காமராஜ் எனக்கு ஓர் புதிராகத் தோன்றுகிறார் என்றார் வடநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் . அதிகம் படிக்காத சாமராசரால் , நிர்வாக நுணுக்கங்கள்அறியாத காமராசரால் , தமிழக அரசு நிர்வாகத்தை முறையாகவும் , சரியாகவும் , முழுமையாகவும் இயக்க முடிந்தது எப்படி ? ஆங்கிலம் அல்லது இந்தியில் அதிகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்ற நிலையில் உள்ள இந்திய அரசியல் அரங்கில் , இரண்டிலும் பாண்டித்தியம் பெறாத காமராசரால் பரிணமிக்க முடிந்தது எப்படி ?
இத்தகைய வினாக்களுக்கு விடை காண முடியாதவர்களின்பார்வையில் , காமராசர் ஒரு புதிராகத்தான் விளங்கினார் . ஆனால் காமராசர் புரிந்து கொள்ள முடியாத புதிரா என்றால் , இல்லவே இல்லை .
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து , சாதாரண மனிதனாக வளர்ந்து , சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து , அவைகளுக்குத் தீர்வு காண்பதையே , தனது வழியாக , நெறியாக , லட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவர் அவர் . அத்தகைய லட்சிய வாழ்க்கைதான்அவரது வெற்றிக்கு அடிப்படைக் காரணம் . இதைப் புரிந்தவர்களுக்கு அவர் புதிரல்ல .
முதல்வராகப்பொறுப்பேற்ற முதல் நாளில் , கோப்புகளைப் பார்க்க அமருகிறார் காமராசர் . அவருக்கு முன்னர் கோப்புகள் 2 வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன . இது என்ன இரண்டு வரிசை ? முதல் வரிசையிலே சில கோப்புகள் . இரண்டாவது வரிசையில் பல கோப்புகள் ?- என அவர் கேட்க , நேர்முக உதவியாளர் சொல்லுகிறார் “ முதல்வரிசையில் உள்ளவை முக்கயமானவை 2- வது வரிசையில் உள்ளவை முக்கியமில்லாதவை ” இதனைக்கேட்டு அதிர்ந்து போன அவர் கூறுகிறார் “ முதல்வருக்கு வரும்கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா , என்ன ? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான் . அவற்றை நான் அன்றே - உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும் . அதுதான் முக்கியம் “.
அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கல்வி , பொதுப்பணி , தொழில்வளர்ச்சி , பஞ்சாயத்து , கதர் வளர்ச்சி என்று பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர் . அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப்போதுமான வேலை இல்லை , அப்பணி இடங்கள் அவசியம் இல்லை , அதில் பணிபுரியும் 234 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யலாம் என்றும் , அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் தலைமைச்செயலாளர் பரிந்துரைக்க , சம்பந்தப்பட்ட அமைச்சரும் , நிதி அமைச்சரும் அதற்கு ஒப்புதல் அளித்த பின்பு , முதல் அமைச்சருக்கு வருகிறது கோப்பு . கோப்பினைப் படித்த காமராசர் தலைமைச் செயலாளரை அழைத்து , “ ஏன் சார் ? 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க . அவங்க ஒவ்வொருவரும் பட்டதாரிங்க ; அஞ்சு வருஷமா இந்த அரசாங்கத்திலே வேலை பாக்கிறவங்க ; அவங்க ஒவ்வொருத்தரும் தனிநபர் இல்லே ; அவங்களை நம்பி 234 குடும்பங்கள் இருக்கு , அவங்களை வீட்டுக்கு அனுப்பினா , 234 குடும்பங்கள் வீதிக்கு வந்திடுமே அது பெரிய பாவம்ங்க . அவங்களுக்குப் போதுமான வேலை இல்லேண்ணா , புதிய பொறுப்புகளைக்கொடுங்க . நல்லா வேலை வாங்குங்க . வீட்டுக்கு அனுப்பக் கூடாதுங்க . அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லை . அரசை நம்பி வாழும் பணியாளர்களின் நலனும் முக்கியம் - என்றார் முதல்வர் . 234 குடும்பங்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டது .
1962- ல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லப்பாண்டியனை , முதல்வரும் , ஆளுங்கட்சி , எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டிப்பேசுகிறார்கள் . கூட்டம் முடிந்தவுடன் , சபாநாயகர் தன் இல்லம் செல்ல , தன் காரை நோக்கிப் புறப்படுகிறார் . இதனைக் கவனித்துவிட்ட காமராசர் , விருட்டென்று எழுந்து முன்னால்சென்று , காரில் அமர்ந்து விட்ட சபாநாயகரைப் பார்த்து சரி போயிட்டு வரீங்களா ? என்று வணங்கி வழி அனுப்புகிறார் . இதனைப் பார்த்த உறுப்பினர்களோ திகைக்க , சபாநாயகரோ சங்கடத்தால் மௌனியாகிறார் .
அன்று இரவே செல்லப்பாண்டியன் காமராசரிடம் , ஐயா நீங்கள் காலையில் என்னை வழி அனுப்பிய விதம் , எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்கிறார் . அதற்கு காமராசர் வேணுமிண்ணுதான் நான் அப்படிச்செய்தேண்ணேன் . சபாநாயகர் பதவி எவ்வளவு உயர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியணுமில்லையா ? அப்பத்தானே மத்த மந்திரிகளும் , எம் . எல் . ஏக்களும் உங்களை மதிப்பாங்க ; சட்டசபையும் ஒழுங்கா நடக்கும் என்றார் .
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி திடீரென்று காலமாகிவிட்ட காலகட்டம் . அடுத்த பிரதமர் யார் என்பது அனைவர் மனத்திலும எழுந்து நின்ற கேள்வி . அப்பொழுது செல்லப்பாண்டியன் காமராசரிடம் , “ தேச நலன் கருதி , நீங்களே பிரதமர்பொறுப்பை ஏற்றுக்கொண்டால் என்ன ?” – என்று சொல்ல , அதற்கு காமராசர் , “ நீங்க சொல்றது நல்ல யோசனை இல்லையே . பிரதமர் பொறுப்பு ஏற்க ஏற்கெனவே - நந்தா , இந்திரா , மொரார்ஜி , சவாண் , ஜகஜீவன்ராம் பட்டீர் , அதுல்யா கோஷ் - என்று ஏழு பேர் களத்திலே இருக்காங்க என்னை எட்டாவது ஆளா குதிக்கச் சொல்றீங்களா ? தப்பு தப்பு இந்த யோசனையே நமக்கு வந்திருக்கக் கூடாது . நான் ஒண்ணு சொல்றேன் . அரசியலில் ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது . அரசியலில் ஒவ்வொருவரும் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் ” என்று சொன்னாராம் .
இந்த அறிவுரை , இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் சொன்ன அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம் . இந்த அறிவுரையை ஏற்றால் , கடைப்பிடித்தால் போட்டி இல்லை , பொறாமை இல்லை . சண்டை இல்லை . சச்சரவு இல்லை .
( முன்னாள் சபாநாயகர்செல்லப்பாண்டியன் மூத்த மகள் கூறியது )
|