|
|||||
மதுரை- சென்னை துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை! |
|||||
மதுரை- சென்னை துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 2 நாட்கள் துரந்தோ ரயில் மற்றும் வாரத்தில் ஒரு நாள் குளிர்சாதன ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு ரயில்களும் நாமக்கல் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல்லில் இருந்து பணி, தொழில், மருத்துவம் மற்றும் கல்வி பயில்வதற்கு சென்னை, வேலூருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இவர்கள் பழநியில் இருந்து நாமக்கல் வழியாக சென்னை செல்லும் ரயிலை நம்பி வந்தனர். இந்த ரயில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்காடு வரை நீடிக்கப்பட்டதால், போதுமான இருக்கைகள் கிடைப்பதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த ரயிலில் நாமக்கல் ரயில் நிலையத்திற்கென குறைந்த அளவிலான இருக்கைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது மூன்று அடுக்கு (3 டயர்) குளிர்சாதன பெட்டியில் 8 இருக்கைகள், 2ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 4 இருக்கைகள் மற்றும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 2 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014-15ம் நிதியாண்டில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு பழனி - சென்னை ரயிலில் 3779 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். 2015-16ம் நிதியாண்டில் 3734 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். 2016-17ம் நிதியாண்டில் 3571 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். எனவே மதுரை - சென்னை குளிர்சாதன துரந்தோ மற்றும் மதுரை - சென்னை குளிர்சாதன அதிவிரைவு ரயில்கள் நாமக்கல்லில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயிலை, நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோழி வளர்ப்புக்கும், முட்டைக்கும் பெயர்பெற்ற நாமக்கல், இந்தியாவில் முட்டை உற்பத்தியில் 2ம் இடமும், தமிழகத்தில் முதலாம் இடத்திலும் உள்ளது. சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. மேலும் நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கூலிப்பட்டி முருகன் கோவில் போன்ற பிரபலமான கோயில்களும் உள்ளன. கோடை வாசஸ்தலமான கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளும் நாமக்கலுக்கு வந்துதான் செல்ல வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப துரந்தோ மற்றும் குளிர்சாதன அதிவிரைவு ரயில்கள் நாமக்கலில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|