|
|||||
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்.... |
|||||
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்.... (1) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் ஆர்வமுள்ள வேறு மொழியினருக்கு தமிழ் நன்கு எழுத படிக்க பேசக் கற்றுத் தர வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தோடு இணைந்து செயல்படுவது முறைப்படி தமிழில் கற்க உதவும். (2)அனைத்து தமிழ்ச் சங்கங்களும் தங்கள் வளாகங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவ வேண்டும். சிலையருகே மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மாறும் எலக்ட்ரானிக் போர்டு ( Electronic Display Board) திருக்குறள் தமிழ், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் மாறிமாறி வருமாறு அமைக்க வேண்டும். (3) இதுவரையில் 1330 குறட்பாக்களும் மனனம் செய்த மாணவர்களை ஆய்வு செய்ததில், 8 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு மனனம் செய்யும் ஆற்றல் மிக அதிகமாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது . தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் குறளை முற்றிலும் மனப்பாடம் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.இது அவர்கள் மொழி ஆளுமையை வளர்க்க உதவுவதோடு நில்லாமல் அறத்தோடு வாழவும்,திறம்பட செயலாற்றவும் உதவி செய்யும். சீனர்கள் இளமையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு புக் ஆஃப் சாங்ஸ் உள்ளிட்ட 5 பழமையான சீன இலக்கியங்களை சிறு வயதில் மனனம் செய்ய கற்றுக் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் வளரவளர வணக்கம் நல் வழியில் நடக்க, அவர்களுக்குள் புதிய கருத்துக்களை விளைவிக்க உதவும். (4)தற்போது தமிழ்நாடு அரசு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 15000/- தமிழ்நாட்டில் வசிக்கும் திருக்குறள் முற்றோதல் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய தமிழ் சங்கங்களின் பேரவை தமிழ்நாடு அரசிடம் வைக்க வேண்டும். (5) பெற்றோர்கள், தமிழ்ச் சங்கங்கள், மனன முற்றோதல் பயிற்சியளிப்பதை முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களின் துணைக்கொண்டு மேற்கொள்ளலாம். இந்த முயற்சியில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் வழிகாட்டுதலை நாடலாம். வலைத்தமிழ் இணையப் பக்கத்தில் குறள் கற்பிப்பதற்கான பல்வகையான வளங்கள் ( Resources) கிடைக்கும். (6)திருக்குறள் வரலாற்றில் முதல் முறையாக "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" (Thirukkural Translations in World Languages) என்ற நூல் ஐவர் கொண்ட குழுவின் பல்லாண்டு கால முயற்சிக்குப் பின்னர் உருவானது. இந் நூலை, வலைத்தமிழ் பதிப்பகம் மார்ச் 2024 - இல் வெளியிட்டது. இது வரையில் இது குறித்து விரிவான நூல் வரவில்லை என்பது உளங் கொளத் தக்கது. இந்த நூல் ஒவ்வொரு தமிழ்ச் சங்கத்தின் நூலகத்தில் இடம் பெற வேண்டும். (7)இந்த நூலின் படி இதுவரை 29 உலக நாடுகள் மொழிகளிலும், 29 இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்க்கப்பட்டுள்ளது. இன்னும் 158 உலக நாடுகளின் அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் படவேண்டும். இது குறித்து தமிழ்ச் சங்கங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும். (8)மேலும் தமிழ்ச் சங்கங்கள் அவரவர் மாநிலத்தில் இதுவரை வந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளையும் தொகுத்து தமிழ்ச் சங்க நூலகத்தில் வைக்க வேண்டும். எல்லா மொழிபெயர்ப்புகளும் தொடர்ந்து அச்சில் வருவதற்கும், அவ்வாறு வந்த நூல்கள் தொடர்ந்து விற்பனைக்குக் கிடைப்பதற்கும் தமிழ்ச்சங்கங்கள் ஆவன செய்ய வேண்டும். திருக்குறள் மொழிபெயர்ப்புகளை உலக அளவில் உள்ள பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து தமிழ்நாட்டிலும், அந்தந்த மொழி பேசும் நாடுகளிலும் வணிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், இதை ஒரு வரலாற்றுக் கடமையாக அச்சில் தொடர்ந்து கிடைக்கச்செய்ய திருக்குறள் மொழிபெயர்ப்புக்கென தனித்த பதிப்பகமாக வலைத்தமிழ் பதிப்பகம் ( https://estore.valaitamil.com/) உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. தேவையான நூல்களை ஒரே இடத்தில் பெரும் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தி திருக்குறளை பரவலாக்கல் செய்யவேண்டும். (9)பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து அவரவர் தாய் மொழியில் திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டிகள் மனனப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். (10)வேறு மொழி பேசும் நண்பர்கள், உயரதிகாரிகள், அரசியல் கட்சி ஆளுமைகள், அரசியல் தலைவர்கள். போன்றவர்களை சந்திக்கும் போது, அவரவர் தாய் மொழியில் குறள் நூலைப் பரிசாக அளிக்க தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட அளவில் அளிக்க வேண்டும். (11) ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழக அரசின் நிதிப் பங்களிப்பு மற்றும் அந்தந்த மாநிலப் பங்களிப்பு என இரண்டையும் சேர்த்து, குறைந்த பட்சம் ஒரு அரசு பல்கலைக்கழகத்திலாவது "திருக்குறள் ஆய்வு இருக்கை" அமைக்கப்பட வேண்டும். இது அந்த மாநில மொழி வளரவும் குறள் நெறி பரவவும் உதவும். (12) தமிழ்நாட்டில் மாபெரும் திருக்குறள் பண்பாட்டுப் பூங்கா , பயிற்சி வளாகம் , அதிகாரங்கள் விளக்க சிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும் இவ்வாறு குறளை மையப்படுத்தி தமிழர்கள் தமிழ்ச்சங்கங்கள் இயங்க வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வணிக நிறுவனங்கள், மற்றும் அரசுப் பணிகளில் உள்ள தமிழர்களின் மேலாண்மை குறள் சார்ந்து அமைய வேண்டும். தமிழர்களின் செயல் திறனும் அறவழ்க்கையும் அவர்களின் செயலின் வழியாக வெளிப்பட வேண்டும். குறள் வெறுமனே அற இலக்கியமாக மட்டுமே பார்க்கப்படாமல், திறம்பட செயலாற்ற உதவும் வழிகாட்டி நூலாக, பொருள் நூலாக மாற வேண்டும். தமிழர்களின் அற நிலை, பொருள் நிலை, அறிவு நிலை என மூன்றும் உயர வேண்டும். திருக்குறளை வாழ்ந்து காட்டுவதே குறள் நெறி பரவலாக்கத்தில் பெரும் வெற்றியை ஈட்டித் தரும். தமிழர் ஒவ்வொருவரும்,தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் குறள் நெறித் தூதுவர்களாக இயங்குவதற்கான களம் விரிந்து பரந்து கிடக்கின்றது. குறள் நெறி போற்றி, குறள் நெறி கொண்டு உயர்வோம்! உய்வோம்!! சி. இராஜேந்திரன் |
|||||
by Swathi on 19 Nov 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|