|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 2 குறளோடு உறவாடு –பேராசிரியர் முனைவர்.தெ. ஞானசுந்தரம் -அன்பை புலப்படுத்துங்கள் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 2 குறளோடு உறவாடு –பேராசிரியர் முனைவர்.தெ. ஞானசுந்தரம் அனைத்தையும் திறக்கும் அன்பு: ‘அன்பு’ என்ற சாவியால் திறக்க முடியாத பூட்டு ஒன்றுமே கிடையாது. எல்லா சமயங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன. ‘அன்பே தகளியா..’ என்றார் ஆழ்வார். ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என்றார் திருமூலர். மனிதர்கள் அன்புக்கு ஏங்குகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ‘நான்’ என்கிற உணர்வு உண்டு. அந்த நான் என்கிற உணர்வை வருடிக் கொடுத்தால் அவன் நண்பனாகி விடுவான். அதைக் காயப்படுத்தி விட்டால் பகைவனாகி விடுவான். பிடித்த குறள்: யானை பெரிய விலங்காக இருந்தாலும் மனிதனின் அங்குசத்தால் அடி வாங்கும், காளை தார்க்குச்சியால் அடி வாங்கும், குதிரை சவுக்கால் அடி வாங்கும். இவையெல்லாம் மனிதனுக்காக உழைக்கக் கூடியவை. ஆனால் மனிதனுக்காக எந்த உதவியும் செய்யாத நாயானது மனிதனுடைய அன்பைப் பெற்று வீட்டிற்குள் வைத்து வளர்க்கப்படுகிறது. காரணம் வளர்க்கப்படும் நாயானது வெகு நேரம் கழித்து வரும் முதலாளியைக் கண்டவுடன் தன் அன்பை வெளிப்படுத்தித் தழுவிக் கொள்கிறது. எனவே அன்புக்கு உருகாதார் இவ்வுலகில் எவரும் இலர். இதனைத் தான் திருவள்ளுவர், ‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு’ என்று கூறியிருக்கிறார். இதுவே திரு. தெ. ஞானசுந்தரம் அவர்களுக்குப் பிடித்த குறள் என்றும் குறிப்பிடுகிறார். தான் உயர்வதற்கும், மற்றவர்கள் நலமாக இருப்பதற்கும் அன்பு செய்ய வேண்டும். நட்பு: உலகிலேயே உன்னதமான உறவு ‘நட்பு’ ஆகும். அதனால் தான் திருவள்ளுவர் நட்பு குறித்து 5 அதிகாரங்கள் பாடியுள்ளார். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமலே கூட நட்பு மலரும். கணவன், மனைவி உறவை விடவும் உரிமை அதிகமாக நட்பு என்ற உறவு எடுத்துக் கொள்ளும். இதனைத் தான் திருவள்ளுவர், ‘பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்’ என்றார். குற்றம் கடிந்தவர்: சங்க காலத்தில் கள்ளுண்ணுதலும், விலை மகளிரிடம் செல்லுதலும், புலால் உண்ணுதலும் குற்றங்களாகப் பார்க்கப்படவில்லை. முதன் முதலில் இவற்றை ‘குற்றம்’ என்று சொன்னவர் திருவள்ளுவரே. கள்ளுண்ணக் கூடாது என்று கூறுகிறார், விலை மகளிரிடம் செல்லக் கூடாது என்று கூறுகிறார், புலால் உண்ணக் கூடாது என்று கூறுகிறார். முதன் முதலில் உலகிற்கு ஒழுக்கத்தைக் கற்பித்தவர் திருவள்ளுவரே ஆவார். கம்பர் போற்றிய கவிஞர்: கம்பர் திருவள்ளுவரைப் பின்பற்றியே பல இடங்களில் சொற்களைக் கையாண்டுள்ளார். திருவள்ளுவர் ஒரு குறளில் ‘இடும்பைக்கு இடும்பை..’ என்று பயன்படுத்தியுள்ளார். கம்பர் அதை தன் பாடலில் ‘இடையூற்றுக்கு இடையூறு..’ என்று பயன்படுத்தியுள்ளார். சொற்சிக்கனம் உடையவர் ‘திருவள்ளுவர்’ என்று அனைவரும் கூறுவர். ஆனால் திருவள்ளுவரை விட சொற்சிக்கனம் உடையவர் கம்பரே ஆவார். திருவள்ளுவர் ஒரு குறளுக்கு 7 சீராக நான்கு குறள்களில் 28 சீர்களைப் பயன்படுத்தியுள்ளார். கம்பர் அந்த நான்கு குறள்களையும் தன்னுடைய ஒரு பாடலில் 16 சீர்களில் கொடுத்துள்ளார். ஆகத் திருவள்ளுவரை விடச் சொற் சிக்கனம் உடையவர் கம்பர் என்று கூறலாம். கம்பர் தன்னுடைய பாடலில், “ஊருணி நிறையவும் உதவும் மாடுஉயர் பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும் கார்மழை பொழியவும் கழனி யாய்நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்” என்று அயோத்தியா காண்ட மந்திரப்படலத்தில் பாடுகிறார். இதில், ‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு’ ‘பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்’ ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுக் கொல்லோ உலகு’ ‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்’ ஆகிய குறட்பாக்களைக் கம்பர் தன்னுடைய பாடலில் பயன்படுத்தியுள்ளார். ஈர்க்கும் தலைப்புகள்: திரு. தெ. ஞானசுந்தரம் அவர்கள் தன்னுடைய திருக்குறள் கட்டுரைகளில் தலைப்பினை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைத்துள்ளார். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பை நிரந்தர முதல்வன் என்றும், பிறன்மனை நயத்தல் என்ற தலைப்பை இராப்பிச்சை என்றும், அன்புடைமை என்ற தலைப்பை இருதிணைச் செம்மொழி என்றும் தலைப்புகளை மாற்றியமைக்கிறார். மேலும் மு.வரதராசருடன் தான் கொண்ட பழக்கத்தையும், மரியாதையையும், ஆசிரியராக விளங்குபவர்களின் பெருமையையும் மு.வ.வின் வழி எடுத்துரைத்தார். தென்காசி திருக்குறள் கழகம் குறித்தும், அதில் பேசிய பல்வேறு அறிஞர்கள் குறித்தும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்குக் கதைகளின் மூலம் திருக்குறளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். |
|||||
by Lakshmi G on 19 Sep 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|