திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று
ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.
இது மேலதற்குப் பயன் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் -தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும்.
பெற்றோரைப்போற் பிள்ளைகளிருப்பதே பெரும் பான்மையாதலால் ' எச்ச நன்றாகும்' என்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யும் வினை நன்றாய் முடியுமாதலால் 'இல்லை நன்றாகா வினை ' என்றும் கூறினார்.
இங்கு 'எச்சம்' என்பதற்குப் புகழ் என்றும் உரைகொள்வர், அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், அவ்வுரை பொருந்துவதன்றாம்.
கலைஞர் உரை:
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்
நற்செயல்களும் விளையும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
Translation
From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.
Explanation
To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.