|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் திருநாராயணன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் திருநாராயணன் அறிமுகம்: மருத்துவர் திருநாராயணன் அவர்கள் திறமை வாய்ந்த சித்த மருத்துவர். இவர் தனக்குக் கிடைத்த அரசுப்பணியை தன் கனவுகளுக்காக உதறித்தள்ளியவர். சித்த மருத்துவம் சார்ந்த கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் போன்றவை தற்போது பெரும்பான்மை இவரின்றி அமைவதில்லை. பல்வேறு நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சித்த மருத்துவர்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது சென்னையிலுள்ள பாரம்பரிய மருந்து மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயலாளராக பணிபுரிகின்றார். இவர் தன் கல்வியை நிறைவு செய்யும் பொழுதே அரசுப்பணி பெறும் தகுதியுடையவராக இருந்துள்ளார். பல கருத்தரங்கங்கள், மாநாடுகள் போன்றவற்றை இளவயதிலேயே ஒன்றிணைப்பு செய்யும் திறன் வாய்ந்தவராக விளங்கியுள்ளார். தன்னார்வ நிறுவனம்: சித்த மருத்துவம் தொடர்பான பல முன்னெடுப்புகளை நிகழ்த்துவதற்கு மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் தடைகளாக இருந்துள்ளன. எனவே ‘குறிப்பிட்ட பணிகளைச் செய்ய, கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்தில் முடியாது’ என்பதை உணர்ந்து கொண்டார். இதனால் தான் தன்னார்வ நிறுவனம் ஒன்றைச் சித்த மருத்துவம் சார்ந்து அமைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். மேலும் இவர் அரசுப்பணியிலிருந்த போது நூற்றுக்கணக்கில் நோயாளிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் சில முக்கியமான சிகிச்சைகளைக் குறிப்பிட்ட நோயாளிகளுக்குச் செய்வதில் நேரக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே சரிவரச் சிகிச்சை புரிய இப்பணி பொருந்தாது என்பதை மருத்துவர் திருநாராயணன் அவர்கள் புரிந்துகொண்டார். இதற்குப்பின்பு வார இறுதிகளில் சிறுசிறு வகுப்புகளை சித்த மருத்துவம் சார்ந்து எடுக்கத் தொடங்கியுள்ளார். மேலும் தன்னுடைய மருத்துவமும் அதன் சிகிச்சை முறைகளும் பாரம்பரிய முறையில் அமைய வேண்டும் என்று எண்ணினார். எனவே அரசு வேலையைத் துறந்து சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் பாரம்பரிய மருந்து மற்றும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கி அதில் இருபது ஆண்டுக்கால சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் மருத்துவர் திருநாராயணன் அவர்கள். நூல்களை வெளியிடல்: மருத்துவர் திருநாராயணன் அவர்கள் நிறுவனம் தொடங்கிய பின் சித்த மருத்துவம் சார்ந்த பல நூல்களையும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நிறுவனம் சார்ந்து வெளியிடத் தொடங்கியுள்ளார். இவருடைய நிறுவன நூல்கள் பின்பு பிரபலமாயின. அவ்வாறு மருத்துவர் திருநாராயணன் அவர்கள் எழுதி வெளியிட்ட சித்த மருத்துவ ஆங்கில நூல் ஒன்று மலேசியாவில் உள்ள சித்த வர்மக்கலை அமைப்பின் மூலம் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பின் வெளியிடப்பட்டது. முதன்முறையாக இவருடைய நூல் இந்தியமொழிகளைத் தாண்டி சர்வதேச அளவில் பிறநாட்டு மொழியில் வெளியிடப்பட்ட சாதனையைப் பெற்றது. தற்போது ஸ்பானிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் இவருடைய நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபாடு: மருத்துவர் திருநாராயணன் அவர்கள் வேலூர் மாவட்ட கிராமப்புற வைத்தியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மருத்துவக் குறிப்புகளை ஆவணப்படுத்தும் வாய்ப்பினை பெற்றிருந்தார். அதற்குப்பின் இப்பணியினை நாமக்கல் மாவட்டத்திலும் செய்துகொண்டிருந்தார். இதன்மூலம் பல்வேறு கிராமப்புற வைத்தியர்களுடன் சிறந்த நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். இவர்களின் மூலம் மூலிகைகள் பலவற்றின் பயன்களை மருத்துவர் திருநாராயணன் அவர்கள் அறிந்துகொண்டார். அவ்வாறு அறிந்து வைத்திருத்தலோடு மட்டுமில்லாமல் ‘கிராம வைத்திய கையேடு’ என்ற நூலினையும் நிறுவனம் சார்ந்து வெளியிட்டார். ஒவ்வொரு வைத்தியருக்கும் தெரிந்த தனித்துவமான மருத்துவ வழிமுறைகளை வெளியிட்டது இந்நூலின் சிறப்பாகும். ஓலைச்சுவடிகளின் மின்னூலாக்கம்: மருத்துவர் திருநாராயணன் அவர்கள் தன் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளைக் கூறுகின்றார். அவை 1. பாதுகாத்தல் 2. மின்னூலாக்குதல் 