கொள்ளிடம் ஆற்றின் கரைகள் மீண்டும் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து காட்டூர் கிராமம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு ஆகிய இடங்கள் வலுவிழந்து பலமின்றி உள்ளன.
ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்தால் உடையும் அபாயம் உள்ளத. கடந்த மாதம் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அளக்குடி கிராமத்தில் கரையில் கான்கிரீட் சுவரும் உடைந்து கரையும் உடைந்தது. அனைத்து துறை அதிகாரிகளும் கரைப்பகுதியில் முகாமிட்டு கரையை தற்காலிகமாக சரிசெய்தனர்.
மேலும் பல இடங்களில் ஆற்றின் வலது கரை பலம் இழந்தும் கரைந்தும் போயுள்ளது. பலவீனமான பகுதிகளிலும் மரக்குச்சிகள் அடிக்கப்பட்டு மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் பணி நடந்தது. தற்காலிக பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பருவமழை துவங்கும் தருவாயில் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கரையின் பலவீனமான இடங்கள் உடையும் வாய்ப்பு ஏற்படும். எனவே தற்காலிக பணிக்கு பதிலாக நிரந்தரமாக கரையை உயர்த்தியும் அகலப்படுத்தியும் மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|