பெருமறை நூல்பெறக் கோன்முறை புரக்கும் பெருந்தகை வேந்தன் அருங்குணம் போல மணந்தோர்க்கு அமுதம் தணந்தோர்க்கு எரியும் புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கும் மலையத் தமிழ்க்கால் வாவியில் புகுந்து (5)
புல்லிதழ்த் தாமரைப் புதுமுகை அவிழ்ப்ப வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு சேயிதழ்க் குவளையின் நிரைநிரை உறங்கும் நிலைநீர் நாடன் நீயே இவளே மலைஉறை பகைத்து வான்உறைக்கு அணக்கும் (10)
புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம் பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே! நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி மாயா நல்லறம் வளர்நாட் டினையே! இவளே தொண்டகம் துவைப்ப தொழிற்புனம் வளைந்து (15)
பகட்டினம் கொல்லும் பழிநாட் டவளே நீயே-- எழுநிலை மாடத்து இளமுலை மகளிர் நடம்செயத் தரள வடம்தெறு நகரோய் இவளே-- கடம்பெறு கரிக்குலம் மடங்கல்புக்கு அகழத் தெறித்திடு முத்தம் திரட்டுவைப் பினளே (20)
அணிகெழு நவமணி அலர்எனத் தொடுத்த நீயே-- பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே இவளே-- மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற நெட்டிதண் ஏறும் இப்புனத் தினளே ஆதலின், பெரும்புகழ் அணைகுதி ஆயின் (25)
நாரணன் பாற தேவர்கெட் டோட வளிசுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக் கருமுகில் வளைந்து பெருகியபோல நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை மறித்துஅவர் உயிர்பெறக் குறித்துண் டருளி (30)
திருக்களம் கறுத்த அருட்பெறு நாயகன் கூடல் கூடினர் போல, நாடல் நீ இவள் தழைத்தோள் நசையே. (33)
|