உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பால் சாம்பிள்களை வாங்கிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதை பரிசோதித்தபோது பல இடங்களில் பாலில் கலப்படம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலில் கலப்படம் செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயலை செய்பவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைவாசம் போதாது. மாறாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
|