டெல்லியில் நிலவி வரும் சமூக பிரச்சனைகள் குறித்து, பொது விவாதம் நடத்த, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் நிலவும் மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற அடிப்படை பிரச்சினைகளை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒன்றில் பேசிய, டெல்லி முதல்வர், ஷீலா தீட்சித், டெல்லியில் நிலவும் பிரச்னைகைள் குறித்து பொது விவாதம் நடத்த தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, பொது விவாதம் நடத்த வருமாறு முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், பொது விவாதத்தை தொலைக்காட்சி அரங்கங்களில் நடத்தாமல், டெல்லி ராம்லீலா மைதானம் அல்லது வேறு பொது இடங்களில் நடத்த வேண்டும். அப்போது தான் இந்த விவாதத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு நேரடியாக கேள்விகள் கேட்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், முதல்வர் அனுமதி அளித்தால், பா.ஜனதா முதல்வர் வேட்பாளரான ஹர்சவர்தனையும் நாம் அழைக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
|