3. விவரப்பட்டியல் வெளியிடல் ஆகியனவாகும். சித்த மருத்துவத்தில் ஓலைச்சுவடிகளின் பங்கு இன்றியமையாதது. ஓலைச்சுவடிகளின் மூலம் நம் முன்னோர் அவர்களின் அறிவினையும் அனுபவத்தினையும் விட்டுச்செல்கின்றனர் என்றால் அது மிகையாகாது. இத்தகைய ஓலைச்சுவடிகள் காலப்போக்கில் அழிந்துவிடக் கூடியவையாக உள்ளன. எனவே இவற்றைப் பாதுகாத்து அதனை மின்னூலாக வெளியிட்டு அதனைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது சிறப்பாகும் என மருத்துவர் திருநாராயணன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் தன் நிறுவனத்தின் வாயிலாக ஓலைச்சுவடிகளை மின்னூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதைத்தவிர பல்வேறு மடங்களிலுள்ள ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அம்மடங்களின் மடாதிபதியிடம் சென்று ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். தனிநபர் ஓலைச்சுவடிகள், பாரம்பரிய ஓலைச்சுவடிகள், மருத்துவ ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை மின்னூலாக்கமாக மின்மயப்படுத்துகின்றார். இவ்வாறு ஓலைச்சுவடிகளை மினமயப்படுத்துவதில் பல இடர்பாடுகள் மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கு ஏற்படுகின்றன. ஓலைச்சுவடிகளைப் படியெடுத்தல் மிகவும் சிரமமாக அமைந்துள்ளது. பல்வேறு மொழிகளின் கலப்பு ஓலைச்சுவடிகளில் அமைந்திருத்தல் மற்றுமொரு இடர்பாடாகும். எனினும் இடர்பாடுகளைப் பொருட்படுத்தாமல் இப்பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகின்றார். கபசுர குடிநீருக்கு மாற்று: கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் கபசுர குடிநீர் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பெற்று வருகின்றது. தமிழக அரசின் வழிகாட்டுதல்களும் கபசுரநீரை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இத்தகையச் சூழலில் இதன் தேவை பெருகிவிட்டதால் இக்குடிநீருக்கான மூலிகைகள் தட்டுப்பாடான நிலையில் உள்ளன. எனவே கபசுர குடிநீருக்கு மாற்றாகச் சிலவற்றைக் கூறலாம் என மருத்துவர் திருநாராயணன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். இன்றையச்சூழலில் கபசுரகுடிநீரில் 15 மூலிகைகள் உள்ளன. இம்மூலிகைகள் குறிப்பிட்ட காலத்தில் பற்றாக்குறை நிலையை அடையும் போது இதற்கு மாற்றுத் தேவை. இக்கருத்தினை மருத்துவர் திருநாராயணன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஆடாதொடை, அதிமதுரம், அரிசித்திப்பிலி, நிலவேம்பு போன்றவற்றை மருத்துவர் திருநாராயணன் அவர்கள் முன்னிறுத்தி இவை பெருந்தொற்றிற்கு மிகுந்த பயனளிப்பவை என்று கூறியுள்ளார். தனியார் மருத்துவர்களுக்கு ஆலோசனை: இன்றைய பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் அரசுவேலையை மட்டுமே விரும்புகின்றனர். மருத்துவம் என்பது ஒரு பொதுச்சேவை என்றே பொருள்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் மருத்துவர்கள் தனியாக பணிபுரிய எண்ணும்போது சிலவற்றை கடைப்பிடித்தல் அவசியமாகும். இன்றைக்கு சித்த மருத்துவ சிகிச்சையகம் திறக்க மிகப்பெரிய முதலீடுகள் தேவையில்லை. பல ஆயிரம் மக்கள் வசிக்கும் இருப்பிடங்களில் ஒரு சித்த மருத்துவ சிகிச்சையகம் கூட அமைந்திருப்பதில்லை. எனவே மருத்துவர்கள் தனியார் சிகிச்சையகங்களை திறக்க முன்வரவேண்டும். மேலும் சித்த மருத்துவ சாலைகளில் மருந்துகளைக் குறைந்த செலவில் விற்க வேண்டும். இக்காலகட்டத்தில் பல இடங்களில் சித்த மருத்துவ மருந்துகள் பரவலாகக் கிடைப்பதில்லை. எனவே உரிய மருந்துகளை தன் மருத்தவசாலையிலேயே மருத்துவர் விற்க வேண்டும். குறிப்பாகச் சித்த மருத்துவச் சிகிச்சை முறைகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் மருந்துகள் குறித்த செயல்முறை விளக்கங்கள் மருந்துகளில் இடம்பெறல் அவசியம். இதைத்தவிர அரசிற்கும் சில பரிந்துரைகளை மருத்துவர் திருநாராயணன் அவர்கள் கூறுகின்றார். மத்திய அளவில் சித்த மருத்துவத்திற்கு ஒரே ஒரு பிரிவினைத் தவிரப் பிற முக்கிய பிரிவுகள் இல்லை. எனவே சித்த மருத்துவத்திற்கு மற்றுமொரு பிரிவினை அரசு நல்கினால் மிகுந்த பயனளிக்கும் என்று கூறுகின்றார். மேலும் சித்த மருத்துவத்தின் அடிப்படை நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் அப்பொழுது சித்த மருத்துவம் விரிவடையும் என்றும் மருத்துவர் திருநாராயணன் அவர்கள் எடுத்துரைக்கின்றார். |
||||||||
by Lakshmi G on 30 Dec 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|