|
|||||
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு |
|||||
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.அன்பழகன், நூலகங்கள் பற்றிப் பேசியதற்கு, பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
"திருச்சியில் ரூ.290 கோடியில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருப்பதாக, பொதுப் பணித்துறை 4 ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில் நான் பார்த்தேன். கருணாநிதியால், கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதுவரை சுமார் 16 லட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்துக்குக் கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோரின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட காமராஜர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 02 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|