|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் |
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25/5/25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை (பேரறிவுச் சிலை) வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள திருக்குறள் சார்ந்த அறிவிப்புகளை வரவேற்று மகிழ்ச்சியையும், நன்றியையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. திருக்குறள் மனன முற்றோதல் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அறிவிப்பு, வெவ்வேறு அணுகுமுறை என்று இல்லாமல் , பிற தேர்வுகளைப் போன்று,ஒரே நாளில் தமிழ்நாடு எங்கும் நடைபெறவும், முற்றோதலை நடத்தும் ஆசிரியர்களுக்கு தகுதி, வழிமுறை, திருக்குறள் நூல் கையில் வைத்திருத்தல், முற்றோதல்-கவனகம் வேறுபாடு அறிதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை உள்ளடக்கி ஒரு தெளிவான "முற்றோதல் போட்டி- வழிகாட்டு நெறிமுறை " வெளியிட தமிழ் வளர்ச்சித் துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
3. ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் திருக்குறள் மனன முற்றோதல் பயிற்சி செய்ய பள்ளிக் கல்வித்துறை ஊக்கப்படுத்த வேண்டும். குறள் மனன முற்றோதலில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர், முதல்வர் கரங்களால் விருதைப் பெற ஆண்டுக்கொரு முறை ஏற்பாடு செய்யவேண்டுகிறோம்.
4. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் நன்னெறி பாடத்திட்டத்தை பொருள் உணர்ந்து படிக்க அறிவுறுத்த வேண்டுகிறோம். நன்னெறி பாடத்திட்டம் பள்ளிகளில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அரசு அமைக்கும் கண்காணிப்புக் குழுவில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கப் பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்ள வலியுறுத்துகிறோம்.
5. திருக்குறள் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திருக்குறள் மனன முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை ஓர் அடையாள அட்டை வழங்கி அவர்கள் கட்டணமில்லா பேருந்தில் மாவட்டம் முழுதும் பயணித்து பள்ளிகளில் திருக்குறள் பரப்பவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அல்லது வேறு திட்டங்களில் இவர்களை இணைத்து ஒரு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கவும் வேண்டுகிறோம்.
6. நல்லாசிரியர் விருது போன்று இருக்கும் திட்டங்களில் குறள் மனன முற்றோதல் செய்ய மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் எண்ணிக்கை ஒதுக்கவும் கோருகிறோம்.
7. தற்போது திருக்குறள் மனன முற்றோதல் பரிசுத் திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது. இதை புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கும் விரிவாக்கி அறிவிக்கக் கோருகிறோம்.
8. திருக்குறள் முற்றோதல் மனனமாகச் சொல்லும் திறன் வாய்ந்த கல்லூரி மாணாக்கர்களுக்கு,சென்ற சில ஆண்டுகளுக்கு முன் வரை பரிசும் சான்றிதழும் கொடுக்கப் பட்டுள்ளது.தற்போது அவர்களுக்கு இது வழங்கப்படவில்லை. முதுநிலை மாணவர்களை, கூடுதலாகப் பொருளும் கூறச் சொல்லி திருக்குறள் மனன முற்றோதல் முதுநிலை என வகைப் படுத்தி சான்றிதழும் ,ரூபாய் 25,000/- என பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கிடக் கோருகிறோம். இந்தத் திட்டத்தை குறள் மனன முற்றோதல் செய்யும் வயது வரம்பு ஏதுமின்றி அனைவருக்கும் விரிவாக்க வேண்டுகிறோம்.
9. திருக்குறள் மனன முற்றோதல் முடித்து அரசின் பரிசைப் பெற்ற அனைவரையும் திருக்குறள் இளநிலை பட்டயப் படிப்பு (Diploma) முடித்ததாகக் கருதி , அடுத்தக் கட்டமாக திருக்குறளை கசடறக் கற்று , பொருள் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்ற வகை செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக திருக்குறள் பொருளை முழுமையாக உள்வாங்கியுள்ளார்களா என்று சோதித்து மதிப்பீடு செய்ய இணையவழித் தேர்வு ஒன்றை தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் வடிவமைத்து கொண்டு வரவேண்டும் என்று கோருகிறோம்.
10. முற்றோதல் முடித்த மாணவர்கள் குறளை மறந்துவிடாமல் தொடர்ந்து நினைவில் வைத்திருக்க ஏதுவாக ஆண்டுக்கொருமுறை மாவட்டம்தோறும் முற்றோதல் முடித்த மாணவர்கள், பெரியவர்கள் இணைந்து திருவள்ளுவர் நாள் அன்று மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலை முன் கூடி மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித்துறை , கல்வித்துறை, திருக்குறள் அமைப்புகள், தமிழ்ச்சங்கங்கள் முன்னிலையில் முற்றோதல் செய்து குறள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல் வழங்கக் கோருகிறோம்.
11. திருக்குறள் மனன முற்றோதல் முடித்து அரசு விருது பெற்று , தமிழ் இணையக் கல்விக்கழக சான்றிதழும் பெற்றவர்களை தனித் தகுதி பெற்றவர்களாகக் கருதி அரசு வேலைவாய்ப்பில் 5% முன்னுரிமை வழங்கக் கோருகிறோம்.
12. திருக்குறள் பண்பாட்டுப் பூங்கா: சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு 133 குறள் அதிகாரங்கள் உள்ளடக்கிய கருத்தியல் குறும் பூங்காக்கள் (Theme Parks) , பொது மக்களுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் குறள் "உண்டு -உறைவிடப் பயிற்சி மையங்கள்" அமைத்து ,அறிவுசார் சுற்றுலாத் தலமாக , குறள் வாழ்வியலாக்க மையமாக அமைக்க வேண்டுகிறோம்.
13. திருக்குறளுக்காக அரிய பங்களிப்புகளைச் செய்த ஆளுமைகளை நினைவுபடுத்தி , அவர்களின் அடியொற்றி இளைஞர்கள் உருவாகும் வகையில் அவர்களின் பங்களிப்புகளை முறையாக , முழுமையாக ஆவணப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட வேண்டுகிறோம்.
14. ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டக் கோரிக்கையாக உள்ள திருக்குறள் தேசிய நூல் அறிவிப்பும், யுனெசுகோ அங்கீகாரமும் பெரிய அளவில் நகர்வுகள் இல்லாத நிலையில், இதற்கென தொடர்ச்சியாக சந்தித்து முன்நகர்த்த ஏதுவாக ஆழமாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ள திருக்குறள் அறிஞர்களை, ஆற்றல்வாய்ந்தவர்களை, ஆர்வலர்களைக்கொண்ட "திருக்குறள் தேசிய நூல் - யுனெசுகோ " குழு அமைத்து முன்னெடுக்க தமிழ்நாடு அரசை இச்சிறப்பு மிகு தருணத்தில் கோருகிறோம்.
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 28 Nov 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|