|
|||||
டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !! |
|||||
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காத டெல்லி போலீசார் பற்றி கவர்னரிடம் இன்று முறையிடுவேன் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில வருடங்களாக பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க டெல்லியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் டெல்லி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ராக்கி பிர்லா, தனக்கு வந்த வரதட்சணை பலி புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ஏற்க போலீஸ் அதிகாரி மறுத்து விட்டார்.
அதேபோல், தெற்கு டெல்லியின் கிர்கி பகுதியில் பாலியல் தொழில் மற்றும் போதை பொருள் விற்பனை, போலீஸ் ஒத்துழைப்புடன் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதிக்கு சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது இளம்பெண் ஒருவரிடம் ஒரு போலீஸ்காரர் தவறாக நடந்தபடி தகராறு செய்து கொண்டிருந்தார். அந்த காட்சியை அமைச்சர் சோம்நாத் பாரதி தனது கேமிராவில் பதிவு செய்து கொண்டார். அதன்பின், மக்களிடம் குறை கேட்ட அமைச்சரிடம், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். இந்த விவரங்களை 2 அமைச்சர்களும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''குற்றங்கள் விஷயத்தில் டெல்லி போலீசார் சமரசம் செய்து கொள்கின்றனர். அவர்கள் டெல்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டனர். டெல்லி அமைச்சர்கள் ராக்கி பிர்லா மற்றும் சோம்நாத் பாரதி சுட்டிக்காட்டிய விவகாரங்களில் இரண்டு போலீஸ் நிலைய அதிகாரிகளையும், 2 உதவி கமிஷனர்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரி இருந்தோம். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. தங்கள் செயல்பாடுகளில் அமைச்சர்கள் தலையிடுவதாக டெல்லி போலீசார் கூறுகிறார்கள். அவர்கள் செயல்படுவதே இல்லையே, பிறகு எப்படி அமைச்சர்கள் தலையிடுவதாக கூற முடியும்?
நான் நாளை(வெள்ளிக்கிழமை) காலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்திக்க உள்ளேன். அப்போது, அவரிடம் இப்பிரச்சினையை கூறுவேன். அதன்பிறகும், போலீசாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லையென்றால், நானும், டெல்லி மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடுமையாக எச்சரித்தார். |
|||||
by Swathi on 16 Jan 2014 0 Comments | |||||
Tags: Aravind Kejriwal Delhi Police Blame டெல்லி காவல்துறை அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|