|
||||||||
பாவங்களைப்போக்கி புண்ணியம் நல்கும் மகா சிவராத்திரி விரத பூஜை |
||||||||
ஒவ்வொரு ஆண்டும் பல நாட்களில் சிவராத்திரி கொண்டாடப்படுவதாக ஸ்கந்தபுராணம் சொல்கிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறைகளில் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி. இவற்றுள் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரி ஆகும்.
இந்த மாதம் 20 ஆம் தேதி திங்கட் கிழமை மகா சிவராத்திரித் திருநாள் ஆகும். அனைத்து சிவாலயங்களிலும் இந்நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அபிஷேகங்கள், சிவலிங்கத்துக்கு சிறப்பான அலங்காரங்கள், அம்மையப்பர் ரிஷப வாகன வீதியுலா, சொற்பொழிவுகள் மற்றும் சிவபுராண பாராயணங்கள் ஆகியவை விசேஷமாக நடைபெறும்.
திருமாலும் பிரம்மதேவனும் அடிமுடி காணமுடியாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சியளித்தது, சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு தேவர்களைக் காப்பாற்றியது, பிரதோஷ கால பூஜை முதன்முதலாக தொடங்கியது, சிவபெருமானிடம் பார்வதிதேவி ஆன்மீக உபதேசம் பெற்றது, தன்னை நம்பிய மார்க்கண்டேயனைக் காப்பாற்ற காலனை காலால் எட்டி உதைத்தது, உமையொரு பாகனாக பார்வதிதேவியை தன்னில் பாதியாக ஏற்றது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடந்தது இந்த மஹா சிவராத்திரி புண்ணிய நன்னாளில்தான் என்பதைவைத்து இந்த நாளின் பெருமையை உணரலாம்.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப்பற்றத் தலைப்படும்தானே திருமூலர் திருமந்திரம்
இப்பாடலில் உணர்வுறு மந்திரம் என்று திருமூலர் குறிப்பிடுவது "ஓம் நமசிவாய" என்னும் பஞ்சாட்சர மந்திரமே.
பல ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும் சித்தர் திருமூலர் சிவபெருமானைப் போற்றி அழியாப்புகழ் பெற்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பெற்றதைப்போல் நீண்ட ஆயுளும் நீங்காப்புகழும் பெற சிவனைத் துதியுங்கள், பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார்.
இந்த நாளில் காலையில் எழுந்து குளித்துமுடித்தபின் அன்று முழுவதும் சிவபெருமானின் புகழ் பாடும் பாடல்களைக் கேட்டும், படித்தும் விரதமிருக்கவேண்டும். சிவராத்திரி தினத்தில் சிவலிங்கத்துக்கு பால், தயிர், நெய், இளநீர் போன்றவற்றால் காலையில் அபிஷேகம் செய்வது மிகமிக நல்லது. சிவபெருமான் உஷ்ணம் மிகுந்தவர். குளிர்ந்த திரவங்களால் செய்யப்படும் அபிஷேகத்தால் இறைவன் மகிழ்ந்து நமக்கு வேண்டும் வரம் தருவார். மாலையில் சிவபெருமானுக்குப் பிடித்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யதல் மிகச் சிறந்த புண்ணிய பலனைத்தரும்.
சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானைப் பூஜிக்கும் பெண்கள் பெரும்பயன்களைப் பெறுவார்கள். திருமணமான பெண்களுக்கு அவர்தம் கணவரும் மகன்களும் நலமுடன் விளங்குவார்கள். கன்னிப்பெண்களுக்கு சிவபெருமானைப்போல் வல்லமை பொருந்திய நல்ல கணவன் அமைவார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. இந்தப் புண்ணிய நாளில் விரதமிருந்து பூஜை செய்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனைப் பெறுவார்கள். பொறாமை, கெட்ட எண்ணங்கள், கோபம், பேராசை ஆகியவை நீங்கி ஆரோக்யமான வலிமையான உடல் நலம், நல்ல சிந்தனைகள், ஆன்மீகத்தில் நாட்டம், பிறருக்கு உதவும் மனம் மற்றும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறும் வல்லமை ஆகியவற்றை இறைவன் அருளால் பெறலாம். முன்னொரு காலத்தில் காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் ஒரு ஏழை வேடன் காட்டில் மிருகங்களையும், பறவைகளையும் வேட்டையாடி அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தான். ஒருநாள் மாலை நேரத்தில் புலி ஒன்று அவனைத்துரத்தியது. பயந்துபோய் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் வேடன். அவன் கீழே இறங்கிவரட்டும். கொன்று தின்னலாம் என்று புலியும் காத்திருந்தது. இரவும் ஆகிவிட்டது. புலியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. தூங்கினால் கீழே விழநேரும் என்பதால் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தான் வேடன். பொழுது புலருவதற்குள் வேறு இரைதேடி புலி சென்று விட்டது. காலையில் மரத்திலிருந்து இறங்கி உயிர் பிழைத்தான் வேடன்.
இந்த வேடன் பக்தியைப் பற்றி அறியாதவன். ஆனால் சம்பவம் நடந்த அன்று இரவு மகா சிவராத்திரித் திருநாள். வேடன் ஏறி இருந்தது வில்வ மரம். மரத்தின் கீழே இருந்தது ஒரு சிவலிங்கம். வேடன் இரவு முழுவதும் கண் விழித்திருந்தான். சாப்பிடவும் இல்லை. வில்வ இலைகளைப் பறித்து லிங்கத்தின் மேல் போட்டுக்கொண்டிருந்தான். வேட்டையாடி பல உயிர்களைக் கொன்றிருந்தாலும் தன்னை அறியாமலே மகா சிவராத்திரியில் பூஜை செய்த வேடனுக்கு பாவங்கள் நீங்க முக்தி அளித்தார் சிவபெருமான். இதேபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும்புலியூர் ஆகியவை ஆகும்.
சிறப்புக்கள் நிறைந்த இந்த நன்னாளில் "ஓம் நமசிவாய" என்று 108 முறை அல்லது ஒவ்வொருவரால் இயன்ற அளவு நாவால் உச்சரிப்பது, சிவ நாமங்களைக் கேட்பது, ருத்ர பாராயணம் செய்வது, வில்வாஷ்டகம் படிப்பது, சிவலிங்க தரிசனம் செய்வது, அபிஷேகம் செய்வது, பூஜைகள் செய்வது, விரதம் இருப்பது இவை எல்லாமே எல்லையில்லாத நற்பலன்களை நிச்சயமாகத் தரும்.
வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் மூன்று பிறவிகளின் பாவம் நீங்கும் என்கிறது வில்வாஷ்டகத்தின் முதல் வரி. தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்கிறார் "சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை". இப்படிபட்டப் பெருமை வாய்ந்த பஞ்சாட்சர மந்திரத்தை மகா சிவராத்திரியில் சொல்லுவோம். சிவபெருமானை வணங்குவோம். புண்ணியங்கள் பெறுவோம்.
|
||||||||
by Swathi on 20 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|