திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்
மணக்குடவர் உரை:
தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.
தேவநேயப் பாவாணர் உரை:
கெடல்வேண்டின் - ஒருவன் தான் கேடடைவதை விரும்பினனாயின்; அடல்வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு- பிறரைக் கொல்ல விரும்பின் அப்பொழுதே கொல்லவல்ல பெரியாரிடத்துத் தவற்றை; கேளாது செய்க - தன் அமைச்சரின் அல்லது துணைவரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது செய்க. "காலனுங் காலம் பார்க்கும் பாராது வேலீண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே" (புறம்.41) "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தலரிது." (குறள்.29) என்பவற்றால் அடல்வேண்டி னாற்றும் இருவகைப் பெரியாரையும் அறிந்துகொள்க.
கலைஞர் உரை:
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.
Translation
Who ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might.
Explanation
If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).