. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணைய முளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

புட்கரன் நளனைக் கண்டது

398. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டா னெதிர்.

புட்கரன் நளனை நலம் வினாவியது

399. செங்கோ லரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோ லரசன் வினாவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்
யாவர்க்குந் தீதிலவே யென்று.

நளனும் புட்கரனும் மறு சூது ஆடியது

400. தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணைய மெனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து.

நளன் தன் நாடு முதலியன வென்று கொண்டது

401. அப்பலகை யொன்றி னருகிருந்தார் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து.

புட்கரன் யாவும் இழ்ந்து தன் நாடு சென்றது

402. அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.

நளன் தன் நகரை அடைந்தது

403. ஏனை முடிவேந்த ரெத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகர மெய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன்.

நகர மாந்தரின் மகிழ்ச்சி நிலை

404. கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.

(பின்னுரை)

405. வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்து வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடத்திட்டான் பண்டு.

by Swathi   on 21 Dec 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
05-Mar-2019 00:55:27 Nasrine said : Report Abuse
It is very useful 🙂🙂🙂
 
08-Feb-2017 07:29:20 பிரியா said : Report Abuse
பிடித்திருந்தது ஆனாலும் செய்யுள்களை தெளிவாக தேடிக்கொள்ளமுடியவில்லை . பொருள் சேர்த்து இருக்கலாம் நன்றி வாழ்க தமிழ் .
 
21-Jan-2016 05:13:56 tbchandrabose said : Report Abuse
எப்படி அடுத்த பக்கம் போவது என்று விளங்கவில்லை
 
05-Mar-2014 06:27:11 லக்ஷ்மி துர்கா said : Report Abuse
எனக்கு இந்த பக்கம் மிகவும் பிடித்திருகிறது . இது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது . இதில் செய்யுளின் விலகமும் சேர்ந்திருந்தால் நல்லா இருக்கும் என நினைகிறேன். இதுதான் என் கருத்து.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.