சதுரங்க வேட்டை படத்தை தொடர்ந்து, நட்டி என்கிற நட்ராஜ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கதம் கதம். இந்த படத்தில் நந்தா இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார்.
சரி வாங்க.. இப்போ கதைக்கு போவோம்....
நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியாக இருக்கும் நந்தா பல இடங்களில் டிரான்ஸ்பர் ஆகி கடைசியாக பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு எஸ்.ஐ ஆக வருகிறார். அதே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வருகிறார் நடராஜ். அந்த ஊரில் எவருமே போலிஸை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை... காரணம்... அங்கு கான்ஸ்டபிள் முதல் டி.எஸ்.பி வரை அனைவருமே லஞ்சத்தில் ஊறிப்போய் உள்ளனர். இதைப் பார்த்து நந்தாவுக்கு கோபம் வந்தாலும், அதனை அடக்கி கொள்கிறார்.
அந்த ஊரில் எம்.பியாக இருக்கும் பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் நடராஜை கைக்குள் போட்டுக்கொண்டு பல குற்ற சம்பவங்களை அரங்கேற்றுகிறார். இதனால் அங்கு நேர்மையாக இருக்க முடியாமல், நடக்கிற தவறுகளை தட்டி கேட்க முடியாமல் தவிக்கிறார் நந்தா.
ஒரு நாள் நந்தா செய்யும் ஒரு நல்ல காரியத்தை, தான் செய்ததாக சொல்லி நல்ல பெயரை வாங்கி கொள்கிறார் நட்ராஜ். இதனால் தனக்கு துரோகம் செய்ததாக நினைத்து நட்ராஜை கொல்ல முயற்சிக்கிறார் வில்லன் பெரியண்ணன். அப்போது நட்ராஜை, நந்தா காப்பாற்றுகிறார்..
இதனை தொடர்ந்து நடராஜ் வில்லனின் ஆட்டத்தை எப்படி அடக்கினார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் பலமே நட்டியின் நையாண்டி நடிப்புதான். நக்கல் கலந்த நெகட்டிவ் ரோலில் அமர்களபடுத்துகிறார் நட்ராஜ். நேர்மையான சப் இன்ஸ்பெக்டராக வரும் நந்தா, நட்டியின் அராஜகத்தை தட்டிக் கேட்க முடியாமல் தவிப்பதில் நடிப்பில் தான் சீனியர் என்பதை நினைவுபடுத்துகிறார்.
கதாநாயகியாக வரும் சனம் ஷெட்டி பாடல் நாயகியாக மட்டும் உள்ளார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் கதம்... கதம்... நட்டிக்காக ஒரு முறை பார்க்கலாம்.
|